வழக்கு ஆரம்பிக்கிறது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் : இந்த வழக்கில் விசாரிக்க எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்திய குற்றவாளி நிலம் பார்க்க வந்தவர்களில் பெண்களைத் தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்திக் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறான். அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பத்து வயது சிறுமியையும் இந்தக் காமுகன் விட்டுவைக்கவில்லை. நால்வரையும் கொன்று அவன் பிளாட் போட்டு விற்ற இடத்தில் கட்டிய வீட்டிலேயே புதைத்துவைத்திருக்கிறான்.
இறந்தவர்களில் இரண்டு பெண்களின் அடையாளம் மட்டுமே தெரிந்திருக்கிறது. ஒரு பெண்ணுடைய உறவுக் காரர்கள் யாரும் வராததால் யார் என்று தெரியவில்லை. குற்றவாளிக்கும் அந்தப் பெண் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை.
பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வீடு குற்றவாளியின் வீடுதான். நால்வரையும் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக அவனே ஒப்புக்கொண்டிருக்கிறான். இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை. கீழ் நீதிமன்றம் அவனுக்கு மரண தண்டனை வழங்கியிருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது அவனுக்கு ஒரு மரண தண்டனை போதாது என்று இரண்டு மரண தண்டனை வழங்கச் சொல்லி தீர்ப்பு வழங்கியிருக்கின்றன. உச்ச நீதிமன்ற நீதிபதியான நீங்கள் உங்கள் பங்குக்கு ஒன்று சேர்த்து மூன்று மரண தண்டனை விதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
துர்கா : டியர் மேடம்
நீதிமன்றம் சிரிப்பில் மூழ்குகிறது.
அரசு தரப்பு வழக்கறிஞர் (சிரித்தபடியே) : ப்ளீஸ் சே “மை லார்ட்...’ நீங்கள் வாதாடும் முதல் வழக்கு இது என்பது நன்கு புரிகிறது. நீதிபதியை எப்படி அழைக்கவேண்டும் என்பது கூட உங்களுக்குத் தெரியவில்லை.. நீங்களெல்லாம் வாதாடி... நீதியை நிலை நாட்டி...
துர்கா : டியர் மேடம்... பிரிட்டிஷார் காலத்தில் நீதிபதிகளை “என் பிரபுவே’ என்று அழைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. நான் அதைப் பின்பற்ற விரும்பவில்லை. எனவே, மேடம் என்று அழைக்க அனுமதிக்கவேண்டும்.
நீதிபதி : பொதுவாக அது வழக்கமில்லை. என்றாலும் பழகிய பாதையில்தான் சென்றாகவேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. நீங்கள் உங்கள் விருப்பப்படியே அழைக்கலாம்.
துர்கா : நன்றி மேடம்.
அரசு வழக்கறிஞர்: மேடம் என்பதும் ஆங்கில வார்த்தைதான்.
துர்கா: நான் ஆங்கிலத்துக்கோ ஆங்கிலேயருக்கோ எதிரியல்ல. ஆங்கில மேட்டிமைத்தனத்துக்குத்தான் எதிரி. ஹேட் த க்ரைம்... லவ் த க்ரிமினல்.
சிரித்த நீதிமன்றம் அடங்கி ஒடுங்குகிறது.
துர்கா (தொடர்கிறாள்) : அப்பறம் மேடம்... இன்னொரு முக்கியமான விஷயம். நம்ம நாட்டுல கோர்ட்டோட அமைப்புல சில மாற்றங்கள் வரணும்னு தோணுது. எந்தவொரு நபரும் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்படும்வரை நிரபராதி தான் இல்லையா... அப்படி இருக்கும்போது அவர்களை நிற்க வைத்து விசாரிப்பது தவறு என்று தோன்றுகிறது. அதிலும் சிறை போன்ற கூண்டு கட்டாயம் மாற்றப்பட்டாக வேண்டும்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் : அப்படின்னா திருவாளர் குற்றவாளிக்கு ஒரு சேர் போட்டு உட்கார வைப்போமா...
