Wednesday 28 September 2016

பிங்க்





பிங்க் திரைப்படம் உடலுறவு தொடர்பான பெண்களின் சுதந்தரம் பற்றிப் பேசுகிறது. அதை திரைப்படத்துக்குள் பேசியிருக்கும் விதம் பற்றியும் பொதுவாக அந்த விஷயம் பற்றியும் என இரண்டுவகையில் பார்க்கலாம்.

இந்திய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்று பார்த்தால் வேறு எத்தனையோ இருக்கின்றன. காதலை மறுத்தாலே அருவாளால் வெட்டிக் கொல்கிறார்கள். அதைவிட அப்படிக் கொன்றவன் பக்கம் இருக்கும் ’நியாயங்களை’ ஊரே கூடி உயர்வாகப் பேசுகிறது. சாதி/மத மறுப்புத் திருமணம் செய்துகொள்ள முடிவதில்லை, உலகின் எல்லா இடங்களையும்போல் கலவரங்கள் நடந்தால் முதல் இலக்கு பெண்கள்தான், இரவு நேரப் பணிகள், மதுபான விடுதி, மாடலிங், திரைத்துறை, ஊடகம் போன்றவற்றில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என எத்தனையோ இருக்கின்றன. வரதட்சணை, விவாகரத்து, விதவை திருமணம், ஜோதிட சிக்கல்கள், குடும்ப வன்முறை போன்றவை இன்றும் தொடர்கின்றன என்றாலும் அவையெல்லாம் கலைகளைப் பொறுத்தவரையில் பழங்காலப் பிரச்னைகள். இன்றைய சமூகம் எதிர்கொள்வதாகக் கற்பிதம் செய்துகொண்டிருக்கும் பிரச்னையைப் பேசினால்தான் நவீன மனிதராக மதிப்பார்கள். எனவே இயக்குநர் உடலுறவுக்கு நோ சொல்லும் உரிமையை மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார்.

மனைவிக்கும் அப்படிச் சொல்ல உரிமை உண்டு. விபச்சாரிக்கும் அப்படிச் சொல்ல உரிமை உண்டு. என்பதால் இந்தப் படத்தின் நாயகியரை இரண்டும் கலந்த கலவையாக சித்திரித்திருக்கிறார். மனதுக்குப் பிடித்தவருடன் படுத்துக்கொள்வார்கள். ஆனால், மனைவிகள் அல்ல; காசு வாங்கிக் கொள்ளமாட்டார்கள் அதனால் விபச்சாரிகளும் அல்ல. இவர்கள் நவ நாகரிக பெண்கள். ஆணைப் போல் நடந்துகொள்வதே விடுதலை என்று நம்புபவர்கள். அவ்வளவுதான்.

ஒரு பெண் உடலுறவுக்கு நோ என்று சொன்னால் நோ என்றுதான் அர்த்தம். அந்தப் பெண் தன் பெற்றோருடன் தங்காமல் அதே ஊரில் தோழிகளுடன் தனியாக வீடெடுத்துத் தங்கியிருக்கலாம்; உங்களுடன் டேட்டிங்குக்கு வந்திருந்து உங்களுடன் சிரித்துச் சிரித்து தொட்டு தொட்டுப் பேசியிருக்கலாம். அந்தப் பெண் செக்ஸ் ஜோக்குகள் சொல்லியிருக்கலாம். உங்களுடன் சேர்ந்து மது அருந்தியிருக்கலாம். உங்களுடன் ஒரே ஹோட்டல் அறையில் தங்கியிருக்கலாம். அந்தப் பெண் தனக்குப் பிடித்த பலருடன் திருமணத்துக்கு முன்பே உடலுறவு வைத்திருக்கலாம். ஆனால், நீங்கள் உடலுறவுக்கு அழைக்கும்போது அவள் வேண்டாம் என்று சொன்னால் வேண்டாம் என்றுதான் அர்த்தம். அந்தப் பெண் அந்த நோ-வை ஆயிரம் எஸ்-களுக்கு பிறகு சொல்லியிருந்தாலும் அந்த ஆயிரம் எஸ்கள் வேறு வேறு விஷயங்களுக்கானவை என்பதால் உடலுறவுக்குச் சொல்லும் நோ-வை நீங்கள் மதித்துத்தான் ஆகவேண்டும்.

