Thursday 22 September 2016

அதையும் தாண்டிப் புனிதமானது... (7)

அடுத்ததாக பண்ணைப்புரத்தில் பொங்கல் திருவிழா வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஊரே உற்சாகத்துடன் தயாராகிறது. அரசு தரப்பில் தடை விதிக்கிறார்கள். தடையை மீறி ஜல்லிகட்டு நடந்தே தீரும் என்று மக்கள் போராடுகிறார்கள். திட்டமிட்டபடியே ஜல்லிக்கட்டு ஆரம்பிக்கிறது. மனிதக் குரங்கு அந்த விளையாட்டைப் பற்றிக் கேட்கிறது. ஒரு காளையைக் கொம்பு சீவி அவிழ்த்துவிடுவார்கள் என்றும் அதை அடக்குபவரே வீராதி வீரன் என்று கொண்டாடப்படுவான் என்றும் சொல்கிறார்கள்.

சீறிவரும் காளையை வெறுங்கையால் அடக்குகிறார்களா... உண்மையிலேயே மனிதர்கள் வீரர்கள்தான்... அந்த அதிசயத்தை நானும் பார்க்கவேண்டும் என்று மனிதக் குரங்கு ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு ஆர்வத்துடன் வருகிறது. ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடுகிறார்கள். மாடு பிடி வீரர்கள் கூட்டமாகப் பாய்கிறார்கள். மாட்டுத் திமில் மேல் தொங்கியபடியே செல்கிறார்கள்.

சிறிது நேரம் வேடிக்கை பார்க்கும் மனிதக் குரங்கு சரி... போட்டியை எப்போ ஆரம்பிப்பாங்க என்று கேட்கிறது.

போட்டியை ஆரம்பிக்கிறதா..? இப்ப இங்க என்ன நடந்துக்கிட்டிருக்கு?

சின்னப்பசங்க என்னமோ வேடிக்கை காட்டறாங்கன்னுல்ல நினைச்சேன்.

தம்பி... இதுதான் வீர விளையாட்டு...

நேருக்கு நேர் நின்னு அடக்கமாட்டாங்களா..?

மாட்டாங்க...

ஒரு காளையை ஒத்தையா அடக்கமாட்டீங்களா...

மாட்டாங்க... மாட்டின் மேலே யார் அதிக நேரம் தொங்குகிறாரோ அவரே வீரர்.

அப்படிப் பார்த்தா ஈயும் உன்னியும் உங்களைவிடப் பெரிய வீரனாச்சே.

கேட்டுக்கொண்டிருப்பவருக்குக் கோபம் வருகிறது.

இவ்வளவு பேசறியே நீ இறங்கி அடக்கிக் காட்டு பார்க்கலாம்.

நான் க்ரூப் போட்டோக்கெல்லாம் போஸ் கொடுக்க மாட்டேன். சிங்கம் சிங்கிளாத்தான் எதையுமே செஞ்சு பழக்கம்... பிஸ்கோத் பசங்கள்லாம் மேல ஏறுங்க. நான் ஒத்தையா இறங்கி அந்த மாட்டை அடக்கி அது மேல சவாரி செஞ்சே காட்டறேன் என்று சவால் விடுகிறது.

அதன்படியே எல்லாரும் களத்தைவிட்டுச் செல்கிறார்கள். உள்ளதிலேயே மிகவும் மூர்க்கமான காரிக் காளையைக் கொண்டுவருகிறார்கள். பத்து பேர் சேர்ந்தே அடக்க முடியாத அந்தக் காளையை மனிதக் குரங்கு தனி ஆளாக அடக்கக் களமிறங்குகிறது. வாடிவாசல் பட்டிகளுக்குப் பின்னால் காரிக் காளையின் கோரமான விழிகள் மின்னுகின்றன. அதன் மூச்சுக் காற்றுபட்டு தரையில் பெரிய குழி விழுகிறது. கூர்மையான கொம்பு மோதி தடுப்புக் கம்பிகள் உடைகின்றன. மெள்ள வாடி வாசல் கதவைத் திறக்கிறார்கள். காளை மெதுவாக அடிமேல் அடியெடுத்து வைத்து மைதானத்துக்குள் நுழைகிறது. ஒட்டுமொத்தக் கூட்டமும் மயான அமைதியில் உறைந்து கிடக்கிறது.