துர்கா : அதைத்தான் சொல்லவந்தேன் மேடம். தீர்ப்பு வழங்கப்படும்வரை அவரை அமர வைத்து விசாரிப்பதுதான் நல்லது.
அரசு வழக்கறிஞர் : அதுதான் இரண்டு நீதிமன்றங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டிருக்கிறதே.
துர்கா : அதை மறு பரிசீலனை செய்யச் சொல்லித்தானே மனு தாக்கல் செய்திருக்கிறார். அதையும் இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால்தானே இந்த வழக்கு விசாரணையே இன்று நடக்கிறது. இறுதித் தீர்ப்பு வழங்கப்படாதவரை அவர் நிரபராதியே. எனவே அவருக்கு ஒரு நாற்காலி தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சாட்சிகள் உட்கார்ந்து சாட்சி சொல்லவும் சில நாற்காலிகள் போடவேண்டும் மேடம்.
அரசு வழக்கறிஞர் : அப்போ நீங்களும் நானும் மட்டும்தான் நின்னு வாதாடணுமா... நாம என்ன தப்பு செஞ்சோம். உங்களை மாதிரியான வழக்கறிஞர்கள் கூட வாதடறேனே அதுக்கான தண்டனையா..?
துர்கா: வகுப்புகளில் ஆசிரியர்கள் நின்றபடி பாடம்சொல்லித் தருகிறார்களே அது அவர்களுக்கான தண்டனையா என்ன... அரசியல்வாதிகள் மேடைகளில் நின்றுகொண்டு பேசுகிறார்களே அது அவர்களுக்கான தண்டனையா என்ன? நிற்பது என்பது அங்கு மரியாதையையும் அதிகாரத்தையும் காட்டுகிறது.
அரசு வழக்கறிஞர் : அப்போ நீதிபதி மட்டும் உட்கார்ந்துகொள்ளலாமா... அவரும் எழுந்து நின்றுகொண்டுதான் இருக்கவேண்டுமா...
(நீதிமன்றம் சிரிக்கிறது)
துர்கா : மேடம் எழுந்து நிற்கவேண்டாம். ஆனால், இப்படி உயரமான பீடத்தில் அமர்வது சரியா என்று யோசியுங்கள். வாதப் பிரதிவாதங்களை கீழே நமக்கு சமமாக அமர்ந்து கேட்கலாம். தீர்ப்புவழங்கும்போது மட்டும் அந்த பீடத்தில் அமர்ந்து கொள்ளலாம். நமது இன்றைய நீதிமன்றம் என்பது ஆலமரத்தடி பஞ்சாயத்துபோல் இருக்கிறது. நீதிபதி மிக உயர்ந்த மேடையில் அமர்ந்திருக்க, குற்றவாளி நின்றபடி கை கட்டி பதில் சொல்லவேண்டியிருக்கிறது.
அரசு வழக்கறிஞர் : மை லார்ட்... இதை ஏற்க முடியாது. நீதி அமைப்புக்கும் நீதிபதிக்கும் உள்ள மரியாதையை இவர் கேவலப்படுத்துகிறார். இந்த வழக்கை இந்தக் காரணத்துக்காகவே தள்ளுபடி செய்து இரட்டை மரண தண்டனையை உடனே நிறைவேற்றச் சொல்லுங்கள்...
