Saturday 27 October 2018

இந்து விழாக்கள்... விமர்சனங்கள்...

·                     விநாயக சதுர்த்தியின் போது களிமண் அல்லாத விநாயகர் பொம்மைகளை நீர் நிலைகளில் கரைப்பதால் அவை மாசடைகின்றன.
·                     தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது.
·                     கோவில்களில் யானையைத் துன்புறுத்துகிறார்கள்...
இவை போன்ற பாதுகாப்பான-சுய ஆதாயம் மிகுந்த விமர்சனங்களில் இந்து விழாக்களை அழிக்கும் நோக்கம் இருப்பது உண்மைதான்.
·                     ஆண்டில் 364 நாட்கள் ஆலைகள், வாகனங்கள் மூலம் மாசடைவதைவிடவா ஒரே ஒரு நாள் இந்துக்கள் பட்டாசு வெடிப்பதால் மாசடைந்துவிடப்போகிறது?
·                     ரத்தம் சிந்தா பக்ரீத் என்று சொல்லிப் பாருங்களேன்.
·                     இறை வழிபாட்டில் கத்தியால் வெட்டிக்கொள்ளும் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்துக் குரல் கொடுங்களேன்.
·                     ஆங்கில புதுவருடம், கிறிஸ்மஸ் போன்றவற்றுக்கு பட்டாசு வெடிப்பதில்லையா... மின்சாரத்தை வீணடிப்பதில்லையா..?
·                     பிரிட்டிஷ் காலகட்டத்தில் தாரைவார்க்கப்பட்ட சர்ச் நிலங்களை 100 வருட குத்தகை முடிந்த பிறகு அரசிடம் ஒப்படைக்கவேண்டியதுதானே... அல்லது இன்றைய மார்க்கெட் விலைக்கு வாடகையை கொடுக்கவோ அரசின் கட்டுப்பாட்டுக்கு  உட்படவோ வேண்டியதுதானே...
போன்ற கேள்விகளும் கேட்கப்படவேண்டியவையே.
ஆனால், இவற்றுக்கான எதிர்வினையாக, பட்டாசு வெடிக்கக்கூடாது என்கிறாயா... அதற்காகவே கூடுதலாக வாங்கி வெடிப்பேன்.
பெரிய விநாயகர் சிலைகள் கூடாதா..? அதற்காகவே அவற்றை வைப்பேன் என்பவையெல்லாம் மேலோட்டமாகப் பார்த்தால் நியாயமான வீரமான நடவடிக்கைகளாகவே தெரியும். ஆனால், பரந்த, தொலைநோக்குப் பார்வையில் இவை அவ்வளவு விவேகமான எதிர்வினைகள் அல்ல.
நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்: இந்து மறு மலர்ச்சி, இந்து ஒற்றுமை, இந்து கலாசார பாதுகாப்பு ஆகியவைதானே ஒழிய வேறெதுவும் இல்லை.
இந்து மத விழாக்கள், சடங்குகள் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்ற நோக்கம் 40% இருக்கிறது. பிற மத, அதிகாரமையங்கள் மேல் விமர்சனம் வைக்காமல் இருப்பது என்ற தந்திரம் 40% இருக்கிறது. அதே நேரம் இந்துக்கள் தம்மைச் சீர்திருத்திக்கொள்ளவும் பலப்படுத்திக்கொள்ளவுமான தேவையும் அந்த விமர்சனங்களில் 20% இருக்கத்தான் செய்கிறது.
இந்து ஒற்றுமை என்ற கோணத்தில் பார்த்தால் அந்த 20% நமக்கு 100%க்கும் மேலான முக்கியத்துவம் வாய்ந்தது. 80% விரோதத்துக்கு பதிலடியாக உடனடி எதிர்ப்பு காட்டுவதோடு நிற்காமல் இதுவே மிக மிக முக்கியம்.
ஐம்பது மதிப்பெண் பெற்றவனைப் பார்த்து ஒருவன் நீ ஃபர்ஸ்ட் க்ளாஸ் மார்க் வாங்கலியே என்று எள்ளிநகையாடினால், நீ இரட்டை இலக்கத்தை எப்போதடா எட்டுவாய் என்று பதிலடி கொடுத்து அவன் வாயை அடைக்கத்தான் வேண்டும். அதேநேரம் 80-90 மதிப்பெண் பெற்றும் அவன் வாயை அடைக்க முடியும்.
இன்னும் எளிதில் புரியும்படியான நடைமுறை உதாரணம் சொல்வதென்றால் பிராமண சமூகம் இடப்பங்கீட்டை எதிர்கொண்டவிதத்தைச் சொல்லலாம். திறமையின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியில்  அரசுப் பணிகளில் அதிக அளவில் இடம்பெற்றிருந்த பிராமணர்களுடைய வாய்ப்புகள் சுதந்தர இந்தியாவில் அவர்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப நேர்படுத்தப்பட்டன. அது நிச்சயமாக பிராமணர்களுக்கு எதிரான நடவடிக்கையே.
ஆனால், அவர்களோ இந்தியாவில் பிராமணர்கள் மட்டுமல்லாமல் பிற இடைநிலை சாதிகளே, நில உடமை, அரச நிர்வாம், வணிக அமைப்புகள் என அனைத்திலும் முன்னணியில் இருந்தார்களே... எங்களை மட்டும் ஏன் கட்டம் கட்டுகிறீர்கள் என்று கேட்கவில்லை. எங்களுக்கு அரசுப் பணிகளில் இடம் கொடு என்று போராடவில்லை. தனியார் வேலை, அயல் மாநில வேலை, அயல் நாட்டுவேலை என்று தங்களுடைய திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேறிக் காட்டியிருக்கிறார்கள்.
இந்தியா என்ற அளவிலும் கூட உலக நாடுகள் பொருளாதாரத் தடைவிதித்தோ, உயர் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ளமாட்டேன் என்று மறுத்தோ நம்மை ஒதுக்கும்போது நாம் நம் திறமையால் முன்னேறிக் காட்டியிருக்கிறோம்.
எதிரியின் தரத்துக்கு இறங்கி சண்டையும் போடலாம். எதிரியால் எட்டவே முடியாத  உயரத்துக்குப் போய் ஜெயிக்கவும் செய்யலாம்.
தேர்வு நமதே...
*
இப்போது இந்து மதம் மீது (மட்டுமே) வைக்கப்படும் விமர்சனங்களை கம்பீரமாக எதிர்கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
அதாவது, இந்த விழாக்களை உண்மையான இந்து மறுமலர்ச்சியாக இந்து நவீனமாக மாற்றிக்கொள்வது எப்படி? 
இந்து மதத்தை விமர்சிக்கும் தார்மிக பலம் ஒருவருக்கு எதன் மூலம் கிடைக்கிறது?, இந்து மதத்தின் ஜாதிய வாழ்க்கை பற்றிய விமர்சனபூர்வமான பார்வைதான் அந்த பலத்தை ஒருவருக்குத் தருகிறது. ஒரு இந்து என்னதான் பெருமை பேசினாலும் ஜாதி என்ற ஒன்றை வைத்துத்தான் அவரை மற்றவர்கள் மட்டம் தட்டுகிறார்கள். 
மதம், இனம், நிறம், மொழி,தேசம் போன்ற குழு மனப்பான்மைகளில் ஜாதி கடைநிலையில் இருக்கும் ஆக மிதமான கெடுதல் என்பதைப் புரிந்துகொள்ளும் காலம் வரும்வரையில் ஜாதி சார்ந்த மிகை விமர்சனங்களுக்கு இதமாகவே எதிர்வினையாற்றியாகவேண்டும்.
இந்து விழாக்களின் நவீனத்துவம், இந்து மறுமலர்ச்சி என்பதை ஜாதி சார்ந்த மறுமலர்ச்சிக்கு உகந்ததாக ஆக்கவேண்டும்.
திருவிளக்கு பூஜை, விநாயக சதுர்த்தி போன்றவற்றின் மூலம் இந்து ஒற்றுமையை  முன்னெடுப்பதுபோலவே பிற இந்து விழாக்களையும் ஜாதி சமூக ஒற்றுமைக்கு ஏற்றதாக மாற்றவேண்டும்.
உதாரணமாக, விநாயகர் சதுர்த்திக்கு பிரமாண்ட பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் பொம்மைகளுக்குப் பதிலாக கடைநிலை ஜாதியினரிடம் களிமண் மற்றும் அச்சுக்களைக் கொடுத்து சிறிய அழகிய விநாயகர் பொம்மைகளை உருவாக்கச் சொல்லி ஒவ்வொருவரும் அதைத் தமது வீட்டுக்கு வாங்கி வந்து பூஜை செய்து கடைநிலை ஜாதியினரிடமே திருப்பிக் கொடுத்துக் கரைக்கச் சொல்லிவிடவேண்டும்.
அப்படித் திருப்பிக் கொடுக்கும்போது வீட்டு உறவினருக்குச் செய்வதுபோலவே, கோவில் அர்ச்சகருக்குத் தருவதுபோலவே கொழுக்கட்டை, வெத்தலை பாக்கு, பழம், வேஷ்டி, புடவை கொடுக்கலாம். தற்போது கடைநிலை ஜாதியினர் எல்லா திருவிழாக்களிலும் கடைநிலைப் பணிகளை, பொருட்களை விலைக்கு விற்கிறார்கள். அதை மாற்றி ஒவ்வொரு விழாவிலும் அவர்களை  அங்கத்தினராக ஆக்கவேண்டும்.
தற்போது வீடுகளில் வேலை செய்பவர்களுக்கு இதுபோன்றவற்றைத்  தருவதுண்டு. ஆனால், அதை உரிய கண்ணியத்துடன் செய்ய வேண்டும். நவராத்திரி போன்ற விழாக்களில் சொந்த ஜாதிப் பெண்களுக்கு செய்யும் மரியாதைபோல் வீட்டுக்குள் அழைத்து ஸ்வாமி அறையில் உட்காரவைத்துகொடுக்கவேண்டும்.
கடைநிலை ஜாதியினரின் குடியிருப்புகளுக்கு சென்று 108 அல்லது 1008 களிமண் விநாயகர் பொம்மைகளைச் செய்து ஒரு பெரிய விழாவாக அதைக் கொண்டாடலாம்.
ஒவ்வொரு விநாயகர் கோவிலிலும் அதுபோல் நூற்றுக்கணக்கில் விநாயகர் பொம்மைகளை கோவில் மதில் சுவரில் கொலுபோல் வைத்து அவற்றுக்கு சிறிய அகல் விளக்கால் ஒளி ஏற்றி வணங்கலாம்.
ஒவ்வொரு கிராம தெய்வத்தின் விக்ரகத்தையும் களிமண் விநாயகர்களையும் பல்லக்கில் வைத்து அனைத்து ஜாதி, அனைத்து மதத்தினர் வசிக்கும் தெருக்கள் வழியாகக் கொண்டு சென்று கிராம நல்லிணக்கத்தை பலப்படுத்தலாம்.
*
தீபாவளியை எடுத்துக்கொண்டால், முன்பெல்லாம் கோவில் திருநாளின் போது சொக்கப்பனை, வாண வேடிக்கை என நடத்துவார்கள். அதுபோல் தீபாவளியன்று இரவு அவரவர் பகுதியில் இருக்கும் கோவிலில் ஸ்வாமி உலா ஏற்பாடு செய்து தெப்பக் குளம் இருந்தால் தெப்ப உற்சவம் நடத்தி வாணவேடிக்கை நிகழ்ச்சியை நடத்தலாம்.
ஒவ்வொரு கிராமத்திலும் அனைத்து ஜாதியினரும் ஒன்று கூடி ஒரு அறக்கட்டளை போல் அமைத்து தீபாவளியைக் கொண்டாடலாம். அவரவருக்கு முடிந்த தொகையை திருமணமொய் கவர் போல் ஒன்றில் போட்டு கோவிலில் கொடுத்துவிடவேண்டும். அந்தப் பணத்தை வைத்து கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் சீருடை போன்று ஒரே விதமான ஆடையை  வாங்கித் தரலாம். பள்ளிச் சீருடை போல் அல்லாமல் வண்ணமயமான ஆடையாக அதை வாங்கி கிராமத்தில் அனைவரும் அணிவது கிராமத்தின் அனைத்து ஜாதியினரிடையே நட்புறவை பலப்படுத்தும்.
பணிபுரியும் இடங்களில் கூட்டுறவு அமைப்பு போல் அல்லது சீட்டுக் கட்டி தீபாவளிக்கான பட்டாசு, பலகாரங்கள் வாங்குவதுபோல் கிராமத்திலும் அனைவருக்கும் வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். உண்மையில் கிராமத்தில்தான் இந்த கூட்டுறவு முறை முதலில் அமலாகியிருக்கவேண்டும்.
நகரம் கிராமம் நட்புறவை பலப்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம். நகரத்தில் இருந்து குழுக்களாக கிராமங்களுக்குச் சென்று அவர்களுடன் தீபாவளியைக் கொண்டாடலாம். இந்திய வானில் (தென்னிந்திய வானில்?) சூழும் பட்டாசுப் புகை மூலம் தீபாவளியை நம் முப்பத்து முக்கோடி தேவர்கள் பார்த்து பழகியவர்களுக்கு வண்ணமயமான ஒற்றைச் சீருடையில் அனைத்து ஜாதியினரும் ஒவ்வொரு கோவில்களை வலம்வருவதைப் பார்ப்பது பேரானந்தமாகவே இருக்கும்.
ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அம்மன் கோவிலில் அந்த ஆண்டு என்ன நிற மேலாடை, என்ன நிற இடையாடை என்று சிறுவர்களைவிட்டுத் தேர்ந்தெடுக்கச் சொல்லி அப்படியான உடையை ஊர் முழுவதும் அணியவேண்டும்.
சீருடை என்பது அதை அணியும் குழுவினரிடையே நெருக்கத்தை அதிகரிக்கும். இன்று நகைக்கடை, உணவு விடுதி, விமானசேவை போன்றவற்றுக்கு தனியான சீருடை இருப்பதைப் பார்த்திருப்போம். அதை அவர்கள் தனி அடையாளம் என்ற வகையில் மட்டுமல்ல பணியாளர்களிடையே ஒற்றுமை என்ற வகையிலும் முன்னெடுக்கிறார்கள். எனவே, தீபாவளிக்கு ஒரு கிராமத்தில், தெருவில் இருக்கும் அனைத்து ஜாதியினரும் ஒரே நிற உடை அணிவதென்பது அவர்களிடையே நல்லுறவை பலப்படுத்தும்.
வெளியூரில் இருப்பவர்கள் கூட தமது கிராமத்து சீருடையை அணிந்து ஃபேஸ்புக்,வாட்ஸப்பில் புகைப்படங்களை வெளியிட்டு ஊர்ப்பாசத்தை வெளிப்படுத்திகொள்ள முடியும். ஒரே நிற உடை என்பதால் செலவும் குறையும். துணி நிறுவனங்களுக்கும் லாபகரமான வழிமுறையாக இது இருக்கும்.
இந்த விழாக்களில் ஜாதி நல்லிணக்கத்தைக் கொண்டுவருவது எளிது. ஒரு கோவிலின் பாரம்பரிய விழாக்களில் இருக்கும் ஜாதி சார்ந்த அம்சம் இதில் இருக்காது. நவீன கால விழா என்பதால் ஆரம்பிக்கும்போதே ஜாதி நல்லிணக்கத்துடன் இதைத் தொடங்க முடியும். ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்த 9 அல்லது 18 அல்லது 108 என அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும் முளைப்பாரி எடுத்து பால் குடம் எடுத்து விழாவைத் தொடங்கலாம்.
வட இந்திய பாணியில் கோவில்களை அகல் விளக்குகளால் அலங்கரிக்கலாம்.  
இவையெல்லாம் பெரியோர்களுக்கான சீர்திருத்தங்கள். சிறுவர்களைப் பொறுத்தவரையில் வண்ணமயமான வாண வேடிக்கையை கைகட்டி வேடிக்கை பார்ப்பதைவிட ஒற்றை ஊசிப்பட்டாசாக இருந்தாலும் தானே பற்றவைத்து வெடித்தால்தான் சந்தோஷமாக இருக்கும். சிறுவர்களிடமிருந்து அந்த சந்தோஷத்தைப் பறித்துவிடக்கூடாது. எனவே அவர்களுக்கு பட்டாசுகள் தந்தாகவேண்டும்.
வெடி வகைகளுக்கு பதிலாக வண்ண வண்ண மத்தாப்புகளை அதிகம் பயன்படுத்தவைப்பது (குடிசைகள் பெருமளவுக்கு வழக்கொழிந்துவிட்ட நிலையில்)  இன்னும் நல்லது. அவர்கள் தமது வீட்டு வாசலில் வெடிக்கும் ஒரு மத்தாப்பின் நட்சத்திரச் சிதறல்கள் அதை உற்பத்தி செய்யும் சக இந்திய தொழிலாளியின் வீட்டில் வெளிச்சத்தை ஏற்படுத்துகிறது என்று பெருமிதம் கொள்ளச் செய்யலாம்.  
நாய், பூனை மற்றும் பிற கால்நடைகள் போன்ற வளர்ப்பு மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் காதுகளில் பஞ்சு அல்லது  விலங்கு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர் சொல்லும் வழியிலான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.
எளிய உயிர்களை கிராமங்களில் சற்று ஒதுக்குப்புறமான இடங்களுக்குக் கொண்டு சென்று ஓரிரு நாட்கள் பராமரிக்க ஏற்பாடு செய்யவேண்டும். வேடந்தாக்கல் பக்கத்தில் என்று நினைக்கிறேன். ஒரு கிராமத்தில் பறவைகளுக்கு துன்பம் தரக்கூடாதென்று பட்டாசு வெடிப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவரின் வாரிசுகளான நாம் அந்தக் கருணை ஒளியைக் கொஞ்சம் தூண்டிவிட்டுக் கொள்ளவேண்டும்.
பட்டாசு வெடித்துக் கொண்டாடும் சிறுவர்கள் வேறொரு விஷயமும் செய்ய வேண்டும். தீபாவளி நாளில் சூழல் பற்றி அக்கறைகொள்வதோடு நின்றுவிடும் சூழலியல் அமைப்பில் தொடங்கி ”நோ பட்டாசுகள்’ கேம்பெய்னில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்களுடைய வீடுகளுக்குச் செல்லவேண்டும். அவர்கள் பயன்படுத்தும் கார்கள், பைக்குகளில் உங்கள் சுற்றுச் சூழல் அக்கறை தீபாவளி தாண்டியும் விரியட்டும் என்று ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.  தொழிற்சாலைகள், சூழலியல் மாநாடுகள் ஆகியவற்றுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் கைப்பட எழுதிக் கொடுக்கலாம். கார்டுகள் அனுப்பலாம்.
போராளிகள் அக்கம் பக்கத்தில் இருந்தால் அவர்கள் வீட்டின் முன்னால் சென்று விழிப்பு உணர்வு பேரணிகள் கூட நடத்தலாம்.  நாங்கள் ஒரு நாள் பட்டாசு வெடித்தற்கு பிராயச்சித்தமாக இதைச் செய்துவிட்டோம்... நீங்கள் உங்கள் பங்கை எப்போது செய்வீர்கள் என்று கேட்கச் செய்யலாம். 
*
ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டம், காதலர் தினம் போன்றவற்றை மேற்கத்தியர்கள் எப்படி உலகம் முழுவதும் புகுத்துகிறார்களோ அதுபோல் அல்லாமல் நமது பாரம்பரிய விழாக்களின் நல்லம்சங்களை ஒருங்கிணைத்து புதிய விழாக்களை அல்லது பாரம்பரிய விழாக்கள் சிலவற்றுடன் புதிதாகச் சேர்த்து மீட்டெடுக்கவேண்டும்.
அட்சய திருதியை போன்ற வணிக இலக்கு கொண்ட விழாக்கள் போலல்லாமல் பாரம்பரிய மறுமலர்ச்சியாக இந்து சமூக ஒற்றுமையாக இந்த விழாக்களை வடிவமைக்கவேண்டும்.
கோவில்களில் யானைகள் கூடாதென்கிறார்களா..? நல்லது... மிருக காட்சி சாலையில் இருக்கும் விலங்குகள், பறவைகளையும் காடுகளுக்கு அனுப்பிவிடலாம். யானைகளின் வானரங்களின் மயில்களின் பசுக்களின் சரணாலயங்களை கோவில்களாக்கிக் கொள்ளலாம். திறந்த வெளியில் சுதந்தரமாக வாழும் அவற்றுக்கு அந்த கோவிலில் பூஜை செய்யப் பழக்கினால்போதும்.
தினமும் அவற்றுக்கான உணவு நேரத்துக்கு முன்பாக யானைகளை இறைவன் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து தேங்காய் உடைத்து, தூப தீபம் ஏற்றி ஆரத்தி காட்டி வணங்கச் செய்து அதை நாடு முழுவதிலும் உள்ள கோவில்களில் பெரிய திரையில் ஒளிபரப்பலாம். கோவில்களில் பூஜை, தீபாராதனை நடப்பதைப் பார்க்க பக்தர்கள் குழுமுவதைப் போல யானைகள் காட்டில் வழிபாடு செய்வதைப் பார்க்கவும் அந்த நேரத்தில் பக்தர்கள் கூடுவார்கள்.
திருக்கழுகுன்றம் போன்ற இடங்களில் கருடன் தினமும் மதிய நேரம் சரியாக வந்து ஆசியளித்துப் பிரசாதம் பெற்றுச் செல்வதைப் பார்த்திருப்போம். சில ஊர்களில் திருநாட்களில் கருடன் ஸ்வாமி விக்ரகத்தை வானிலிருந்தே மூன்று முறை வட்டமிடுவதுபோல் இதைக் காணவும் பக்தர்கள் ஆர்வத்துடன் வருவார்கள்.
உலகக் கோப்பை போட்டியில் எந்த அணி வெல்லும் என்று ஆமையிடமும் ஆக்டோபஸிடமும் கேட்கும் மேற்குலகுக்கு மாற்றாக நம்மிடம் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் உண்டு. அதை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
காட்டுக் கோவிலில் மயில்கள் எல்லாம் கூடி நின்று முருகா முருகா என்று அகவியபடியே பூஜை செய்துவிட்டு, சரணாயலக் காப்பாளர் தூவும் தானியங்களைக் கொத்தித் தின்பதைப் பார்ப்பது மிகப் பெரிய இறை அனுபவமாக இருக்கும் அல்லவா..?
பாரம்பரிய அம்சங்களை நவீன விழாக்களாக மாற்றுவது என்பதற்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி மிக நல்ல எடுத்துக்காட்டு. இந்து ஒற்றுமையை கலாசாரப் பாதுகாப்புவழியில் முன்னெடுக்கும் நல்ல முயற்சியும் கூட. அதுபோலவே அனைத்து விழாக்களையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ளவேண்டும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்து விழாக்களில் நவீன-பாரம்பரிய நல்லம்சங்களைச் சேர்க்கவேண்டும் இந்து ஒற்றுமையை பலப்படுத்தும்வகையில் சீர்திருத்தவேண்டும். அதுவே இந்து விழாக்கள் மீது போலி சூழல் ஆர்வத்துடன் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கான பதிலாக இருக்கும்.
சிவாஜி மட்டுமல்ல...
சாணக்கியரும் நம் குல மூப்பனே!