பிங்க் திரைப்படம் முன் வைக்கும் அற்புதமான சுதந்தரப் பிரகடனம் இது.

நான் அந்த பையன்களை நம்பினேன். அவர்கள் ஜெண்டில்மேன்களாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன் ஏமாற்றிவிட்டார்கள். நாங்க பண்ணினது தப்பா அவங்க பண்ணினது தப்பா என்று அந்தப் பெண் கண்ணீர் மல்கக் கேட்கிறார். பெண்கள் செவ்வாய் கிரஹத்தில் இருந்து வந்தவர்கள் என்பது உண்மைதான் போலிருக்கிறது. சுதந்தரம் என்றால் என்ன என்ற புரிதல் இல்லாததால் வந்த குழப்பம் இது. வொய் ஷுட் பாய்ஸ் ஹேவ் ஆல் த ஃபன் என்ற முழக்கத்தின் அசட்டுத்தனமான வெளிப்பாடு இது.

சுதந்தரம் என்பது பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டது. சாலையில் வாகனம் ஓட்டிச் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், சாலை விதிகளை மதித்துத்தான் ஓட்டியாகவேண்டும். வெளியூருக்குச் செல்வதென்றால் வீடுகளைப் பூட்டிவிட்டுச் செல்லவேண்டும். இரவில் தூங்கும்போது வீடுகளைப் பூட்டிக்கொள்ளவேண்டும் என்பவையெல்லாம் சுதந்தரத்தைக் குறுக்கும் செயல் அல்ல. சுதந்தரத்தை சரியாகப் பயன்படுத்தும் செயல்.

.இளமை, முதுமை, மரணம் என்ற கட்டுப்பாடுகள் மனிதருக்கு உண்டு. அது இயற்கை விதித்த விதி. சமூக அளவில் வேறு பல விதிகள் உண்டு. அது சமூகத்துக்கு சமூகம் மாறுபடும். சமூகம் முன்வைத்திருக்கும் விதிகளை மீறிச் செல்கிறவர்கள் அதற்கான முன் தயாரிப்புகளை எடுத்துக்கொண்டாகவேண்டும். பின் விளைவுகளை முன் யூகித்திருக்க வேண்டும். அல்லது எது நடந்தாலும் எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்கவேண்டும். ஆணைப் போல் நடந்துகொள்வேன். ஆனால், பெண்ணாக என்னை மதிக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது. உதாரணமாக ஒரு ஆண் நாலைந்து பெண்களால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படுத்தப்படுகிறார் என்றால் அவர் இப்படி என்னை வன்கலவி செய்துவிட்டீர்களே என்று கண்ணீர் விடமாட்டார். அவருடைய விருப்பத்தை மீறி நடந்துவிட்டால் உடம்பைத் துடைத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார். ஒரு ஆண் பலாத்காரம் செய்துவிட்டால் கற்பு பறி போனால் கதறும் பிற்போக்கு பாரம்பரியப் பெண்களைப் போல் நவநாகரிக பெண்கள் ஏன் கண்ணீர் உகுக்கிறார்கள். ஆமாம்... என்ன என்னோட விருப்பம் இல்லாம ஒருத்தன் சோலி பாத்துட்டான். அதுக்கென்ன இப்போ என்று துணிந்து சொல்லவேண்டியதுதானே... நான் விர்ஜின் அல்ல என்று சொல்ல முடிந்த பெண்ணுக்கு என் விருப்பத்தை மீறியும் ஒருத்தன் என்னை உறவுக்கு கட்டாயப்படுத்தியிருக்கான் என்று கேஷுவலாகச் சொல்லிவிட்டுச் செல்லவேண்டியதுதானே.

நான் அவனை நம்பினேன். அவன் மோசம் செய்துவிட்டான் என்று ஏன் சொல்கிறார்கள். திருமணத்துக்கு முந்தைய மற்றும் கணவர் அல்லாத நபர்களுடனான உடலுறவை உரிமைகளாக வென்றெடுத்த நவ நாகரிகப் பெண் வலுக்கட்டாய உறவை ஒரு விபத்தாக, பிழையான கணிப்பாக, கெட்ட கனவாக நினைத்து வாழ்க்கையை பிற ஜெண்டில்மேன்களுடன் கொண்டாட வேண்டியதுதானே.