மைதானத்தில் தன்னந்தனியாக நிற்கும் மனிதக் குரங்கைப் பார்த்ததும் காளை சீறிப் பாய்கிறது... மனிதக் குரங்கோ சிறிதும் பயப்பட்டாமல் அப்படியே சிலை போல் நிற்கிறது. பாய்ந்து வரும் காளை இன்னும் ஒரே பாய்ச்சலில் மனிதக் குரங்கின் உடம்பைக் குத்தித் தூக்கிப் போட்டுவிடும் தூரத்தில் வருகிறது. மனிதக் குரங்கு சட்டென்று குட்டிகர்ணம் அடித்து மாட்டுக்குப் பின்னால் சென்று குதிக்கிறது. காளை தடுமாறி பிறகு மெள்ளத் திரும்புகிறது. மனிதக் குரங்கு மெள்ள வீடு கட்டுகிறது. காளையும் மனிதக் குரங்கின் கைகளையே பார்த்தபடி காலை மாற்றிவைக்கிறது.

காளை பாயப்போகும் தருணத்தில் மனிதக் குரங்கு சட்டென்று தன் முதுகுப்பக்கம் கையைக் கொண்டு செல்கிறது. எல்லாரும் அது அருவாளை எடுத்து வெட்டப்போகிறது என்று கூக்குரலிடுகிறார்கள். மனிதக் குரங்கு அவர்களை அமைதியாக இருக்கச் சொல்கிறது. சிறிது நேரத்தில் மைதானம் அதிர்ச்சியில் உறைகிறது. காரிக் காளை தன் ஆத்திரத்தைவிட்டு மனிதக் குரங்கு பின்னால் பவ்யமாக அன்ன நடை போட்டு நடக்கிறது. மனிதக் குரங்கு அதை உட்காரச் சொல்கிறது. காரிக் காளை கால்களை மடக்கி மண்டியிட்டு தலை குனிந்து அமர்கிறது. என்ன விஷயமென்றால், மனிதக் குரங்கு முதுகுப் பக்கம் ஒளித்து வைத்திருந்தது அருவாள் அல்ல... கம்மங் கதிர்! பசசைப் பசேலென்ற தோகையுடன், பார்த்தாலே பாய்ந்து மேயச் சொல்லும்வண்ணம் செழித்து வளர்ந்த கதிர் தட்டை. அதை மெள்ள வெளியே எடுத்து நீட்டுகிறது. காரிக்காளை கம்மங் கதிரைப் பார்த்ததும், "இதற்குத்தானே ஆசைப்பட்டேன் மிருககுமாரா...' என்று மனிதக் குரங்கைப் பார்த்து மண்டியிடுகிறது. மனிதக் குரங்கு காளையின் திமிலையைத் தடவியபடியே மெள்ள அதன் மேல் ஏறி உட்கார்ந்து கொள்கிறது. கையில் இருக்கும் கம்மங் கதிரைக் கொஞ்சம் கொஞ்சமாக அதன் முன்னால் போடப் போட காரிக் காளை மனிதக்குரங்கைச் சுமந்தபடி ஜல்லிக் கட்டு மைதானம் முழுவதும் அன்ன நடை போடுகிறது.

காளையை அடக்க இது போதும். அதுவும் போக ஒரு காளையை அடக்கறதுல வீரம் இல்லை. எத்தனையோ காளைகளைக் காயடிச்சு, லாடம் அடிச்சு, மூக்கணாங்கயிறு மாட்டி வண்டிமாடா ஆக்கி ஆயிரம் வருசத்துக்கு மேல ஆச்சு. ஆதிகாலத்துல காட்டுல திரிஞ்சிட்டிருந்தபோது ஒரு காளையை அடக்கறது வீரமா இருந்திருக்கலாம். இன்னிக்கு அது வீரமும் இல்லை. விவேகமும் இல்லை... போய்ப் புள்ளை குட்டிங்களைப் படிக்க வையுங்க என்கிறது.

அது எங்களுக்குத் தெரியும். ஆனா இது எங்களோட கலாசார விளையாட்டு... உலகத்துல எங்கயுமே இப்படியான வீர விளையாட்டு கிடையாது. ஸ்பெயின்ல நடக்கற விளையாட்டுல மாட்டை ஈட்டியால குத்திக் கொல்லுவான். அதை ஊரே கை தட்டி ரசிக்கும். இங்க காளைக்கு ஒரு காயமும் படாது... சங்க காலத்தில இருந்தே தமிழன் விளையாடிட்டு வர்ற விளையாட்டு... தமிழனோட அடையாளம் இது. இதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது.