(அவர் துர்காவைப் பார்த்தபடியே பேசி முடித்துவிட்டு நீதிபதியைத் திரும்பிப் பார்க்கும்போது அந்தப் பீடம் காலியாக இருக்கிறது. நீதிபதி கீழே அமர்ந்து தட்டச்சு செய்பவருக்கு அருகில் நின்றுகொண்டிருக்கிறார். அந்தப் பணிப் பெண் பயந்து நடுங்கி எழுந்து நிற்கிறாள். நீதிபதி அவள் தோளில் தொட்டு உட்காரச் சொல்லிவிட்டு இரண்டு நாற்காலிகள் கொண்டுவரச் சொல்கிறார். ஒன்றில் அவர் அமர்ந்து கொள்கிறார். வெள்ளை உடையும் குறுக்குப்பட்டையும் அணிந்து கையில் பெரிய தடியுடன் நிற்கும் டவாலியை இன்னொரு நாற்காலியில் அமரச் சொல்கிறார். அவர் பயந்து பின்வாங்கவே, வற்புறுத்தி தன் பக்கத்தில் அமரச் செய்கிறார். துர்காவைப் பார்த்து இப்போது திருப்திதானே என்று புன்முறுவல் பூக்கிறார். துர்கா ஆமோதித்து தன் வாதங்களைத் தொடர்கிறாள்).
துர்கா : நன்றி மேடம். நான் நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். எந்தத் தவறென்றாலும் மரண தண்டனை கூடாது என்றவகையில் இந்த தண்டனையை எதிர்க்கிறேன். இரண்டாவதாக, இவரைப் போன்றவர்கள் பாலியல் கொடுமைகள் செய்வதற்கும் அது வெளியில் தெரியக்கூடா தென்று கொலை செய்வதற்கும் நம் சமூகத்தில் இருக்கும் பாலியல் நெருக்கடிகளும் சட்டங்களுமே காரணம். இவர்களுக்கு உண்மையில் சிகிச்சைதான் தரவேண்டும். இவர்கள் குற்றவாளிகள் அல்ல... நான் மெடிக்கல் ஜர்னல்ல எழுதின ஒரு கட்டுரையோட தலைப்பைச் சொல்றேன். என்னோட டாக்டரேட் ஆய்வே அதுதான் : “செக்ஸ் குற்றம்’ செய்பவர்கள் குற்றவாளிகளே இல்லை.
அரசு வழக்கறிஞர் : ஓ. அதுனாலதான் ஆட்டோ ஷங்கர் மாதிரி நாலு பெண்களைக் கொன்னவனோட சார்பில வாதாட முன் வந்திருக்கீங்களா..?
என் ஆய்வுக் கட்டுரைகளைப் படித்த சிலர் அப்படின்னா ஒரு செக்ஸ் குற்றவாளிக்காக வாதாடுவியா... இந்த கேஸ்ல வாதாடுவியான்னு கேஷுவலா கேட்டாங்க. ஓகேன்னு சொன்னேன். என்னைப் பொறுத்தவரையில் செக்ஸ் என்பது அடிப்படையில் அவசியமான நல்ல விஷயம். அது புனித மானதோ மறைத்துவைக்கப் படவேண்டியதோ தடுக்கப்பட வேண்டியதோ அல்ல. ஒருவர் ஒரு விளையாட்டில் திறமை யுடன் இருந்தால் என்ன செய்வோம்? அவர் அதில் சாதனைகள் படைக்க வழி செய்துகொடுப்போம் அல்லவா. செக்ஸ் விஷயத்திலும் அதைத்தான் செய்யவேண்டுமென்கிறேன்.
அரசு வழக்கறிஞர் : செக்ஸை ஒரு விளையாட்டு என்று சொல்கிறீர்களா..?
ஆமாம்.
அது எப்படி..? இருவருடைய சம்மதத்துடன் நடக்கும்போது வேண்டுமானால் அப்படிச் சொல்லலாம். ஒருவரை வலுக் கட்டாயப்படுத்துவதை எப்படி விளையாட்டென்று சொல்ல முடியும். செக்ஸ் குற்றங்கள் எல்லாமே ஆணின் அத்துமீறல்கள் தானே.
