Saturday 27 October 2018

இந்து விழாக்கள்... விமர்சனங்கள்...

·                     விநாயக சதுர்த்தியின் போது களிமண் அல்லாத விநாயகர் பொம்மைகளை நீர் நிலைகளில் கரைப்பதால் அவை மாசடைகின்றன.
·                     தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது.
·                     கோவில்களில் யானையைத் துன்புறுத்துகிறார்கள்...
இவை போன்ற பாதுகாப்பான-சுய ஆதாயம் மிகுந்த விமர்சனங்களில் இந்து விழாக்களை அழிக்கும் நோக்கம் இருப்பது உண்மைதான்.
·                     ஆண்டில் 364 நாட்கள் ஆலைகள், வாகனங்கள் மூலம் மாசடைவதைவிடவா ஒரே ஒரு நாள் இந்துக்கள் பட்டாசு வெடிப்பதால் மாசடைந்துவிடப்போகிறது?
·                     ரத்தம் சிந்தா பக்ரீத் என்று சொல்லிப் பாருங்களேன்.
·                     இறை வழிபாட்டில் கத்தியால் வெட்டிக்கொள்ளும் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்துக் குரல் கொடுங்களேன்.
·                     ஆங்கில புதுவருடம், கிறிஸ்மஸ் போன்றவற்றுக்கு பட்டாசு வெடிப்பதில்லையா... மின்சாரத்தை வீணடிப்பதில்லையா..?
·                     பிரிட்டிஷ் காலகட்டத்தில் தாரைவார்க்கப்பட்ட சர்ச் நிலங்களை 100 வருட குத்தகை முடிந்த பிறகு அரசிடம் ஒப்படைக்கவேண்டியதுதானே... அல்லது இன்றைய மார்க்கெட் விலைக்கு வாடகையை கொடுக்கவோ அரசின் கட்டுப்பாட்டுக்கு  உட்படவோ வேண்டியதுதானே...
போன்ற கேள்விகளும் கேட்கப்படவேண்டியவையே.
ஆனால், இவற்றுக்கான எதிர்வினையாக, பட்டாசு வெடிக்கக்கூடாது என்கிறாயா... அதற்காகவே கூடுதலாக வாங்கி வெடிப்பேன்.
பெரிய விநாயகர் சிலைகள் கூடாதா..? அதற்காகவே அவற்றை வைப்பேன் என்பவையெல்லாம் மேலோட்டமாகப் பார்த்தால் நியாயமான வீரமான நடவடிக்கைகளாகவே தெரியும். ஆனால், பரந்த, தொலைநோக்குப் பார்வையில் இவை அவ்வளவு விவேகமான எதிர்வினைகள் அல்ல.
நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்: இந்து மறு மலர்ச்சி, இந்து ஒற்றுமை, இந்து கலாசார பாதுகாப்பு ஆகியவைதானே ஒழிய வேறெதுவும் இல்லை.
இந்து மத விழாக்கள், சடங்குகள் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்ற நோக்கம் 40% இருக்கிறது. பிற மத, அதிகாரமையங்கள் மேல் விமர்சனம் வைக்காமல் இருப்பது என்ற தந்திரம் 40% இருக்கிறது. அதே நேரம் இந்துக்கள் தம்மைச் சீர்திருத்திக்கொள்ளவும் பலப்படுத்திக்கொள்ளவுமான தேவையும் அந்த விமர்சனங்களில் 20% இருக்கத்தான் செய்கிறது.
இந்து ஒற்றுமை என்ற கோணத்தில் பார்த்தால் அந்த 20% நமக்கு 100%க்கும் மேலான முக்கியத்துவம் வாய்ந்தது. 80% விரோதத்துக்கு பதிலடியாக உடனடி எதிர்ப்பு காட்டுவதோடு நிற்காமல் இதுவே மிக மிக முக்கியம்.
ஐம்பது மதிப்பெண் பெற்றவனைப் பார்த்து ஒருவன் நீ ஃபர்ஸ்ட் க்ளாஸ் மார்க் வாங்கலியே என்று எள்ளிநகையாடினால், நீ இரட்டை இலக்கத்தை எப்போதடா எட்டுவாய் என்று பதிலடி கொடுத்து அவன் வாயை அடைக்கத்தான் வேண்டும். அதேநேரம் 80-90 மதிப்பெண் பெற்றும் அவன் வாயை அடைக்க முடியும்.
இன்னும் எளிதில் புரியும்படியான நடைமுறை உதாரணம் சொல்வதென்றால் பிராமண சமூகம் இடப்பங்கீட்டை எதிர்கொண்டவிதத்தைச் சொல்லலாம். திறமையின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியில்  அரசுப் பணிகளில் அதிக அளவில் இடம்பெற்றிருந்த பிராமணர்களுடைய வாய்ப்புகள் சுதந்தர இந்தியாவில் அவர்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப நேர்படுத்தப்பட்டன. அது நிச்சயமாக பிராமணர்களுக்கு எதிரான நடவடிக்கையே.
ஆனால், அவர்களோ இந்தியாவில் பிராமணர்கள் மட்டுமல்லாமல் பிற இடைநிலை சாதிகளே, நில உடமை, அரச நிர்வாம், வணிக அமைப்புகள் என அனைத்திலும் முன்னணியில் இருந்தார்களே... எங்களை மட்டும் ஏன் கட்டம் கட்டுகிறீர்கள் என்று கேட்கவில்லை. எங்களுக்கு அரசுப் பணிகளில் இடம் கொடு என்று போராடவில்லை. தனியார் வேலை, அயல் மாநில வேலை, அயல் நாட்டுவேலை என்று தங்களுடைய திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேறிக் காட்டியிருக்கிறார்கள்.
இந்தியா என்ற அளவிலும் கூட உலக நாடுகள் பொருளாதாரத் தடைவிதித்தோ, உயர் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ளமாட்டேன் என்று மறுத்தோ நம்மை ஒதுக்கும்போது நாம் நம் திறமையால் முன்னேறிக் காட்டியிருக்கிறோம்.
எதிரியின் தரத்துக்கு இறங்கி சண்டையும் போடலாம். எதிரியால் எட்டவே முடியாத  உயரத்துக்குப் போய் ஜெயிக்கவும் செய்யலாம்.
தேர்வு நமதே...
*
இப்போது இந்து மதம் மீது (மட்டுமே) வைக்கப்படும் விமர்சனங்களை கம்பீரமாக எதிர்கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
அதாவது, இந்த விழாக்களை உண்மையான இந்து மறுமலர்ச்சியாக இந்து நவீனமாக மாற்றிக்கொள்வது எப்படி? 
இந்து மதத்தை விமர்சிக்கும் தார்மிக பலம் ஒருவருக்கு எதன் மூலம் கிடைக்கிறது?, இந்து மதத்தின் ஜாதிய வாழ்க்கை பற்றிய விமர்சனபூர்வமான பார்வைதான் அந்த பலத்தை ஒருவருக்குத் தருகிறது. ஒரு இந்து என்னதான் பெருமை பேசினாலும் ஜாதி என்ற ஒன்றை வைத்துத்தான் அவரை மற்றவர்கள் மட்டம் தட்டுகிறார்கள். 
மதம், இனம், நிறம், மொழி,தேசம் போன்ற குழு மனப்பான்மைகளில் ஜாதி கடைநிலையில் இருக்கும் ஆக மிதமான கெடுதல் என்பதைப் புரிந்துகொள்ளும் காலம் வரும்வரையில் ஜாதி சார்ந்த மிகை விமர்சனங்களுக்கு இதமாகவே எதிர்வினையாற்றியாகவேண்டும்.
இந்து விழாக்களின் நவீனத்துவம், இந்து மறுமலர்ச்சி என்பதை ஜாதி சார்ந்த மறுமலர்ச்சிக்கு உகந்ததாக ஆக்கவேண்டும்.
திருவிளக்கு பூஜை, விநாயக சதுர்த்தி போன்றவற்றின் மூலம் இந்து ஒற்றுமையை  முன்னெடுப்பதுபோலவே பிற இந்து விழாக்களையும் ஜாதி சமூக ஒற்றுமைக்கு ஏற்றதாக மாற்றவேண்டும்.
உதாரணமாக, விநாயகர் சதுர்த்திக்கு பிரமாண்ட பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் பொம்மைகளுக்குப் பதிலாக கடைநிலை ஜாதியினரிடம் களிமண் மற்றும் அச்சுக்களைக் கொடுத்து சிறிய அழகிய விநாயகர் பொம்மைகளை உருவாக்கச் சொல்லி ஒவ்வொருவரும் அதைத் தமது வீட்டுக்கு வாங்கி வந்து பூஜை செய்து கடைநிலை ஜாதியினரிடமே திருப்பிக் கொடுத்துக் கரைக்கச் சொல்லிவிடவேண்டும்.
அப்படித் திருப்பிக் கொடுக்கும்போது வீட்டு உறவினருக்குச் செய்வதுபோலவே, கோவில் அர்ச்சகருக்குத் தருவதுபோலவே கொழுக்கட்டை, வெத்தலை பாக்கு, பழம், வேஷ்டி, புடவை கொடுக்கலாம். தற்போது கடைநிலை ஜாதியினர் எல்லா திருவிழாக்களிலும் கடைநிலைப் பணிகளை, பொருட்களை விலைக்கு விற்கிறார்கள். அதை மாற்றி ஒவ்வொரு விழாவிலும் அவர்களை  அங்கத்தினராக ஆக்கவேண்டும்.
தற்போது வீடுகளில் வேலை செய்பவர்களுக்கு இதுபோன்றவற்றைத்  தருவதுண்டு. ஆனால், அதை உரிய கண்ணியத்துடன் செய்ய வேண்டும். நவராத்திரி போன்ற விழாக்களில் சொந்த ஜாதிப் பெண்களுக்கு செய்யும் மரியாதைபோல் வீட்டுக்குள் அழைத்து ஸ்வாமி அறையில் உட்காரவைத்துகொடுக்கவேண்டும்.
கடைநிலை ஜாதியினரின் குடியிருப்புகளுக்கு சென்று 108 அல்லது 1008 களிமண் விநாயகர் பொம்மைகளைச் செய்து ஒரு பெரிய விழாவாக அதைக் கொண்டாடலாம்.
ஒவ்வொரு விநாயகர் கோவிலிலும் அதுபோல் நூற்றுக்கணக்கில் விநாயகர் பொம்மைகளை கோவில் மதில் சுவரில் கொலுபோல் வைத்து அவற்றுக்கு சிறிய அகல் விளக்கால் ஒளி ஏற்றி வணங்கலாம்.
ஒவ்வொரு கிராம தெய்வத்தின் விக்ரகத்தையும் களிமண் விநாயகர்களையும் பல்லக்கில் வைத்து அனைத்து ஜாதி, அனைத்து மதத்தினர் வசிக்கும் தெருக்கள் வழியாகக் கொண்டு சென்று கிராம நல்லிணக்கத்தை பலப்படுத்தலாம்.
*
தீபாவளியை எடுத்துக்கொண்டால், முன்பெல்லாம் கோவில் திருநாளின் போது சொக்கப்பனை, வாண வேடிக்கை என நடத்துவார்கள். அதுபோல் தீபாவளியன்று இரவு அவரவர் பகுதியில் இருக்கும் கோவிலில் ஸ்வாமி உலா ஏற்பாடு செய்து தெப்பக் குளம் இருந்தால் தெப்ப உற்சவம் நடத்தி வாணவேடிக்கை நிகழ்ச்சியை நடத்தலாம்.
ஒவ்வொரு கிராமத்திலும் அனைத்து ஜாதியினரும் ஒன்று கூடி ஒரு அறக்கட்டளை போல் அமைத்து தீபாவளியைக் கொண்டாடலாம். அவரவருக்கு முடிந்த தொகையை திருமணமொய் கவர் போல் ஒன்றில் போட்டு கோவிலில் கொடுத்துவிடவேண்டும். அந்தப் பணத்தை வைத்து கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் சீருடை போன்று ஒரே விதமான ஆடையை  வாங்கித் தரலாம். பள்ளிச் சீருடை போல் அல்லாமல் வண்ணமயமான ஆடையாக அதை வாங்கி கிராமத்தில் அனைவரும் அணிவது கிராமத்தின் அனைத்து ஜாதியினரிடையே நட்புறவை பலப்படுத்தும்.