சங்க காலத்துல ஜல்லிக்கட்டு இருந்ததுன்னு சொல்லி விளையாடறீங்க... சங்க காலத்துல பரத்தையர்ன்னு இருந்திருக்காங்க. ஒவ்வொரு ஆணும் திருமணத்துக்கு முன்னாலயும் திருமணத்துக்கு அப்பறமும் பரத்தையர் வீட்டுலபோய் நாள்கணக்குல மாசக்கணக்குல இருந்திருக்காங்க... தமிழர்களின் தெய்வமான கண்ணகிகூட கோவலன் மாதவி வீட்டுலயே போய் படுத்துக் கிடந்ததை மன்னிச்சு ஏத்துக்கிட்டு வாழ்ந்தான்னு இலக்கியம் சொல்லுது. இப்போ ஒருத்தர் அப்படி இருக்க முடியுமா..? பரத்தையர் கூட படுத்து எழுந்திரிக்கறதுதான் தமிழர் கலாசாரம்னு சொல்லிட்டு திரிஞ்சா அதை ஏத்துப்பீங்களா?

கூட்டம் மவுனமாகத் தலைகுனிந்து நிற்கிறது.

சரி அதை விடுங்க... வேத காலத்தைப் போலவே சங்க காலத்துலயும் ஜாதி கிடையாது. இப்போ எதுக்கு அதைப் பிடிச்சி தொங்கிட்டிருக்கீங்க... இதுவா கலாசாரத்தைக் காப்பத்தற லட்சணம்? அதுவும் இன்னிக்கு வீரம்னா என்ன? ஆத்து மண்ணை அள்ளிக்கிட்டு போறாய்ங்களே அந்த லாரிகளை மடக்குங்க... அது வீரம்; லோடு லோடா மரத்தை வெட்டிக் கொண்டுபோறாங்களே அதைத் தடுங்க... அது வீரம்: எல்.கேஜி.யு.கேஜி படிக்க ஆயிரம் லட்சம் கொடுன்னு கேட்கறாங்களே... தாய்மொழில பாடம் எடுக்காம ஆங்கிலத்துல எடுக்கறாங்களே அந்த புள்ளை பிடி வண்டிகளைத் தடுங்க அது வீரம்; தண்ணியே வராத குழாயைத் திறந்துவைக்க ஐம்பது டாடா சுமோல வந்து போறாங்களே அந்த எம்.எல்.ஏ.க்களோட கேன்வாயைத் தடுங்க அது வீரம்... ஒரு அப்புராணி மாட்டைப் பிடிச்சு அதுவும் அதோட திமிலைப் பிடிச்சு தொங்கறதா வீரம் என்று கேட்கிறது.

அனைவரும் தலை குனிந்து நிற்கிறார்கள்.

***

அடுத்ததாக ஒரு நாள் பள்ளியில் காலையில் கொடி ஏற்றி பிரார்த்தனை செய்கிறார்கள். பக்கத்தில் இருக்கும் வார்டு கவுன்சிலரின் வீட்டில் அன்று ஏதோ பிறந்தநாள் விழா. பள்ளியில் சரியாக கொடி ஏற்றி தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நேரத்தில் கவுன்சிலரின் அல்லக்கைகள் பட்டாசு கொளுத்திப் போட்டு கொட்டமடிக்கிறார்கள். அந்தப் பக்கமாக வரும் மனிதக் குரங்கு தமிழ்த்தாய் வாழ்த்து முடிவது வரை பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக நிற்கிறது. தேசிய கீதம் முடிந்ததும் புயல் போல் கவுன்சிலரின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருப்பவர்களை அடித்து இழுத்துவந்து மீண்டும் தமிழ்த் தாய் வாழ்த்தைப் பாடச் சொல்கிறது. ஒருத்தருக்கும் அந்தப் பாட்டு தெரியவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்தே பாடத்தெரியலை நீங்களெல்லாம் தமிழருக்கு என்னத்தைச் செய்யப்போறீங்க என்று தலையில் குட்டி, அந்தப் பாட்டை கணீர் குரலில் பாடுகிறது. அல்லக்கைகள் அனைவரையும் அட்டன்ஷனில் நின்று சல்யூட் அடிக்க வைக்கிறது.

