Monday 26 September 2016

நாகினி - 6

பிரதமரிடம் சென்று எதிர்கட்சித் தலைவர், உள்துறை அமைச்சர் எழுதிய கட்டுரைகள், ஊடக நிறுவனம் ஒளிபரப்பிவரும் விளம்பரம் எல்லாவற்றையும் பிரதமரிடம் காட்டுகிறார். மகிழ்ச்சியடையும் பிரதமர், இடது சாரிகளைப் பற்றிக் கேட்கிறார்.

கவலைப்படாதீங்க. அவங்களையும் வழிக்குக் கொண்டுவந்தாச்சு.

அந்த நேரம் பார்த்து பிரதமரின் உதவியாளர் விரைந்து ஓடிவருகிறார்.

பிரதமர் என்ன என்று பதறுகிறார்.

இடதுசாரி கட்சித் தலைவர் ஒரு ஏரிக்கரையோரமாகப் பிணமாக கிடக்கும் செய்தி தொலைகாட்சிகளில் ஓடுவதாகச் சொல்கிறார்.

தற்கொலையா.. கொலையா என்று தெரியவில்லை என்கிறார்.

பிரதமர் இடதுசாரிக் கட்சிக்கு போன் செய்து வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறார். பிரதமர் அறையில் கனத்த மவுனம் நிலவுகிறது. இடதுசாரிகள் எப்படியும் ஆதரவை விலக்கிக் கொண்டுவிடுவார்கள் என்பது தெரிகிறது. நாகினிவின் அனைத்து முயற்சிகளும் வீணாகிப் போகும்போலிருக்கிறது. ஆட்சி போய்விட்டால் ஒப்பந்தத்தை அமல்படுத்த முடியாமல் போய்விடும்.

வேறொரு பிராந்திய கட்சியிடம் 40 இடங்கள் இருக்கின்றன. அவர்கள் ஆதரவு கொடுத்தால் ஆட்சி தப்பித்துவிடும். அவர்களை வழிக்குக் கொண்டுவரும் பொறுப்பும் நாகினியிடம் தரப்படுகிறது. கைவசம் இருக்கும் நாட்களோ பத்துதான். கட்சிக்கு ஆதரவு தந்தால் மட்டும் போதாது... அணு ஒப்பந்தத்துக்கும் அவர்கள் ஆதரவு தரவேண்டும்.

பத்து நாளில் எதுவும் செய்ய முடியாது என்று நாகினி சொல்கிறார்.

ஹனி டிராப் செட் பண்ணவே பத்து நாளுக்கு மேல எடுக்கும்.

முடியாததைச் செய்யறதுதான நாகினிக்கு வழக்கம்.

அது சரிதான்... யாராலயும் முடியாததை நாகினியால செய்ய முடியும். ஆனா நாகினியாலயும் செய்ய முடியாததுன்னு சில இருக்கத்தான செய்யும்.

நீங்க சொல்றது எதுவுமே என் காதுல விழலை.

நீங்க சொன்னதும் என் காதுல விழலை...

அப்போ நாகினிக்கும் ஒரு ஸ்கெட்ச் போட்டாகணும் போல இருக்கு.

உதவியாளர் லேசாகச் சிரிக்கிறார்.

நாகினி தன் அலுவலகம் திரும்புகிறார். அந்த பிராந்திய கட்சி தலைவரை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று யோசிக்கிறார்.

அவருடைய மாநிலத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளைப் பட்டியலிட்டுப் பார்க்கிறார்.

ஒரு சமூக சேவகர் செல் போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது கீழே விழுந்து இறந்த செய்தி தெரியவருகிறது. காவல்துறை அதை விபத்து என்று சொல்லி வழக்கை முடித்துவைத்திருந்தது. பத்து நாள் கழித்து பிரபல பத்திரிகையின் நிருபர் ஒருவர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி ஒரு மூலையில் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கிறார்.