நவநாகரிகப் பெண் ஒருத்தியை ஒருவர் வல்லுறவு கொள்கிறார் என்றால் அல்லது அதற்கு முயற்சி செய்கிறார் என்றால் அங்கு நடப்பது கற்புப் பறிப்பு அல்ல. ஏனென்றால் கற்பு என்ற விஷயம் பற்றி அந்தப் பெண்ணுக்கு எந்தவொரு நல்ல அபிப்ராயமும் கிடையாது. அதை அவர் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. அங்கு நடப்பது அவருடைய சுய விருப்பத்தை மீறி நடக்கும் ஒரு செயல். அந்தப் பெண்ணின் ஆளுமையை மதிக்காமல் செய்யப்படும் ஒரு வன்முறை. இதை அவர் அப்படியான ஒரு கொடுமையாகவே எதிர்க்கவேண்டும். கற்பை உயர்வாக மதிக்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படும்போது எப்படி தார்மிகக் கோபத்தை வெளிப்படுத்துவாரோ அப்படியான கோபத்தை நவ நாகரிகப் பெண்கள் வெளிப்படுத்தக்கூடாது.

நவநாகரிக உடை அணிந்து செல்லும் பெண் அதை மனப்பூர்வமாக விரும்பித்தான் அணிந்து செல்கிறார். சுற்றி இருப்பவர்கள் உற்று உற்றுப் பார்க்கிறார்களே என்று அவர் புகார் சொல்ல முடியாது. அவர் அந்தப் பார்வைகளை புறமொதுக்கிவிட்டுத்தான் செல்லவேண்டும். ஒருவகையில் அந்தப் பெண் அந்த உடையையும் அவருடைய வனப்பான உடலையும் ஷாருக்கான் போல் அமீர்கான் போல் அழகும் உடல்கட்டும் அமெரிக்க மென் பொருள் நிறுவனப் பின்னணியும் இருக்கும் பையன்கள் பார்த்து கமெண்ட் அடித்தால் அதை அவர் விரும்பி ரசிக்கவே செய்வார். ஒருவகையில் அப்படியான உடைகளை அந்தப் பெண் அணிவதே அப்படியான உயர் வர்க்க பாராட்டுகளை எதிர்பார்த்துத்தான். ஆனால், பீடி குடித்தபடி பான்பராக் போட்டு கறையேறிய பற்களுடன் இருக்கும் கடைநிலை ஆண் ஒருவனும் அந்த பெண்ணைப் பார்த்து சில கமெண்ட்கள் அடிக்கக்கூடும். அதை அந்தப் பெண்கள் ரசிப்பதில்லை. இது உனக்கான உடல் அல்ல என்று சொல்கிறார்கள். அப்படியானால், அப்படியான நபர்கள் இருக்கும் இடத்தில் அந்த உடைகளை அணிந்து செல்லாதே என்றுதான் சொல்லவேண்டியிருக்கும். நான் அப்படித்தான் உடை அணிவேன் நீ கமெண்ட் அடிக்ககூடாது என்று சொல்வது அவ்வளவு புத்திசாலித்தனமான வாதமும் அல்ல... நியாயமான உரிமையும் அல்ல.

பாவாடை தாவணி போட்டுக்கொண்டு பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் ஒரு பெண்ணை ரோட்டோரம் நின்று கொண்டு கேலி செய்தால் அந்தப் பெண் அவனை திட்டலாம். அடிக்கக்கூடச் செய்யலாம். ஆனால், அந்தப் பெண்ணுக்கு இருக்கும் தார்மிக உரிமை நவநாகரிக உடை அணிந்து செல்லும் பெண்ணுக்குக் கிடையாது. நவநாகரிகம் என்றால் அனைத்துச் செயல்பாடுகளிலும் அது வெளிப்படவேண்டும். ஏ செண்டருக்காக எடுக்கப்படும் படம் தான் என்றாலும் பி, சி, டி, ஈ என நல்லா செண்டர்களையும் தெறிக்கவிடும் என்று பெருமிதமாகச் சொல்லிவிட்டுப் போகவேண்டும்.