Monday 22 October 2018

தர்மத்தைக் காத்தருள் தர்ம சாஸ்தாவே



அறிந்தும் அறியாமலும்

தெரிந்தும் தெரியாமலும்

அவர்கள் செய்யும் சகல குற்றங்களையும் 


பொறுத்துக் காத்தருள்


தண்டித்து 

தர்மத்தைக் காத்தருள் 



சபரி மலை விஷயத்தில் 10-50 வயதுப் பெண்கள் வரக்கூடாது என்ற பாரம்பரியம் ஏன் உருவானது என்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முதலாவதாக, அமங்கல காலகட்டம் கொண்ட பெண்கள் வரவேண்டாம்; ஒரு மண்டல விரதம் இருக்க அவர்களால் முடியாது. இந்தக் காரணம்தான் பெரிதாக பலராலும் சொல்லப்படுகிறது.

இரண்டாவதாக இன்னொரு காரணமும் இருக்கிறது. அதிகம் பேசப்படாத அதுதான் உண்மைக் காரணம் என்றும் தோன்றுகிறது.

ஐய்யப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி. எனவே அவரைப் பார்க்க வரும் பக்தர்களும் அப்படியான கடுமையான பிரமச்சரிய விரதம் இருந்தே மலை ஏற வேண்டும்.

இந்தக் கோணத்தில் பார்க்கும்போது சாலை வசதிகள் இல்லாத காலகட்டத்தில் மலை ஏற்றம் என்பது பல நாட்கள் ஆகும் பயணம். ஓரிடத்தில் தங்கி வாழும் விவசாய சமூகத்தின் நல்லொழுக்கக் கண்காணிப்பு அமைப்புகள் நாடோடியாக பயணம் மேற்கொள்ளும் இடங்களில், நேரங்களில் சாத்தியமில்லை.

ஒரு மண்டல பிரம்மச்சரிய விரதம், கண்காணிப்பு சாத்தியமில்லாத பல நாள் மலைப் பயணம், நிலவு மட்டுமே பொழியும் குளிர் இரவுகள் இப்படியான சூழலில், அப்படியான இடத்தில் பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாகக் கடைப்பிடித்தாகவேண்டுமென்றால் பெண்கள் அந்தப் பகுதியில் வராமல் இருந்தால்தான் சாத்தியம். உடனே ஐய்யப்ப பக்தர்கள் மேல் நம்பிக்கை இல்லையா, பெண்கள் மேல் நம்பிக்கை இல்லையா என்ற கேள்விக்கு உண்மையான பதில் என்றால் ’ஆம் நம்பிக்கை இல்லை’ என்றுதான் சொல்லவேண்டியிருக்கும். மனதளவில் கூட அந்த விரதத்துக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதே 10-50 வயதுப் பெண்களை அங்கு வர வேண்டாம் என்று சொல்ல முக்கிய காரணம்.

கோவிலுக்குச் செல்லும் நாட்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது என்பது ஒரு விதிமுறை. எனவேதான் திருப்பதி, பழனி, சபரிமலை என லட்சக்கணக்கானோர் கூடும் இடங்களிலும் அந்த மலைகளில் அசைவ உணவு விற்கப்படுவதில்லை. எப்படி அசைவத் தவிர்ப்புக்கு உதவும் வகையில் அந்த மலைகளில் மாமிசக் கடைகளை அனுமதிப்பதில்லையோ அதுபோலவே பிரம்மச்சரிய விரதத்தை சிறப்பாகக் கடைப்பிடிக்க ஏதுவாக 10-50 வயதுப் பெண்களை சபரிமலைக்கு வராமல் தவிர்த்திருக்கிறார்கள்.

உண்மையில் அந்தக் காலகட்டம் என்பது அமங்கல நாட்களைக் கொண்ட காலகட்டம் மட்டுமே அல்ல... காமம் சார்ந்து செயலூக்கத்துடன் திகழும் காலகட்டமும் கூட. எனவே ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களின் பிரம்மச்சரிய விரதத்தைக் காக்கும் நோக்கிலேயே அந்த வயதுப் பெண்களை அங்கு வரவேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இஸ்லாத்தில் பர்தா அணிவதற்கும், மசூதிக்குள் பெண்கள் நுழையக்கூடாதென்பதற்கும் சொல்லப்படும் முக்கியமான காரணம் பெண் உடல் ஆணின் மனதில் காம எண்ணங்களைத் தூண்டிவிடும் என்பதுதான். அது ஒடுக்குமுறையின் உச்சபட்ச வடிவம். சபரி மலையில் சொல்லப்படும் கட்டுப்பாடு என்பது அதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூடக் கிடையாது. அதோடு அது நியாயமான நோக்கில் முன்வைக்கப்பட்டிருக்கும் ஒழுக்கம். அதில் பெண்ணின் அமங்கலத் தன்மை குறித்த இழி பார்வையோ சமத்துவமின்மையோ நிச்சயம் காரணமில்லை.

அந்த வயதுப் பெண்களுக்கு மலை ஏறுவதில் ஏற்படும் சிரமங்கள், கர்ப்பப்பை பாதிப்பு போன்றவையெல்லாம் உண்மையான காரணமல்ல.

இந்தக் கோணத்தில் பார்த்தால், பிரம்மச்சாரியான ஐய்யப்பனின் சபரி மலைக்கு 10-50வயதுப் பெண்கள் வரக்கூடாது என்பது முழுக்க முழுக்க நியாயமான குறைந்தபட்ச ஒழுக்க விதி மட்டுமே. எனவே அது காக்கப்பட்டாகவேண்டும்.

ஆனால், சபரி மலை என்பது மேற்கத்திய கிறிஸ்தவ கலாசாரத் தாக்குதலின் மிக முக்கியமான களம். பெரும்பாலான இந்துக்கள் தங்களை இந்துவாக உணர்வது சபரி மலைக்கு மாலை போடுவதன் மூலமே. அவரவருக்கான குல தெய்வ வழிபாடுகள், இன்ன பிற சடங்குகள் என ஏராளம் இருக்கின்றன என்றாலும் அவையெல்லாம் ஒருவகையில் அவரவர் ஜாதி சார்ந்த அம்சங்களே. விநாயகர் வழிபாடு, சபரி மலை, ராம ஜென்ம பூமி போன்றவையே இந்துக்களை இந்துக்களாக ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள்.

இவற்றில் விநாயக சதுர்த்தி, ராம ஜென்ம பூமி போன்றவை வட இந்தியாவில் வெற்றிகரமாக அரசியல் உணர்வை ஊட்டும் விழாவாகவும் இயக்கமாகவும் முன்னெடுக்கப்பட்டுவிட்டன. தென்னிந்தியாவில் சபரி மலை இயக்கம் இந்துக்களை அரசியல்ரீதியாகத் திரட்ட நிச்சயம் உதவும். அது இந்துக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. எதிரிகளுக்குத் தெரிந்திருக்கிறது. எனவேதான் அதைத் தகர்க்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். தகர்க்க அவர்கள் எடுத்த முயற்சியையே ஒருங்கிணைக்கக் கிடைத்த வாய்ப்பாக நாம் பயன்படுத்திக்கொண்டாகவேண்டும்.

வேற்று மதத்துப் பெண்கள், நாத்திகர்கள் போன்றோரை மலை ஏற வைத்ததென்பது எதிரியின் பலவீனமானதும் சீண்டலை நோக்கமாகவும் கொண்ட காய் நகர்த்தல். ஒருவகையில் உள்ளே வரவிட்டு அடிப்பதுபோன்ற தந்திரம் என்றே தோன்றுகிறது. அல்லது இந்துகளில் சிலரை கோபத்தின் விளிம்புக்குத் தள்ளும் நோக்கம் கொண்ட வலை விரிப்பு.

இந்துக்களில் இருந்தே ஆயிரக்கணக்கானோரை எதிரிகளால் தயாரித்து அனுப்பிவைக்கமுடியும். ஜாதிய மோதல், மத மோதல், மொழி மோதல், வட இந்திய தென் இந்திய மோதல், அரசுக்கும் நீதித்துறைக்கும் எதிரான கலவரம் என பல கோணங்களில் இதை அவர்களால் திசை திருப்பவும் முடியும்.

எனவே, நமக்கு மிகுந்த கவனம் தேவை.

லட்சக்கணக்கான பக்தர்கள் நாட்கணக்கில் போராடுவது கோவில் மூடப்படவேண்டும் என்பதற்காக அல்ல; ஆனால் அது நடக்கும் என்று கோவில் நிர்வாகத்தையே சொல்லவைக்கமுடிகிறது. மறைந்து தாக்கும் எதிரி ஓரிரு பெண்களை வைத்து கோவிலை மூடிக்காட்டுவேன் என்று சொல்லாமல் சொல்லி வென்றும் காட்டுகிறான். பால் குடத்தில் அல்ல பாலாற்றில் அல்ல பாற்கடலிலேயே ஒரு துளி விஷத்தைக் கலந்து அதைப் பாழ்படுத்துகிறான்.

மக்களாட்சியில் நீதிமன்றம் சொல்வதே வேதம் என்று செலக்டிவ் ஞானோதயம் பெறும் கட்சிகள், ஆட்சிகளை மீறி எளிய மக்களின் பக்தர்களின் ஆதரவால், பக்தியால் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போட்டுவிட முடியாது.

இந்திய நீதிமன்றம் இந்து உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது.

மாநில அரசு முன் கைஎடுக்காமல் சட்டத் திருத்தம் சாத்தியமில்லையெனில், மத்திய அரசால் நீதித்துறையில் சீர்திருத்தமும் சாத்தியமில்லையெனில் நியாயமான மக்கள் போராட்டமும் சட்ட மீறலாகவே பார்க்கப்படும். மேலும் ஒரு மக்கள் கூட்டத்தை கையாள எந்தத் தலைவராலும் முடியாது. கம்யூனிஸ்ட் அரசு தனது அத்தனை அடக்குமுறையையும் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த முயற்சி செய்கிறேன் என்ற போர்வையில் நியாயப்படுத்திக்கொண்டுவிடும்.

*

மத விவகாரங்களில் அரசு, நீதித்துறை தலையிடக்கூடாது என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்... எந்த அளவுக்கு சரி என்ற ஒரு கேள்வியும் எழுகிறது.

நிச்சயமாக இதில் பொதுவான பதிலைச் சொல்லிவிடவே முடியாது. ஒவ்வொரு தனித்தனி விஷயம் சார்ந்தே இதைக் கையாளவேண்டியிருக்கும். ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தமது கோவிலில் திருவிழாவின் போது வேறொரு ஜாதியினர் தீ மிதிக்க அனுமதி இல்லை என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம். இங்கு பாரம்பரியம் என்பது ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தீ மிதித்து வருவதுதான். அதைக் காப்பாற்ற அவர்களுக்கு உரிமை உண்டா கிடையாதா..?

குறிப்பிட்ட ஜாதியினரை கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்வது நிச்சயம் தவறு என்பது இன்று பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டிருக்கிறது. அவர்களே கூட தீ மிதி விழாவைப் பொறுத்தவரை வேறொரு நாள் தீ மிதித்துக்கொள்ளுங்கள் என்றோ உங்களுக்கென்று தனி பூக்குழி வைத்துக்கொள்ளுங்கள் என்றோ சொல்கிறார்களென்றால் அதை எப்படி அணுகுவது?