சில மாதங்கள் கழித்து அந்த நிருபர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியான செய்தி வெளியாகியிருக்கிறது. அவர் அந்த சமூக சேவகரின் போராட்டங்களைக் குறித்து தொடர்ந்து செய்திக்கட்டுரைகள் எழுதியது பற்றி அதில் பாராட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருவருடைய மரணத்தையும் நாகினி அலசிப் பார்க்கிறார். சமூக சேவகர் பட்டப் பகலில் நூற்றுக்கணக்கானவர்கள் செல்போன் டவரைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது பிடிமானம் நழுவிக் கீழே விழுந்து இறந்திருக்கிறார். பத்திரிகை நிருபர் குடித்துவிட்டு வண்டி ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கியிருக்கிறார். இரண்டுமே தெளிவான விபத்துகள். அதிலும் பிராந்திய கட்சித் தலைவர் அவர்கள் இருவருக்கும் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். மதுவுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட அந்த நிருபர் மது அருந்தி விட்டு வண்டியோட்டி இறந்தது தனக்கு மிகுந்த வேதனையைத் தந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

நாகினிக்கு அது ஏதோவொரு சந்தேகத்தைத் தருகிறது. நிருபரைக் குறித்து விசரிக்கிறார். அந்த நிருபர் குடிப்பழக்கமே இல்லாதவர்; பெரிய பார்ட்டிகள், நண்பர்களுடனான விருந்துகள் எதிலுமே பழச்சாறு மட்டுமே அருந்துபவர் என்று தகவல் கிடைக்கிறது.

அதோடு சமூக சேவகர் இறப்பதற்கு முன்பாக என்னை என்னை... என்று ஏதோ சொல்லியிருக்கிறார். தன்னைக் காப்பாற்றிவிடும்படிக் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பதாக அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றவர்கள் குறிப்பிட்டிருந்ததாக செய்தி வெளியாகியிருந்தது.

நாகினி ஒரு நாள் இரவில் தூங்காமல் யோசித்துக்கொண்டிருக்கையில் யாரும் பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்த தொலைகாட்சியில் வடிவேலுவும் சிங்க முத்துவும் வரும் காமெடி காட்சிகள் ஓடுகின்றன. அதில் ஒன்றில் என்னை... எண்ணை என்று வார்த்தை விளையாட்டை வைத்து வரும் நகைச்சுவைக் காட்சி வருகிறது. யதேச்சையாக அதைப் பார்க்கும் நாகினிக்கு ஏதோ சட்டென்று பொறி தட்டுகிறது. சமூக சேவகர் இறந்த வீடியோவைப் போட்டுப் பார்க்கிறார். சமூக சேவகர் கைப்பிடி தவறி விழுந்த காட்சி நேரடியாக பதிவாகியிருந்தது. அதில் பிடிமானம் கிடைக்காமல் வழுக்கி விடுவது தெரிகிறது. அதோடு அவருடைய கால் வைக்கப்பட்ட இரும்புத் தகடு உடைந்துதான் அவருடைய சமநிலை தவறியிருப்பது தெரிகிறது. அந்த செல்போன் டவரில் நாகினி ஏறிப்பார்க்கிறார். சோல்டரிங் செய்து அந்த தகடு உடைத்துவைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. ஆக இரண்டுபேரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. ஆனால், யார் செய்தது என்பது தெரியவில்லை.

அந்த சமூக சேவகர் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை எதிர்த்துப் போராடியவர். பல அதிகாரமையங்களை எதிர்த்தவர். எனவே, யார் கொன்றிருப்பார்கள் என்பதை யூகிக்க முடியவில்லை. நிருபருடைய மரணத்தைப் பதிவு செய்த காவலரைப் போய்ப்பார்க்கிறார். அந்த சம்பவங்கள் நடந்த ஐந்தாறு மாதத்தில் சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு புதிய வீடு ஒன்றை அந்தக் காவலர் செல்வகுமார் வாங்கியது தெரியவருகிறது. கடைநிலை காவலரான அவருக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து கிடைத்தது எந்த சந்தேகம் வருகிறது. அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கிறார். உண்மைகள் தெரியவருகின்றன. சமூக சேவகரின் மரணம் கொலைதான். செல் போன் டவர் தகடை உடைத்தும் எண்ணெய் தடவி வைத்தும் சமூக சேவகரை நிலை குலைந்து கீழே விழ வைத்திருக்கிறார்கள். அது சமூக சேவகரின் நண்பரான நிருபருக்குத் தெரிந்துவிட்டிருக்கிறது.

