Wednesday 9 August 2017

காந்திய இந்துத்துவம்

காந்திக்கும் இந்துத்துவர்களுக்கும் இடையில் எத்தனையோ ஒற்றுமைகள் உண்டு. சாதி ஏற்றத்தாழ்வை அவர் எதிர்த்தார். சேவைப் பணிகளுக்கு முன்னுரிமை தந்தார். இந்துப் பாரம்பரியத்தை உயர்வாக மதித்தார். ராம ராஜ்ஜியம் அமைக்க விரும்பினார். சமஸ்கிருதத்தையும், ஹிந்தியையும் உயர்வாக மதித்தார். பசுவை தெய்வமாக மதித்தார். கிராம, சுதேசிப் பொருளாதாரத்தை முன்வைத்தார். எளிமை, தியாகம், பிரம்மசரியம் போன்றவற்றை முன்வைத்தார். இவை அனைத்துமே இந்துத்துவர்களும் தமது கொள்கை சார்ந்து மனப்பூர்வமாக ஏற்று, தீவிரமாகப் பின்பற்றும் விஷயங்களே. இஸ்லாமியர்களை எப்படி நடத்துவது என்ற விஷயத்தில்தான் இந்துத்துவர்களுக்கும் காந்திக்கும் இடையில் பிரச்னை வருகிறது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை எப்படி எதிர்கொள்வது என்பதில்தான் இரு தரப்புக்கும் இடையில் முரண்பாடு வருகிறது.
இயல்பான நாட்களில் எளிய இஸ்லாமியர்களை காந்தியைப் போலவே இந்துத்துவமும் நட்புணர்வுடனே பார்க்கிறது. ஆனால், இஸ்லாமிய தீவிரவாதம் தன் கோர முகத்தைக் காட்டும் போது மட்டுமே இந்துத்துவர்கள் இஸ்லாமில் இருக்கும் எளியவர்களையும் சேர்த்து எதிரியாகப் பார்க்கிறார்கள். கோத்ரா படுகொலை நடக்காமல் குஜராத் பதிலடிகள் நடப்பதில்லை. பத்தாண்டுகால முழு அதிகாரம் கையில் இருந்தபோதும் எந்தப் பழிவாங்கலிலும் நரேந்திர மோதி ஈடுபடவில்லை என்பதில் இருந்து அவருடைய நோக்கம் இஸ்லாமிய அழித்தொழிப்பு அல்ல என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். நூற்றாண்டுகால இஸ்லாமிய அராஜகத்துக்குப் பின்னும் இந்து மன்னர்கள் இஸ்லாமிய அழித்தொழிப்பில் ஈடுபடவில்லை. போரும் தீவிரவாதமும் உச்சத்தை எட்டும் போது மட்டுமே இந்துத்துவரின் வாள் எளிய இஸ்லாமியரின் தலையை வெட்டியிருக்கிறது.

என் தரப்பு எளிய மக்களைக் கொடூரமாகக் கொல்பவனுக்கு அந்த வலியை நான் எப்படி உணர்த்துவது..? இதுதான் முன்னால் இருக்கும் கேள்வி.

முதலில் உன் தரப்பு அப்பாவிகள் எதிரி தரப்பால் கொல்லப்படாமல் பாதுகாத்துக்கொள்...

எதிரி தரப்பில் இருக்கும் கொலைகாரர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொல்...

இதுதான் ஒவ்வொரு தரப்பும் செய்ய வேண்டிய செயல். ஆனால், இது நடைமுறையில் சாத்தியமில்லாத செயல். ஏனென்றால், எப்போது அபாயம் சூழும் என்பதைக் கணிப்பதும்,  கலவர மேகம் சூழும்போது பாதுகாப்பான இடத்துக்கு அனைவரையும் அழைத்து வருவதும் கடினம். அதற்காக எல்லாரையும் எல்லா நேரங்களிலும்  பாதுகாப்பு வளையத்துக்குள் நிறுத்தி வைப்பதும் கடினம்.

இப்படியான ஒரு சூழலில்தான் எதிரிகள் தன் தரப்பு அப்பாவிகளைக் கொல்கிறான் என்ற செய்தி கிடைக்கும்போது எதிர் தரப்பு அப்பாவிகளைக் கொல். அப்போதுதான் அவனுக்கு அது உறைக்கும் என்ற முடிவை ஒருவன் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிறான். இது நிச்சயம் தவறான வழிதான். என்னைக்கண்ணைக் குத்தியதற்கு பதிலடியாக நான் அடுத்தவனின் கண்ணைக் குத்தினால் உலகம் குருடாகத்தான் ஆகும் என்று சொல்வார்கள். ஆனால், நான் பதிலடி கொடுப்பதால்தான் என்னுடைய இன்னொரு கண்ணை அவன் குத்தாமல் இருப்பான் என்றால்  அங்கு வன்முறையும் நல் விளைவைத் தரும் செயலாகிவிடுகிறது.