பணிபுரியும் இடங்களில் கூட்டுறவு அமைப்பு போல் அல்லது சீட்டுக் கட்டி தீபாவளிக்கான பட்டாசு, பலகாரங்கள் வாங்குவதுபோல் கிராமத்திலும் அனைவருக்கும் வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். உண்மையில் கிராமத்தில்தான் இந்த கூட்டுறவு முறை முதலில் அமலாகியிருக்கவேண்டும்.
நகரம் கிராமம் நட்புறவை பலப்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம். நகரத்தில் இருந்து குழுக்களாக கிராமங்களுக்குச் சென்று அவர்களுடன் தீபாவளியைக் கொண்டாடலாம். இந்திய வானில் (தென்னிந்திய வானில்?) சூழும் பட்டாசுப் புகை மூலம் தீபாவளியை நம் முப்பத்து முக்கோடி தேவர்கள் பார்த்து பழகியவர்களுக்கு வண்ணமயமான ஒற்றைச் சீருடையில் அனைத்து ஜாதியினரும் ஒவ்வொரு கோவில்களை வலம்வருவதைப் பார்ப்பது பேரானந்தமாகவே இருக்கும்.
ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அம்மன் கோவிலில் அந்த ஆண்டு என்ன நிற மேலாடை, என்ன நிற இடையாடை என்று சிறுவர்களைவிட்டுத் தேர்ந்தெடுக்கச் சொல்லி அப்படியான உடையை ஊர் முழுவதும் அணியவேண்டும்.
சீருடை என்பது அதை அணியும் குழுவினரிடையே நெருக்கத்தை அதிகரிக்கும். இன்று நகைக்கடை, உணவு விடுதி, விமானசேவை போன்றவற்றுக்கு தனியான சீருடை இருப்பதைப் பார்த்திருப்போம். அதை அவர்கள் தனி அடையாளம் என்ற வகையில் மட்டுமல்ல பணியாளர்களிடையே ஒற்றுமை என்ற வகையிலும் முன்னெடுக்கிறார்கள். எனவே, தீபாவளிக்கு ஒரு கிராமத்தில், தெருவில் இருக்கும் அனைத்து ஜாதியினரும் ஒரே நிற உடை அணிவதென்பது அவர்களிடையே நல்லுறவை பலப்படுத்தும்.
வெளியூரில் இருப்பவர்கள் கூட தமது கிராமத்து சீருடையை அணிந்து ஃபேஸ்புக்,வாட்ஸப்பில் புகைப்படங்களை வெளியிட்டு ஊர்ப்பாசத்தை வெளிப்படுத்திகொள்ள முடியும். ஒரே நிற உடை என்பதால் செலவும் குறையும். துணி நிறுவனங்களுக்கும் லாபகரமான வழிமுறையாக இது இருக்கும்.
இந்த விழாக்களில் ஜாதி நல்லிணக்கத்தைக் கொண்டுவருவது எளிது. ஒரு கோவிலின் பாரம்பரிய விழாக்களில் இருக்கும் ஜாதி சார்ந்த அம்சம் இதில் இருக்காது. நவீன கால விழா என்பதால் ஆரம்பிக்கும்போதே ஜாதி நல்லிணக்கத்துடன் இதைத் தொடங்க முடியும். ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்த 9 அல்லது 18 அல்லது 108 என அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும் முளைப்பாரி எடுத்து பால் குடம் எடுத்து விழாவைத் தொடங்கலாம்.
வட இந்திய பாணியில் கோவில்களை அகல் விளக்குகளால் அலங்கரிக்கலாம்.  
இவையெல்லாம் பெரியோர்களுக்கான சீர்திருத்தங்கள். சிறுவர்களைப் பொறுத்தவரையில் வண்ணமயமான வாண வேடிக்கையை கைகட்டி வேடிக்கை பார்ப்பதைவிட ஒற்றை ஊசிப்பட்டாசாக இருந்தாலும் தானே பற்றவைத்து வெடித்தால்தான் சந்தோஷமாக இருக்கும். சிறுவர்களிடமிருந்து அந்த சந்தோஷத்தைப் பறித்துவிடக்கூடாது. எனவே அவர்களுக்கு பட்டாசுகள் தந்தாகவேண்டும்.
வெடி வகைகளுக்கு பதிலாக வண்ண வண்ண மத்தாப்புகளை அதிகம் பயன்படுத்தவைப்பது (குடிசைகள் பெருமளவுக்கு வழக்கொழிந்துவிட்ட நிலையில்)  இன்னும் நல்லது. அவர்கள் தமது வீட்டு வாசலில் வெடிக்கும் ஒரு மத்தாப்பின் நட்சத்திரச் சிதறல்கள் அதை உற்பத்தி செய்யும் சக இந்திய தொழிலாளியின் வீட்டில் வெளிச்சத்தை ஏற்படுத்துகிறது என்று பெருமிதம் கொள்ளச் செய்யலாம்.  
நாய், பூனை மற்றும் பிற கால்நடைகள் போன்ற வளர்ப்பு மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் காதுகளில் பஞ்சு அல்லது  விலங்கு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர் சொல்லும் வழியிலான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.
எளிய உயிர்களை கிராமங்களில் சற்று ஒதுக்குப்புறமான இடங்களுக்குக் கொண்டு சென்று ஓரிரு நாட்கள் பராமரிக்க ஏற்பாடு செய்யவேண்டும். வேடந்தாக்கல் பக்கத்தில் என்று நினைக்கிறேன். ஒரு கிராமத்தில் பறவைகளுக்கு துன்பம் தரக்கூடாதென்று பட்டாசு வெடிப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவரின் வாரிசுகளான நாம் அந்தக் கருணை ஒளியைக் கொஞ்சம் தூண்டிவிட்டுக் கொள்ளவேண்டும்.
பட்டாசு வெடித்துக் கொண்டாடும் சிறுவர்கள் வேறொரு விஷயமும் செய்ய வேண்டும். தீபாவளி நாளில் சூழல் பற்றி அக்கறைகொள்வதோடு நின்றுவிடும் சூழலியல் அமைப்பில் தொடங்கி ”நோ பட்டாசுகள்’ கேம்பெய்னில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்களுடைய வீடுகளுக்குச் செல்லவேண்டும். அவர்கள் பயன்படுத்தும் கார்கள், பைக்குகளில் உங்கள் சுற்றுச் சூழல் அக்கறை தீபாவளி தாண்டியும் விரியட்டும் என்று ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.  தொழிற்சாலைகள், சூழலியல் மாநாடுகள் ஆகியவற்றுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் கைப்பட எழுதிக் கொடுக்கலாம். கார்டுகள் அனுப்பலாம்.
போராளிகள் அக்கம் பக்கத்தில் இருந்தால் அவர்கள் வீட்டின் முன்னால் சென்று விழிப்பு உணர்வு பேரணிகள் கூட நடத்தலாம்.  நாங்கள் ஒரு நாள் பட்டாசு வெடித்தற்கு பிராயச்சித்தமாக இதைச் செய்துவிட்டோம்... நீங்கள் உங்கள் பங்கை எப்போது செய்வீர்கள் என்று கேட்கச் செய்யலாம். 
*
ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டம், காதலர் தினம் போன்றவற்றை மேற்கத்தியர்கள் எப்படி உலகம் முழுவதும் புகுத்துகிறார்களோ அதுபோல் அல்லாமல் நமது பாரம்பரிய விழாக்களின் நல்லம்சங்களை ஒருங்கிணைத்து புதிய விழாக்களை அல்லது பாரம்பரிய விழாக்கள் சிலவற்றுடன் புதிதாகச் சேர்த்து மீட்டெடுக்கவேண்டும்.
அட்சய திருதியை போன்ற வணிக இலக்கு கொண்ட விழாக்கள் போலல்லாமல் பாரம்பரிய மறுமலர்ச்சியாக இந்து சமூக ஒற்றுமையாக இந்த விழாக்களை வடிவமைக்கவேண்டும்.
கோவில்களில் யானைகள் கூடாதென்கிறார்களா..? நல்லது... மிருக காட்சி சாலையில் இருக்கும் விலங்குகள், பறவைகளையும் காடுகளுக்கு அனுப்பிவிடலாம். யானைகளின் வானரங்களின் மயில்களின் பசுக்களின் சரணாலயங்களை கோவில்களாக்கிக் கொள்ளலாம். திறந்த வெளியில் சுதந்தரமாக வாழும் அவற்றுக்கு அந்த கோவிலில் பூஜை செய்யப் பழக்கினால்போதும்.
தினமும் அவற்றுக்கான உணவு நேரத்துக்கு முன்பாக யானைகளை இறைவன் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து தேங்காய் உடைத்து, தூப தீபம் ஏற்றி ஆரத்தி காட்டி வணங்கச் செய்து அதை நாடு முழுவதிலும் உள்ள கோவில்களில் பெரிய திரையில் ஒளிபரப்பலாம். கோவில்களில் பூஜை, தீபாராதனை நடப்பதைப் பார்க்க பக்தர்கள் குழுமுவதைப் போல யானைகள் காட்டில் வழிபாடு செய்வதைப் பார்க்கவும் அந்த நேரத்தில் பக்தர்கள் கூடுவார்கள்.
திருக்கழுகுன்றம் போன்ற இடங்களில் கருடன் தினமும் மதிய நேரம் சரியாக வந்து ஆசியளித்துப் பிரசாதம் பெற்றுச் செல்வதைப் பார்த்திருப்போம். சில ஊர்களில் திருநாட்களில் கருடன் ஸ்வாமி விக்ரகத்தை வானிலிருந்தே மூன்று முறை வட்டமிடுவதுபோல் இதைக் காணவும் பக்தர்கள் ஆர்வத்துடன் வருவார்கள்.
உலகக் கோப்பை போட்டியில் எந்த அணி வெல்லும் என்று ஆமையிடமும் ஆக்டோபஸிடமும் கேட்கும் மேற்குலகுக்கு மாற்றாக நம்மிடம் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் உண்டு. அதை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
காட்டுக் கோவிலில் மயில்கள் எல்லாம் கூடி நின்று முருகா முருகா என்று அகவியபடியே பூஜை செய்துவிட்டு, சரணாயலக் காப்பாளர் தூவும் தானியங்களைக் கொத்தித் தின்பதைப் பார்ப்பது மிகப் பெரிய இறை அனுபவமாக இருக்கும் அல்லவா..?
பாரம்பரிய அம்சங்களை நவீன விழாக்களாக மாற்றுவது என்பதற்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி மிக நல்ல எடுத்துக்காட்டு. இந்து ஒற்றுமையை கலாசாரப் பாதுகாப்புவழியில் முன்னெடுக்கும் நல்ல முயற்சியும் கூட. அதுபோலவே அனைத்து விழாக்களையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ளவேண்டும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்து விழாக்களில் நவீன-பாரம்பரிய நல்லம்சங்களைச் சேர்க்கவேண்டும் இந்து ஒற்றுமையை பலப்படுத்தும்வகையில் சீர்திருத்தவேண்டும். அதுவே இந்து விழாக்கள் மீது போலி சூழல் ஆர்வத்துடன் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கான பதிலாக இருக்கும்.
சிவாஜி மட்டுமல்ல...
சாணக்கியரும் நம் குல மூப்பனே!