புல் வெளியில் நான் பாட்டுக்கு மேய்ந்துகொண்டிருந்தேன். ஒரு சிங்கம் மறைவில் இருந்து பாய்ந்து வந்து என்னை அடித்துவிட்டது இது நியாயமா என்று கேட்கும் தார்மிக பலம் ஒரு குட்டி மான்குட்டிக்கு உண்டு. ஆனால், அதே மான்குட்டி சிங்கத்தின் குகைக்குச் சென்று தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டி எழுப்பி துள்ளிக் குதித்து விளையாட வா விளையாட வா என்று மருளும் கண்களால் மயக்கிவிட்டு, சிங்கம் ஒரே அடி அடித்துப் போட்டதும்... உன்னை நான் எவ்வளவு நம்பினேன் இப்படி செய்துட்டியே... என்று கேட்டால் அதை சுதந்தர உரிமை முழக்கமாக அல்ல... அசட்டுத்தனமாகத்தான் பார்க்கவேண்டியிருக்கும். சிங்கம் அடித்தது தவறுதான். அதைவிட சிங்கம் அடிக்கும் என்பது தெரியாமல் குகைக்குள் போய் துள்ளிக் குதித்தது மானின் மிகப் பெரிய தவறு.

இப்படி பாதிக்கப்பட்ட பெண் மீது குறை சொல்லும்போது நேரத்துக்குத் தகுந்த நிறம் காட்டும் முற்போக்காளர்களில் ஆரம்பித்து ப்யூர் பெண்ணியவாதிகள் வரை பலரும் இந்து இந்திய எதிர்ப்பு நிறமாலையின் பல வண்ணங்களைக் காட்டுவார்கள். முற்போக்கு பச்சோந்திகளை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் இந்து/ இந்திய சமூகம் அதி சுதந்தர, அதி ஜனநாயக சமூகமாக மாறியே ஆகவேண்டும் என்ற உயர் எண்ணம் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இஸ்லாமில் பர்தா என்பது ஆணின் மனதில் கெட்ட எண்ணங்களை ஏற்படுத்தாமல் தடுக்கும் உயரிய நோக்கிலேயே பயன்படுத்தப்படுகிறது... ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால் ஆணின் மனதில் அந்த எண்ணத்தை உருவாக்கிய அந்தப் பெண்ணுக்கு 100 கசையடி தரவேண்டும் என்ற இஸ்லாமிய நீதியில் நம்பிக்கை கொண்டவர்கள். உங்க கேள்விகளுக்கு அப்பறம் பதில் சொல்லறேன்.. கொஞ்சம் வெளிய போய் உட்காருங்க என்று சொல்லி அவர்களை அனுப்பிவிடலாம். ஆனால், ப்யூர் பெண்ணியவாதிகளின் கேள்விகளை நிச்சயம் அப்படி புறமொதுக்கிவிடமுடியாது. அவர்கள் நோ சொல்லும் உரிமையைக் கோரும்போது நிச்சயம் அதை மதிக்கத்தான் வேண்டும். ஆனால், அந்த நோவைக் கொஞ்சம் முன்னதாகவே சொல்லிவிடுங்கள்... பேண்ட் ஸிப்பைக் கழட்டறதுவரை காத்திருக்கவேண்டாம் என்று மட்டுமே அவர்களிடம் சொல்ல முடியும்.