பாரம்பரியம் என்பதை அப்படியே பின்பற்ற வேண்டுமென்று அவசியமில்லை. அந்த வழிமுறைக்கு எது ஆதார அம்சம் என்பதைப் பார்த்தே முடிவெடுக்கவேண்டும்.

பர்தாவுக்கு ஆணாதிக்கம் காரணம் என்பதால் அதை மாற்றச் சொல்ல நீதிமன்றத்துக்கு உரிமை உண்டு. ஆலய நுழைவு மறுப்புக்கு ஜாதிப் பெருமிதம் காரணமென்றால் அதை மாற்றச் சொல்ல அரசுக்கு அதிகாரம் உண்டு.

பெண்களை போப்களாக நியமிக்கவோ, திருப்பலி பூஜை செய்யவோ, பாவ மன்னிப்பு வழங்கவோ மறுத்தால் அதில் தலையிட்டு சமத்துவத்தைக் கொண்டுவர நீதித்துறைக்கு உரிமை உண்டு. ஏனென்றால் அது சமத்துவ மறுப்பு.

கோவில் அமைந்திருக்கும் மலைப் பகுதியில் அசைவக் கடைகள் இருக்கக்கூடாதென்று விதிமுறை இருந்தால் அதை மாற்ற அரசுக்கு உரிமை கிடையாது. ஏனென்றால் அந்த வழிமுறை எந்தவொரு ஒடுக்குமுறையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.

பிரம்மச்சாரி கடவுளை பிரம்மச்சரிய விரதம் இருந்து வணங்க வேண்டும்; அதற்குத் தோதாக பெண்கள் அந்தப் பகுதியில் வரக்கூடாது என்று சொல்லப்பட்டால் அதை மாற்ற நீதித்துறைக்கு அதிகாரம் கிடையாது. ஏனென்றால் அது சமத்துவ மறுப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல.

கோவில்களில் மிருக பலி கூடாது என்று ஒரு தீர்ப்பு வருகிறதென்றால் அதை எப்படி அணுகவேண்டும். இந்தப் பழக்கத்தின் பின்னால் இருப்பது தொல் பழங்குடி நம்பிக்கை. ஓர் எளிய உயிரின் படுகொலை. அசைவ உணவுப் பழக்கத்தில் இருந்து மனித இனம் நகரவேண்டிய நாகரிகப் பயணமானது முதலில் கோவிலில் இருந்து தொடங்கவேண்டும் என்பது நியாயமான சீர்திருத்தமே.

அப்படியாக பாரம்பரிய அம்சங்களில் எதை மாற்றலாம் மாற்றக்கூடாது என்பவற்றில் நிதித்துறையும் அரசும் நேர்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் அரசியல் செய்யக்கூடாது.

*

அடுத்ததாக, சபரி மலை விஷயத்தில் எதிரி என்னென்ன துருப்புச் சீட்டுகளை இறக்குவார்... அதை எப்படி எதிர்கொள்வது என்பதை நாம் திட்டமிட்டுக்கொள்வது நல்லது. பெண்களுக்கு எதிரானதாக மட்டுமே இப்போது முன்வைக்கப்படும் இந்த மோதலானது வட தென் இந்திய மோதலாகவும், ஜாதி மோதலாகவும் மாநில மோதலாகவும் மத மோதலாகவும் திரிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

வட இந்திய – தென் இந்திய மோதல்

வட இந்தியக் கோவில்களில் கருவறைக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி உண்டு. பக்தர்களே கடவுளுக்கு நேரடியாக அபிஷேகம் கூடச் செய்ய முடியும். தென்னிந்தியக் கோவில்களில் அந்த அனுமதி இல்லை. நீதிமன்றம் இது தொடர்பாக ஒரு தீர்ப்பு வழங்கினால் வட இந்தியர்கள் கருவறைக்குள் அனுமதியுங்கள் என்றுதான் சொல்வார்கள். அதற்காக அவர்கள் நமது எதிரிகள் என்றோ நம் உணர்வைப் புரிந்துகொள்ளவில்லையென்றோ அர்த்தமில்லை. இந்து பன்மைத்துவத்தின் இயல்பு இது. ஒற்றைப்படையை அது எங்குமே எதிலுமே அனுமதிக்காது. எனவே, இது சார்ந்து வட இந்திய மனோபாவத்தை நாம் எதிர்க்கவேண்டாம். அது எதிரி விரித்திருக்கும் வலை. கவனம் தேவை.

ஜாதிய மோதல்

கடைநிலை ஜாதியினரில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சக்திகளின் செல்வாக்கு ஒப்பீட்டளவில் அதிகம். சபரி மலை விவகாரத்தை ஜாதிய மோதலாக ஆக்க எதிரியால் எளிதில் முடியும். ஐய்யப்ப பக்தர்களில் கடைநிலை ஜாதி ஆண்கள் முக்கிய இடம் வகிக்கிறார்கள் என்பது உண்மைதான். எனினும் ஒரு சில கடை நிலை ஜாதிப் போராளிகளை முன்னிறுத்தி ஜாதிய மோதலாக இதைத் திசை திருப்ப எதிரி நிச்சயம் திட்டமிட்டு வைத்திருக்கிறான்.

கேரள வெள்ளத்தின் போது மேல் ஜாதி கிறிஸ்தவர்கள் தாழ்ந்த ஜாதி கிறிஸ்தவர்களுடன் ஒரே முகாமில் தங்க மாட்டேன் என்று சொன்னதை நாம் பார்த்திருக்கிறோம். தாய் மதத்திலும் அது சார்ந்து சீர்திருத்தம் இன்னும் தேவைப்படத்தான் செய்கிறது. தாழ்ந்த ஜாதி ஐய்யப்ப குருசாமிகளின் தலைமையில் பிற ஜாதி ஐய்யப்ப பக்தர்கள் மலைக்குச் செல்லுதல், மேல் ஜாதி ஐய்யப்ப குருசாமிகளின் தலைமையில் தாழ்ந்த ஜாதி ஐய்யப்ப பக்தர்கள் அணி திரளுதல் என ஜாதி கடந்த சமூக, மத ஆன்மிக ஒற்றுமையை உறுதிப்படுத்தும் நிகழ்வுகளை அதிகரிக்கவேண்டும்.

பெண்ணிய, நாத்திக, கம்யூனிஸ அமைப்புகளில் இருந்து சமத்துவம் கோரி போராடும் போராளிகளுக்கு, காத்திருக்கத் தயார் என்று சொல்லும் பெண் பக்தைகள் குழு சென்று வகுப்புகள் எடுக்கவேண்டும். அவர்களுடைய கூட்டங்கள் நடக்கும் இடங்களுக்குச் சென்று சரண கோஷங்கள் எழுப்பவேண்டும். தெய்வத்தின் சன்னிதானத்துக்கு நாத்திகர்கள் வர ஆர்வம் காட்டுவதுபோலவே நாத்திகர்களின் அலுவலகங்களுக்குச் சென்று பக்தர்கள் சில விஷயங்களைக் கற்றுத் தரவேண்டும்.

மாநில மோதல்

மொழி (மாநிலம்) சார்ந்த மோதலாக இது திசைதிருப்பப்படவும் வாய்ப்பு உண்டு. ஒரு குறிப்பிட்ட மாநில பக்தர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டு அந்த மாநில மக்கள் மீதான தாக்குதலாக அது திசை திருப்பப்பட வாய்ப்பு உண்டு. தமிழகத்தில் ஏற்கெனவே அது சார்ந்த இடைவெளிகள் உருவாக்கப்பட்டு வைத்திருக்கும் நிலையில் சபரி மலை விவகாரம் அதை மேலும் சீர்குலைத்துவிடக்கூடும். அதாவது அதைப் பயன்படுத்தி இடைவெளியை மேலும் அதிகரிக்க பிரிவினை சக்திகள் முனையும். இதை எதிர்கொள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் வசிக்கும் பிற மாநில பக்தர்கள் மண்டல விரதத்தை அந்த மாநில பக்தர்களுடன் சேர்ந்து மேற்கொண்டு ஒற்றுமையை பலப்படுத்திக்கொள்ளவேண்டும். இரு மாநில அரசியல் சக்திகளிடம் சிக்கிக்கொண்டுவிடக்கூடாது.

மத மோதல்

வாபர் மசூதிக்கு சென்று ஐய்யப்ப பக்தர்கள் வழிபடுவதென்பது மத நல்லிணக்கத்துக்கான மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறது. போராளிகளில் ஒருவர் இஸ்லாமியர் என்பதால் இந்து முஸ்லிம் மோதலாக இதைச் சித்திரிக்கும் போக்குகளும் தொடங்கியிருக்கின்றன. வாபர் மசூதிக்கு ஐய்யப்ப பக்தர்கள் போகக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக ஒரு வதந்தி பரப்பட்டிருக்கிறது. இது சார்ந்து தூண்டப்படுபவை நிச்சயம் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். பெண் பக்தைகளின் உணச்சிமயமான எழுச்சியாக இருக்கும் இந்த இயக்கம் மத மோதலாக மாற்றப்பட்டால் பெண்கள் முற்றாக ஓரங்கட்டப்பட்டுவிடுவார்கள். அது நல்லதல்ல. இந்த இயக்கம் ஆதி முதல் அந்தம் வரை பெண்கள் முன்னெடுக்கும் பாரம்பரியப் பாதுகாப்பு இயக்கமாகவே இருக்கவேண்டும். ஆண்கள் இதில் ஆதரவு தரலாம். தலைமை தாங்கத் தேவையில்லை.

இந்த விஷயத்தை எதிரிகள் திசை திருப்பும் இன்னொரு எளிய அபாயகரமான வழி என்பது இந்த எழுச்சியை பாஜக-ஆர்.எஸ்.எஸ்.-பஜ்ரங்தள், வி.ஹெ.பி. போன்ற இயக்கங்களின் பின் துணையுடன் நடப்பதாக முத்திரைகுத்துவதுதான். ராம ஜென்ம பூமியை தேசம்முழுவதும் கொண்டு சென்றதற்கு இந்த அமைப்புகளே காரணம். அங்கு ராமருக்கு கோவில் இன்னும் எழும்பாமல் இருக்கவும் ஒருவகையில் அவர்கள் செயலே காரணம்.

எளிய பக்தைகளின் எழுச்சியான இந்த சபரி மலை இயக்கம் இதைவிடப்பெரிய ஆதரவுடன் முன்னகர வேண்டுமானால் எதிர் தரப்புக்கு எந்தவொரு நியாயமும் எடுத்துத் தரப்பட்டுவிடக்கூடாது. அவர்கள் இல்லாததையே இருப்பதாக பெருக்கிக் காட்டக்கூடியவர்கள். கள்ள மெளனம் சாதிக்கும் அனைத்து நடுநிலை மாமேதைகளும் அந்தத் தருணத்துக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இருக்கும் ஒற்றை தார்மிக பலத்தையும் இழப்பதென்பது இரும்புக்குண்டைக் கட்டிக் கொண்டு பறக்க முயற்சி செய்வதைப் போன்றதுதான். சிறைக்கம்பிகளுக்குப் பின்னே இன்னொரு தெய்வத்தையும் பூட்ட வேண்டாம். எனவே, இந்த இயக்கம் முழுக்க முழுக்க தேசம் முழுவதிலும் உள்ள பெண்கள் ஐய்யப்பனின் பிரம்மசரிய விரதத்துக்குத் தரும் மரியாதை என்ற அளவிலேயே ஒருங்கிணைக்கப்படவேண்டும். ஒரு ஆண்பக்தர் மனதளவில் கூட தனது பிரம்மசரிய விரதத்தில் இருந்து பிறழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த கட்டுப்பாடு உருவாக்கப்பட்டிருப்பதால் அதை மனப்பூர்வமாக காப்பது தமது கடமை என்று உண்மையான பெண்ணிய நோக்கில் போராடவேண்டும்.

ஐய்யப்பன் வெறும் இந்து தெய்வமாக மட்டுமே இருக்கவில்லை. ஜாதி நல்லிணக்கம், தேச ஒற்றுமை, மாநில-மொழி ஒற்றுமை ஓரளவுக்கு மதநல்லிணக்கம் இவற்றை நடத்திக்கொடுப்பவராகவும் இருக்கிறார். ஐய்யனின் அந்த அம்சங்களையும் நாம் தக்கவைத்துக் கொண்டாகவேண்டும்.

இரு முடி கட்டுவதென்பதை ஜாதி ஒற்றுமை, மாநில ஒற்றுமை ஆகியவற்றுக்கான சமூக நிகழ்வாக விரிவுபடுத்தவேண்டும்.

ஒரு மண்டல விரதம் என்பதை மீண்டும் முழு அளவில் முன்னெடுக்க இந்த எழுச்சியைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அலுவலகங்களில் பணி புரிபவர்கள் ஐய்யப்பசாமியின் டோக்கன் அடையாளமாக கறுப்பு, காவி துண்டு அணிந்து வருவது கூட தற்போது அருகிவருகிறது. அதை மாற்றி முழு ஐய்யப்ப உடையுடன் அலுவலகங்களில் ஐய்யப்ப பூஜைக்கென தனி அறை அமைத்து சரண கோஷங்கள் முழங்கவும் வழி செய்யவேண்டும்.

நவீனத்துவம் என்ற பெயரில் நாம் கைவிட்ட நம் பாரம்பரியத்தையும் இந்த எழுச்சியின் மூலம் நாம் மீட்டுக்கொண்டாகவேண்டும்.

Monday 1 October 2018

சபரி மலை வழிபாடு

சபரி மலை வழிபாட்டு விஷயத்தில் தற்போது நடப்பது ஆண் பெண் சமத்துவத்துக்கான உரிமைப் போர் அல்ல. பாரம்பரியம் - நவீனத்துவம் ஆகிய இரண்டுக்கும் இடையிலான போராட்டமும் அல்ல. இந்த மேல்ப்பூச்சுகளுக்கு அடியில் அடிப்படையில் இது ஒரு மதவாதப் போர். இந்து தர்மத்தின் மீதான தொடர் தாக்குதல்களில் ஒன்று. இன்றைய ராணுவ மொழியில் சொல்வதானால் இந்து மதத்தின் மீதான சர்ஜிக்கல் அட்டாக்.

இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் விரல்விட்டு எண்ணமுடிந்த கோவில்களில் குறிப்பிட்ட வயதுப் பெண்களுக்கு அனுமதி இல்லை. அதே நம் தேசத்தில் வெகு சொற்ப கோவில்களில் ஆண்களுக்குமே அனுமதி இல்லை. எஞ்சிய கோவில்கள் அனைத்திலும் ஆண்கள், பெண்கள் வழிபாடு செய்ய அனுமதி உண்டு. ஈ.வெ.ரா. போன்ற மூடர் கூட்டத் தலைவன் இந்துக் கோவில்களில் பெண்கள் கும்பிடச் செல்வதே ஆண்களுடன் இடித்து, உரசி இன்பம் காணத்தான் என்று சொல்லும் அளவுக்கு இந்துக் கோவில்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வழிபாடுகளில் உரிய முக்கியத்துவமும் சமத்துவமும் தரப்பட்டிருக்கிறது. இருந்தும் இந்து கோவில்களில் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்ற அசட்டுத்தனமான, அபாண்டமான, அவதூறான குற்றச்சாட்டை முன்வைத்து சபரி மலை விஷயம் பூதாகரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்துத்துவர்களிலேயே கூட இந்த சர்ஜிக்கல் தாக்குதலை எப்படி எதிர்கொள்ள என்று தெரியாமல் கலங்கி நிற்கும் பரிதாபகரமான நிலையே நிலவுகிறது. எதிரியின் துல்லியமும் தாக்குதலும் அத்தகைய நிபுணத்துவம் மிகுந்தது. ஒற்றை மையம் கொண்டிராத இந்து மரபில் எந்தவொன்றும் யாராலாவது ஆதரிக்கப்படும்; யாராலாவது எதிர்க்கவும்படும் என்பதையும் மீறி இது வேறுவகையான அபாயகரமான தாக்குதல்.

ஐய்யப்ப வழிபாடு இரண்டு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. முதலாவது அது பிரம்மச்சரிய வழிபாடு. நைஷ்டிக பிரம்மசரிய ஐய்யனை பக்தர்களும் ஒரு மண்டலம் பிரம்மச்சரிய விரதம் பூண்டு வழிபடும் மரபு. ஐய்யப்ப வழிபாட்டில் இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு. ஒருவகையில் இன்றைய தாக்குதல் அதைக் குறிவைத்துதான்.

சபரி மலை வழிபாடு என்பது பிராமண மரபையும் பிராமணரல்லாதார் மரபையும் இணைக்கும் வழிபாட்டு வழிமுறை.

இந்துக் கோவில்களில் 80-90 சதவிகிதக் கோவில்களில் பிராமணரல்லாதார்தான் பூசாரிகளாக இருக்கிறார்கள். அந்தக் கோவில்களில் பிராமணிய விதிமுறைகளின் முந்தைய வடிவம் நடைமுறையில் இருக்கும். எனவே எல்லா பிராமணரல்லாதார் கோவிலுமே ஒருவகையில் பிராமண- பிராமணரல்லாதார் மரபுகளின் கலப்பால் இயங்குபவையே. என்றாலும் அந்த இரண்டின் இணைப்பானது ஐயப்ப வழிபாட்டில் அதன் உச்சத்தை எட்டியிருப்பதாகவே சொல்லலாம்.