உண்மையில் செல்போன் டவர் போராட்டத்துக்கு முந்தின நாள் சமூக சேவகருக்கு ஒரு போன் வந்திருக்கிறது. அதில் பேசிய குரல் மறு நாள் போராட்டத்தை தள்ளிவைக்கும்படிக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அபப்டியே போராடுவதென்றாலும் செல் போன் டவரில் ஏறிப் போராடவேண்டாம் என்று சொல்லியிருக்கிறது. சமூக சேவகர் அந்தச் செய்தியை தன் நிருபர் நண்பரிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். சொன்னதுபோலவே விபரீதம் நடந்துவிடவே நிருபர் துப்பறிந்து நடந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார். நாகினி வலைவிரிக்கக் காத்திருக்கும் அதே பிராந்திய கட்சித் தலைவர்தான் அந்தக் கொலையைச் செய்தது. அந்த ஆதாரங்கள் வெளிவருவதைத் தடுக்கத்தான் நிருபரையும் மது ஊற்றிக் கொடுத்து வாகனத்தில் போய் விபத்தில் சிக்கியதுபோல் செட்டப் செய்து கொன்றுவிட்டிருக்கிறார்கள். இந்த விவரங்கள் அந்தக் காவலர் செல்வகுமாருக்கு நிருபர் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் இருந்து கிடைத்த நிருபரின் பென் டிரைவில் இருந்து தெரியவந்திருக்கிறது. அதை வெளியில் சொல்லாமல் இருக்கக் கிடைத்த பணத்தில்தான் அவர் புது வீடு வாங்கியிருக்கிறார்.

இந்த தகவல்களை எடுத்துக்கொண்டு பிராந்திய கட்சித் தலைவரைச் சென்று நாகினி சந்திக்கிறார்.

தன்னை யார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்கிறார்.

பிராந்திய தலைவர் தன் அலுவலகத்துக்கு வரச் சொல்கிறார்.

அந்த அறையில் அவருக்கான ஒரே ஒரு நாற்காலி மட்டுமே இருக்கிறது. இவர் வந்ததைப் பார்த்து உதவியாளர் வேறொரு நாற்காலியை எடுத்து வருகிறார். தலைவர் அது தேவையில்லை என்று முகத்துக்கு நேராக அவமானப்படுத்துகிறார். அதிகாரத் திமிரில் நாகினியை நிற்க வைத்தே பேசுகிறார்.

பிரதமருக்கு எதிரான சக்திகள் அவர் பிரதமருக்கு ஆதரவு தந்துவிடக்கூடாதுஎன்பதற்காக கணிசமான தொகை தந்திருக்கிறார்கள். அதைச் சொல்லாமல் மத்திய அரசு ஏழைகளுக்கு எதிராக இருக்கிறது. எனவே, ஆட்சிக்கு எதிராகவே வாக்களிப்பேன் என்கிறார்.

உங்களை மாதிரியான தலைவர்கள் நாட்டுக்கு ரொம்பவே தேவை... நீங்க தொடர்ந்து ஆட்சியில இருக்கணும். மக்களுக்கு நல்லது செய்யணும்.

ஆமா, மக்கள் எனக்கு ஆதரவு தர்றவரை நான் ஆட்சியில தொடருவேன். நான் அவங்களுக்கு நல்லது செய்யறதுவரை அவங்க எனக்கு ஆதரவு தருவாங்க.

அவ்வளவுதாங்க அரசியல். மரங்களை நட்டா மழைபெய்யும். மழை பெய்ஞ்சா மரங்கள் வளரும். மக்களுக்கு நல்லது செஞ்சா நம்மளைத் தேர்ந்தெடுப்பாங்க. நம்மளைத் தேர்ந்தெடுத்தா நாம மக்களுக்கு நிறைய உதவி செய்யவும் முடியும். பத்திரிகை ஆதரவோ பணமோ வேற எந்த சக்தியுமே நமக்குத் தேவையில்லை. ஆனா சில நேரங்கள்ல நமக்கு வேற சில ஆதரவும் தேவைப்படும். உதாரணமா செல்வகுமார்ங்கற கடைநிலைக் காவலர் கூட நமக்கு உதவ வேண்டியிருக்கும்.