அடுத்ததாக அந்தப் பெண் அங்கு போனது தவறு என்று சொன்னால், உடனே பெண்களைப் படிக்கவைக்கக்கூடாது, பெண்களை வேலைக்கு அனுப்பக்கூடாது, பெண்களை உடனே திருமணம் செய்து கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லும் நிலவுடமை மனநிலை கொண்ட பிற்போக்குவாதி என்று ஒரேயடியாக ஏறி மிதித்துவிடுகிறார்கள். பெண்களுடைய உணர்வுகளை ஆண்கள் மதிக்கவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், அப்படியான மனநிலை மாற்றம் 100 சதவிகிதம் ஏற்பட்டிராத நிலையில் பெண்கள் தற்காலிகமாக கொஞ்சம் அனுசரித்துச் செல்லலாம் என்பதில் இருக்கும் நியாயத்தை எப்படிப் புரியவைப்பது? ஒரு சாலை இருளடைந்திருந்தால் அங்கு நாய்கள் நிலவ வாய்ப்புகள் உண்டென்றால், அந்த வழியைக் கொஞ்சம் தவிர்க்கச் சொல்வதில் உங்கள் மேல் அக்கறை மட்டும்தானே இருக்கிறது. உடனே, எங்களை வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது என்று ஏன் சொல்கிறீர்கள் என்று ஏன் கூக்குரலிடவேண்டும். ஒரு பெண் படிக்கலாம். இரவுகளில் நண்பர்களுடன் வெளியே செல்லலாம். ஆண் நண்பர்களைப் பொது இடங்களில் நான்கைந்து பேர் பார்வையில் படும்படியாக மட்டுமே சந்திக்கவேண்டும் என்பதுபோன்ற விஷயங்களை சுதந்தரத்தை கட்டுப்படுத்துவதாக ஏன் பார்க்கவேண்டும். ஆண்களுக்கும் கூட திருட்டு, கொள்ளை, கலவரங்கள் என பல விஷயங்கள் தொடர்பாக பல கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

இது பிங்க் திரைப்படம் முன்வைத்த விஷயம் குறித்த பொதுவான விமர்சனம். படத்தில் இந்த விஷயங்கள் எப்படிக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று பார்ப்போம்.

மிகவும் துணிச்சலான முயற்சி என்றுதான் இந்தப் படத்தைச் சொல்லவேண்டும். பாடல், ஒளிப்பதிவு, திரைக்கதை, வசனங்கள், நடிப்பு என அனைத்துமே கலை அழகுடன் மிளிருகின்றன. வில்லனை அனைத்து கெட்ட குணங்களும் கொண்டவனாகச் சித்திரித்தல் என்ற ஃபார்முலாவைத் தவிர படம் மிக அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது (ரஜினி காந்தை எனக்குப் பிடிக்கும் என்பதாலும் அவருக்கு 60க்கு மேல் வயதாகிவிட்டதாலும் தரையில் கால் ஊன்றியபடியே கதாநாயகனாக நடிப்பது எப்படி என்பதை அமிதாப்பிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். இதுதான் தலைவர் அதிரடி என்ற டகால்டிகளெல்லாம் இனிமேல் வேண்டாம் என்ற முடிவை அவர் எடுப்பதுதான் அவருக்கு நல்லது. கபாலி-2க்கு முன்னால பிங்க் படத்தின் ரீ மேக்கில் அவர் நடிக்கவேண்டும்).

படத்தின் குறைகள் என்று பார்த்தால், க்ளைமாக்ஸ் பலவீனமாக இருக்கிறது. ஒரு பெண் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்ட ஆணை பீர் பாட்டிலால் அடித்துவிடுகிறார். கொலை முயற்சி என்று வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

அந்தப் பெண் என்னுடன் படுக்க வந்தாள். காசு கேட்டாள்... இதிலெல்லாம் எனக்கு விருப்பமில்லை என்று சொன்னேன். அப்ப காசையாவது கொடுத்துட்டுப் போ என்று சொன்னாள். நான் அதுவும் முடியாது என்றதும் பாட்டிலை எடுத்து அடித்துவிட்டாள் என்று ஒரு ஆண் அந்தப் பெண் மீது புகார் கொடுக்கிறான்.

அந்த நவ நாகரிகப் பெண்ணோ நான் சும்மா ஜாலிக்காகத்தான் அவனுடைய ஹோட்டல் அறைக்குப் போனேன். செக்ஸ் ஜோக்ஸ் சொன்னேன். பீர் ஊற்றிக் கொடுத்தேன். எல்லாம் செய்தேன். ஆனா அவன் கூட படுக்க எனக்கு எண்ணம் இல்லை. அங்கு அவன் என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதும் தடுத்தேன். நான் நோ சொன்ன பிறகும் என்னை பாலியல் ரீதியாக கட்டாயப்படுத்தினான். அதனால் என்னைத் தற்காத்துக்கொள்ள அடித்தேன் என்கிறாள்.