***

குரங்குகள் உலகில் ஒருமுக்கிய பிரமுகர் வீட்டில் திருமணம் நடக்கிறது. மணமகளை தமன்னா தேவதைபோல் அலங்கரிக்கிறார். மண மகளே மண மகளே வா வா பாடல் ஒலிக்க அழைத்துவருகிறார். தாலியை ஆசீர்வாதம் பண்ண சபையினர் மத்தியில் கொடுத்துவிடுகிறார்கள். திரும்பிவரும்போது வெறும் தட்டு மட்டும் இருக்கிறது. தாலியைக் காணவில்லை. மண்டபமே பதறுகிறது. தாலியை எப்படியும் மீட்டாகவேண்டும். அதே நேரம் விருந்துக்கு வந்திருக்கும் அனைவரையும் சந்தேகிக்கவும் முடியாது. என்ன செய்வதென்று தவிக்கிறார்கள். அப்போது, தமன்னா ஒரு யோசனை சொல்கிறார். அதன்படி மண்டபத்தின் வெளிக் கதவு மூடப்பட்டு வந்திருக்கும் மனிதக் குரங்குகள் அனைத்துக்கும் ஒரு மாங்கனி கொடுக்கப்படுகிறது. தாலியை எடுத்தவர்கள் தயவு செய்து அதை மாங்கனிக்குள் வைத்து கொடுத்துவிடுங்கள் என்று சொல்கிறார்.

அதன்படியே மாங்கனிகள் அனைவருக்கும் தரப்படுகிறது. பிறகு ஒரு கூடையைக் கொண்டு சென்று மாங்கனிகளைச் சேகரித்துகொண்டு வருகிறார்கள். மேடை நடுவில் அந்த மாங்கனிகளைக் கொட்டி ஒவ்வொன்றையாக சோதித்துப் பார்க்கிறார்கள். ஒரு மாங்கனிக்குள் தாலி மின்னுகிறது.

மணப்பெண் வீட்டாரும் மண்டபத்தில் இருப்பவர்களும் தமன்னாவைப் பாராட்டுகிறார்கள். (நன்றி : சோ.தர்மன்)

***

ஒரு நாள் காட்டுப்பகுதிக்கு சுற்றுலா வரும் கல்லூரி இளைஞர்கள் சாராயம் குடித்துவிட்டு பாட்டில்களை வீசிவிட்டுச் செல்கிறார்கள். உடைந்த பாட்டில் துண்டுகள் காலில் குத்தி மனிதக் குரங்குகள் அவதிப்படுகின்றன. காலில் சீழ் வைத்து ஒரு குரங்கின் காலையே எடுக்கவேண்டிவருகிறது. தமன்னா குரங்குகளுக்கு இரும்பு லாடம் அடித்தும் கனமான ஷூக்கள் தயாரித்துக் கொடுத்தும் காப்பாற்றுகிறாள்.

சில மனிதக் குரங்குகள் அடுத்த தடவை காட்டுக்கு வரும் இளைஞர்களைக் கட்டிப் பிடித்து அடித்து கொன்றுவிடுகின்றன. இதனால் குரங்கு இனத்துக்கும் மனித இனத்துக்கும் இடையில் சண்டை மூள்கிறது. அதைத் தடுக்க பஞ்சாயத்து கூடுகிறது.

நாயக மனிதக் குரங்கு மனிதர்கள் செய்ததுதான் தவறு என்று சொல்கிறது. தமன்னா மனிதர்கள் செய்தது தவறுதான் என்றாலும் அதற்காக இளைஞர்களை அடித்துக் கொன்றது அதைவிடப் பெரிய தவறு என்று சொல்கிறது. நாயகக் குரங்கு சொல்வதைக் கேட்டு மனிதர்களில் சிலர் ஆதிக்க சக்தி மனிதர்களை எதிர்த்து நிற்கிறார்கள். தமன்னா சொல்வதைக் கேட்டு மனிதக் குரங்குகள் சில அங்கிருக்கும் ஆதிக்க சக்திகளை எதிர்த்து நிற்கின்றன. இரண்டு தரப்பு எளிய சக்திகளும் நாயகன் குரங்கு மற்றும் தமன்னா தலைமையில் ஓர் அணியில் நிற்கின்றன. மனித ஆதிக்க சக்திகளும் குரங்கு ஆதிக்க சக்திகளும் ஓர் அணியில் நிற்கின்றன.

இரண்டு கோஷ்டிக்கும் இடையே கடும் சண்டை மூள்கிறது.

இதனிடையில் தமன்னாவும் மனிதக் குரங்கும் காதலிக்கிறார்கள் என்ற விஷயம் இரு தரப்புக்கும் தெரிந்துவிடுகிறது. இரு தரப்பு ஆதிக்க சக்திகளும் இந்தக் கலப்புத் திருமணத்தை நடக்கவிடமாட்டோம் என்று சூளுரைக்கிறார்கள். இரு தரப்பு எளிய மக்களும் அப்படியானால் எங்களுக்கு செய்த உதவிகள் எல்லாம் காதலில் ஜெயிப்பதற்காகச் செய்த நாடகம்தானா என்று இருவரையும் கேட்கிறார்கள்.

