Monday 26 September 2016

நாகினி - 2

முதலில் எதிர்கட்சித் தலைவருடைய பைல்களை நாகினி பார்க்கிறார். அந்தத் தலைவர் தெய்வ நம்பிக்கை, ஜோதிட நம்பிக்கை மிகுந்தவர் என்பது தெரிகிறது. ஆண்டுதோறும் தன் தாய் தந்தைக்கு காசி, ராமேஸ்வரத்தில் திவசம் செய்வது தெரிகிறது. அதோடு மார்ச் 12-ம் தேதியும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு திவசம் செய்கிறார் என்பதும் அவருடைய ஆஸ்தான ஜோதிடர் மூலம் தெரியவருகிறது.

பொதுவாக இந்திய காலண்டர் படி பார்த்தால் திதிகள் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாளில் வரும். ஆங்கில காலண்டர் படி கணக்கிட்டால்தான் ஒரே நாளில் ஒரு விசேஷம் நடக்கும். மார்ச் 12 என்பது அப்படி என்ன முக்கியத்துவம் வாய்ந்தது என்று நாகினி அலசுகிறார். அந்த தலைவர் பிராந்திய அளவில் இருந்தபோது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போது ஒரு அணைக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார். அதன் தேதி மார்ச் 12. இந்த இரண்டுக்கும் ஏதோ தொடர்பு இருப்பது நாகினிக்கு புலப்படவே மேலும் தோண்டிப் பார்க்கிறார். எதுவும் புலப்படவில்லை.

அந்தக் கட்சித் தலைவருக்கு ஒரு கவரில் மார்ச் 12 என்று பெரிதாக அச்சிட்டு ஒரு பொதுவிழாவில் அவருடைய உதவியாளர் மூலம் கொடுக்கிறார். அதைத் திறந்து பார்ப்பவர் அந்தத் தேதியைப் பார்த்ததும் அதிர்கிறார். அதில் ஏதோ வில்லங்கம் இருப்பது நாகினிக்கு உறுதிப்படுகிறது. ஒரு சில நாட்கள் கழித்து அணை கட்டுப் பொறியாளர் அந்தத் தலைவரைப் பார்த்துவிட்டுச் செல்கிறார். சிறிது நாட்கள் கழித்து அந்த அணை கட்டப்பட்ட பகுதியைச் சேர்ந்த பழங்குடி கட்சித் தலைவர் எதிர்கட்சித் தலைவரைப் பார்த்துவிட்டுப் போகிறார். நாகினி அவர்களைப் பின் தொடர்ந்து சென்று உளவு பார்க்கிறார். அந்த அணை அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்று பார்க்கிறார்.

அந்தப் பகுதி காவல் நிலைய அறிக்கைகளை அலசிப் பார்க்கிறார். மார்ச் 15 அன்று தன் மூத்த மகன் காணவில்லை என்று ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. அவருடைய வீட்டுக்குச் சென்று நாகினி விசாரிக்கிறார். மார்ச் 12 அன்றிலிருந்தே அவனைக் காணவில்லையென்றும் ஓரிரு நாட்கள் தேடிப் பார்த்துவிட்டு அதன் பிறகே புகார் கொடுத்ததாக அவர் சொல்கிறார். மூத்த மகனுடைய பெயர் என்ன என்று கேட்கிறார். இருளன் என்று சொல்கிறார். உங்கள் பெயர் என்ன என்று கேட்கிறார்.மூப்பன் என்கிறார்.

இந்தத் தகவல்கள் எல்லாம் நாகினிவுக்கு மார்ச் 8-ம் தேதியன்று கிடைக்கிறது. மார்ச் 12 அன்று எதிர் கட்சித் தலைவரைப் பின் தொடர்கிறார். அவர் ஆளரவமற்ற கடற்கரைக்குச் சென்று சிராத்த கர்மங்களைச் செய்கிறார். புரோகிதருக்கு பதிலாக டேப் ரெக்கார்டரில் மந்திரங்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறார். டேப்பை ஆன் செய்தால் சத்தமே வரவில்லை. திருப்பித் திருப்பி அழுத்திப் பார்ப்பவர் சற்று நிமிர்ந்து பார்க்கவே நாகினி கையில் பேட்டரிகளுடன் நிற்கிறார்.

இதையா தேடறீங்க...

ஆமாம்...

பேட்டரி வேண்டாம் நானே மந்திரம் சொல்றேன் என்பவர் மூப்பனின் மகன் இருளனின் நினைவாகச் செய்யும் இந்த வருடாந்தர இறுதிச் சடங்கை ஏற்றுக்கொள் எம்பெருமானே

மூப்பன், இருளன் என்ற பெயர்களைக் கேட்டதும் எதிர்கட்சித் தலைவரின் முகம் அதிர்ச்சியில் உறைகிறது.

நாகினி மந்திரங்களைச் சொல்லியபடியே அவரைச் சுற்றி வருகிறார். தன்னைச் சுற்றி மாய வளையம் ஒன்று போடப்படுவதுபோல் தலைவர் ஒடுங்குகிறார்.