Monday 22 October 2018

தர்மத்தைக் காத்தருள் தர்ம சாஸ்தாவே



அறிந்தும் அறியாமலும்

தெரிந்தும் தெரியாமலும்

அவர்கள் செய்யும் சகல குற்றங்களையும் 


பொறுத்துக் காத்தருள்


தண்டித்து 

தர்மத்தைக் காத்தருள் 



சபரி மலை விஷயத்தில் 10-50 வயதுப் பெண்கள் வரக்கூடாது என்ற பாரம்பரியம் ஏன் உருவானது என்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முதலாவதாக, அமங்கல காலகட்டம் கொண்ட பெண்கள் வரவேண்டாம்; ஒரு மண்டல விரதம் இருக்க அவர்களால் முடியாது. இந்தக் காரணம்தான் பெரிதாக பலராலும் சொல்லப்படுகிறது.

இரண்டாவதாக இன்னொரு காரணமும் இருக்கிறது. அதிகம் பேசப்படாத அதுதான் உண்மைக் காரணம் என்றும் தோன்றுகிறது.

ஐய்யப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி. எனவே அவரைப் பார்க்க வரும் பக்தர்களும் அப்படியான கடுமையான பிரமச்சரிய விரதம் இருந்தே மலை ஏற வேண்டும்.