இப்போது நீதிபதி தீர்ப்பு வழங்கியாகவேண்டும். அந்தப் பெண் சொல்வது சரியா... அந்த ஆண் சொல்வது சரியா என்பது அவருக்குத் தெரியாது. இத்தனைக்கும் அந்தப் பெண்ணுடன் வந்த தோழி காசு தருவதாக அந்த ஆண் சொன்னபோது முதலில் சரி என்று சொன்னோம். அதன் பிறகு வேண்டாம் என்று சொல்லிவிட்டோம் என்கிறார். நீதிமன்றத்தில் முதலில் காசு பற்றி நாங்கள் பேசவே இல்லை என்று சொன்னவர் கடைசியில் காசு வாங்கினோம். பிறகு திருப்பிக் கொடுத்துவிட்டோம் என்கிறாள். இப்போது நீதிபதிக்கு பெண்கள் சொல்வது சரி என்று எப்படி நம்பிக்கை வரும். ஆனால், நீதிபதியோ பெண் நோ என்று சொன்னதை ஆதாரமாக ஏற்றுக்கொண்டு அந்த ஆணுக்கு தண்டனை விதிக்கிறார்.

ஒரு வழக்கு என்ற வகையில் இப்படியான தீர்ப்பு தவறானது. குற்றம் சாட்டப்பட்டவர் சொல்லும் விஷயத்தை அப்படியே ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. உதாரணமாக ஒருவர் மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால், அவரோ அதை குற்றம் சாட்டியிருப்பவர் எனக்கு பரிசாகக் கொடுத்தார்; இப்போது பொய் சொல்கிறார் என்று சொல்லி தன் தரப்பை நிரூபித்துவிட முடியாது. பரிசாகக் கொடுத்ததற்கு வேறு வலுவான ஆதாரம் வேண்டியிருக்கும். இந்தப் பெண் நோ சொன்னது உண்மையா..? காசு வாங்கினேன் என்று சொல்லிவிட்டிருக்கும் நிலையில் அதன் பிறகு நோ சொன்னதாகச் சொல்லப்படுவதை எப்படி நம்புவது?

திரைப்படத்தில் இந்த இறுதிக் காட்சி பலவீனமாக இருக்கிறது. நீதிபதிக்கு அந்தப் பெண் மறுத்த பிறகும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்கிறான் என்பதற்கு வலுவான வீடியோ ஆதாரம் அல்லது வேறு வகை ஆதாரம் கிடைத்திருந்தால்தான் ஆணுக்கு தண்டனை தரமுடியும்.

அதிலும் அந்தப் பெண்ணின் தோழி ஆமாம். நாங்கள் அந்த ஆணுடன் படுப்பதற்கு சம்மதித்துப் பணம் வாங்கிக் கொண்டோம். பின்னர் மனதை மாற்றிக்கொண்டுவிட்டோம் என்று சொல்கிறாள். இது மிக மிக அபத்தமான காட்சி. அந்தப் பெண்கள் நடத்தை கெட்டவர்கள் என்று பொய் சொல்லித்தான் வில்லன் அவர்கள் மீது வழக்கு தொடுத்திருக்கிறான். அதை இவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டால் இந்தப் பெண்கள் தான் குற்றவாளிகள் என்று ஆகிவிடுகிறது. அப்பறம் எப்படி அந்த ஆணுக்கு தண்டனை வழங்க முடியும்.

அந்தப் பெண்ணை வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யும்போது பணத்துக்காகத்தானே அங்கு போனீர்கள் என்று அவர் திரும்பத் திரும்பக் குற்றம் சாட்டுகிறார். உடனே அந்தப் பெண் நிலைகுலைந்து ஆமாம் நாங்க காசு வாங்கினோம் என்று சொல்லிவிடுகிறாள். கேட்டால் அந்த குறுக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க அப்படிச் சொன்னாளாம். உண்மையில் அப்படியான அவதூறுகளினால் விரக்தியடையும் ஒருவர் என்ன செய்வார்.. ஆமா நான் வாங்கினேன். எங்க ஆபீஸ்ல எனக்கு சம்பளம் எதுவும் கொடுக்கலை. எனக்கு வீட்டு வாடகை, மளிகை, எல்லாத்துக்குமே நான் கண்டவன் கூட படுத்துதான் சம்பாதிக்கறேன். நான் மட்டுமில்லை. என் குடும்பமே ஏன் எங்க பெண் இனமே அப்படித்தான் செய்யறோம். போதுமா என்றுதான் எரிச்சலடைவார். ஆனால், படத்திலோ ஒரு தெளிவான கன்ஃபஷனாக உண்மைபோல் சொல்கிறார். கதாநாயகரான வக்கீல் அதை மிகவும் துணிச்சலான பதில் என்று வேறு சிலாகிக்கிறார்.