பூஜையை முடிச்சிட்டு வாங்க... உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும் என்கிறார் நாகினி.

தலைவர் முடித்துவிட்டு வருகிறார்.

கார் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு இருவரும் கடல் அலைகளைப் பார்த்தபடியே பேசுகிறார்கள்.

நான் வேண்டாம்னுதான் சொன்னேன். மத்தவங்கதான் கேக்கலை... பெரிய பெரிய காரியங்கள் நடக்கும்போது பலி கொடுக்கறது வழக்கம்தான். வீட்டுக்கு மூத்த பையன் ஒருத்தனை பலி கொடுக்கணும்னு சொன்னாங்க. நான் வேண்டாம்னு சொன்னேன். ஆனா அந்த அணை தொடர்பா ஏகப்பட்ட தடங்கல்கள் வந்தது. ப்ரசன்னம் போட்டுப் பார்த்தபோதுதான் நரபலி கொடுக்கணுன்னே வந்தது. என்னோட அரசியல் வெற்றிக்கு அந்த அணை முக்கியமா தேவையா இருந்தது. கடைசியா நானும் சரின்னு சொல்லிட்டேன். மனசு கேக்கலை அதான்... ஒவ்வொரு வருஷமும் வந்து திதி பண்ணிட்டு இருக்கேன்.

நாகினி அதைக் கேட்டு அதிர்கிறார். உண்மையில் அவருக்கு மார்ச் 12 அன்று இருளனுக்கு திதி செய்கிறார் என்பது மட்டுமே தெரியும். ஒருவேளை பழங்குடிப் பெண்ணுக்கும் அவருக்கும் பிறந்த மகனாக இருக்கும் என்றுதான் நினைத்தார். ஆனால், எதிர் கட்சித் தலைவர் சொல்லச் சொல்ல அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் எல்லாம் தெரிந்ததுபோல் சமாளிக்கிறார். பொறியாளரின் பெயர், பழங்குடியினத் தலைவரின் பெயர் என ஒவ்வொன்றையாக எடுத்துவிடுகிறார். நாகினிவுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று நினைத்து அவர்களுடைய பங்கு என்ன என்பதை தலைவர் பிட்டுப் பிட்டு வைக்கிறார்.

நாகினி அனைத்தையும் தன் ரகசிய கேமராவில் வீடியோ வாக்குமூலமாகவே பதிவு செய்துகொள்கிறார்.

ஒரு அறிக்கையை தலைவரிடம் கொடுக்கிறார். அனு ஒப்பந்தத்தை ஆதரித்து அந்தத் தலைவரின் பெயரில் பத்திரிகைகளுக்காக எழுதப்பட்ட கட்டுரை அது.

உங்க கட்சிக்காரங்களுக்கு இதுல இருக்கற விஷங்களை எடுத்துச் சொல்லுங்க. இன்னும் ஒரு வாரத்துல இந்த கட்டுரை உங்களோட பிரதான பிரசார பத்திரிகைலயும் நாட்டின் முன்னணி பத்திரிகைகள்லயும் வெளிவந்தாகணும். உங்க ஆளுங்களை கன்வின்ஸ் பண்ண ஒரு வாரம் டைம் போதுமில்லையா..?

எதிர்கட்சித் தலைவர் எதுவும் பேசாமல் மவுனமாக இருக்கிறார்.

நரபலிங்கறது ரொம்பத் தப்பு இல்லையா... உலக அளவுல இந்தியாவுக்குப் பெரிய தலைக்குனிவாகிடுமே. இஸ்லாமிய நாடுகள்ல ஊருக்கு மத்தியில கல்லெறிஞ்சு கொல்றதை எந்த பத்திரிகையும் தொலைகாட்சியும் வெளியிடாது. ஆனா, இந்தியால இப்படி ஒண்ணு தனி ஆளா நீங்க செஞ்சிருந்தாலும் இந்தியாவே காட்டுமிராண்டி தேசம்னு உலகமே அடி வயித்துல இருந்து கத்தும் இல்லையா... உலக நடப்புகள் உங்களுக்குத் தெரியாதா என்ன... ஒரு வாரம் அதிகம் தான் இல்லையா...

பேசிப் பார்க்கறேன். நான் சொன்னா எதிர் பேச்சு பேசமாட்டாங்க.

எனிதிங் கேன் பி ஜஸ்டிஃபைட் இன் த நேம் ஆஃப் காட் அண்ட் கண்ட்ரி இல்லையா என்கிறார் நாகினி.

தலைவர் எதுவும் பேசாமல் இருக்கிறார். சிறுது நேரம் கழித்து காரை எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்.

பாரத் மாதா கீ என்று முழக்கம் போல் நாகினி சொல்கிறார்.

தலைவர் தயங்கியபடியே இருக்கிறார்.

நாகினி இரண்டாவது முறை மிரட்டும் தொனியில் அதைச் சொல்கிறார்.

தலையர் பயந்து சட்டென்று ‘ஜே’ என்கிறார்.

நாகினி சிரித்தபடியே அவரை வழியனுப்புகிறார்.

*

No comments:

Post a Comment