இந்தக் கோணத்தில் பார்க்கும்போது சாலை வசதிகள் இல்லாத காலகட்டத்தில் மலை ஏற்றம் என்பது பல நாட்கள் ஆகும் பயணம். ஓரிடத்தில் தங்கி வாழும் விவசாய சமூகத்தின் நல்லொழுக்கக் கண்காணிப்பு அமைப்புகள் நாடோடியாக பயணம் மேற்கொள்ளும் இடங்களில், நேரங்களில் சாத்தியமில்லை.

ஒரு மண்டல பிரம்மச்சரிய விரதம், கண்காணிப்பு சாத்தியமில்லாத பல நாள் மலைப் பயணம், நிலவு மட்டுமே பொழியும் குளிர் இரவுகள் இப்படியான சூழலில், அப்படியான இடத்தில் பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாகக் கடைப்பிடித்தாகவேண்டுமென்றால் பெண்கள் அந்தப் பகுதியில் வராமல் இருந்தால்தான் சாத்தியம். உடனே ஐய்யப்ப பக்தர்கள் மேல் நம்பிக்கை இல்லையா, பெண்கள் மேல் நம்பிக்கை இல்லையா என்ற கேள்விக்கு உண்மையான பதில் என்றால் ’ஆம் நம்பிக்கை இல்லை’ என்றுதான் சொல்லவேண்டியிருக்கும். மனதளவில் கூட அந்த விரதத்துக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதே 10-50 வயதுப் பெண்களை அங்கு வர வேண்டாம் என்று சொல்ல முக்கிய காரணம்.

கோவிலுக்குச் செல்லும் நாட்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது என்பது ஒரு விதிமுறை. எனவேதான் திருப்பதி, பழனி, சபரிமலை என லட்சக்கணக்கானோர் கூடும் இடங்களிலும் அந்த மலைகளில் அசைவ உணவு விற்கப்படுவதில்லை. எப்படி அசைவத் தவிர்ப்புக்கு உதவும் வகையில் அந்த மலைகளில் மாமிசக் கடைகளை அனுமதிப்பதில்லையோ அதுபோலவே பிரம்மச்சரிய விரதத்தை சிறப்பாகக் கடைப்பிடிக்க ஏதுவாக 10-50 வயதுப் பெண்களை சபரிமலைக்கு வராமல் தவிர்த்திருக்கிறார்கள்.

உண்மையில் அந்தக் காலகட்டம் என்பது அமங்கல நாட்களைக் கொண்ட காலகட்டம் மட்டுமே அல்ல... காமம் சார்ந்து செயலூக்கத்துடன் திகழும் காலகட்டமும் கூட. எனவே ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களின் பிரம்மச்சரிய விரதத்தைக் காக்கும் நோக்கிலேயே அந்த வயதுப் பெண்களை அங்கு வரவேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இஸ்லாத்தில் பர்தா அணிவதற்கும், மசூதிக்குள் பெண்கள் நுழையக்கூடாதென்பதற்கும் சொல்லப்படும் முக்கியமான காரணம் பெண் உடல் ஆணின் மனதில் காம எண்ணங்களைத் தூண்டிவிடும் என்பதுதான். அது ஒடுக்குமுறையின் உச்சபட்ச வடிவம். சபரி மலையில் சொல்லப்படும் கட்டுப்பாடு என்பது அதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூடக் கிடையாது. அதோடு அது நியாயமான நோக்கில் முன்வைக்கப்பட்டிருக்கும் ஒழுக்கம். அதில் பெண்ணின் அமங்கலத் தன்மை குறித்த இழி பார்வையோ சமத்துவமின்மையோ நிச்சயம் காரணமில்லை.

அந்த வயதுப் பெண்களுக்கு மலை ஏறுவதில் ஏற்படும் சிரமங்கள், கர்ப்பப்பை பாதிப்பு போன்றவையெல்லாம் உண்மையான காரணமல்ல.

இந்தக் கோணத்தில் பார்த்தால், பிரம்மச்சாரியான ஐய்யப்பனின் சபரி மலைக்கு 10-50வயதுப் பெண்கள் வரக்கூடாது என்பது முழுக்க முழுக்க நியாயமான குறைந்தபட்ச ஒழுக்க விதி மட்டுமே. எனவே அது காக்கப்பட்டாகவேண்டும்.

ஆனால், சபரி மலை என்பது மேற்கத்திய கிறிஸ்தவ கலாசாரத் தாக்குதலின் மிக முக்கியமான களம். பெரும்பாலான இந்துக்கள் தங்களை இந்துவாக உணர்வது சபரி மலைக்கு மாலை போடுவதன் மூலமே. அவரவருக்கான குல தெய்வ வழிபாடுகள், இன்ன பிற சடங்குகள் என ஏராளம் இருக்கின்றன என்றாலும் அவையெல்லாம் ஒருவகையில் அவரவர் ஜாதி சார்ந்த அம்சங்களே. விநாயகர் வழிபாடு, சபரி மலை, ராம ஜென்ம பூமி போன்றவையே இந்துக்களை இந்துக்களாக ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள்.

இவற்றில் விநாயக சதுர்த்தி, ராம ஜென்ம பூமி போன்றவை வட இந்தியாவில் வெற்றிகரமாக அரசியல் உணர்வை ஊட்டும் விழாவாகவும் இயக்கமாகவும் முன்னெடுக்கப்பட்டுவிட்டன. தென்னிந்தியாவில் சபரி மலை இயக்கம் இந்துக்களை அரசியல்ரீதியாகத் திரட்ட நிச்சயம் உதவும். அது இந்துக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. எதிரிகளுக்குத் தெரிந்திருக்கிறது. எனவேதான் அதைத் தகர்க்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். தகர்க்க அவர்கள் எடுத்த முயற்சியையே ஒருங்கிணைக்கக் கிடைத்த வாய்ப்பாக நாம் பயன்படுத்திக்கொண்டாகவேண்டும்.

வேற்று மதத்துப் பெண்கள், நாத்திகர்கள் போன்றோரை மலை ஏற வைத்ததென்பது எதிரியின் பலவீனமானதும் சீண்டலை நோக்கமாகவும் கொண்ட காய் நகர்த்தல். ஒருவகையில் உள்ளே வரவிட்டு அடிப்பதுபோன்ற தந்திரம் என்றே தோன்றுகிறது. அல்லது இந்துகளில் சிலரை கோபத்தின் விளிம்புக்குத் தள்ளும் நோக்கம் கொண்ட வலை விரிப்பு.

இந்துக்களில் இருந்தே ஆயிரக்கணக்கானோரை எதிரிகளால் தயாரித்து அனுப்பிவைக்கமுடியும். ஜாதிய மோதல், மத மோதல், மொழி மோதல், வட இந்திய தென் இந்திய மோதல், அரசுக்கும் நீதித்துறைக்கும் எதிரான கலவரம் என பல கோணங்களில் இதை அவர்களால் திசை திருப்பவும் முடியும்.

எனவே, நமக்கு மிகுந்த கவனம் தேவை.

லட்சக்கணக்கான பக்தர்கள் நாட்கணக்கில் போராடுவது கோவில் மூடப்படவேண்டும் என்பதற்காக அல்ல; ஆனால் அது நடக்கும் என்று கோவில் நிர்வாகத்தையே சொல்லவைக்கமுடிகிறது. மறைந்து தாக்கும் எதிரி ஓரிரு பெண்களை வைத்து கோவிலை மூடிக்காட்டுவேன் என்று சொல்லாமல் சொல்லி வென்றும் காட்டுகிறான். பால் குடத்தில் அல்ல பாலாற்றில் அல்ல பாற்கடலிலேயே ஒரு துளி விஷத்தைக் கலந்து அதைப் பாழ்படுத்துகிறான்.

மக்களாட்சியில் நீதிமன்றம் சொல்வதே வேதம் என்று செலக்டிவ் ஞானோதயம் பெறும் கட்சிகள், ஆட்சிகளை மீறி எளிய மக்களின் பக்தர்களின் ஆதரவால், பக்தியால் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போட்டுவிட முடியாது.

இந்திய நீதிமன்றம் இந்து உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது.

மாநில அரசு முன் கைஎடுக்காமல் சட்டத் திருத்தம் சாத்தியமில்லையெனில், மத்திய அரசால் நீதித்துறையில் சீர்திருத்தமும் சாத்தியமில்லையெனில் நியாயமான மக்கள் போராட்டமும் சட்ட மீறலாகவே பார்க்கப்படும். மேலும் ஒரு மக்கள் கூட்டத்தை கையாள எந்தத் தலைவராலும் முடியாது. கம்யூனிஸ்ட் அரசு தனது அத்தனை அடக்குமுறையையும் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த முயற்சி செய்கிறேன் என்ற போர்வையில் நியாயப்படுத்திக்கொண்டுவிடும்.