அதுபோல் படத்தில் வரும் இன்னொரு விபரீதமான வசனம் வட கிழக்கு மாநிலத்தில் இருந்து வரும் ஒரு பெண்ணை பிற இந்திய மாநிலத்தினர் கேலி செய்வதாக ஒரு காட்சி வருகிறது. இது உண்மைதான். ஆனால், இது மட்டுமே உண்மையல்ல. உலகில் எல்ல இடங்களிலுமே ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரைத் தரக்குறைவாகத்தான் நினைக்கிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் ஐரோப்பிய வம்சாவளியினர் பிற அமெரிக்கர்களை இழிவாகத்தான் பார்க்கிறார்கள். ஐரோப்பாவில் இங்கிலாந்து நாட்டினர் பிரெஞ்சுக்காரர்களை மட்டம் தட்டுவார்கள். இந்தியாவில் வட இந்தியர்கள் தென் இந்தியர்களை மட்டம் தட்டுவார்கள். தமிழர்கள் தெலுங்கர்களை கொல்டி என்று பரிகசிப்பர்கள். மலையாளிகள் தமிழர்களை பாண்டி என்று கிண்டலடிப்பார்கள். தமிழகத்தில் ஒரு சாதியினர் இன்னொரு சாதியினரை கீழானவர்களாக நினைப்பார்கள். அப்படியாக ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரை கட்டம் தட்டுவதென்பது உலக இயற்கை. இதில் வட கிழக்கு இந்தியர்கள் மட்டுமே மட்டம் தட்டப்படுவதாகச் சொல்லும் வசனம் நிச்சயம் விஷமத்தனமானதுதான். இன்னும் நுணுகிப் பார்த்தால் வட கிழக்கு மாநிலங்களுக்குள்ளேயே ஒவ்வ்வொரு மாநிலத்தைப் பற்றியும் ஒவ்வொரு பழங்குடிகளைப் பற்றியும் பிறர் கீழாகத்தான் நினைக்கிறார்கள். எனவே வடகிழக்கு மாநிலத்தினர் தாம் மட்டுமே பிற இந்தியர்களால் இழிவாகப் பார்க்கப்படுவதாகச் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. அதுவும் வடகிழக்கு மாநிலத்தினர் இன்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வேலைபெற்று வாழ்ந்துவரும் நிலையில் ஓரங்கட்டப்படுவதாகச் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை.

அதோடு இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. இந்திய அரசும் சரி இந்து இயக்கங்களும் சரி வட கிழக்கு மாநிலங்களுக்காக எவ்வளவோ செய்து வந்திருக்கிறார்கள். வட கிழக்கு மாநிலங்களின் நலத்திட்டங்களுக்கான பெரும்பகுதி இந்திய அரசிடமிருந்துதான் தரப்படுகிறது. இந்து நிறுவனங்கள் அஸ்ஸாம், அருணாச்சலபிரதேஷ் போன்றவற்றில் மிக அதிகமாக இயங்கிவருகின்றன. நாகாலாந்து போன்ற இடங்களில் இந்திய, இந்து நிறுவனங்களை விரட்டியடிப்பதுதான் நடக்கிறதே தவிர இந்திய இந்து தரப்பில் வட கிழக்கை யாரும் ஒதுக்கிவைக்கவில்லை. விவேகானந்த கேந்திரா போன்ற நிறுவனங்கள் அவர்களுடைய தலைமையகம் இருக்கும் தமிழகத்தைவிட பத்து மடங்கு அதிக நற்பணிகளை வடகிழக்கு மாநிலங்களில்தான் செய்கிறார்கள். பொது இந்தியர் மத்தியில் மங்கோலிய வடகிழக்கினர் மாறுபட்டுப் பார்க்கப்படுவது உண்மை என்றாலும் சொல்லப்படாத வேறு பல உண்மைகளும் அதற்குப் பின்னே இருக்கத்தான் செய்கின்றன.