இதில் இன்னொரு அம்சமும் இருக்கிறது. ஒருவேளை தன் தரப்பு அப்பவிகள் கொல்லப்படும்போது எதிர் தரப்பு அப்பாவிகள் அதைத் தடுத்தாலோ, எதிர் தரப்புக் கொலைகாரர்களை காட்டிக்கொடுத்தோ அப்புறப்படுத்தியோ உதவினாலோ எதிர் தரப்பு அப்பாவிகள் மீது ஒரு தரப்புக்கு நம்பிக்கை வரும்; கரிசனம் ஏற்படும். ஆனால், அப்பாவிகள் தமது தரப்பு கொலைகாரர்கள் செய்யும் எல்லா வித அராஜகங்களையும் மவுனமாக ஆதரிப்பவர்களாகவே இருக்கும்போது கொலை செய்பவர் மட்டுமல்ல... கொலையாளியை மறைத்து வைப்பவரும் தண்டிக்கப்படவேண்டியவரே என்று ஒரு தரப்பு முடிவுசெய்கிறது.

தன் தரப்பு அப்பாவிகள் கொல்லப்படும்போது மவுனமாகவும் அல்லது மிதமாகவும் எதிர் தரப்பு அப்பாவிகள் கொல்லப்படும்போது ஆவேசமாகவும் எதிர்வினையாற்றும் ஒருவர் மீது கோபமே வரும். இரு தரப்பு அப்பாவிகள் மீதும் ஆத்மார்த்தமான நேசம் உண்டு என்பதை இரு தரப்பு அடிப்படைவாதிகளையும் அவரவர் செய்யும் அநீதிகளுக்கு ஏற்பக் கண்டிக்கவேண்டும்.

காந்தியிடம் கோட்சே ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்டிருக்கவேண்டும். அஹிம்சையை அதுவும் பெரிதும் பாதிக்கப்படும் இந்துக்களிடம் போய் ஏன் பேசுகிறீர்கள். பாகிஸ்தான் என்றும் கிழக்கு பாகிஸ்தான் என்றும் அடையாளப்படுத்தப்படும் பகுதிகளில் மாட்டிக்கொண்டிருக்கும் இந்துக்கள் அனைவருமே அங்கிருக்கும் இஸ்லாமியர்களால் கொல்லவும் கற்பழிக்கவும் அடித்துத் துரத்தவும் படுகிறார்கள். இந்தியாவின் 90 சதவிகிதப் பகுதியில் 90 சதவிகித இந்துக்களுக்கு மத்தியில் இருக்கும் இஸ்லாமியர்கள் மேல் ஒரு சிறு கீறல்கூட விழவில்லையே... இந்துத்துவத்தின் விளைநிலமான சிவாஜி மகராஜின்  மகாராஷ்டிராவில் ஒரு முஸ்லீம் கூடக் கொல்லப்படவில்லையே.
பஞ்சாப் பகுதியிலும் வங்காளப் பகுதியிலும் இருக்கும் இந்துக்கள் மட்டுமே பதிலடியாக... சரி இந்த உண்மையை நீங்கள் ஏற்கவில்லையென்றாலும் அந்தப் பகுதி இந்துக்கள் மட்டும்தானே ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். சீக்கிய மதத்தின் புனிதப் பொருள்களில் ஒன்றாக வாள் எப்படி வந்து சேர்ந்தது என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன..? அஹிம்சையை நீங்கள் யாருக்கு போதிக்கவேண்டும்? இந்துவுக்கா..? இந்தியாவில் இருக்கும் 90 சதவிகித இந்துக்களிடமிருந்து இஸ்லாமியத் தீவிரவாதிகளே அஹிம்சையைக் கற்றுக்கொள்ளுங்கள்... இந்து அடிப்படைவாதிகளே நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள் என்றுதானே நீங்கள் சொல்லியிருக்கவேண்டும் என்ற ஒற்றைக் கேள்வியைக் கேட்டிருந்தால் போதும்... காந்தி அன்றே அம்பலப்பட்டு ஓரங்கட்டப்பட்டிருப்பார்.