ஒரு பக்கம் சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பூசாரிகளாக இருப்பவர்கள் கேரள நம்பூதிரிகள். பிராமண ஜாதியிலேயே அதி உயர்ந்த, அதி கறரான சடங்கு சம்பிரதாயங்களை உடையவர்கள் கேரள நம்பூதிரிகளே. அவற்றை இன்றுவரையிலும் கறாராகக் கடைப்பிடிப்பவர்களும் அவர்களே. நம்பூதிரிகள் இருக்கும் கோவில்களில் ஆண்கள் திறந்த மார்புடன் தான் தெய்வத்தைக் கும்பிட்டாக வேண்டும். மன்னரே ஆனாலும் மந்திரியே ஆனாலும் அந்தக் கோவில் தெய்வத்துக்கு அபிஷேக ஆரத்திக்கு என்று வகுக்கப்பட்டிருக்கும் நேரம் தவிர மீதி நேரங்களில் எந்த தீபாரதனையும் காட்டப்படாது. பிரசாதம் பெறுபவரின் கை மிகவும் தாழ்வாக இருக்க நம்பூதிரி தன் கையை மிகவும் உயர்த்தி வெளிப்படையாக, நாடகீயமாக வெளிக்காட்டித்தான் பிரசாதம் கொடுப்பார். இப்படியாக பல்வேறு சடங்காசாரங்களை மிகவும் இறுக்கமாகக் கறாராகப் பின்பற்றிவரும் நம்பூதிரிகள் சபரிமலை ஐய்யப்பனின் கோவிலில் பூசகர்களாக இருக்கிறர்கள். இது இந்த வழிபாட்டின் பிராமண மரபின் பங்கு.

இதன் மறுபக்கம் ஐயப்பன் பிராமணரல்லாதாரின்தெய்வம் என்று சொல்லத் தகுந்த அளவில் சபரி மலைக்கு மாலையிட்டுச் செல்பவர்களில் 90 சதவிகிதத்துக்கும் மேல் பிராமணரல்லாதோரே. இவர்கள் தத்தமது குக்கிராமத்தில் இருக்கும் எல்லைத் தெய்வம், பரிவார தெய்வத்தின் சன்னதியில் பிராமணரல்லாத பூசாரியிடம் மாலை போட்டுகொண்டு பிராமண சடங்குகள் எதையும் பின்பற்றாமல் ஐயப்ப வழிபாட்டைத் தொடங்கிக் கொள்ளமுடியும். தர்ம சாஸ்தா, சரணம், ஹரி ஹர புத்ரன் என சமஸ்கிருத பெயர்கள், வார்த்தைகள் உண்டு என்றாலும் சரண கோஷங்கள் எளிய மக்களின் பேச்சு மொழியிலேயே பெரிதும் இருக்கும். இந்தியாவில் பொதுவாக வேறு எந்த பெரிய தெய்வத்தின் வழிபாட்டுச் சடங்கும் இப்படி பிராமண பூசாரியின் பங்களிப்பு இல்லாமல் முன்னெடுக்கப்படுவதில்லை.

இந்த ஐயப்ப வழிபாடென்பது முழுக்க முழுக்க பிராமணரல்லாதார் தமது விதிமுறைகளைத் தாமாகவே உருவாக்கிக் கொண்டு வடிவமைத்திருக்கும் வழிபாடு. எந்த பழங்கால பிராமண ஆகம நூல்களிலும் இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கவில்லை. அதிலும் இன்றைய பிரபல்யம் என்பது சுமார் 100 ஆண்டுகளில் உருவானதே. சைவம், வைணவம், சாக்தம் என்ற மரபுகளின் கலவையான இந்த வழிபாடு ஒரு வகையில் மிகச் சமீப காலத்தில் முளைத்து கிளைவிட்டு பூவும் காயுமாக கனியும் விதையுமாக வளர்ந்து நிற்கும் பெரும் மரம் இது. கிட்டத்தட்ட ஐயன் வசிக்கும் காட்டைப் போலவே எந்தவிதக் கட்டுப்பாடுகளுக்கும் உட்படாத வழிபாட்டுக் கானகம் இது.

அதே நேரம் கோவில் நந்தனவத்தில் திட்டமிட்டு வளர்க்கப்படும் செடிகளின் அதே பச்சைதான் கானக மரங்களிலும் நிறைந்திருப்பதுபோல் பிராமணாரல்லாதார் மரபில் உருவாகியிருக்கும் வழிபாட்டு அம்சங்களும் பிராமணச் செல்வாக்கில் உருவானவையாகவே இருக்கின்றன. மலைக்கு மாலை போட்டுக் கொள்பவர்கள் ஒரு மண்டலம் விரதம் இருக்கவேண்டும். அந்த நாட்களில் தினமும் இரண்டு நேரம் குளிக்க செய்ய வேண்டும். காலையிலும் மாலையிலும் சரண கோஷம் முழங்கவேண்டும். மாமிச உணவு அறவே கூடாது. ஆண்- பெண் உறவு கூடாது. கடும் பிரம்மசரியம் கடைப்பிடித்தாகவேண்டும். பாலியல் வசைசொற்கள் பேசக்கூடாது. காலில் செருப்பு அணியக் கூடாது. குறிப்பிட்ட வயதுப் பெண்களிடமிருந்து முழுவதுமாக விலகி இருக்கவேண்டும். இறப்பு வீடுகளுக்குச் செல்லக்கூடாது.

இந்த விரதக் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுவேன் என்று உறுதி பூண்டு அதை உலகுக்கும் தனக்கும் அறிவித்துக்கொள்ளும் முகமாக காவி அல்லது கறுப்பு நிற உடை அணிந்துகொள்ளவேண்டும். காவி பிராமண துறவு மரபின் குறியீடு. கறுப்பு பிராமணரல்லாதாரின் கட்டற்ற சுதந்தர மனதின் குறியிடு. பிராமணர்களுக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய வாழ் நாள் விரதத்தையும் சத்தியத்தையும் உலகுக்கும் அவர்களுக்கும் சதா நினைவுபடுத்தும்வகையில் பூணூல், குடுமி, பஞ்ச கச்சம், திறந்த மார்பு, நெற்றியில் விபூதி அல்லது திருமண் காப்பு என பல்வேறு தர்ம காப்புகள் - வேலிகள் அல்லது ஆபரணங்கள் வரையறுக்கப்பட்டிருக்கும். அதுபோலவே சபரி மலைக்கு மாலை போட்டுக்கொள்ளும் பக்தர்களுக்கும் ஏராளமான விஷயங்கள் வெளிப்படையான வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த ஐயப்ப பக்தர்களின் வெளிப்படையான குறியீடுகள் எதுவுமே ஓர் அதிகார அமைப்பு மேலிருந்து திணித்ததாக அல்லாமல் எளிய பக்தர்கள் தாமாக உருவாக்கிக்கொண்ட விதிமுறைகளின் தொகுப்பு இது.

ஒட்டு மொத்த சமூகமுமே இந்த விதிமுறைகளை மதித்து உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. பிராமணர்களை பிராமணரல்லாதவர்கள் சாமி என்று மரியாதையுடன் அழைப்பது வழக்கம். மலைக்கு மாலை போட்டுக்கொள்பவர்களை அந்தக் காலகட்டத்தில் அனைவருமே சாமி என்றே மரியாதையுடன் அழைப்பார்கள். அத்வைத தத்துவத்தின் நடைமுறை வெளிப்பாடு என்றும் சொல்லும் அளவுக்கு பக்தரையே தெய்வமாக மதிக்கும் வழிபாட்டு மரபு.

அப்படியாக பிராமண மரபு ஒருபக்கம்... பிராமணரல்லாத மரபு மறுபக்கம்... இறுக்கம்... நெகிழ்வு. ஆண் தன்மை ... பெண் தன்மை என இரண்டு முற்றிலும் மாறுபட்ட, அதே நேரம் ஒன்றை ஒன்று செழுமைப்படுத்தும் இரு துருவங்களின் கலப்பினால் உருவான வழிபாடுதான் சபரி மலை ஐயப்ப வழிபாடு. இதுதான் எதிரிகளின் கண்ணை உறுத்தியிருக்கிறது. அதனால்தான் அந்த மரபைத் துல்லியமாகத் தாக்கியிருக்கிறார்கள்.

சபரி மலை வழிபாடு சுமார் ஐம்பது வருடங்களில் உருவாகி நிலைகொண்டதுதான் என்றாலும் அது பாரம்பரியத்தின் அழுத்தமான இயல்பான வலுவான நீட்சியாகவே இருந்துவந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் அதில் பல நெகிழ்வுகள் (பிராமணரல்லாதார் மரபில் அது தவிர்க்க முடியாதுதானே) பல்வேறு நெகிழ்வுகள் உருவாகியிருக்கின்றன. ஒரு மண்டல விரதம் இருக்க முடியாதவர்கள் ஒரு நாள் காலையில் மாலை அணிந்து கோவிலுக்குச் சென்று மறு நாளே திரும்பலாம். காவி, கறுப்பு உடை உடுத்து பணியிடங்களுக்குச் செல்ல முடியாதென்றால் கழுத்தில் சிறு துண்டு போட்டுகொண்டால் போதும். நடந்தே செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. மலையில் வாகனம் செல்லும் தொலைவுக்கு அதிலேயே போய்க்கொள்ளலாம் என்று தொடங்கி குக்கிராமங்களில் ஐயப்ப சாமிக்கென்று தனி க்ளாஸ் என்று சொல்லும்வரை சகல சுதந்தரமும் அதில் நுழைந்திருக்கின்றன. திரைப்படப் பாடல்களின் மெட்டில் ஐய்யப்பனுக்கான பாடல்கள் உருவாகியிருக்கின்றன.

பிராமண மரபும் அதற்கே உரிய சமரசங்களை மேற்கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், இவையெல்லாம் நவீன உலகில் பெருந்திரளான மக்கள் பங்கெடுக்கும்போது ஏற்படக்கூடிய தவிர்க்க முடியாத சமரசங்கள். இவை நிச்சயம் தவறுதான். ஆனால், தவிர்க்க முடியாதவை. இந்த மாற்றங்களுக்கு இடையேயும் அனைத்து விதிமுறைகளையும் கறாராகக் கடைப்பிடிக்க விரும்பும் ஒருவருக்கு (பக்தர்களில் கணிசமாணவர்கள் அத்தகையோரே) அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிக்க இந்த நவீன உலகிலும் வாய்ப்பு இருந்துவந்திருக்கிறது. அது இருக்கும்வரை இந்த ஐயப்ப வழிபாடு தன் முக்கியத்துவத்தை இழக்காது. ஐய்யப்ப வழிபாடு இருக்கும்வரை இந்து ஒற்றுமையும் இருக்கும். எனவே அதைக் குலைக்கத்தான் இப்போது திட்டமிட்டிருக்கிறார்கள்.

மகர ஜோதி தொடர்பான “விஞ்ஞானபூர்வ’ ஆராய்ச்சிகள் எல்லாம் முன்பே தொடங்கிவிட்டிருக்கின்றன. அவற்றின் அடுத்த கட்டமாகவே பிரம்மசரியம் என்ற அம்சத்தை ஐய்யப்பனிடமிருந்து அகற்றும் முயற்சியில் இறங்கியிருகிறர்கள். ஐயப்பனின் பலமே அவருடைய பக்தர்கள் கடைப்பிடிக்கும் பிரம்மச்சரியமே... அதை பலவீனப்படுத்தினாலே போதும். ஊருக்கு நடுவே இருக்கும் பெரிய மரத்தை வெட்டருவாளோ கோடாலியோ பயன்படுத்தி வெட்ட முடியாது. எனவே அதில் சாதுவாக ஏறி மரத்தின் நடுத் தண்டில் சிறு துவாரம் செய்து அதில் பாதரசத்தை சிறிய அளவில் வைத்தால்போதும். மரம் இலைகள் உதிர்ந்து, கிளைகள் ஒடிந்து, நின்ற நிலையிலேயே பட்டுப்போகும். இப்போதைய தாக்குதல் கிட்டத்தட்ட அதுதான்.

பத்து -ஐம்பது வயதுப் பெண்கள் சபரி மலைக்கு வரத் தொடங்கினால் உண்மையாக ஒரு மண்டலம் பிரம்மச்சரிய விரதம் இருந்து கோவிலுக்கு வரும் உண்மையான பக்தருக்கு அது பெரும் தர்ம சங்கடத்தை உருவாக்கும். அப்படி உண்மையான பக்தர்களை ஒரு இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினால் அதன் பிறகு அங்கு வருபவர்கள் அந்த வழிபாட்டு மரபின் சமரச பக்தர்களே. உண்மையான பக்தர்கள் போன பின் ஐய்யப்பன் இன்னொரு தெய்வம் மட்டுமே. யோகாவில் இருந்து அதன் இந்து ஆன்ம இலக்குகளை நீக்கிவிட்டு அதை வெறும் உடல் பயிற்சியாக மனப்பயிற்சியாக ஆக்கியதுபோல் பிரம்மச்சரிய ஐய்யப்பனை இன்னொரு தெய்வமாக்கும் செயல்தான் இது.

இந்து தர்மத்தின் விரோதிகள் விரும்புவது அதுவே...

நவீன காலத்துக்காகச் செய்யப்படும் சமரசம் என்றோ, சமத்துவச் செயல்பாடென்றோ, இந்து மதிப்பீடுகளை விமர்சிக்க அனுமதித்து அதன் மூலம் இந்து சக்திகளை ஓரணியில் திரட்டலாம் என்றோ எந்த காரணத்தின்படி இதை இந்து ஒருவர் ஆதரித்தாலும் அவர் பெரிய தவறொன்றையே செய்கிறார்.

சபரி மலை என்றுமே அங்கு இருக்கும். அது தொடர்பான பயம் தேவையில்லைதான். யோகாவுக்கு சர்வ தேசப் பெருமை (?!) தேடித்தந்ததுபோல் ஐய்யன் கோவிலுக்கும் மிகப் பெரிய சுற்றுலா வளர்ச்சியை உருவாக்கித் தரக்கூட முடியலாம். ஆனால், அங்கு நம் தர்மத்தின் காவலரான சாஸ்தாதான் இருக்கமாட்டார்.

Tuesday 25 September 2018

விழிமின்...எழுமின்..!

1.
ஆதியில் இரண்டு உலகங்கள் இருந்தன.

வர்ண மலர்கள் பூத்துக் குலுங்கும்
அழகிய நந்தவனம் இருந்தது கிழக்குப் பக்கம்.

வன் மிருகங்கள் உலவும்
கொடுங் கானகம் இருந்தது மேற்குப் பக்கம்.

இரண்டுக்கும் இடையே ஓடிக்கொண்டிருந்தது
கடக்க முடியா ஒரு மரபணுப் பெரு நதி.

இரண்டுக்கும் இடையே எழும்பியிருந்தது
ஏற முடியா ஒரு பரிணாமப் பெரு மலை.

இரண்டுக்கும் இடையே விரிந்து கிடந்தது
கடக்க முடியா வெள்ளை நிறப் பனிப் பாலை.

அதனதன் இடத்தில்
அதனதன் தர்ம அதர்மங்களுடன்
இருந்தன இரு வேறு உலகங்கள்

சிறிய
அழகிய வர்ண மலர்த்தோட்டத்தில்
எல்லாம் சிறிதாக இருந்தன
எல்லாம் அழகாக இருந்தன.

தேவையின் தேனுறிஞ்சும் எளிய வண்ணத்துப் பூச்சிகள்
தன்னிறைவின் துகள்களைச் சுமந்தபடி பறந்து கொண்டிருந்தன
ஒரு பூவிலிருந்து மற்றொன்றுக்கு

நித்ய தர்மத்தின் பறவைகள்
வான் நோக்கி விரியும் மரக்கிளைகளில் அமர்ந்தபடி பாடிக் கொண்டிருந்தன
உலகம் முழுமைக்குமான உன்னத கீதங்களை

லட்சியக் கனவுகளின் நிலவொளியில் நனைந்த கலாசார இலைகளை
வருடிச் சென்ற மறுமலர்ச்சிகளின் அதிகாலைக் காற்று
சிறு சிறு புதுமைப் பனித்துளிகளை பருவந்தோறும் உயிர்ப்பித்தது

சீர்திருத்தப் பொன் வண்டுகள்
பாரம்பரிய மலர் செடிகளின் மகரந்தத் தூள்களை
அள்ளி அள்ளிச் சென்று தூவியிருக்கின்றன அனைத்து மலர்த் தாள்களிலும்

வட தென் திசைக் காற்றுகள்
மாறி மாறிச் சுமந்து சென்றிருக்கின்றன
மூல விதை பயிர்களுக்கான மகரந்தத் தூள்களை

சிறுகச் சிறுகச் சேர்ந்த கசப்பின் துளிகளை எல்லாம்
தீஞ்சுவைக் கனியாக மாற்றும்
வரலாற்று வேம்பும் அந்தத் தோட்டத்தில் உண்டு

சேகரமான கசப்புக்கு நேர்விகிதத்திலானது அது பிறருக்குத் தரும் தித்திப்பு

கரை உடைத்துப் பாயும் நாஸ்திகப் பெரு வெள்ளங்கள்
அவ்வப்போது மூழ்கடித்துச் செல்லும் அழகிய மலர் வனங்களை

எனினும்
வெள்ளம் கொண்டுவந்து சேர்க்கும் வண்டல் கொண்டே
மீண்டெழும் எல்லா மலர் செடிகளும்

உடையும் கரைகளில் இருந்து
உருவாகும் பழைய நதியின் கிளைத் தடங்கள்


அந்நில ஆறுகள் சேர்ந்து உருவான மகா சமுத்திரத்திலிருந்து
ஆக்ரோஷமாக எழும் புயல் காற்றில்
சரிந்து விழும் மரங்கள் உரமாகும்

வெடித்துச் சிதறும் விதைகள்
இறகு முளைத்து முடிவற்ற வானில் பறந்து சென்று
புதிய நிலம் தன்னில் மீண்டும் உருவாக்கும்
தாய் நிலத்தின் அதே இளம் செடிகளை
அதே தூய மலர்களை
அதே நறுமணத்தை
அதே நற் கனிகளை.