இந்தப் படத்தின் இயக்குநர் இஸ்லாமிய பெண்ணை பாலியல் சுதந்தரத்தை முழுவதுமாக அனுபவிக்கும் ஒருவராக துணிச்சலாக வெளிப்படையாகச் சித்திரித்திருக்கிறார். பால கங்காதரத் திலகர், ரவீந்திரநாத் தாகூர் போன்றோரின் உருவப் படங்களை சுவரில் தொங்கவிட்டிருக்கிறார். எனினும் வட கிழக்கு மக்கள் விஷயத்தில் மேலோட்டமான பொதுப்புத்தியில் இருக்கும் பிழையான அரசியல் கதையாடலையே பேசியிருக்கிறார்.

அதுபோல் படத்தில் காவல் துறையினர் பெண்கள் மீதான வழக்கை உரிய நாளில் பதிவு செய்யவில்லை. பெண்கள் முதலில் பிரச்னையை அப்படியே விட்டுவிடலாம் என்றுதான் நினைக்கிறார்கள். வம்புக்கு இழுக்கும் ஆண்கள் அவர்களுக்குத் தொடர்ந்து நெருக்கடி தரவே அதன் பிறகே பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள். அது தெரிந்த பிறகே ஆண்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி பெண்கள் மீது கொலை முயற்சி வழக்கு தொடுக்கிறார்கள். இதற்காக அந்த வழக்கை முன் தேதியிட்டுப் பதிவு செய்கிறார்கள். இதை பெண்களின் வழக்கறிஞர் உடைக்கும் விதம் சற்று சுற்றி வளைத்துச் செல்கிறது. அதாவது 13, 14, 15, 16, 17 என வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதில் 14கும் 15க்கும் இடையில் இந்த வழக்கை புகுத்துகிறார்கள். 14ம் வழக்கு முடிவடையும் பக்கத்தில் கடைசியில் இரண்டே இரண்டு வரிகள் இடம் இந்தப் படத்துக்காகவே விடப்பட்டிருக்கின்றன. அதில் 15 என நம்பரைப் போட்டு இந்த வழக்கை எழுதிவிடுகிறார்கள். உண்மையில் அடுத்த பக்கத்தில் உண்மையான 15, 16 என எண்கள் எழுதப்பட்டிருக்கும். அதை அடித்து எண்களை மாற்றியாகவேண்டியிருக்கும். அதை எடுத்துக்காட்டினாலே தில்லுமுல்லு நடந்திருப்பது தெரிந்துவிடும். அந்த அடித்தல் திருத்தலை வேறு காரணம் சொல்லி நியாயப்படுத்த முடியுமென்றால், 15 வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் வேறொரு திருமணத்துக்கு வெகு தொலைவு மண்டபத்துக்குச் சென்றிருந்த காவலர் எப்படி பத்து நிமிடத்தில் வந்து வழக்கு பதிவு செய்தார் (120 மைல் வேகத்தில் வந்திருந்தால்தான் அப்படி அந்த நேரத்தில் வழக்கு பதிவு செய்ய முடிந்திருக்கும் என்று வழக்கறிஞர் கிடுக்கிப் பிடிபோடுகிறார். நேரம் தவறாக எழுதிவிட்டேன் என்று சொல்லித் தப்பித்துவிட முடியுமே.


இதுபோன்ற குறைகள் படத்தை எந்தவகையிலும் பலவீனப்படுத்தவில்லை. படம் பேசிய அதீத சுதந்தர உரிமைதான் வெகுவாக இடிக்கிறது. நாம் காட்டுமிராண்டி இஸ்லாமிய நாடுகள்போல் இல்லை. அப்படி ஆகப்போவதும் இல்லை. வல்லாதிக்க கிறிஸ்தவ நாடுகள்போல இல்லை. அப்படி ஆகத் தேவையும் இல்லை.

No comments:

Post a Comment