அஹிம்சையை போதிப்பவர்கள் இரு தரப்பிலும் அப்பாவிகள் கொல்லப்படாமல் பாதுகாக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

இன்னும் சொல்லப்போனால், பழங்காலத்தில் மன்னர்களுக்கு இடையே சண்டைகள் நடக்கும்போது தனியாக ஒரு மைதானத்தில் மோதுவதுபோல் தனியாகப் போய் சண்டை போட்டுக்கொள்ள ஓர் ஏற்பாடு செய்யவேண்டும். எல்லையில் நடக்கும் போர்களும் நாடுகளுக்கு இடையில் நடக்கும் போர்களும் ஒருவகையில் மரணத்தைத் துணிந்து ஏற்கும் வீரர்களுக்கு இடையில்தானே நடக்கின்றன. மதப் போருக்கும் கூட தனியாக குருசேத்திரத்தை ஒதுக்கித் தந்துவிடலாம். அஹிம்சைவாதிகள் முன்னெடுக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது. காந்தியவாதிகள் நிச்சயம் இதை மறுக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் பிரிட்டிஷாரின் நலனுக்காக இரண்டு உலகப் போரிலும் இந்திய சிப்பாய்களை வீரத்திலகம் இட்டு அனுப்பியவர் அல்லவா..? (தென் ஆப்பிரிக்காவில் மட்டுமே அவர் மருத்துவ செஞ்சிலுவைப் படையை நடத்தினார். இந்தியாவில் இந்திய சிப்பாய்களை வீர மரணம் அடையவே அனுப்பினார்).

இந்துத்துவர்களையும் காந்தியவாதிகளையும் இடதுசாரிகள் என்று சொல்லிக்கொள்ளும் கூட்டமும் எதிர்த்துவருகிறது. கூர் நகங்களில் மென்விலங்குகளின் சதைத் துணுக்குகளும் கோரப் பற்களில் சொட்டும் ரத்தமுமாக இருக்கும் ஓர் ஓநாயானது, மந்தையைக் காக்கப் போராடும் காவல் நாயைப் பார்த்து, ஏய்... குரைக்காதே... ஏய் கொல்லாதே  என்று கட்டளையிடுவது போன்றதுதான்.

இப்படி என்னதான் காரணங்கள் சொல்ல முடியுமென்றாலும் இந்துத்துவர்கள் செய்தது நிச்சயம் மன்னிக்க முடியாத குற்றமே. ஆனால், இறப்பு நிகழாத வீட்டில் இருந்து ஒரு குவளை நீர் வாங்கி வா என்று புத்தர் சொன்னதுபோல், ரத்தக் கறை படியாத அரசியல் சித்தாந்தம் மட்டுமே இதைப் பேசும் அருகதை கொண்டது.

காந்தியம் நிச்சயமாக இந்த தார்மிக பலம் கொண்ட கருத்தாக்கமே. ஆனால், இந்துத்துவவாதிகள் என்றால் காந்தியத்தைப் பழித்தே தீரவேண்டும் என்றும் காந்தியவாதி என்றால் இந்துத்துவத்தைப் பழித்தே தீரவேண்டும் என்றும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படவேண்டிய அவசியமில்லை.இது என்னவோ இந்தியாவின் ஒரே பிரச்னை இஸ்லாமிய தீவிரவாதத்தைக் கையாள்வது மட்டுமே என்று சொல்வதற்கு இணையானது.

காந்தியவாதிகள்(ளும்) இந்துத்துவர்களைத் தனிமைப்படுத்துவதன் மூலமும் இந்துத்துவர்கள் காந்தியையே மறுதலிப்பதன் மூலமும் இரு தரப்புமே தமது இலக்குகளில் வெகுவாகத் தோற்றுப்போகவே செய்கிறார்கள்.

காந்தியத்துக்கும் இந்துத்துவத்துக்கும் இடையில் 90 சதவிகித விஷயங்களில் ஒற்றுமை இருக்கும் நிலையில் அந்த விஷயங்களில் எல்லாம் ஒன்றுகூடிப் போராடியாக வேண்டிய தேவையும் இருக்கும் நிலையில் இரு தரப்பினரும் நெருங்கிவரவேண்டியது மிக மிக அவசியமே. அந்த 90 % விஷயங்களில் உண்மையான அக்கறை இருந்தால் மட்டுமல்ல, இஸ்லாமியத் தீவிரவாதப் பிரச்னையில் உண்மையான கவலை இருந்தாலும் இந்த இரண்டு தரப்பும் இணைந்து செயல்பட்டாகவேண்டும். எதிரி எப்போதோ ஊருக்குள் புகுந்தாயிற்று. நேச சக்திகள் உண்மை எதிரியை இனங்காண வேண்டியது மிக மிக அவசியம்.