ஆதித் தோட்டம் அழிந்ததே இல்லை
ஒற்றை விதை போதும் ஒரு மலர் வனத்தை உயிர்ப்பிக்க!

*
2.

மறுபக்க மேற்கு திசை நிலந்தன்னில்
பெருகி ஓடிய ஒற்றை நிற ரத்த ஆற்றில் நீந்தித் திளைத்தன வன் மிருகங்கள்

சுழித்தோடிய ஒற்றைச் சுவை கண்ணீர் ஆற்றில் கும்மாளமிட்டன அம் மிருகங்கள்

முடிவற்று நீளும் பனிக் கால இரவுகளின் நிலவொளியில்
ஆனந்தமாக அவை பாடும் பாடல்கள் என்பவை அச்சமூட்டும் ஊளைகளே

இடம்பெயரும் மென்விலங்குக் கூட்டங்களை
அவை களைத்து வீழும்வரை மெள்ளப் பின் தொடர்ந்து
வேட்டையாடும் ஓநாய்களின் உலகம் அது

நீர் நிலைகளின் மேலே வான் நிற வயிறு காட்டி
சிறகசைக்காமல் மிதக்கும் ஒரு சிறு பறவை
அபாயம் எதுவும் இல்லையென நீரின் மேல்பரப்புக்கு
தன் குட்டிகளை அழைத்துவரும் தாய் மீன் கண் முன்னே பாய்ந்து
அவற்றைக் கொத்திக் கிழிக்கும்
தந்திர மீன் கொத்திகளின் உலகம் அது.

காய்ந்த புல் வெளியில் தென்படும் சிறு சலனத்தையும் கண்டு
நிழல் விழா தொலை வானில் இருந்து பாய்ந்து கொத்திக் கொல்லும்
கோர விழிகளும் கூர்மையான நகங்களும் கொண்ட கழுகுகளின் உலகம் அது

சருகுகளால் மூடப்பட்டு சாதுவாகப் படுத்து
கடந்து செல்லும் குட்டி மான் குட்டிகளை வளைத்து முறுக்கி விழுங்கும்
மலைப் பாம்புகளின் உலகம் அது

சுட்டெரிக்கும் நண்பகல்களில் தாகம் தீர்க்க
நீர்நிலை வந்து சேரும் குதிரைக் கூட்டத்தின்
இளம் குட்டிகளை
மரக்கட்டைப் போல் மிதந்து கிடந்து
அருகில் வந்ததும் பாய்ந்து கொல்லும்
முதலைகள் நிறைந்த உலகம் அது

*
3.
வர்ண மலர் வனங்களிலும் விலங்குகள் உலவும்...
ஆனால், இலைகளை மட்டுமே கொய்து உண்பவை அவை

அங்கும் பறவைகள் பறக்கும்
அவை கனிகளை உண்டு விதைகளைப் பரப்புபவை
அங்கும் நாகங்கள் ஊரும்
அவை பாலும் முட்டையும் உண்டு மாணிக்கப் பரல்களை உமிழ்பவை

ஆதித் தோட்டத்தில்
தாவரங்கள் விலங்குகளை வளர்த்தன
விலங்குகள் தாவரங்களை வளர்த்தன

ஆதிக் கானகத்தில்
ஒன்றின் உணவு இன்னொன்றின் உயிர்
ஒன்றின் வாழ்க்கை இன்னொன்றின் அழிவு

அந்த வன் மிருகங்கள் மேற்குலகில்
கால்பதித்த தீவுகளையெல்லாம்
கண்டங்களையெல்லாம்
காடுகளையெல்லாம்
கழனிகளையெல்லாம்
கபளீகரம் செய்து முடித்திருந்தன


*
4.
மேற்குக் கானகத்தின் தெய்வத்தின் பார்வை
வர்ண மலர்த்தோட்டம் பக்கம் திரும்பியது

வர்ண மலர்த்தோட்டத்தின்
கட்டற்ற சுதந்தரத்தை அவர் ஒழுங்கின்மையாகக் கண்டார்

உள்ளொடுங்கிய தேடலை வெறுமை என்று புரிந்துகொண்டார்

வெறுமையாகவும் ஒழுங்கின்மையாகவும் இருந்த அந்த உலகை
அவர் தனக்குத் தெரிந்த வகையில் மாற்ற முயன்றார்

ஒளி உண்டாகட்டும் என்றார்
பகையின் பேரொளி உதித்தது

ஆகாயம் உண்டாகட்டும் என்றார்
வெறுப்பின் மேற் கூரை வர்ண மலர்த்தோட்டம்
முழுமைக்குமாகக் கவிழ்ந்தது

கலாசார நீரும் பூர்விக நிலமும் பிரியட்டும் என்றார்
புல்லுருவிகளும் ஒட்டுண்ணிகளும் உண்டாகட்டும் என்றார்

மலை ஊற்றருகே தத்தமது ஜாதிகளின் விதைகளையுடைய
விஷக் கனி மரங்களை நட்டார்

அந்த நீர் பாய்ந்தோடிய நிலங்களில் எல்லாம் அந்த ஜாதி பிரிவினை மரங்களே முளைத்தன

ஆகாய விரிவிலே சுடர்களை உருவாக்கினார்
பகல்களில் அவை தீயாய்ச் சுட்டெரித்தன
இரவுகளில் அவை கடுங்குளிரில் வாட்டியெடுத்தன

கலங்கிய நீரில் தந்திர உயிர்களையும்
வெறுப்பின் வானில் சுய நலப் பறவைகளையும் உயிர்ப்பித்தார்
அவை பல்கிப் பெருகின

ஏகாதிபத்திய முதலைக் குட்டிகளையும்
நிற வெறி ஓநாய்க் குட்டிகளையும்
இன வெறிக் கழுகுக் குஞ்சுகளையும் படைத்தார்

பின் தன் சாயலில் ஒரு மனுஷனைப் படைத்தார்

அந்நீரில் வாழ்பவற்றையும்
அவ்வானில் பறக்கும் பறவைகளையும்
அக் கானக விலங்குகளையும் கொண்டு 
உன் ஜாதியை உலகெங்கும் பரப்பிக் கொல் என்றார்

அவர் அனுப்பிய மேற்கு திசைக் கழுகுகள் வெண் புறா வடிவில்
உலகம் முழுவதும் தியாகச் சிறகசைத்துப் பறந்து பரவின

அவற்றின் எச்சங்களில் இருந்து விழுந்த கானக மரங்களின் விஷ வித்துக்கள்
வர்ண மலர்த் தோட்டத்தின்
அதிருப்தி மதில் இடைவெளிகளில் விழுந்து முளைக்கத் தொடங்கின

அவர் அனுப்பிய ஒரே திசையையே காட்டும் காந்த ஊசிக் கப்பல்கள்
தீவுகள் அனைத்துக்கும் நகரும் பாலங்கள் அமைத்தன

தாண்ட முடியாத சுவர்களைத் தாண்டின.

வெல்ல முடியா புராணக் காவல் சூழ் சாம்ராஜ்ஜியங்களுக்கு
பிரிவினைக் கோட்பாடுகள் ஒளித்து வைக்கப்பட்ட ஆராய்ச்சிக் குதிரைகளை
விஞ்ஞான வரலாற்று மரச் சட்டங்கள் போட்டு அனுப்பிவைத்தார்

தாழ் நிலங்களில் வசித்தவர்களை
பள்ளத்தில் விழுந்து கிடக்கும் பாவிகளே என்று விளித்தன

மீட்சிக் கயிறுகளும் வீசின
ஆனால்,
அதை நம்பிப் பற்றியவர்களின்
கலாசாரத்தை
அடையாளத்தை
அறிவுகளை
வரலாற்றை
வாழ்க்கையை
ஆணிகள் அறைந்து கொல்லும் சிலுவை
கயிறின் மறு நுனியில் இருந்தது

உலகம் முழுவதுக்கும் ஒளி தரும் மூல ஆதார ஒளியையே
மறைக்கும் அளவுக்கு பிரமாண்டமானது அது.
சில காலத்துக்கு
வர்ண மலர்த் தோட்டம் மட்டும்
தொண்டையில் சிக்கிய முள்ளாக
வன் மிருகத்தின் எந்த அமிலகக் கரைசலாலும் செரிக்கப்படாததாக
அதன் காலடி மிதிபட்டு மடியாதவையாக இருந்தன

எனினும்
வர்ண மலர்த்தோட்டத்தின் நீர் உறிஞ்சி
வர்ண மலர்த் தோட்டத்தின் காற்றிலாடி
வர்ண மலர்த் தோட்டத்தின் சூரிய ஒளி பெற்று
உருவானது புதியதொரு கானகம்

ஊடுருவின வர்ண மலர்த்தோட்டத்தின் மென் விலங்குகளை
வேட்டையாடிக் கொன்று தின்னும் வன் விலங்குகள்

அப்படியாக வர்ண மலர்த்தோட்டத்தினுள் மெள்ள உருவானது
வேறு தாவரங்கள்
வேறு விலங்குகள் கொண்ட
வேறொரு உலகம்
வேறொரு கானகம்!

*
5.
போலிப் பகுத்தறிவுப் புல்லுருவிகளும்
போலி மதச் சார்பின்மை ஒட்டுண்ணிகளும்
தர்மத்தின் ஆணி வேர் உறிஞ்சும் நீர்
பூக்களையும் பிஞ்சுகளையும் சென்று சேரவிடாமல் மறிக்கத் தொடங்கின

வல்லாதிக்க விலங்குகளின் கானல் தகிக்கும் வெம்பாலைகளில்
பண்பாட்டு மழையும் கிடையாது
சுய கெளரவத்தின் நிழலும் கிடையாது

மேற்கத்திய நவீனத்தின் தூசுகளால் மூடுண்டு போகும் இலைப்பரப்பில்
ஒரு நொடியும் ஒட்டாமல் உருண்டோடுகின்றன
சுதேசி முன்னேற்றத்தின் அதிகாலைப் பனித்துளிகள்

இடதுசாரி வரலாற்று இருளின் நடுவே
அதிதொலைவில் மின்னும் தியாக நட்சத்திரங்களின் ஒளி
எந்த மீட்சியின் பச்சையத்தை உருவாக்கித் தர முடியும்
வேரறுக்கப்பட்ட அழகிய மரங்களின் கிளைகளில்

நவீனத்தின் வேதி உரங்கள் மலடாக்கும் நிலங்களில்
வெட்டி வெட்டிப் பதியனிடப்படும் சிறு செடிகளின்
புதிய வேர்கள் அடி ஆழம்வரை போய்
கண்டடையும் சிறு சொட்டுப் பாரம்பரியத்தையும்
கொடுங்கரங் கொண்டு உறிஞ்சும் வல்லாதிக்கச் சூரியன்கள்
மிக அருகில் கனலும் தேசமாகிவிட்டதே
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய நம் தேசமும்

தன்னிறைவின் இளந்தளிரிலைகளையே
முட்களாய் இறுக்கிக் கொள்ள நேரும் ஜாதி மல்லிகளை
தனிப்புதர்களாய் மேலும் ஒதுக்குகின்றன
பிரிவினை நாகங்கள் உறையும் கரையான் புற்றுகள்

எந்த நியாயத்தின் தேனியும் உறிஞ்சிச் செல்லாததால்
நெறி கட்டி நிற்கின்றன பெரும்பான்மை மலர்களின்
வரலாற்று கால, சமகாலக் கண்ணீர்த்துளிகள்

உருப்பெருக்கி கொண்டெல்லாம் பார்க்க வேண்டியிராத
கலாசார மரங்களின் அதி நுட்பமான நரம்பிழைகளில்
ஓடும் திரவத்தின் சுவை உப்பென்பதை
சுவைக்காமலே புரிந்துகொள்ள முடியும்
(தூய வெண் படுகை போல் அடர்ந்து படர்ந்து நிற்கும்
அதில் வலிகளின் வீழ் படிவுகள்)

காயங்களின் மங்காத மடல் தடங்கள் கொண்டே யூகித்துவிட முடியும்
மரபின் செடிகள் உதிர்த்துவந்த துயரத்தின் நீள் கிளைகளை

நிதானமாக உயரும் சுய சீர்திருத்த மகரந்தப் பைகளைவிட
எட்டாத உயரத்துக்கு
நெடுநெடுவென வளர்ந்துவிட்டிருக்கும் நவீனத்தின் மகரந்தத் தாள்கள்
அந்நிய நிலக் காற்று கொண்டு சேர்க்கும் தூசிகளை மகரந்தமாக்கி
களைத் தாவரங்களைப் படர விடுகின்றன காணிகளெங்கும்

கடின உழைப்பின் பலன் தேடி
வேர் ஊடுருவும் தாய் மண் நிலங்களில் எல்லாம்
இன்று முளைக்கின்றன கற்பாறைகள்

மேற்கு திசைக் காற்று அடித்துக் கொண்டுவரும்
அந்நிய மேகங்களிலிருந்து பொழியும் அமிலத் தூறல்களினால்
வர்ண மலர்த் தோட்டத்தின் பல வண்ணப்பூக்களில் இருந்து
கரைந்தோடுகின்றன ஒவ்வொரு வண்ணங்களாக

அந்த மழைகளின் இறுதி இலக்கு
தோட்டம் முழுவதும்
சவத் துணிபோல் வெளிறிய ஒற்றை வெள்ளை
அல்லது
நிரந்தர இருள் போல் அடர்ந்த காரிருள்

நீங்கள் தேர்ந்தெடுத்தாகவேண்டும்
ஒரு பக்கம் சவக்களை வெள்ளை
மறுபக்கம் அச்சம் தரும் அடர் காரிருள்

வர்ண மலர்களின் தேன் உறிஞ்சும் இளம் வண்ணத்துப்பூச்சிகளே
இருப்பது ஓர் உலகம்
இந்த உடலுடன்
கிடைப்பது ஒரு வாழ்க்கை

ஒரு நிமிடம்
வர்ணங்களற்ற உலகை மனக்கண்ணில்
கற்பனைசெய்து பாருங்கள்

மணல் கடிகாரத்தில் காலத் துளிகள் விரைந்து சரியத் தொடங்கிவிட்டன

வர்ணங்களின் புத்திரர்களே விழிமின்!

தர்மத்தின் காவலர்களே எழுமின்!

வர்ண மலர்த் தோட்டம் காக்க நில்லாது உழைமின்!

Friday 6 July 2018

துயருறு ஆன்மாவின் அரசியல் சீற்றம் (3)


அம்பேத்கர் யாருடைய அரசியல் சாசனத்தை எழுதினார்?


கல்வி, மருத்துவம் போன்றவற்றில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அமலாவதோடு, அப்படிப் படித்துப் பணியில் அமர்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கே சேவை செய்ய முன்வரவேண்டும் என்றொரு நிபந்தனையையும் அவர் முன்னெடுத்திருக்கவேண்டும். தாழ்த்தப்பட்டவர்களில் இருந்து ஒருவர் மருத்துவராக நகரத்துக்குச் சென்று மேல் ஜாதியினருக்குச் சிகிச்சை செய்வதால் தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு எந்தப் பலனும் கிடைக்காது. அந்தத் தனி நபருக்கு ஒரு பெரிய விடுதலையாக இருக்குமே தவிர அவருடைய ஜாதிக்கு அல்ல.


தனி நபர் வாதம், தொழில் சுதந்தரம் என்பவையெல்லாம் மேல் ஜாதியினருக்கு உகந்தவை. ஏனென்றால் அவர்களுடைய சமூக, பொருளாதார, அரசியல் நலன்கள் ஏற்கெனவே பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. தாழ்த்தப்பட்டவர்களுக்கு அப்படி அல்ல. எனவே அவர்களுக்கு தனி நபர் வாதத்தைவிட குழு – குல மனப்பான்மையே வெற்றியைத் தரும். சட்டம் படித்து முடித்த அம்பேத்கர் வழக்கறிஞராகத் தன்னுடைய நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்?


பிராமணர்கள் போன்ற மேல் ஜாதியினர் இந்தியாவில் படித்துமுடித்துவிட்டு மேற்கத்தியர்களுக்கு, குறிப்பாக நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷாருக்கு, சேவை செய்ய பெரு மதில் சூழ் தூதரகங்களின் வாசலில் கால்கடுக்கக் காத்து நிற்பதை சமூக அக்கறை மட்டுமல்ல சுயமரியாதை உள்ள ஒருவர் கூட ஏற்கமுடியாது. அதுபோலவேதான் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து கல்வி பெற்று மேலே வரும் ஒருவர் மேல் ஜாதியினருக்கு சேவை செய்வதைவிட தன் சமூகத்தினருக்குக் கூடுதல் உதவிகரமாக இருக்கவேண்டும் என்பதும்.