*

மத விவகாரங்களில் அரசு, நீதித்துறை தலையிடக்கூடாது என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்... எந்த அளவுக்கு சரி என்ற ஒரு கேள்வியும் எழுகிறது.

நிச்சயமாக இதில் பொதுவான பதிலைச் சொல்லிவிடவே முடியாது. ஒவ்வொரு தனித்தனி விஷயம் சார்ந்தே இதைக் கையாளவேண்டியிருக்கும். ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தமது கோவிலில் திருவிழாவின் போது வேறொரு ஜாதியினர் தீ மிதிக்க அனுமதி இல்லை என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம். இங்கு பாரம்பரியம் என்பது ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தீ மிதித்து வருவதுதான். அதைக் காப்பாற்ற அவர்களுக்கு உரிமை உண்டா கிடையாதா..?

குறிப்பிட்ட ஜாதியினரை கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்வது நிச்சயம் தவறு என்பது இன்று பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டிருக்கிறது. அவர்களே கூட தீ மிதி விழாவைப் பொறுத்தவரை வேறொரு நாள் தீ மிதித்துக்கொள்ளுங்கள் என்றோ உங்களுக்கென்று தனி பூக்குழி வைத்துக்கொள்ளுங்கள் என்றோ சொல்கிறார்களென்றால் அதை எப்படி அணுகுவது?

பாரம்பரியம் என்பதை அப்படியே பின்பற்ற வேண்டுமென்று அவசியமில்லை. அந்த வழிமுறைக்கு எது ஆதார அம்சம் என்பதைப் பார்த்தே முடிவெடுக்கவேண்டும்.

பர்தாவுக்கு ஆணாதிக்கம் காரணம் என்பதால் அதை மாற்றச் சொல்ல நீதிமன்றத்துக்கு உரிமை உண்டு. ஆலய நுழைவு மறுப்புக்கு ஜாதிப் பெருமிதம் காரணமென்றால் அதை மாற்றச் சொல்ல அரசுக்கு அதிகாரம் உண்டு.

பெண்களை போப்களாக நியமிக்கவோ, திருப்பலி பூஜை செய்யவோ, பாவ மன்னிப்பு வழங்கவோ மறுத்தால் அதில் தலையிட்டு சமத்துவத்தைக் கொண்டுவர நீதித்துறைக்கு உரிமை உண்டு. ஏனென்றால் அது சமத்துவ மறுப்பு.

கோவில் அமைந்திருக்கும் மலைப் பகுதியில் அசைவக் கடைகள் இருக்கக்கூடாதென்று விதிமுறை இருந்தால் அதை மாற்ற அரசுக்கு உரிமை கிடையாது. ஏனென்றால் அந்த வழிமுறை எந்தவொரு ஒடுக்குமுறையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.

பிரம்மச்சாரி கடவுளை பிரம்மச்சரிய விரதம் இருந்து வணங்க வேண்டும்; அதற்குத் தோதாக பெண்கள் அந்தப் பகுதியில் வரக்கூடாது என்று சொல்லப்பட்டால் அதை மாற்ற நீதித்துறைக்கு அதிகாரம் கிடையாது. ஏனென்றால் அது சமத்துவ மறுப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல.

கோவில்களில் மிருக பலி கூடாது என்று ஒரு தீர்ப்பு வருகிறதென்றால் அதை எப்படி அணுகவேண்டும். இந்தப் பழக்கத்தின் பின்னால் இருப்பது தொல் பழங்குடி நம்பிக்கை. ஓர் எளிய உயிரின் படுகொலை. அசைவ உணவுப் பழக்கத்தில் இருந்து மனித இனம் நகரவேண்டிய நாகரிகப் பயணமானது முதலில் கோவிலில் இருந்து தொடங்கவேண்டும் என்பது நியாயமான சீர்திருத்தமே.

அப்படியாக பாரம்பரிய அம்சங்களில் எதை மாற்றலாம் மாற்றக்கூடாது என்பவற்றில் நிதித்துறையும் அரசும் நேர்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் அரசியல் செய்யக்கூடாது.

*

அடுத்ததாக, சபரி மலை விஷயத்தில் எதிரி என்னென்ன துருப்புச் சீட்டுகளை இறக்குவார்... அதை எப்படி எதிர்கொள்வது என்பதை நாம் திட்டமிட்டுக்கொள்வது நல்லது. பெண்களுக்கு எதிரானதாக மட்டுமே இப்போது முன்வைக்கப்படும் இந்த மோதலானது வட தென் இந்திய மோதலாகவும், ஜாதி மோதலாகவும் மாநில மோதலாகவும் மத மோதலாகவும் திரிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

வட இந்திய – தென் இந்திய மோதல்

வட இந்தியக் கோவில்களில் கருவறைக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி உண்டு. பக்தர்களே கடவுளுக்கு நேரடியாக அபிஷேகம் கூடச் செய்ய முடியும். தென்னிந்தியக் கோவில்களில் அந்த அனுமதி இல்லை. நீதிமன்றம் இது தொடர்பாக ஒரு தீர்ப்பு வழங்கினால் வட இந்தியர்கள் கருவறைக்குள் அனுமதியுங்கள் என்றுதான் சொல்வார்கள். அதற்காக அவர்கள் நமது எதிரிகள் என்றோ நம் உணர்வைப் புரிந்துகொள்ளவில்லையென்றோ அர்த்தமில்லை. இந்து பன்மைத்துவத்தின் இயல்பு இது. ஒற்றைப்படையை அது எங்குமே எதிலுமே அனுமதிக்காது. எனவே, இது சார்ந்து வட இந்திய மனோபாவத்தை நாம் எதிர்க்கவேண்டாம். அது எதிரி விரித்திருக்கும் வலை. கவனம் தேவை.

ஜாதிய மோதல்

கடைநிலை ஜாதியினரில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சக்திகளின் செல்வாக்கு ஒப்பீட்டளவில் அதிகம். சபரி மலை விவகாரத்தை ஜாதிய மோதலாக ஆக்க எதிரியால் எளிதில் முடியும். ஐய்யப்ப பக்தர்களில் கடைநிலை ஜாதி ஆண்கள் முக்கிய இடம் வகிக்கிறார்கள் என்பது உண்மைதான். எனினும் ஒரு சில கடை நிலை ஜாதிப் போராளிகளை முன்னிறுத்தி ஜாதிய மோதலாக இதைத் திசை திருப்ப எதிரி நிச்சயம் திட்டமிட்டு வைத்திருக்கிறான்.

கேரள வெள்ளத்தின் போது மேல் ஜாதி கிறிஸ்தவர்கள் தாழ்ந்த ஜாதி கிறிஸ்தவர்களுடன் ஒரே முகாமில் தங்க மாட்டேன் என்று சொன்னதை நாம் பார்த்திருக்கிறோம். தாய் மதத்திலும் அது சார்ந்து சீர்திருத்தம் இன்னும் தேவைப்படத்தான் செய்கிறது. தாழ்ந்த ஜாதி ஐய்யப்ப குருசாமிகளின் தலைமையில் பிற ஜாதி ஐய்யப்ப பக்தர்கள் மலைக்குச் செல்லுதல், மேல் ஜாதி ஐய்யப்ப குருசாமிகளின் தலைமையில் தாழ்ந்த ஜாதி ஐய்யப்ப பக்தர்கள் அணி திரளுதல் என ஜாதி கடந்த சமூக, மத ஆன்மிக ஒற்றுமையை உறுதிப்படுத்தும் நிகழ்வுகளை அதிகரிக்கவேண்டும்.

பெண்ணிய, நாத்திக, கம்யூனிஸ அமைப்புகளில் இருந்து சமத்துவம் கோரி போராடும் போராளிகளுக்கு, காத்திருக்கத் தயார் என்று சொல்லும் பெண் பக்தைகள் குழு சென்று வகுப்புகள் எடுக்கவேண்டும். அவர்களுடைய கூட்டங்கள் நடக்கும் இடங்களுக்குச் சென்று சரண கோஷங்கள் எழுப்பவேண்டும். தெய்வத்தின் சன்னிதானத்துக்கு நாத்திகர்கள் வர ஆர்வம் காட்டுவதுபோலவே நாத்திகர்களின் அலுவலகங்களுக்குச் சென்று பக்தர்கள் சில விஷயங்களைக் கற்றுத் தரவேண்டும்.