அந்தப் பெயரைக் கேட்டதும் பிராந்தியத் தலைவர் அதிர்ச்சியடைகிறார்.

அவரை உங்களுக்கு தெரியுமா..?

அவர் சமீபத்துல 40 லட்ச ரூபாய்ல ஒரு ஃபிளாட் வாங்கினதும் தெரியும்.

பிராந்தியத் தலைவருக்கு தூக்கிவாரிப்போடுகிறது.

அந்த ஏழைக் காவலருக்கு நீங்க செஞ்ச உதவி இருக்கே யாருக்குங்க இவ்வளவு பெரிய மனசு வரும்.

பிராந்தியத் தலைவர் தலை குனிந்து அமர்ந்திருக்கிறார். நாகினி அவருக்கு அருகில் போய் நிற்கிறார். பிராந்தியத் தலைவர் உதவியாளரை அழைத்து இன்னொரு நாற்காலி கொண்டுவரச் சொல்கிறார். உதவியாளர் அதை எடுத்துக்கொண்டுவரும் வரை காத்திருக்கும் நாகினி உள்ளே வந்ததும், ஒரு நாற்காலி போதும் என்று அவரைப் பார்த்துச் சொல்கிறார்.

தலைவர், ‘இருக்கட்டும் உட்கார்ந்துக்கோங்க’ என்கிறார்.

‘எனக்கு ஒரு நாற்காலி போதுமே’ என்று சொல்லும் நாகினி உதவியாளரை நாற்காலியை எடுத்துச் செல்லச் சொல்கிறார். அவர் போனதும் பிராந்தியத் தலைவர் எழுந்து நிற்கிறார். நாகினி அதில் காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு அமர்கிறார்.

சொல்லுங்க என்ன பண்ணலாம்

நீங்கதான் சொல்லணும்.

சரி... பிரதமரோட நம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் ஒரு வாரத்துல வரபோகுது. அவருக்கு உங்க கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தரணும். அணு ஒப்பந்தம் பத்தியும் ஆதரவா நீங்க பேசணும்.

எங்க கட்சியில அதுக்கு சம்மதிக்க மாட்டாங்களே...

அது பத்தி கவலைப்படவேண்டாம். சில அணு விஞ்ஞானிகள், வெளிநாட்டு தலைவர்கள் எல்லாரையும் கூப்பிட்டு பிரதமர் ஒரு கருத்தரங்கம் நடத்தபோறாரு. அதுல உங்க கட்சி ஆளுங்களோட போய் கலந்துக்குங்க. நீங்களா முடிவெடுத்ததா இல்லாம நிபுணர்களோட கருத்தைக் கேட்டு முடிவெடுத்ததுமாதிரி ஒரு ஃபிலிம் காட்டுங்க. நமக்கு ஏழைகள் நல்ல வாழணும் அதுதான லட்சியம். இந்த அணு உலை வந்தா நிறைய பேருக்கு வேலை கிடைக்கும். மின்சாரம் கிடைச்சா நிறைய தொழில் வளரும்னு சொல்லுங்க. நரம்பில்லாத நாக்குதான... என்ன வேணும்னாலும் சொல்லும். எப்படி வேணும்னாலும் வளையும் இல்லையா.

பிராந்தியத் தலைவர் நின்றபடியே தலையை அசைக்கிறார்.

*

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. பிரதமரின் ஆட்சி பிராந்தியத் தலைவருடைய கட்சியின் ஆதரவினால் பிழைத்துவிடுகிறது. ஒரு சில நாட்களில் அணு ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது. அனைவரும் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். நாகினி தன் அலுவலகத்தில் உதவியாளருடன் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது பிரதமரிடமிருந்து போன் வருகிறது.

எடுக்கிறார்.

உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்று பிரதமர் சொல்கிறார். நாகினிக்கு தூக்கிவாரிப்போடுகிறது. அது அவருடைய மிரட்டல் வாக்கியம்.