இதைத் தியாகம் என்றோ, சேவை என்றோ கருதாமல் கடமையாகக் கருதச் செய்திருக்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால் உயர் கல்வி பெறுபவர்கள் அனைவருமே நமது தேசத்தில் நமது சமூகத்தில் கீழ் நிலையில் இருப்பவர்களை மேலேற்றும் வகையிலான தொழில்கள், வேலைகளையே முன்னெடுக்கவேண்டும் என்று வரையறுத்திருக்கவேண்டும். உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சிங்கப்பூர், அரபு நாடுகள் என பலவற்றில் ராணுவ சேவை கட்டாயமாக்கப்பட்டிருப்பதுபோல் சமூக சேவைக்கு குறிப்பாக கடைநிலை ஜாதியினரின் மேம்பாட்டுக்கு அனைவரும் ஓரிரு வருடங்கள் செலவிட்டாகவேண்டும் என்று சட்டமியற்றியிருக்கவேண்டும். காந்தி தன்னுடைய சீடர்களையும் ஆதரவாளர்களையும் தத்தமது வாழ்க்கையையே ஹரிஜன மேம்பாட்டுக்கு அர்ப்பணிக்கும்படிக் கேட்டுக்கொண்டார். இங்கே தனி மனித சுதந்தரம் என்பதைவிட சமூக நலனே முக்கியம். அம்பேத்கர் மேற்கத்திய தனி நபர் வாதத்தைக் கண்டு மயங்கினார். அல்லது ஏமாந்துவிட்டார் என்று கூடச் சொல்லலாம்.


ஒரு ஐரோப்பியருக்கு, அமெரிக்கருக்கு தேச பக்தி, சொந்த சமூக முன்னேற்றம் எல்லாம் அவர்களுடைய இயல்பான மேட்டிமைக் குணத்தில் இருந்து உருவாகிவிட்டிருக்கின்றன. எனவே, அவர்கள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் யாரும் சொல்லாமலேயே அவர்களுடைய தேச, சமூக நலனுக்கு உகந்த செயல்களையே செய்வார்கள். அப்படியான புரிதல் கொண்டவர்களை சுதந்தரமாக இருக்க அனுமதிப்பதில் எந்தத் தவறும் பாதிப்பும் இல்லை. தனிநபர்வாதம், தொழில் சுதந்தரம் தேவை என்று அவர்கள் (மட்டுமே) முழங்கலாம்.



ஓர் இந்தியருக்கு அப்படியான தனிநபர் வாதம் மிகவும் ஆடம்பரமானதுதான். இந்தியாவை மேம்படுத்தும் பணிக்கே அவர் முக்கியத்துவம் தரவேண்டும். அதைவிட ஒரு தாழ்த்தப்பட்டவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை முன்னேற்றுவதற்கே முன்னுரிமை தரவேண்டும். அம்பேத்கர் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதுபோல் மேற்கத்தியரைப் பார்த்துத் தனி நபர் வாதத்தை முன்னெடுத்தார்.


இந்திய ஜாதி அடையாளமும் குழு மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டது என்பதால் அதற்கு நேர்மாறாக தனி நபர் வாதத்தை அவர் முன்வைத்தார் என்றொரு வாதம் முன்வைக்கப்படமுடியும். ஒன்றாக இருக்கும் சிங்கங்களையும் புலிகளையும் நரிகளையும் தனித்தனியாக்கினால் அவற்றை எளிதில் வீழ்த்திவிடலாம் என்பது சரிதான். ஆனால், அப்படி அவற்றைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் பலவீனமான ஆடு மாடுகளும் தனித்தனி ஆகிவிடும் என்பதை அவர் முன் யூகிக்கவில்லை.


இன்று இட ஒதுக்கீடும் அரசியல் கட்சிகளும்தான் ஜாதி அடையாளத்தைப் பெரிதும் நினைவுபடுத்துபவையாகவும் தக்கவைக்க உதவுபவையாகவும் இருக்கின்றன. இது மிகவும் பிழையான நிலை. இதனால்தான் கிராமப்புறங்களில் வாழும் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக ஆகிக்கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிநபர் வாதம், தொழில் சுதந்தரம் எல்லாம் வெகு ஆடம்பரமான கோட்பாடுகளே… எட்டாக்கனிகளே. கல்வியறிவு பெற்ற தாழ்த்தப்பட்டவரே கடைநிலையில் இருக்கும் தாழ்த்தப்பட்டவருக்கு உதவ வேண்டும். தனி நபர் வாதம் அங்கு செல்லுபடியாகாது. அரசியல்சாசனம் இதற்கான உத்தரவாதத்தை நிபந்தனையை விதித்திருக்கவேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்கள் இட ஒதுக்கீடு தேவைப்படுபவர்களுக்கே சேவைபுரியவேண்டும் என்று சொல்லியிருந்தால்கூட ஒரே சலுகையில் இருமடங்கு பலன் கிடைத்திருக்கும்.



அப்படியாக, மேற்கத்திய சிந்தனைகளின் அடிப்படையிலான அம்பேத்கரின் அரசியல் சாசனப் பங்களிப்பு அவருடைய மக்களுக்கு எந்தவகையிலும் உகந்ததாக இருந்திருக்கவில்லை.


இந்து திருமணம், தத்தெடுத்தல், பெண்களுக்கான சொத்துரிமை போன்ற விஷயங்களில் அம்பேத்கருக்கு பெரிதாக என்றுமே ஆர்வம் இருந்திருக்கவில்லை. முதலும் முடிவுமாக ஜாதி சார்ந்த சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையே அம்பேத்கரின் இலக்காக இருந்தன. எனவே இந்து சட்ட விவகாரத்தில் நேருவுடனான மனஸ்தாபத்தினால் ராஜினாமா செய்வதாகச் சொன்னது மெய்யாகவே மெய்யான காரணமாக இருந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவுதான்.

இத்தனைக்கும் அம்பேத்கர் இந்த இந்து சட்ட சீர்திருத்தங்களை அமல்படுத்த விரும்பியபோது போதிய ஆதரவு இல்லை என்று தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த நேரு அம்பேத்கர் பதவி விலகியதும் நான்கே ஆண்டுகளில் அவற்றைச் சட்டமாக்கிவிட்டார்.


அதோடு, விவாகரத்து, பெண்களுக்குச் சொத்துரிமை, தத்தெடுத்தல் போன்றவையெல்லாம் நவீன காலத்தில் இயல்பாக, சட்டம் எதுவும் இல்லாவிட்டாலும் உருவாகி வந்திருக்கவே செய்யும். சிறு வயது திருமணத் தடை, மேல் ஜாதி விதவைகளின் வேதனை நிறைந்த நிலை மாற்றம், பெண் கல்வி என எல்லாம் ஏற்கெனவே நடந்தேற ஆரம்பித்துவிட்டிருந்தன. காந்தியின் அஹிம்சை வழியிலான போராட்டம் வேறு பெண்களை சமூக முன்னேற்றத்தில் பெருமளவில் பங்குபெறவைத்திருந்தன. அந்தவகையில் இந்து சமூகம் காலத்துக்கு ஏற்ப தன்னை அழகாக வெகு விரைவிலேயே மாற்றிக்கொண்டுவிடுவதாகவே இருந்துவந்திருக்கிறது. பர்தா, முத்தலாக் போன்ற விஷயங்களில் கூட இந்துப் பெரும்பான்மை தேசத்தில் இருப்பதால் இஸ்லாமியப் பெண்களுக்கு ஒப்பீட்டளவில் சுதந்தரம் எளிதில் கிடைக்கும் வகையிலேயே இருந்துவருகிறது. எனவே, இந்து சட்ட சீர்திருத்தத்துக்காக அம்பேத்கர் அதிகம் மெனக்கெட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை.

பட்டியல் சாதியினருக்கும் பின் தங்கிய வகுப்பினருக்கும் தான் விரும்பியதைச் செய்ய முடியவில்லை என்றொரு காரணத்தையும் பதவி விலகிய நேரத்தில் சொல்லியிருக்கிறார். உண்மையில் அதுவே சரியான காரணமாக இருக்கும். அதிலும் பின் தங்கிய பிரிவினர் தமது எண்ணிக்கைபலத்தினால் தமக்கான உரிமைகளை எளிதில் பெற்றுவிடும் நிலையில்தான் இருந்தார்கள். தாழ்த்தப்பட்டவர்களுடைய நிலைதான் சிக்கலாக இருந்தது. இருக்கிறது. அம்பேத்கர் அது சார்ந்து தான் விரும்பிய எதையும் செய்ய முடிந்திருக்கவில்லை.


ஆரம்பத்திலிருந்தே தயக்கத்துடன் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்ற அம்பேத்கருக்கு உண்மையில் ராஜினாமா செய்ய காரணம் சொல்லவே வேண்டியிருந்திருக்கவில்லை. ஏன் சேர்ந்தார் என்பதற்குத்தான் காரணம் சொல்ல வேண்டியிருந்தது.


*

அம்பேத்கர் இந்து மதத்தின் கிளை மதம் போன்ற பெளத்தத்துக்கு நகர்ந்தபோது மிகவும் புரட்சிகரமானதாக அவர் கருதிய பல உறுதிமொழிகளை எடுக்கவைத்திருந்தார். இந்துக் கடவுள்களைப் பெயர் சொல்லி நிராகரிப்பதில் ஆரம்பித்து சிராத்தச் சடங்குகள் கூடச் செய்யக்கூடாது என்று நெஞ்சில் துளியும் ஈரமற்று வற்புறுத்துவதுவரை அவர் தாழ்த்தப்பட்டமக்களின் உணர்வுகளைத் துளியும் பொருட்படுத்தாமல் மேலிருந்து அனைத்தையும் தீர்மானிப்பவராகவே இருந்தார். இந்திய அரசியல் சாசனத்தில் அந்த அம்பேத்கரைத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது.

(பிராமண புரோகிதர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதென்றால் சிராத்த சடங்குகளை ஆண், பெண் பிக்குகளைக் கொண்டு செய்வித்தல் என்பதாகவோ இறந்தவர்களில் பெண்களுக்கான நீத்தார் சடங்கு தான தட்சணைகளை நலிவடைந்த பெண்களுக்குத் தருவதாகவோ ஆக்கியிருந்தாலே போதுமானது. அது தாழ்த்தப்பட்டவர்களுடைய உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்ததாக அவர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பைப் பெற்றதாக இருந்திருக்கும். காகங்களை முன்னோரின் ஆன்மாகவாக நம்பும் பூமியில் குறுக்கும் மறுக்குமாக காகங்கள் உலவிக்கொண்டிருக்கும்வரையில் முன்னோரை மறக்கச் சொல்ல முடியுமா என்ன..? இதுதான் மேற்கத்தியத் தாக்கம் பெற்ற மனதுக்கும் இந்திய சீர்திருத்த மனதுக்கும் இடையிலான வித்தியாசம்)


இந்திய அரசியல் சாசன உருவாக்கம் போன்ற அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் தன்னுடைய சொந்த (சொந்த ஜாதி) அரசியல் சார்ந்த விஷயங்களை அதில் இடம்பெறச் செய்ய முடியாதென்பது உண்மைதான். எனினும் அம்பேத்கர் போல் கலகக் குணம் கொண்ட ஒருவர் அரசியல் சாசனம் போன்ற ஒன்றை உருவாக்க ஒப்புக்கொள்வதென்பது மிகப் பெரிய சமரசமே. உண்மையில் பாபு ஜெகஜீவன் ராம், எம்.சி.ராஜா போன்ற சீர்திருத்த தலித்தியர்கள் என்ன செய்ய விரும்பினார்களோ அதையே அம்பேத்கரும் செய்தார். செய்ய முடிந்தது.



வால்மீகியைக் கொண்டு ராமாயணம் எழுதிக் கொண்டார்கள். வியாரைக் கொண்டு மகாபாரதம் படைத்துக்கொண்டார்கள். என்னை வைத்து அரசியல் சாசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று அம்பேத்கர் சொன்னதாகப் படித்த நினைவு (முந்தைய இரண்டைப் போலவே பிந்தையதும் அதனளவில் ஒரு மாபெரும் சாதனையே என்றாலும் எழுதியவர் விரும்பியது அது அல்ல. எனவே, அதை அவருடைய சாதனையாகச் சொல்வது அவருக்கு உவப்பில்லாத விஷயமே).


கொம்பால் மண்ணைக் குத்திக் கிளறி மரங்களை முட்டி வீழ்த்தி கானகத்தில் உறுமியபடி உலா வந்த காளை ஒன்று மூக்கணாங்கயிறு போடப்பட்டு லாடம் அடிக்கப்பட்டு வண்டியில் பூட்டப்பட்டதுபோலவே அவருடைய நிலை அவருக்கு இருந்தது. ஆனால், ஓர் இந்தியராக, இந்துவாக இருந்து பார்க்கும்போது அவருடைய இந்த மாற்றம் உண்மையில் பனி மலையில் இருந்து தடதடவென உருகி, வழியில் தென்பட்ட மரங்களையெல்லாம் பெயர்த்தபடிக் கீழிறங்கிய பேராறு ஒன்று சமவெளியை அடைந்து கரையோர நிலங்களையெல்லாம் செழிப்பித்ததுபோல் இருப்பதாகவே சொல்ல முடியும் (பல களைகளும் செழித்து வளர வழி செய்திருக்கும் நிலையிலும்). எனவே, அம்பேத்கர் அவருடைய இயல்புப்படி இருக்கமுடியாமல் போனது அவருடைய அரசியலுக்குச் சாபம். இந்தியாவுக்குப் பெரும் வரமே.


அம்பேத்கருக்கு, தன்னுடைய கருத்துகளில் மேற்கத்திய நகலான நேருவுடைய கருத்துகளுடன் ஒத்துப்போகிறவற்றை மட்டுமே அரசியல் சாசனத்தில் இடம்பெறச் செய்ய முடிந்தது. நேரு உண்மையில் அம்பேத்கரைப் பயன்படுத்தி காந்தியத்தை ஓரங்கட்டினார் என்பதுதான் உண்மை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், நேருவின் மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் தன் மறைமுக ஆட்சி தொடரவே வழி செய்திருக்கிறது.

(பலர் பார்க்க யுனியன் ஜாக்கை இறக்குவது பிரிட்டிஷர் மனதை வேதனைப்படுத்தும் என்று இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்ட நொடியிலிருந்தே சிந்தித்த கண்ணியமான விசுவாசி எல்லா விடைபெற்றுச் செல்லும் கொடூர ஏகாதிபத்தியங்களுக்கும் கிடைத்துவிடுவார்களா என்ன? சீனா சுதந்தரம் பெற்றதும் முதல் வேலையாக பிரிட்டிஷ் காலனிய அடையாளங்களைத் துடைத்தழித்தது. நாமோ சுட்டெரிக்கும் பூமியில்  கறுப்பு கோட் போட்டுக்கொண்டு மைலர்ட் என்று விளித்துக்கொண்டு ஜார்ஜ் கோட்டை எனப் பெயர் வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

நம்மை அடக்கி ஆண்டவர்களின் கல்லறைகளின் மெழுகுவர்த்திகள் அணையாமல் பார்த்துக்கொண்டுவருகிறோம். நம்மை அடிமைப்படுத்தியவன் செதுக்கிவைத்த கல்வெட்டுக்களை தினந்தினம் துடைத்துப் பளபளப்பாக்கிக் கொண்டுவருகிறோம்.

அவர்கள் நமதுஅடையாளம் என்று சொல்லிக்காட்டிய தாஜ்மஹாலைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு ராஜராஜன் கட்டிய பெரியகோவிலைக் கீழே தள்ளிவிட்டுப் பெருமிதப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

நினைத்துப்பாருங்கள்... நாட்டு மக்கள் தொகையில் 80-85 சதவிகிதமாக இருக்கும் இந்துக்களில் பெரும்பான்மையான சைவர்களின் முதன்மைத் தெய்வமாகவும் எஞ்சிய வைஷ்ணவர்களின் முக்கிய தெய்வங்களில் ஒன்றாகவும் இருக்கும் சிவபெருமானுக்குக் கட்டப்பட்ட கோவில்தானே நம் பாரம்பரியத்தின் தேசத்தின் உன்னதமான துல்லியமான எடுத்துக்காட்டு. அழகியல் கோணத்திலும் கட்டுமானத் தொழில் நுட்பத்திலும் பிரமாண்டத்திலும் அது அல்லவா இந்தியாவிலேயே உயர்வானது. ஆனால், ஆங்கிலேயர் தாஜ்மஹாலை இந்தியாவின் அடையாளமாகச் சொல்லிவிட்டுச் சென்றிருப்பதால் நாமும் அதையே சுமந்துகொண்டு திரிகிறோம். மேற்கத்திய தாக்கம் பெற்ற அம்பேத்கரும் நேருவும் உருவாக்கியிருக்கும் இந்தியா அல்ல உண்மையான இந்தியா)


சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்திய அரசியல் சாசனம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அவர்களுடைய கலாசார, பாரம்பரிய, அடையாள மீட்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் போதிய அளவு உதவியிருக்கவில்லை. அந்தவகையில் அது அம்பேத்கரின் தோல்வியே.