மாநில மோதல்

மொழி (மாநிலம்) சார்ந்த மோதலாக இது திசைதிருப்பப்படவும் வாய்ப்பு உண்டு. ஒரு குறிப்பிட்ட மாநில பக்தர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டு அந்த மாநில மக்கள் மீதான தாக்குதலாக அது திசை திருப்பப்பட வாய்ப்பு உண்டு. தமிழகத்தில் ஏற்கெனவே அது சார்ந்த இடைவெளிகள் உருவாக்கப்பட்டு வைத்திருக்கும் நிலையில் சபரி மலை விவகாரம் அதை மேலும் சீர்குலைத்துவிடக்கூடும். அதாவது அதைப் பயன்படுத்தி இடைவெளியை மேலும் அதிகரிக்க பிரிவினை சக்திகள் முனையும். இதை எதிர்கொள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் வசிக்கும் பிற மாநில பக்தர்கள் மண்டல விரதத்தை அந்த மாநில பக்தர்களுடன் சேர்ந்து மேற்கொண்டு ஒற்றுமையை பலப்படுத்திக்கொள்ளவேண்டும். இரு மாநில அரசியல் சக்திகளிடம் சிக்கிக்கொண்டுவிடக்கூடாது.

மத மோதல்

வாபர் மசூதிக்கு சென்று ஐய்யப்ப பக்தர்கள் வழிபடுவதென்பது மத நல்லிணக்கத்துக்கான மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறது. போராளிகளில் ஒருவர் இஸ்லாமியர் என்பதால் இந்து முஸ்லிம் மோதலாக இதைச் சித்திரிக்கும் போக்குகளும் தொடங்கியிருக்கின்றன. வாபர் மசூதிக்கு ஐய்யப்ப பக்தர்கள் போகக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக ஒரு வதந்தி பரப்பட்டிருக்கிறது. இது சார்ந்து தூண்டப்படுபவை நிச்சயம் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். பெண் பக்தைகளின் உணச்சிமயமான எழுச்சியாக இருக்கும் இந்த இயக்கம் மத மோதலாக மாற்றப்பட்டால் பெண்கள் முற்றாக ஓரங்கட்டப்பட்டுவிடுவார்கள். அது நல்லதல்ல. இந்த இயக்கம் ஆதி முதல் அந்தம் வரை பெண்கள் முன்னெடுக்கும் பாரம்பரியப் பாதுகாப்பு இயக்கமாகவே இருக்கவேண்டும். ஆண்கள் இதில் ஆதரவு தரலாம். தலைமை தாங்கத் தேவையில்லை.

இந்த விஷயத்தை எதிரிகள் திசை திருப்பும் இன்னொரு எளிய அபாயகரமான வழி என்பது இந்த எழுச்சியை பாஜக-ஆர்.எஸ்.எஸ்.-பஜ்ரங்தள், வி.ஹெ.பி. போன்ற இயக்கங்களின் பின் துணையுடன் நடப்பதாக முத்திரைகுத்துவதுதான். ராம ஜென்ம பூமியை தேசம்முழுவதும் கொண்டு சென்றதற்கு இந்த அமைப்புகளே காரணம். அங்கு ராமருக்கு கோவில் இன்னும் எழும்பாமல் இருக்கவும் ஒருவகையில் அவர்கள் செயலே காரணம்.

எளிய பக்தைகளின் எழுச்சியான இந்த சபரி மலை இயக்கம் இதைவிடப்பெரிய ஆதரவுடன் முன்னகர வேண்டுமானால் எதிர் தரப்புக்கு எந்தவொரு நியாயமும் எடுத்துத் தரப்பட்டுவிடக்கூடாது. அவர்கள் இல்லாததையே இருப்பதாக பெருக்கிக் காட்டக்கூடியவர்கள். கள்ள மெளனம் சாதிக்கும் அனைத்து நடுநிலை மாமேதைகளும் அந்தத் தருணத்துக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இருக்கும் ஒற்றை தார்மிக பலத்தையும் இழப்பதென்பது இரும்புக்குண்டைக் கட்டிக் கொண்டு பறக்க முயற்சி செய்வதைப் போன்றதுதான். சிறைக்கம்பிகளுக்குப் பின்னே இன்னொரு தெய்வத்தையும் பூட்ட வேண்டாம். எனவே, இந்த இயக்கம் முழுக்க முழுக்க தேசம் முழுவதிலும் உள்ள பெண்கள் ஐய்யப்பனின் பிரம்மசரிய விரதத்துக்குத் தரும் மரியாதை என்ற அளவிலேயே ஒருங்கிணைக்கப்படவேண்டும். ஒரு ஆண்பக்தர் மனதளவில் கூட தனது பிரம்மசரிய விரதத்தில் இருந்து பிறழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த கட்டுப்பாடு உருவாக்கப்பட்டிருப்பதால் அதை மனப்பூர்வமாக காப்பது தமது கடமை என்று உண்மையான பெண்ணிய நோக்கில் போராடவேண்டும்.

ஐய்யப்பன் வெறும் இந்து தெய்வமாக மட்டுமே இருக்கவில்லை. ஜாதி நல்லிணக்கம், தேச ஒற்றுமை, மாநில-மொழி ஒற்றுமை ஓரளவுக்கு மதநல்லிணக்கம் இவற்றை நடத்திக்கொடுப்பவராகவும் இருக்கிறார். ஐய்யனின் அந்த அம்சங்களையும் நாம் தக்கவைத்துக் கொண்டாகவேண்டும்.

இரு முடி கட்டுவதென்பதை ஜாதி ஒற்றுமை, மாநில ஒற்றுமை ஆகியவற்றுக்கான சமூக நிகழ்வாக விரிவுபடுத்தவேண்டும்.

ஒரு மண்டல விரதம் என்பதை மீண்டும் முழு அளவில் முன்னெடுக்க இந்த எழுச்சியைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அலுவலகங்களில் பணி புரிபவர்கள் ஐய்யப்பசாமியின் டோக்கன் அடையாளமாக கறுப்பு, காவி துண்டு அணிந்து வருவது கூட தற்போது அருகிவருகிறது. அதை மாற்றி முழு ஐய்யப்ப உடையுடன் அலுவலகங்களில் ஐய்யப்ப பூஜைக்கென தனி அறை அமைத்து சரண கோஷங்கள் முழங்கவும் வழி செய்யவேண்டும்.

நவீனத்துவம் என்ற பெயரில் நாம் கைவிட்ட நம் பாரம்பரியத்தையும் இந்த எழுச்சியின் மூலம் நாம் மீட்டுக்கொண்டாகவேண்டும்.

Monday 1 October 2018

சபரி மலை வழிபாடு

சபரி மலை வழிபாட்டு விஷயத்தில் தற்போது நடப்பது ஆண் பெண் சமத்துவத்துக்கான உரிமைப் போர் அல்ல. பாரம்பரியம் - நவீனத்துவம் ஆகிய இரண்டுக்கும் இடையிலான போராட்டமும் அல்ல. இந்த மேல்ப்பூச்சுகளுக்கு அடியில் அடிப்படையில் இது ஒரு மதவாதப் போர். இந்து தர்மத்தின் மீதான தொடர் தாக்குதல்களில் ஒன்று. இன்றைய ராணுவ மொழியில் சொல்வதானால் இந்து மதத்தின் மீதான சர்ஜிக்கல் அட்டாக்.

இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் விரல்விட்டு எண்ணமுடிந்த கோவில்களில் குறிப்பிட்ட வயதுப் பெண்களுக்கு அனுமதி இல்லை. அதே நம் தேசத்தில் வெகு சொற்ப கோவில்களில் ஆண்களுக்குமே அனுமதி இல்லை. எஞ்சிய கோவில்கள் அனைத்திலும் ஆண்கள், பெண்கள் வழிபாடு செய்ய அனுமதி உண்டு. ஈ.வெ.ரா. போன்ற மூடர் கூட்டத் தலைவன் இந்துக் கோவில்களில் பெண்கள் கும்பிடச் செல்வதே ஆண்களுடன் இடித்து, உரசி இன்பம் காணத்தான் என்று சொல்லும் அளவுக்கு இந்துக் கோவில்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வழிபாடுகளில் உரிய முக்கியத்துவமும் சமத்துவமும் தரப்பட்டிருக்கிறது. இருந்தும் இந்து கோவில்களில் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்ற அசட்டுத்தனமான, அபாண்டமான, அவதூறான குற்றச்சாட்டை முன்வைத்து சபரி மலை விஷயம் பூதாகரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்துத்துவர்களிலேயே கூட இந்த சர்ஜிக்கல் தாக்குதலை எப்படி எதிர்கொள்ள என்று தெரியாமல் கலங்கி நிற்கும் பரிதாபகரமான நிலையே நிலவுகிறது. எதிரியின் துல்லியமும் தாக்குதலும் அத்தகைய நிபுணத்துவம் மிகுந்தது. ஒற்றை மையம் கொண்டிராத இந்து மரபில் எந்தவொன்றும் யாராலாவது ஆதரிக்கப்படும்; யாராலாவது எதிர்க்கவும்படும் என்பதையும் மீறி இது வேறுவகையான அபாயகரமான தாக்குதல்.

ஐய்யப்ப வழிபாடு இரண்டு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. முதலாவது அது பிரம்மச்சரிய வழிபாடு. நைஷ்டிக பிரம்மசரிய ஐய்யனை பக்தர்களும் ஒரு மண்டலம் பிரம்மச்சரிய விரதம் பூண்டு வழிபடும் மரபு. ஐய்யப்ப வழிபாட்டில் இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு. ஒருவகையில் இன்றைய தாக்குதல் அதைக் குறிவைத்துதான்.

சபரி மலை வழிபாடு என்பது பிராமண மரபையும் பிராமணரல்லாதார் மரபையும் இணைக்கும் வழிபாட்டு வழிமுறை.

இந்துக் கோவில்களில் 80-90 சதவிகிதக் கோவில்களில் பிராமணரல்லாதார்தான் பூசாரிகளாக இருக்கிறார்கள். அந்தக் கோவில்களில் பிராமணிய விதிமுறைகளின் முந்தைய வடிவம் நடைமுறையில் இருக்கும். எனவே எல்லா பிராமணரல்லாதார் கோவிலுமே ஒருவகையில் பிராமண- பிராமணரல்லாதார் மரபுகளின் கலப்பால் இயங்குபவையே. என்றாலும் அந்த இரண்டின் இணைப்பானது ஐயப்ப வழிபாட்டில் அதன் உச்சத்தை எட்டியிருப்பதாகவே சொல்லலாம்.

ஒரு பக்கம் சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பூசாரிகளாக இருப்பவர்கள் கேரள நம்பூதிரிகள். பிராமண ஜாதியிலேயே அதி உயர்ந்த, அதி கறரான சடங்கு சம்பிரதாயங்களை உடையவர்கள் கேரள நம்பூதிரிகளே. அவற்றை இன்றுவரையிலும் கறாராகக் கடைப்பிடிப்பவர்களும் அவர்களே. நம்பூதிரிகள் இருக்கும் கோவில்களில் ஆண்கள் திறந்த மார்புடன் தான் தெய்வத்தைக் கும்பிட்டாக வேண்டும். மன்னரே ஆனாலும் மந்திரியே ஆனாலும் அந்தக் கோவில் தெய்வத்துக்கு அபிஷேக ஆரத்திக்கு என்று வகுக்கப்பட்டிருக்கும் நேரம் தவிர மீதி நேரங்களில் எந்த தீபாரதனையும் காட்டப்படாது. பிரசாதம் பெறுபவரின் கை மிகவும் தாழ்வாக இருக்க நம்பூதிரி தன் கையை மிகவும் உயர்த்தி வெளிப்படையாக, நாடகீயமாக வெளிக்காட்டித்தான் பிரசாதம் கொடுப்பார். இப்படியாக பல்வேறு சடங்காசாரங்களை மிகவும் இறுக்கமாகக் கறாராகப் பின்பற்றிவரும் நம்பூதிரிகள் சபரிமலை ஐய்யப்பனின் கோவிலில் பூசகர்களாக இருக்கிறர்கள். இது இந்த வழிபாட்டின் பிராமண மரபின் பங்கு.

இதன் மறுபக்கம் ஐயப்பன் பிராமணரல்லாதாரின்தெய்வம் என்று சொல்லத் தகுந்த அளவில் சபரி மலைக்கு மாலையிட்டுச் செல்பவர்களில் 90 சதவிகிதத்துக்கும் மேல் பிராமணரல்லாதோரே. இவர்கள் தத்தமது குக்கிராமத்தில் இருக்கும் எல்லைத் தெய்வம், பரிவார தெய்வத்தின் சன்னதியில் பிராமணரல்லாத பூசாரியிடம் மாலை போட்டுகொண்டு பிராமண சடங்குகள் எதையும் பின்பற்றாமல் ஐயப்ப வழிபாட்டைத் தொடங்கிக் கொள்ளமுடியும். தர்ம சாஸ்தா, சரணம், ஹரி ஹர புத்ரன் என சமஸ்கிருத பெயர்கள், வார்த்தைகள் உண்டு என்றாலும் சரண கோஷங்கள் எளிய மக்களின் பேச்சு மொழியிலேயே பெரிதும் இருக்கும். இந்தியாவில் பொதுவாக வேறு எந்த பெரிய தெய்வத்தின் வழிபாட்டுச் சடங்கும் இப்படி பிராமண பூசாரியின் பங்களிப்பு இல்லாமல் முன்னெடுக்கப்படுவதில்லை.

இந்த ஐயப்ப வழிபாடென்பது முழுக்க முழுக்க பிராமணரல்லாதார் தமது விதிமுறைகளைத் தாமாகவே உருவாக்கிக் கொண்டு வடிவமைத்திருக்கும் வழிபாடு. எந்த பழங்கால பிராமண ஆகம நூல்களிலும் இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கவில்லை. அதிலும் இன்றைய பிரபல்யம் என்பது சுமார் 100 ஆண்டுகளில் உருவானதே. சைவம், வைணவம், சாக்தம் என்ற மரபுகளின் கலவையான இந்த வழிபாடு ஒரு வகையில் மிகச் சமீப காலத்தில் முளைத்து கிளைவிட்டு பூவும் காயுமாக கனியும் விதையுமாக வளர்ந்து நிற்கும் பெரும் மரம் இது. கிட்டத்தட்ட ஐயன் வசிக்கும் காட்டைப் போலவே எந்தவிதக் கட்டுப்பாடுகளுக்கும் உட்படாத வழிபாட்டுக் கானகம் இது.

அதே நேரம் கோவில் நந்தனவத்தில் திட்டமிட்டு வளர்க்கப்படும் செடிகளின் அதே பச்சைதான் கானக மரங்களிலும் நிறைந்திருப்பதுபோல் பிராமணாரல்லாதார் மரபில் உருவாகியிருக்கும் வழிபாட்டு அம்சங்களும் பிராமணச் செல்வாக்கில் உருவானவையாகவே இருக்கின்றன. மலைக்கு மாலை போட்டுக் கொள்பவர்கள் ஒரு மண்டலம் விரதம் இருக்கவேண்டும். அந்த நாட்களில் தினமும் இரண்டு நேரம் குளிக்க செய்ய வேண்டும். காலையிலும் மாலையிலும் சரண கோஷம் முழங்கவேண்டும். மாமிச உணவு அறவே கூடாது. ஆண்- பெண் உறவு கூடாது. கடும் பிரம்மசரியம் கடைப்பிடித்தாகவேண்டும். பாலியல் வசைசொற்கள் பேசக்கூடாது. காலில் செருப்பு அணியக் கூடாது. குறிப்பிட்ட வயதுப் பெண்களிடமிருந்து முழுவதுமாக விலகி இருக்கவேண்டும். இறப்பு வீடுகளுக்குச் செல்லக்கூடாது.