நாங்கள் காதலிப்பது உண்மைதான். உங்கள் மத்தியில் நல்லெண்ணம் பெற வேண்டும் என்று விரும்பியதும் உண்மைதான். ஆனால், அதன் பிறகு செய்ததெல்லாம் ஆத்மார்த்தமான முயற்சிகள்தான் என்று இருவரும் சொல்கிறார்கள். அதை யாரும் நம்பாமல் அதுவரை அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களில் மனிதக் குரங்குகள் எல்லாம் குரங்குகள் அணிக்கும் மனிதர்கள் எல்லாம் மனிதர்கள் அணிக்கும் போய்விடுகிறார்கள். மனிதக் குரங்கு நாயகனும் தமன்னாவும் மட்டும் போர்க்களத்தில் தனியாக நிற்கிறார்கள்.

சரி... எங்களுக்கு யாரும் வேண்டாம் நங்கள் தனியாகவே வாழ்க்கையைத் தொடங்கிக் கொள்கிறோம் என்று தொடுவானத்தை நோக்கி நடக்கத் தொடங்குகிறார்கள். ஆனால், "அப்படி நீங்கள் சேர்ந்துவிட முடியாது. மனிதக் குரங்கு குரங்குக் கூட்டத்துக்குப் போயாகவேண்டும். தமன்னா மனிதக் கூட்டத்துக்கு வந்தாகவேண்டும்' என்று இரண்டு தரப்பினரும் எச்சரிக்கிறார்கள். இப்போது அவர்கள் இருவரை மையமாக வைத்து இரண்டு இனங்களுக்கும் இடையே பெரும் சண்டை மூள்கிறது.

இப்படிச் சண்டை நடந்தால் இழப்பு மிகவும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சும் நாயகனும் நாயகியும் அந்த சண்டையைத் தவிர்க்க விரும்புகிறார்கள். மனிதர்கள் தரப்பில் இருந்து வீரமுள்ள மனிதர் ஒருவரும் விலங்குகள் தரப்பில் வீரமுள்ள விலங்கும் சண்டையிடுவதென்றும் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுடைய இனத்துக்கு மற்றவர் அடிமை என்று யோசனை சொல்கிறார் தமன்னா.

ஏற்கெனவே மனிதக் குரங்கு இனத்தில் அந்த நாயகக் குரங்கின் மீது ஆசைவைத்த பெண் இருப்பாள். அவளுடைய அண்ணன் தன் தங்கைக்குக் கிடைக்காதவன் உயிரோடு இருக்கக்கூடாது என்று கோபத்தில் இருப்பான். அதுபோல் தமன்னா மீது காதல் வசப்பட்ட ஒருவன் இருப்பான். அவனும் தனக்குக் கிடைக்கவில்லையென்றால் தமன்னா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று முடிவுகட்டியிருப்பான். அவர்கள் இருவரும் மனித இனம் சார்ந்தும் மனிதக் குரங்கு இனம் சார்ந்தும் நாயகக் குரங்கும் தமன்னாவும் சண்டை போட்டு யார் வெற்றி பெறுகிறார் என்று பார்க்கலாம் என்று சொல்கிறார்கள்.

இரு இனத்தினரும் ரத்தம் சிந்தி மடிவதைத் தடுக்க அவர்கள் இருவரும் ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்குத் தயாராகிறார்கள். உணர்ச்சிமயமான மிகக் கடுமையான சண்டைக்குப் பிறகு கடைசியில் இருவரும் மற்றவர் தலையை வெட்டி வீழ்த்தி உயிர்த் தியாகம் செய்கிறார்கள். தலை துண்டான இருவருடைய உடலும் ஒன்றை ஒன்று தேடித் தவித்து அணைத்தபடியே ஒன்றாக பூமியில் விழுகின்றன.

காதலுக்காக உயிர் துறந்த காதலர்களைப் பார்த்திருப்பீர்கள்.

காதலித்தவரின் சமூகத்துக்காக உயிர் துறந்தவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?

இதோ அப்படியான ஒரு காதல் ஜோடி...

இரு சமூகத்துக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த அந்தக் காதலர்கள்

தமது மரணத்தையும் அவர்களுக்காகவே அர்ப்பணித்திருக்கிறார்கள்.

இவர்கள் வெறும் காதலர்கள் அல்ல...

ஏனென்றால், இவர்களின் காதல்

அதையும் தாண்டிப் புனிதமானது!

***

No comments:

Post a Comment