பிரதமரை அவர் வரச்சொன்ன ஓய்வு விடுதிக்குப் பார்க்கப் போகிறார்.

வரவேற்பரையில் அமர்ந்து சிறிது நேரம் பேசிய பிறகு பின்பக்கத்தில் இருக்கும் ஒரு ரகசிய அறைக்கு நாகினியை அழைத்துச் செல்கிறார். அங்கு ஒரு கூண்டு இருக்கிறது. அதில் ஒரு மிருகம் உலவுவது தெரிகிறது. அந்த அறை மிகவும் இருட்டாக இருப்பதால் அந்த மிருகத்தின் கண்கள் மட்டும் பளபளவென மின்னுவது தெரிகிறது.

அதிக விஷயங்கள் தெரிஞ்சவர் உயிரோட இருக்கறது என்னிக்குமே ஆபத்துதான் என்று சிரித்தபடியே சொல்கிறார் பிரதமர்.

ஒரு நாட்டை ஆளணும்னா மூணு சிங்கங்கள் மட்டுமே போதாது. மறைஞ்சு திரியற இன்னொரு மிருகமும் தேவை. தேவைப்பட்டா அது கொலை கூடச் செய்யலாம் என்கிறார்.

நாகினி அதைக் கேட்டு அதிர்கிறார்.

உனக்கு நிறைய உண்மைகள் தெரிஞ்சிருக்கு நாகினி. அதோட மேலும் நிறைய தெரிஞ்சுக்கற ஆர்வமும் திறமையும் இருக்கு. அது ரொம்ப ஆபத்தானது.

நான் என் உளவுத் திறமையை நாட்டு நலனுக்காக மட்டுமே பயன்படுத்துவேன். தேச பக்தர்கள் என்னைப் பார்த்து பயப்படவேண்டிய அவசியமே கிடையாதே.

அது சரிதான். ஆனா தேசத்துக்கு எது நல்லதுன்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்ணு நினைக்கறோமே. நான் நல்லதுன்னு நினைக்கறதை நீ கெட்டதுன்னு நினைக்கலாம். நாளைக்கே என் கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்னு நீ என் வாசல்ல வந்து நின்னாலும் நிக்கலாம். இல்லையா... சரி... எனக்கு செஞ்ச உதவிக்கு ரொம்பவும் நன்றி. மீட் யூ இன் ஹெவன்... என்று சொல்லிவிட்டு பிரதமர் தன் கையில் இருக்கும் ரிமோட்டை அழுத்துகிறார். கூண்டில் இருந்து ஓநாய் ஒன்று மெள்ள பதுங்கிப் பதுங்கி வெளியே வருகிறது.

நாகினி அனிச்சையாக தன் இடுப்பில் பின் பக்கம் வைத்திருக்கும் துப்பாக்கியை எடுக்கப் போகிறார். அது இல்லைஎன்பது தெரிந்ததும் மெள்ள சுவரோரம் பதுங்குகிறார். அதைப் பார்த்து பிரதமர் புன்னகைக்கிறார்.

என்னைப் பாக்க வர்றவங்க என்னைக் கொன்னுடக்கூடாது. ஆனா என்னைப் பாக்க வர்றவங்களை நான் கொல்லலாம். தப்பில்லை என்று சொல்லி பிரதமர் அந்த சுரங்க அறையை மூடிவிட்டு வெளியே போகிறார்.

திடீரென்று உறுமலுடன் ஓநாய் பாயும் சத்தம் கேட்கிறது. சிறிது நேர சண்டைக்குப் பிறகு அமைதி திரும்புகிறது.

*

பிரதமர் தனது உணவை முடித்துவிட்டு சுரங்கத்தின் கதவைத் திறந்து விளக்குகளைப் போடுகிறார். அங்கு அவர் பார்க்கும் காட்சி அவரை அவரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ஓநாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறது. அதன் கழுத்தில் புலியின் நகம் பதிந்த கையுறை காணப்படுகிறது. சுவரில் ரத்தத்தில் எழுதப்பட்டிருக்கிறது :

உங்க கூட கொஞ்சம் தனியாப் பேசணும். நேரமும் இடமும் சொல்லி அனுப்பறேன்.

No comments:

Post a Comment