இரண்டாவதாக அது நேருவியத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கிறது. அந்த மேற்கத்திய பாணி வளர்ச்சியானது சொற்ப ஆதிக்க ஜாதி, மத சக்திகளுக்குப் பொருளாதார நலனை மட்டுமே உத்தரவாதப்படுத்தியிருக்கிறது. தனி நபர்வாதம், ஒருபக்க பேச்சு சுதந்தரம், போலி மதச்சார்பின்மை, வேர்ப்பிடிப்பற்றுப் போவது என மேற்கத்திய நகலாகவே நம்மை ஆக்கிவருகிறது. அந்த வகையில் அதுவும் விரும்பத்தகுந்த வளர்ச்சி அல்ல.

தன் தந்தத்தையே ஒடித்து, கை நோக, வேக வேகமாக எழுதியது விநாயகர்தான் என்றாலும் அது வியாச பாரதமேதான் இல்லையா? அந்தவகையில் 
அம்பேத்கர் என்ற தந்தம் கொண்டு 
நேரு என்ற விநாயகர் 
(தெய்வங்கள் என்னை மன்னிக்கட்டும்!) 
கை நோக எழுதிய இந்திய அரசியல் சாசனத்தை 
உத்தரவிட்டு எழுதச் செய்த மாய வியாசரின் கழுத்தில் 
கண்ணைக் கூசவைக்கும் பளபளப்புடன் மின்னுவது 
பிரிட்டிஷ் சிலுவையே.


(தொடரும்)

துயருறு ஆன்மாவின் அரசியல் சீற்றம் (2)

அம்பேத்கர் யாருடைய அரசியல் சாசனத்தை எழுதினார்?

அடுத்ததாக, இந்து மதத்தில் இருந்து தாழ்த்தப்பட்டவர்கள் வெளியேறிவிடவேண்டும் என்பதில் அம்பேத்கர் மிகவும் தீவிரமாக இருந்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கான சலுகைகள் அவர்கள் மதம் மாறிவிட்டால் கிடையாது என்று அரசியல் சாசனத்தில் சொல்லியிருப்பது அவரளவில் அவருடைய அரசியலுக்கு எதிரான செயல்பாடே.

தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு முறை சலுகை பெற்று மேல் நிலைக்கு வந்தவர்கள் சக தாழ்த்தப்பட்டவர்களுக்கு அடுத்த வாய்ப்பை விட்டுக்கொடுக்கவேண்டும் என்பது அம்பேத்கரின் விருப்பமாக இருந்திருக்கும். அதற்கான உத்தரவாதத்தையும் அவரால் ஏற்படுத்த முடிந்திருக்கவில்லை.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசியல் சாசனத்தில் தரப்பட்டிருக்கும் பங்கீடு (ரிசர்வேஷன்) என்பது பிரிட்டிஷ் காலகட்டத்திலேயே அமலுக்கு வந்த ஒரு விஷயமே. அம்பேத்கர் அதையும் தாண்டிப் பல விஷயங்கள் செய்ய விரும்பினார். முடிந்திருக்கவில்லை.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனியாக இருப்பிடம், ஊர், நகரம் அமைக்கப்படவேண்டும் என்று விரும்பினார். இஸ்லாமியர்களுக்குத் தனி நாடு கொடுத்ததுபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி இருப்பிடம் (தற்போது இருக்கும் சேரி, காலனி போல் அல்ல; ஒருவகையில் சமத்துவபுரம் போல் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனி ஊர், தனி நிர்வாக அமைப்புடன்). அதற்கு அரசியல் சாசனத்தில் எந்த ஏற்பாடும் இருந்திருக்கவில்லை.



பின் தங்கிய வகுப்பினரின் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள அரசியல் சாசனத்தில் எந்த அம்சமும் இல்லை என்பதையும் ராஜினாமா உரையில் அம்பேத்கரே குறிப்பிட்டிருக்கிறார். இடை நிலை ஜாதியினர் தமது பெரும்பான்மை பலத்தின் மூலம் ஒவ்வொரு அரசாங்கத்திடமும் பல கோரிக்கைகளை வைத்து தமது நலன்களைப் பாதுகாத்துக்கொண்டுவருகிறார்கள். அரசியல் சாசனம் உண்மையில் அதைச் செய்திருக்கவேண்டும்.



அடுத்ததாக, அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும் என்று ஒரு விதிமுறை சொல்கிறது. இன்னொரு விதிமுறையோ நலிவடைந்த பிரிவினருக்கு சலுகைகள் தரவேண்டும் என்கிறது. இந்த இரண்டுமே ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன. அரசியல் சாசனத்தின் முதல் திருத்தம் இதை அடிப்படையாக வைத்தே உருவானது. உண்மையில் ஒருவர் வழக்கு போட்டு அதற்காக திருத்தம் கொண்டுவரப்படவேண்டிய விஷயமே அல்ல. முதலில் எழுதும்போதே இந்தக் குழப்பத்தைத் தீர்த்துவைத்திருக்கவேண்டும்.

ஒரு விஷயத்தின் அனைத்து சாத்தியங்களையும் கருத்தில் கொள்ளும் திறமையும் அதற்கேற்ப விரிவான, பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தும் அறிவும் சமூகப் புரிதலும் கொண்ட அம்பேத்கர் மேலே சொல்லியிருக்கும் இரண்டு விஷயங்களில் எப்படிக் கோட்டைவிட்டார் என்பது ஆச்சரியத்தையே தருகிறது. அவர்தானா இதை எழுதினார் என்ற சந்தேகத்தைக் கூட உருவாக்குகிறது.

கோவில்களை மாநில அரசுகள் நிர்வகிக்கும் வழிமுறையை அவர் விரும்பியிருக்க வாய்ப்பில்லை. இன்று ஊழலிலும் நிர்வாகச் சீர்கேடுகளிலும் ஈடுபட்டு கோவில் கலாசாரத்தை முடிந்தவரை அழிக்கும் திருப்பணியில் அவர்கள் ஈடுபட்டுவருகிறார்கள் என்றாலும் ஒரு அரசு அதிகாரியோ அரசியல் கட்சி உறுப்பினரோ கோவில் நிர்வாகத்தில் ஈடுபடுவதென்பது அரசை இந்துச் சார்புடன் கொண்டுசெல்லவே வழிவகுக்கும்; கோவில் கலாசாரத்தை வளர்த்தெடுத்து இந்து மதத்தைக் காக்கும் செயலாகவே ஆகும் என்பதால் மத்திய, மாநில அரசானது கோவில் நிர்வாகத்தில் இருந்து விலகியிருக்கவே விரும்பியிருப்பார்.


ஹஜ் மானியம் போன்றவற்றையும் அவர் விரும்பியிருக்க வாய்ப்பே இல்லை. உன் கடவுளை நீ கும்பிட அரசுப் பணம் தேவையா என்று சீறியிருக்கவே வாய்ப்பு அதிகம். காஷ்மீருக்கு தனி அந்தஸ்து கேட்டபோது அதையே இப்படித்தான் அவர் எதிர்த்திருந்தார்.


யார் இந்து என்ற கேள்விக்கு இஸ்லாமியர் அல்லாத, கிறிஸ்தவர் அல்லாத பார்சி அல்லாதவர்கள் என்ற வரையறையை அம்பேத்கர் முன்வைத்திருக்க வாய்ப்பே இல்லை. அது இந்து மதத்தை பெரும் எண்ணிக்கையிலான அமைப்பாக ஆக்கிவிட்டதுஎன்பதுதான் ’போராளி’களின் குற்றச்சாட்டு. சீக்கியர், பெளத்தர், சமணர் ஆகியோரும் இந்துவே என்று அரசியல் சாசனம் சொல்கிறது. அம்பேத்கர் ஐந்தாறு வருடங்கள் கழித்து பெளத்தத்துக்கு மாறினார். பெளத்தர்களும் இந்துக்களே என்றால் அவர் உண்மையில் மதம் மாறவே இல்லை என்றுதானே ஆகிறது.

அந்த விழாவுக்குத் தலைமை தாங்கிய பெளத்த பிக்கு கூட வீட்டின் ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்குச் செல்வதுபோன்றதுதான் இது என்று சொன்னதை அம்பேத்கர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே இல்லையே. புத்தரை மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்று சொல்வதை ஏற்கவில்லை என்பதுதானே அவருடைய நிலைப்பாடு. அப்படிப்பட்டவர் எப்படி இந்த வரையறையை எழுதியிருக்க முடியும் (காஞ்சி மஹா பெரியவா வகுத்த வரையறை அது).

அதுபோல் மதச்சார்பற்ற அரசு என்ற விஷயத்தை அழுத்தமாக தேச அடையாளமாக அவர் முன்வைக்கவே விரும்பியிருப்பார். இவற்றையெல்லாம் அவரால் செய்ய முடிந்திருக்கவில்லை (1976-ல் பின்வாசல் வழியாகவே செக்குலரிஸம் இந்திய அரசியல் சாசனத்தில் புகுத்தப்பட்டிருக்கிறது).

இந்துக்களும் பெளத்தர்களும் மிகுதியாக இருக்கும் ஜம்மு மற்றும் லடாக்கை இந்தியாவுடன் இணைக்கவேண்டும். இஸ்லாமியர் மிகுதியாக இருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கை பாகிஸ்தானுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்று சொன்னார் அம்பேத்கர். பொது வாக்கெடுப்பு என்பது காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டுமே நடக்கவேண்டும். ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீருக்கும் அல்ல. இந்துக்களும் பெளத்தர்களும் மிகுதியாக இருக்கும் பகுதி இந்தியாவின் அங்கமே... அங்கு எந்த வாக்கெடுப்பும் தேவையில்லை என்று சொன்னார்.

ஒருவகையில் அம்பேத்கர் சொன்ன அந்தத் தீர்வை ஏற்றுக்கொண்டிருந்தால் காஷ்மீர் மக்கள் கூட இந்தியாவுடன் சேர சம்மதித்து பிரச்னை ஒரேயடியாகத் தீர்ந்திருக்கும் (பாகிஸ்தான் அப்போதும் ஏதேனும் வழிகளில் தன் முயற்சியை மேற்கொண்டுதான் வந்திருக்கும் என்றாலும் இப்போதுபோல் பிரச்னை செய்ய வாய்ப்பிருந்திருக்காது).

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் தீர்மானமான ஆர்ட்டிகிள் 370 –ஐ அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். ஆனால் நேருவோ அதைப் பொருட்படுத்தாமல் கோபால ஸ்வாமி ஐய்யங்காரைக் கொண்டு அதை உருவாக்கி அரசியல் சாசனத்துக்குள் கொண்டுவந்துவிட்டார்.


இப்படி அம்பேத்கர் விருப்பத்துக்கு மாறானவற்றைச் செய்ய வேண்டியிருந்தது. விரும்பியவற்றைச் செய்ய முடிந்திருக்கவில்லை.


****

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மிகுந்த நன்மை தரும் என்று நினைத்துச் செய்த சில விஷயங்கள் அந்தப் பலனைத் தந்திருக்கவில்லை. நகர்மயமாக்கம், தொழில் மயமாக்கம் ஆகியவை மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பெரும் விடுதலையைத் தரும் என்று நம்பினார். அரசியல் சாசனத்தில் கிராமப்புற மேம்பாட்டைப் பின்னுக்குத் தள்ளினார் (உண்மையில் காந்தியத்தைப் பின்னுக்குத் தள்ள அம்பேத்கரை நேரு பயன்படுத்திக்கொண்டார் என்றே சொல்லவேண்டும்).

எந்தவொரு நாட்டிலும் அரசு வேலை என்பது அனைவருக்கும், குறிப்பாக தாழ்த்தப்பட்ட ஜாதியினரில் பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே உரிய பங்கீட்டுடன் அரசுப் பதவிகளில் சேர அவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததோடு எஞ்சும் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்டவர்களுக்கு (அவர்களில் 70-80%க்கு மேற்பட்டவர்கள்) உரிய பணிப் பாதுகாப்பு தரவேண்டும் என்பதும் அம்பேத்கரின் இலக்காக இருந்திருக்கவேண்டும்.



தனியார் நிறுவனங்கள், அயல்நாட்டுப் பணிகள் எனப் பெருகியிராத 1950களில் இந்தியாவில் ஏற்கெனவே பெரும் வேலை வாய்ப்புக்கான தொழிலாக இருந்த விவசாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை, நில உடமை அதிகரிக்கவேண்டும் என்பதுதான் அவர்களுக்கு உண்மையான மீட்சியாக இருந்திருக்கும். கிராமப்புற மேல் ஜாதி ஆதிக்கத்தை மாற்றிப்போடவும் அதுவே வழிவகுத்திருக்கும்.



ஆனால், அம்பேத்கர் அப்படியான முயற்சியை எடுக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு நில உரிமை கிடைத்தால் கிராமங்களிலேயே அந்த நிலங்களிலேயே முடக்கிப் போடப்படுவார்கள் என்று சொன்னார். நகரமயமாக்கம், அரசு வேலைகள், பெருந்தொழில்கள் என இந்திய சமூகம் நகர்த்தப்படும்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதில் நியாயமான வசதி வாய்ப்புகள், உரிமைகள் கிடைக்கவேண்டும் என்று நினைத்தார். அது சரியான சிந்தனைதான். ஆனால் அது ஒன்றே தாழ்த்தப்பட்டவர்களுக்கு மீட்சியாக அமைந்துவிடும் என்றும் அத்தனை தாழ்த்தப்பட்டவர்களையும் ஏற்றுக்கொள்ள அங்கு இடமிருக்கிறது என்றும் மேட்டுக்குடி கனவான் போலவே இன்றைய உலக வங்கிப் பிரதிநிதி மன்மோகன் சிங் போலவே அன்றைய மேற்கத்தியப் பிரதிநிதி நேருவைப் போலவே சிந்தித்தார்.

உண்மையில் தாழ்த்தப்பட்டவர்களில் பலருக்கு நிலம் இல்லாமல் இருந்தது. எனவே, அதுதான் அவர்களுக்கு அதி அவசியத் தேவையாக இருந்தது. மஹர்களுக்கு ’வதன்’ வழிமுறை மூலம் நிலம் தரப்பட்டிருந்தது. அதைவிட்டு விட்டு அவர்கள் மேலே நகரவேண்டுமென்று விரும்பினார். ஆனால் பகுதி நேர விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவும் பெருமளவில் கடைநிலைப் பணிகளையும் செய்துவந்த பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நில உரிமை இருந்திருக்கவில்லை. எனவே, அவர்களுக்கு நில உடமையே பெரிய விடுதலையைத் தந்திருக்கும். ஆனால், அம்பேத்கருக்கு அந்த எண்ணம் இருந்திருக்கவில்லை. மாடு மேய்க்கறவன் மாடுதான் மேய்ச்சுக்கிடே இருக்கணுமா… சேத்துல உழல்றவன் சேத்துலயேதான் விழுந்து கிடக்கணுமா என்பதுபோல அவர் யோசித்தார் (யோசிக்கவைக்கப்பட்டிருந்தார்).



டி.ஆர்.நாகராஜ் சொன்னதுபோல் பழங்காலத்தில் கைத் தொழில்கள், தொழில்நுட்பங்கள் எல்லாம் இடை, கடைநிலை ஜாதியினரிடத்தில் இருந்தது. நவீன உலகில் தொழில்களும் தொழில்நுட்பங்களும் மேல் ஜாதியினரிடம் சென்று சேர்ந்துவிட்டன. பழங்காலத் தொழில்களில் இருந்த கடினத்தன்மை, கேவலத்தன்மை போன்றவையெல்லாம் தொழில்நுட்பத்தின் மூலம் பெருமளவில் நீங்கியதும் அவற்றை மேல் ஜாதியினர் கைப்பற்றிவிட்டனர். இது தவறு என்று டி.ஆர்.நாகராஜ் குறிப்பிடுகிறார்.


பழங்காலத் தொழில்கள் கடினமாக, இழிவானதாக இருந்ததால் அதைச் செய்தவர்களும் இழிவாகவே பார்க்கப்பட்டார்கள். அவர்களுடைய கடைநிலைக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம். எனவே அந்தத் தொழிலில் இருந்து அவர்கள் வெகு விரைவில் நகர்ந்தாகவேண்டும் என்று ஒற்றைப்படையாகவே அம்பேத்கர் போன்றவர்கள் சிந்தித்தனர்.


செருப்பு தைக்கும் தொழில் கடினமானது… ஒருவகையில் இழிவானதும் கூட என்பதை ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால், பேட்டா நிறுவனத்தில் வேலை செய்வது பேட்டா நிறுவனத்தின் அதிபராக இருப்பது நவீன சமூகத்தில் உயர்வானதுதான் என்ற புரிதல் தாழ்த்தப்பட்ட போராளிகளில் பலருக்கு இன்றும் இல்லை.