இந்த விரதக் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுவேன் என்று உறுதி பூண்டு அதை உலகுக்கும் தனக்கும் அறிவித்துக்கொள்ளும் முகமாக காவி அல்லது கறுப்பு நிற உடை அணிந்துகொள்ளவேண்டும். காவி பிராமண துறவு மரபின் குறியீடு. கறுப்பு பிராமணரல்லாதாரின் கட்டற்ற சுதந்தர மனதின் குறியிடு. பிராமணர்களுக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய வாழ் நாள் விரதத்தையும் சத்தியத்தையும் உலகுக்கும் அவர்களுக்கும் சதா நினைவுபடுத்தும்வகையில் பூணூல், குடுமி, பஞ்ச கச்சம், திறந்த மார்பு, நெற்றியில் விபூதி அல்லது திருமண் காப்பு என பல்வேறு தர்ம காப்புகள் - வேலிகள் அல்லது ஆபரணங்கள் வரையறுக்கப்பட்டிருக்கும். அதுபோலவே சபரி மலைக்கு மாலை போட்டுக்கொள்ளும் பக்தர்களுக்கும் ஏராளமான விஷயங்கள் வெளிப்படையான வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த ஐயப்ப பக்தர்களின் வெளிப்படையான குறியீடுகள் எதுவுமே ஓர் அதிகார அமைப்பு மேலிருந்து திணித்ததாக அல்லாமல் எளிய பக்தர்கள் தாமாக உருவாக்கிக்கொண்ட விதிமுறைகளின் தொகுப்பு இது.

ஒட்டு மொத்த சமூகமுமே இந்த விதிமுறைகளை மதித்து உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. பிராமணர்களை பிராமணரல்லாதவர்கள் சாமி என்று மரியாதையுடன் அழைப்பது வழக்கம். மலைக்கு மாலை போட்டுக்கொள்பவர்களை அந்தக் காலகட்டத்தில் அனைவருமே சாமி என்றே மரியாதையுடன் அழைப்பார்கள். அத்வைத தத்துவத்தின் நடைமுறை வெளிப்பாடு என்றும் சொல்லும் அளவுக்கு பக்தரையே தெய்வமாக மதிக்கும் வழிபாட்டு மரபு.

அப்படியாக பிராமண மரபு ஒருபக்கம்... பிராமணரல்லாத மரபு மறுபக்கம்... இறுக்கம்... நெகிழ்வு. ஆண் தன்மை ... பெண் தன்மை என இரண்டு முற்றிலும் மாறுபட்ட, அதே நேரம் ஒன்றை ஒன்று செழுமைப்படுத்தும் இரு துருவங்களின் கலப்பினால் உருவான வழிபாடுதான் சபரி மலை ஐயப்ப வழிபாடு. இதுதான் எதிரிகளின் கண்ணை உறுத்தியிருக்கிறது. அதனால்தான் அந்த மரபைத் துல்லியமாகத் தாக்கியிருக்கிறார்கள்.

சபரி மலை வழிபாடு சுமார் ஐம்பது வருடங்களில் உருவாகி நிலைகொண்டதுதான் என்றாலும் அது பாரம்பரியத்தின் அழுத்தமான இயல்பான வலுவான நீட்சியாகவே இருந்துவந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் அதில் பல நெகிழ்வுகள் (பிராமணரல்லாதார் மரபில் அது தவிர்க்க முடியாதுதானே) பல்வேறு நெகிழ்வுகள் உருவாகியிருக்கின்றன. ஒரு மண்டல விரதம் இருக்க முடியாதவர்கள் ஒரு நாள் காலையில் மாலை அணிந்து கோவிலுக்குச் சென்று மறு நாளே திரும்பலாம். காவி, கறுப்பு உடை உடுத்து பணியிடங்களுக்குச் செல்ல முடியாதென்றால் கழுத்தில் சிறு துண்டு போட்டுகொண்டால் போதும். நடந்தே செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. மலையில் வாகனம் செல்லும் தொலைவுக்கு அதிலேயே போய்க்கொள்ளலாம் என்று தொடங்கி குக்கிராமங்களில் ஐயப்ப சாமிக்கென்று தனி க்ளாஸ் என்று சொல்லும்வரை சகல சுதந்தரமும் அதில் நுழைந்திருக்கின்றன. திரைப்படப் பாடல்களின் மெட்டில் ஐய்யப்பனுக்கான பாடல்கள் உருவாகியிருக்கின்றன.

பிராமண மரபும் அதற்கே உரிய சமரசங்களை மேற்கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், இவையெல்லாம் நவீன உலகில் பெருந்திரளான மக்கள் பங்கெடுக்கும்போது ஏற்படக்கூடிய தவிர்க்க முடியாத சமரசங்கள். இவை நிச்சயம் தவறுதான். ஆனால், தவிர்க்க முடியாதவை. இந்த மாற்றங்களுக்கு இடையேயும் அனைத்து விதிமுறைகளையும் கறாராகக் கடைப்பிடிக்க விரும்பும் ஒருவருக்கு (பக்தர்களில் கணிசமாணவர்கள் அத்தகையோரே) அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிக்க இந்த நவீன உலகிலும் வாய்ப்பு இருந்துவந்திருக்கிறது. அது இருக்கும்வரை இந்த ஐயப்ப வழிபாடு தன் முக்கியத்துவத்தை இழக்காது. ஐய்யப்ப வழிபாடு இருக்கும்வரை இந்து ஒற்றுமையும் இருக்கும். எனவே அதைக் குலைக்கத்தான் இப்போது திட்டமிட்டிருக்கிறார்கள்.

மகர ஜோதி தொடர்பான “விஞ்ஞானபூர்வ’ ஆராய்ச்சிகள் எல்லாம் முன்பே தொடங்கிவிட்டிருக்கின்றன. அவற்றின் அடுத்த கட்டமாகவே பிரம்மசரியம் என்ற அம்சத்தை ஐய்யப்பனிடமிருந்து அகற்றும் முயற்சியில் இறங்கியிருகிறர்கள். ஐயப்பனின் பலமே அவருடைய பக்தர்கள் கடைப்பிடிக்கும் பிரம்மச்சரியமே... அதை பலவீனப்படுத்தினாலே போதும். ஊருக்கு நடுவே இருக்கும் பெரிய மரத்தை வெட்டருவாளோ கோடாலியோ பயன்படுத்தி வெட்ட முடியாது. எனவே அதில் சாதுவாக ஏறி மரத்தின் நடுத் தண்டில் சிறு துவாரம் செய்து அதில் பாதரசத்தை சிறிய அளவில் வைத்தால்போதும். மரம் இலைகள் உதிர்ந்து, கிளைகள் ஒடிந்து, நின்ற நிலையிலேயே பட்டுப்போகும். இப்போதைய தாக்குதல் கிட்டத்தட்ட அதுதான்.

பத்து -ஐம்பது வயதுப் பெண்கள் சபரி மலைக்கு வரத் தொடங்கினால் உண்மையாக ஒரு மண்டலம் பிரம்மச்சரிய விரதம் இருந்து கோவிலுக்கு வரும் உண்மையான பக்தருக்கு அது பெரும் தர்ம சங்கடத்தை உருவாக்கும். அப்படி உண்மையான பக்தர்களை ஒரு இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினால் அதன் பிறகு அங்கு வருபவர்கள் அந்த வழிபாட்டு மரபின் சமரச பக்தர்களே. உண்மையான பக்தர்கள் போன பின் ஐய்யப்பன் இன்னொரு தெய்வம் மட்டுமே. யோகாவில் இருந்து அதன் இந்து ஆன்ம இலக்குகளை நீக்கிவிட்டு அதை வெறும் உடல் பயிற்சியாக மனப்பயிற்சியாக ஆக்கியதுபோல் பிரம்மச்சரிய ஐய்யப்பனை இன்னொரு தெய்வமாக்கும் செயல்தான் இது.

இந்து தர்மத்தின் விரோதிகள் விரும்புவது அதுவே...

நவீன காலத்துக்காகச் செய்யப்படும் சமரசம் என்றோ, சமத்துவச் செயல்பாடென்றோ, இந்து மதிப்பீடுகளை விமர்சிக்க அனுமதித்து அதன் மூலம் இந்து சக்திகளை ஓரணியில் திரட்டலாம் என்றோ எந்த காரணத்தின்படி இதை இந்து ஒருவர் ஆதரித்தாலும் அவர் பெரிய தவறொன்றையே செய்கிறார்.

சபரி மலை என்றுமே அங்கு இருக்கும். அது தொடர்பான பயம் தேவையில்லைதான். யோகாவுக்கு சர்வ தேசப் பெருமை (?!) தேடித்தந்ததுபோல் ஐய்யன் கோவிலுக்கும் மிகப் பெரிய சுற்றுலா வளர்ச்சியை உருவாக்கித் தரக்கூட முடியலாம். ஆனால், அங்கு நம் தர்மத்தின் காவலரான சாஸ்தாதான் இருக்கமாட்டார்.