நீங்கள் சொல்வது சரிதான். அந்த விஷயத்துக்குப் பின்னர் வருகிறேன். முதலில் செக்ஸ் என்பது கிரிக்கெட்போல், கால்பந்துபோல் ஒரு விளையாட்டு என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் கிரிக்கெட்டில் திறமையுடனும் ஆர்வத்துட னும் இருந்தால், அவருக்கு உரிய உபகரணங்கள் வாங்கித் தருவோம். நல்ல மைதானத்தில் தொடர்ந்து பயிற்சி செய்து திறமையை மேம்படுத்திக்கொள்ள வழிசெய்துதருவோம் அல்லவா. அதுபோல் செக்ஸில் ஒருவர் கூடுதல் ஆர்வத்துடன் இருந்தால் அவருக்கு அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும்.
செக்ஸ் என்பது இருவர் சம்பந்தப்பட்டது என்று சொன்னீர்கள். ஒருவேளை ஒரு ஆண் அல்லது ஒரு பெண் பல பெண்களுடன் அல்லது பல ஆண்களுடன் அவர்கள் அத்தனை பேரின் சம்மதத்துடன் உடலுறவு கொள்ள விரும்பினால் இன்றைய சமூகம் அனுமதிக்குமா?
அனுமதிப்பதில்லைதான்.
அதைத்தான் தவறு என்கிறேன். அதுதான் எல்லா பிரச்னைகளுக்கும் மூல காரணம். சம்மதிக்கும் பலருடன் உறவுகொள்ள இந்த சமூகம் அனுமதிக்காமல் இருப்பதால்தான் சம்மதிக்காத ஒருவருடன் பலாத்காரம் செய்ய சிலர் முற்படுகிறார்கள். அவர்கள் அப்படி பலாத்காரம் செய்ய அவர்கள் அல்ல; இந்த சமூகம்தான் காரணம். நான் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு என்ன உணவு பிடிக்கும்?
எல்லாம்தான் பிடிக்கும்.
நல்லது. அப்படித்தான் இருக்கவும் செய்யும். ஏதேனும் ஒன்று ரொம்பவும் பிடிக்கும் அல்லவா..?
ஆமாம். மசால் தோசை மிகவும் பிடிக்கும்.
சரி... அதை எத்தனை நாளைக்கு ஒருதடவை சாப்பிடுவீர்கள்?
தினமும்தான்.
க்ரேட். இப்போது நீங்கள் மாதத்துக்கு ஒரே ஒரு மசால் தோசைதான் அதுவும் ஒரே ஒரு ஹோட்டலில் இருந்து மட்டுமே சாப்பிடவேண்டும் என்று சொன்னால் என்ன செய்வீர்கள்?
அப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டால் எந்த நாட்டில் மசால் தோசை இஷ்டம்போல் சாப்பிடலாம் என்று சொல்கிறார் களோ அங்கு போய்விடுவேன்.
அப்படிப் போகமுடியவில்லையென்றால்..?
கஷ்டம்தான்.
என்ன செய்வீர்கள்? திருட்டுத்தனமாகமாவது மசால் தோசைகளை இஷ்டம்போல் சாப்பிட முயற்சி செய்வீர்கள் அல்லவா?
ஆமாம்.
ஆனால், அது சட்ட விரோதம் ஆயிற்றே.
நான் மீறுவது தவறல்ல. அப்படி ஒரு முட்டாள்த்தனமான சட்டத்தைப் போட்டதுதான் தவறு.
அதைத்தான் செக்ஸ் விஷயத்துக்கும் சொல்கிறேன். ஒருவருக்கு பலருடன் உறவு கொள்ள ஆசை இருப்பது இயல்பான விஷயம். அதைச் சட்டம் போட்டுத் தடுத்ததால்தான் அவர் அதை மீறவேண்டிய நிர்பந்தம் வருகிறது. எனவே, அவர் மீறியது தவறில்லை. தடை போட்டதுதான் தவறு.
இதனிடையில் நீதிமன்றக் கடிகாரம் 12 முறை ஒலிக்கிறது. அன்றைய விசாரணை அதோடு முடிகிறது. நீதிபதி மறு நாள் தொடரலாம் என்று சொல்கிறார்.
*
No comments:
Post a Comment