அதுபோல், நில உடமை என்பது எக்காலத்திலும் பெரிய விடுதலையையே தரும். அதுவும் சுதந்தரம் பெற்ற பிறகு இந்தியா ஏராளமான அணைகளைக் கட்டி, நீர்ப்பாசன வசதியைப் பெருக்கியிருக்கிறது. வேதி உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. சாலை வசதிகள், வாகன வசதிகள், பதப்படுத்துதல் என பல துறைகளில் மேம்பட்டிருக்கிறது. விவசாயத்தில் தன்னிறைவு மட்டுமல்ல ஏற்றுமதியிலும் பல சாதனைகள் புரிந்துவருகிறது.


இப்படியான நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருக்கும் நாலைந்து ஏக்கர் நிலம் தரப்பட்டு, கூட்டு விவசாயத்தில் முன்னுக்கு வரவும் வழி செய்து தரப்பட்டிருந்தால் அது மிகப் பெரிய விடுதலையாக இருந்திருக்கும். மேல் ஜாதியினர் பெருந்தொழில்கள், நகர்ப்புறம் என நகர்ந்திருக்க, வளமான கிராமத்தையும் அது சார்ந்த தொழில்களையும் தாழ்ந்த ஜாதியினர் கைப்பற்றியிருந்தால் இந்தியாவின் வளர்ச்சி சீரானதாக இருந்திருக்கும். நகரம் – கிராமம், மேல் கீழ் இடைவெளி இப்போது இருப்பதுபோல் ஆகியிருக்காது. பஞ்சமி நில மீட்பு, நிலச்சீர்திருத்தம் என அரசியல் சாசனத்தில் கல்வி, வேலைகளுக்கான இட ஒதுக்கீடுபோல் சில அழுத்தமான உத்தரவாதங்களையும் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தந்திருக்கவேண்டும்.

நகர்மயமாக்க, தொழில்மயமாக்க, மைய நிர்வாக ஆட்சியமைப்பில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய பங்கீடு கிடைக்க மதிப்பெண்களில் ஆரம்பித்து பல சலுகைகள் தரவேண்டியிருந்தது. விவசாயத்தில் அப்படி சுய மரியாதைக்கு நெருக்கடி தரும் எதுவும் இருந்திருக்காது. இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் எங்கள் உரிமை என்று போராளிகள் என்னதான் முழங்கினாலும் தாழ்த்தப்பட்டோருக்கு ஆழ் மனதில் இந்த சமூகம் கரிசனத்துடன் மேலிருந்து கொடுக்கும் உதவியே என்பது உறுத்திக்கொண்டேதான் இருக்கும். சுய மரியாதை இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பே சுய மரியாதையுடன் இருந்த சமூகங்கள் அவை. எனவே போராளிகளின் அரசியல் உரிமை கோரல்களை அதே பாணியில்தான் தாழ்த்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது. அதோடு கோட்டாவில் வேலைக்குச் சேர்ந்தவன் என்று பிற ஜாதியினர் ஏளனமாகப் பார்க்கும் நிலையும் விவசாய நிலப்பங்கீட்டில் இருந்திருக்காது. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியினர் இன்னும் ஒருபடி மேலே சென்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசின் கடனுதவி பெற்று நிலங்களை காசு கொடுத்து வாங்கி நாலைந்து வருடங்களில் கடனை அடைத்து நேர்மையாக, கெளரவமாக நில உடமையாளராக ஆக்கிக்காட்டியிருந்தார்கள். அம்பேத்கர் இதைத் தனது அரசியல் சாசனத்தில் இடம்பெறச் செய்திருக்கவேண்டும்.


அம்பேத்கர் விவசாயத்தையும் கிராமத் தொழில்களையும் கிராமத்தையும் தாழ்த்தப்பட்டவர்களை முன்னேறவிடாமல் தடுக்கும் கால் விலங்காகப் பார்த்தார். நவீனத் தொழில்நுட்பம் அந்த வேலைகளின் கடினத்தன்மையையும் இழிவையும் பெருமளவில் மாற்றிவிடும்; பொருளாதரீதியில் பெரும் வெற்றியைத் தரும் என்பதையெல்லாம் புரிந்துகொள்ளும் தொலைநோக்கு அவரைப் போன்றவர்களுக்கு இருந்திருக்கவில்லை. தென்னை மரம் சிறு மரமாக இருக்கையில் அருகில் இருந்து நீர் பாய்ச்சி, உரமிட்டுக் கண் விழித்துக் கஷ்டப்பட்டுப் பாதுகாத்துவிட்டு காய்க்கத் தொடங்கியதும் வேறொருவரிடம் கொடுத்துவிட்டுப் போவதுபோன்ற செயல் இது.


நேருவுக்கு தொழில்மய சமூகத்தின் மீது பாசம் இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் அது அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மேல் ஜாதிகளுக்கு உகந்த முன்னேற்றமே. மேற்கத்திய வளர்ச்சி என்பது இந்திய ஆன்மிக, கலாசார வீழ்ச்சியுடன் தொடர்புடையதுதான் என்றாலும் நேருவுக்கு இந்திய ஆன்மிக, கலாசார அம்சங்கள் மீது பெரிய மரியாதை கிடையாது என்பதால் மேற்கத்திய பாணி வளர்ச்சியை அவர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வரவேற்றார். அவர் தொழிற்சாலைகளே நவீன இந்தியாவின் கோவில்கள் என்று முழங்கியது தொழிற்சாலைகள் மீதான விருப்பதினால் மட்டுமல்லவே.


அதோடு, வலிமையானவருக்கும் பலவீனமானவருக்கும் ஒரே இலக்கு, ஒரே போட்டி என்று சொல்வது பலவீனமானவர்களுக்கான வெற்றி வாய்ப்பைக் குறைக்கும் செயலே. ஆங்கில வழிக் கல்விக்கு எளிதில் தகவமைத்துக்கொள்ளும் திறன், வீடுகளில் மின் விளக்கு, தனியாக அமர்ந்து படிக்கத் தோதான நிலை, கற்றுத் தரத் தெரிந்த பெற்றோர்கள், பள்ளிக்குக் குழந்தைகளைத் தினமும் அனுப்ப முடிந்த பொருளாதாரநிலை என இவை எதுவும் இல்லாத தாழ்த்தப்பட்டவர்களை அவையெல்லாம் பெற்ற மேல் ஜாதியினருடன் போட்டியிடவைத்ததில் எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை.

நவீனத் தொழில்கள், நவீன நிர்வாக அமைப்புகள், பாரம்பரியத் தொழில்களில் ஏற்பட்ட நவீன மாற்றங்கள் என அனைத்தையும் எளிதில் பெறும் நிலையில் மேல் மற்றும் இடைநிலை ஜாதியினரே இருந்தனர். தாழ்த்தப்பட்டவர்களில் சொற்ப விகிதத்தினருக்கு இந்த கதவுகள் திறந்திருந்தன என்பது உண்மைதான். ஆனால், அது தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒட்டுமொத்தமாக பலன் தருவதாக இருந்திருக்கவே இல்லை. அம்பேத்கர் கவனத்தில் கொண்டிருக்கவேண்டிய விஷயம் இது. ஒருவகையில் அம்பேத்கர் மட்டுமே கவனத்தில் கொள்ள முடிந்த விஷயமும் கூட. அவர் துரதிஷ்டவசமாக இந்திய விலங்குகளை உடைக்க மேற்கத்திய சுத்தியல்களைப் பயன்படுத்துபவராகவே இருந்துவிட்டார்.


(சிறு விளக்கம் : இந்திய - இந்து பாணி வளர்ச்சிக்கும் மேற்கத்திய பாணி வளர்ச்சிக்கும் இடையிலான வித்தியாசத்தை சிறு உதாரணம் மூலம் புரியவைக்கிறேன். இந்தியா சுதந்தரம் பெற்ற நேரத்தில் விவசாய நாடாகவே இருந்தது. மருத்துவத்துறையில் ஏற்பட்ட நவீன முன்னேற்றங்களால் குழந்தை இறப்புகளும் பிறவகை மரணங்களும் சட்டென்று குறைந்துவிட்டிருக்கவே மக்கள்தொகை தீடீரென்று அதிகரித்தது. இந்தியாவில் அப்போது பெரும் வறட்சி ஏற்பட்டதாகவும் பெரும் கதையாடல்கள் உருவாக்கப்பட்டு குட்டை வைக்கோல் புரட்சிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. வேதி உரங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டது (நீரிழிவு நோய், உடல் பருமன் உள்ளிட்ட பல நோய்களின் பெருக்கம் மற்றும் மருந்துகளையே வெகுவாகச் சார்ந்து வாழும் வாழ்க்கை போன்றவையும் அதே காலகட்டத்தில் இருந்தே அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது). அணைகள் ஏராளம் கட்டப்பட்டன.

அப்படியாக பெரும் உணவுத் தட்டுப்பாடு நிலவியதாகச் சொல்லப்பட்ட ஆண்டில் இருந்து மேற்கூறிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்த சுமார் பத்தே ஆண்டுகளில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டியதோடு ஏற்றுமதியிலும் உலக சாதனை படைக்கத் தொடங்கிவிட்டது. இது முழுக்க முழுக்க மேற்கத்திய பாணி வளர்ச்சியே. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சீரிழிவு, நிலங்களின் மண்ணின் சத்து இழப்பு, வேதி உரங்களின் பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்ச நேர்ந்தது என அதன் மோசமான பின்விளைவுகள் ஏராளம்.

இந்திய – இந்து பாணி வளர்ச்சி என்பது இப்படியான பின்விளைவுகள் இல்லாததாகவும் மிதமான வளர்ச்சியைக் கொண்டதாகவும் இருந்திருக்கும். இந்திய உணவுத் தட்டுப்பாட்டைத் தீர்க்க மேற்கத்திய தீர்வு மட்டுமே உதவியிருக்கும் என்பது உண்மையல்ல. குட்டை வைக்கோல், வேதி உரங்கள் இவற்றினால் தானிய உற்பத்தி 50% அதிகரித்தது என்றால் அணைகள் கட்டியதால் ஐம்பது சதவிகிதம் விவசாய நிலப்பரப்பு அதிகரித்து தானிய உற்பத்தி பெருகியது. இந்நிலையில் அணைகளை மட்டுமே கட்டி உணவு உற்பத்தியைப் பெருக்கி, விநியோக, பதப்படுத்தல் வழிமுறைகளை மேலும் பலப்படுத்தியிருந்தாலேயே நம் உணவுத் தட்டுப்பாடு நிச்சயம் நம் முயற்சியாலேயே தீர்ந்திருக்கும்.

குட்டை வைக்கோல், வேதி உரப் பயன்பாடு சார்ந்த பின் விளைவுகளில் இருந்து தப்பியிருக்கமுடியும். நேருவியர்களுக்கு இந்திய – இந்து பாணி வளர்ச்சியில் ஆர்வமும் நம்பிக்கையும் இருந்திருக்கவில்லை.

இதில் முக்கியமான இன்னொரு குறை என்னவென்றால், விவசாயத்தின் சமூகப் பங்களிப்பு - பங்கீடு தொடர்பான பார்வை இந்த மேற்கத்திய தீர்வில் இருந்திருக்கவில்லை. அதாவது, அதற்கு முன்பு நில உடமையில் பெரும் இடைவெளி இருந்தது. சிலரிடம் நிலம் குவிந்திருந்தது. பலர் நிலமில்லாமல் இருந்தனர். கோவில், மசூதி, சர்ச்களுக்குச் சொந்தமான வயல்களில் ஆரம்பித்து இடைநிலை ஜாதி பண்ணையார்கள் வசம் இருந்த 500-1000 ஏக்கர் நிலங்கள் வரை ஒரு நியாயமற்ற பங்கீடு இருந்தது. இந்த ஏற்றத் தாழ்வில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது தாழ்த்தப்பட்ட மக்களே.

எல்லா ஜாதியிலும் வர்க்கரீதியாக நிலமற்று இருந்தவர்கள் உண்டு என்றாலும் தாழ்த்தப்பட்டவர்களே இந்த ஏற்றத் தாழ்வில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். எனவே நிலமற்றவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் என்பதுதான் அந்நேரத்தைய இந்தியத் தீர்வாக இருந்தது. நேருவுக்கு அதில் ஆர்வம் இருந்திருக்கவில்லை. அதற்கு அவரைக் குறைசொல்லவும் முடியாது. ஆனால், அம்பேத்கருக்கு இருந்திருக்கவேண்டும். அவருடைய சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மிகப் பெரிய பொருளாதார விடுதலையை மட்டுமல்ல சமூக அந்தஸ்தையும் அதுவே தந்திருக்கும்.

நில உடமை சமுதாயத்தில் நிலமற்று இருத்தலே பெரும் வேதனைக்குரிய விஷயம். காணி நிலத்துக்காவது சொந்தக்காரராக இருப்பதே மிகப் பெரிய கெளரவம். தாழ்த்தப்பட்டவர்களில் சுதந்தரத்துக்கு முன் ஐந்தாறு சதவிகிதத்தினரே நில உடமையாளர்களாக இருந்திருந்தார்கள் என்றால் 80-90 சதவிகிதம் பேருக்கு நிலத்தைப் பங்கிட்டுக் கொடுத்திருக்கவேண்டும்.

நிலம் துண்டு துண்டாக இருந்தால் உற்பத்தி குறையும் என்பது உண்மையல்ல. சிறு நில உடமையாளர்கள் அதுமட்டுமே அவர்களுடைய வாழ்வாதாரத்தைத் தரும் என்பதால் கூடுதல் அக்கறையுடன் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பார்கள். அதோடு, நிலம் குறைவாகவும் மக்கள் அதிகமாகவும் இருக்கும் நம் நாட்டுக்கு சமத்துவத்தைக் கொண்டுவரும் நோக்கிலும் நிலத்தைப் பங்கிட்டுக் கொடுப்பதே சிறந்த வழியாக இருந்திருக்கும். வேண்டுமென்றால் பத்து தாழ்த்தப்பட்ட நில உடமையாளர்களின் நிலத்தை ஒன்றாக்கி கூட்டுப் பண்ணை முறையில் ஐம்பது ஏக்கர்-100 ஏக்கர் என ஆக்கித் தந்திருக்கவேண்டும்.

காந்தியவாதமும் லட்சிய வேகமும் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. வினோபாவே பூதான இயக்கத்தை அவரளவில் வெற்றிகரமாக நடத்தத் தொடங்கிய காலகட்டம். இந்திய அதிகார வர்க்கம் அவருடைய முயற்சிகளைக் கைகட்டி வேடிக்கை பார்த்தது. எள்ளி நகையாடியது. துளிகூட ஆதரவு தராமல் ஒதுக்கித் தள்ளியது. கம்யூனிஸ்ட்கள் வினோபாவின் முயற்சிகள் புரட்சியைத் தள்ளிப்போடுவதாக நினைத்து கோபப்பட்டார்கள். பண்ணையார்களைத் தாக்கி நிலத்தை பாட்டாளிகளுக்குக் கொடுக்க முற்பட்டார்கள்.

அவர்களுடைய ஆட்சிகள் நடந்த கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும் நிலச் சீர்திருத்தம் ஒப்பீட்டளவில் சிறப்பாக அமல்படுத்தப்பட்டது. ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு நன்மை தருவதாக அல்லாமல் இடைநிலை ஜாதிகளுக்குப் பயன் தருவதாகவே அமைந்தது. மரிச்சபி படுகொலைகளில் ஆரம்பித்து பொலிட்பீரோவில் ஒரு தாழ்த்தப்பட்டவர்கூட இடம்பெறாமல் பார்த்துக்கொண்டுவரும் கம்யூனிஸ்ட்களை அம்பேத்கர் சரியாகவே இனம் கண்டு ஒதுக்கியிருந்தார். அவரளவுக்கு அரசியல் மேதமை இல்லாத திருமாவளவன் கூட கீழ்வெண்மணி அஞ்சலியில் ஆரம்பித்து கம்யூனிஸ்ட்களிடமிருந்து முடிந்தவரை விலகியே இருந்துவருகிறார். அல்லது மக்கள் நலக்கூட்டணி போன்ற சந்தர்ப்பவாதக் கூட்டணியில்கூட தன்னை முதல்வராக முன்னிறுத்த முன்வராத கம்யூனிஸ்ட்களை நன்கு புரிந்துகொண்டவராகவே இருக்கிறார்.

எனவே, அம்பேத்கர் நில சீர்திருத்தத்தை மாநில அரசுகளின் பொறுப்பில் விட்டது மிகப் பெரிய தவறு. தீண்டாமைக்கு எதிரான விதிமுறைகளை எப்படி தேசம் முழுமைக்குமான சட்டமாக வரையறுத்தாரோ அதுபோலவே தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிலம் கிடைப்பதை தேசம் முழுமைக்கும் உறுதிப்படுத்தியிருக்கவேண்டும்.

பொது சிவில் சட்டம் கொண்டுவரவேண்டும் என்று சொன்னவர் தாழ்த்தப்பட்டவர்களின் பொருளாதார, சமூக ரீதியிலான நலனைக் காக்க நிலசீர்திருத்தத்தை மத்திய அரசின் பொறுப்பில் எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். எனவே, அம்பேத்கர் விவசாயம் உள்ளிட்ட கிராமப்புறத் தொழில்களின் மேம்பாட்டுக்கும் அதில் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்கும் உடமைக்கும் தோதாகக் கூடுதலாக எதையும் அரசியல் சாசனம் மூலம் உருவாக்கியிராததால் அவரையறியாமலேயே அவர்களைக் கைவிட்டிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

(தொடரும்)