Thursday 22 September 2016

அதையும் தாண்டிப் புனிதமானது (6)


ஊரில் புதிதாக ஒரு வீடு கட்டுகிறார்கள். கூலியாட்கள் கல்லையும் மண்ணையும் சுமந்து கஷ்டப்பட்டு வீடு கட்டி முடிக்கிறார்கள். ஆனால், கிரகப்பிரவேசத்தின் போது ஒரு ஐயரை அழைத்து வருகிறார்கள். அவர் நீர்க் கலசம் ஒன்றை எடுத்துக்கொண்டு மாவிலையால் வீடு முழுவதும் தெளிக்கிறார். தீட்டு, தோஷமெல்லாம் நீங்க அப்படிச் செய்வதாகச் சொல்கிறார்கள். பசுவை அழைத்து வந்து அதற்கு அலங்காரங்கள் எல்லாம் செய்து உணவு கொடுக்கிறார்கள். கஷ்டப்பட்டு ரத்தமும் வேர்வையும் சிந்திய கூலித் தொழிலாளர்களை அந்த வீட்டுக்குள் நுழையவே விடாமல் விரட்டிவிடுகிறார்கள்.

இதைப் பார்க்கும் மனிதக் குரங்கு தனக்கென்று ஒரு வீடு கட்ட முன்வருகிறது. பொன்னும் மணியும் இழைத்து பெல்ஜியம் கண்ணாடிகள், அமெரிக்கன் சரவிளக்குகள் பொருத்தி ஒரு மாளிகையைக் கட்டி முடிக்கிறது. ஆனால், வீடு கட்டி முடித்ததும் ஐயரை அழைக்காமல் நாட்டார் தெய்வ சாமியாடி ஒருவரை அழைத்துவந்து பூஜை செய்ய வைக்கிறது. பசுவுக்கு பதிலாக எருமையை அழைத்துவந்து அலங்காரம் செய்து உணவுகொடுத்து மரியாதை செய்கிறது. வீடு கட்டிக்கொடுத்த கூலியாட்கள் அனைவரையும் வீட்டில் உட்கார வைத்து விருந்துபோட்டு வேட்டி சட்டை எடுத்துக்கொடுத்து அனுப்புகிறது. எளிய மக்கள் எல்லாரும் மனிதக் குரங்கை வாழ்த்தி வணங்குகிறார்கள்.

யாருக்காக... இது யாருக்காக...

இந்த மாளிகை வசந்த மாளிகை

கருணை ஓவியம் கலந்த மாளிகை

யாருக்காக இது யாருக்காக...

எழுதுங்கள் என் இரங்கற்பாவில் இவன் இரக்கமுள்ளவன் என்று

பாடுங்கள் என் சுடுகாட்டில் இவன் பாட்டாளித் தோழன் என்று



உரிமை எனும் முழக்கம் வந்தது

அது உழைப்பு எனும் வடிவில் வந்தது

கூடிக் கட்டிய வீடு என்பது

சிறைக் கூண்டு போல ஏன்தான் மாறணும்?

ஜன்னல்களைத் திறந்துவிடுங்கள்... புதிய காற்று வரட்டும்

திண்ணைகளைக் கட்டி வையுங்கள்... பாட்டாளிகள் படுத்துறங்கட்டும்...

-என்று பாடுகிறது.

***

அடுத்ததாக அந்த ஊரில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் எல்லாரும் வெறுமனே ஒப்புக்கு இங்குமங்கும் மண்ணையும் புல்லையும் வெட்டிவிட்டு காசு வாங்கிச் செல்வதைப் பார்க்கிறது. அரசாங்கம் குறைந்தபட்ச வேலைக்கான உத்தரவாதமாக ஒவ்வொரு நபருக்கும் 100 நாள் வேலை தருவதாகவும் அதில் பெரிய கருவிகள், டிராக்டர்கள் இவற்றையெல்லாம் பயன்படுத்தக்கூடாதென்றும் சொல்கிறார்கள். அப்படியானால், சரி கிராமத்தில் இருக்கும் எளிய கடினமான கேவலமான வேலைகளை மேம்படுத்த இதைப் பயன்படுத்திகொள்ளலாமே என்று சொல்கிறது. கிராமப்புறத்தில் எல்லாரும் திறந்தவெளிக் கழிப்பிடத்தில் மலம் கழிக்கிறார்கள். இதைப் பார்க்கும் மனிதக் குரங்கு அங்கு ஒரு பொதுக் கழிப்பிடத்தைக் கட்ட ஆலோசனை சொல்கிறது. அதுபோல் சாக்கடை தோண்டுபவருக்கு உதவும் வகையில் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து சாக்கடைக் கழிவுகளை அதில் கலக்கும்படியும் அந்த கால்வாயை ஊருக்கு வெளியே கொண்டுசென்று விளை நிலத்துக்கு அந்த நீரும் கழிவும் பயன்படுவதுபோலவும் செய்து தருகிறது.

முதலில் யாரும் இந்தக் கடினமான வேலையைச் செய்ய முன்வராமல் போகவே மனிதக் குரங்கு தானாகவே குழியை வெட்டி மண்ணை அள்ளிப் போட்டு வேலை செய்கிறது. மெள்ள மெள்ள நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஈடுபடும் பெண்கள் உதவி செய்ய வருகிறார்கள். அதன் பிறகு ஆண்கள் வருகிறார்கள். ஒருவழியாக அந்த கிராமத்தில் இருந்த இழிவான வேலைகள் செய்பவர்களுக்கு உதவும் வகையில் அந்த வேலைகள் செய்து முடிக்கப்படுகின்றன.

***

மனிதக் குரங்குகள் உலகத்தில் ஒரு கர்ப்பிணிக் குரங்குக்கு பிரசவத்தில் சிக்கல் வருகிறது. தமன்னா வெர்டனரி டாக்டர் என்பதால் அந்தக் குரங்குக்கு நீரில் பிரசவம் பார்த்து குழந்தையைக் காப்பாற்றிவிடுகிறார். குழந்தைக்கு தமன்னாவின் பெயரைப் பெற்றோர் சூட்ட முன்வருகிறார்கள். அவரோ மனிதக் குரங்கினரின் குல தெய்வப் பெயரைக் கேட்டு அதைச் சூட்டுகிறார்.

அடுத்ததாக, வேட்டைக்காரர்கள், குரங்குகளைப் பிடிக்க வருகிறார்கள். தமன்னா அவர்கள் முன்னால் பாய்ந்து, "என் ஆட்களைத் தொடணும்னா என்னைத் தாண்டி... தொட்டுப் பாருடா' என்று லேடி டார்ஸானாக சண்டைபோட்டு அவர்களை விரட்டியடிக்கிறார்.

தமன்னா அங்கு இருக்கும்போது ஒரு முறை மழை பொய்த்துவிடுவதால் மரங்களில் போதிய காய்கனிகள் கிடைக்காமல் போய்விடுகிறது. மனிதக் குரங்குகள் கூட்டம் கூட்டமாக வேறிடம் தேடி நகரத் தொடங்குகின்றன. இப்படி காட்டில் தானாக விளைவதை மட்டும் உண்டுவராமல் விவசாயம் செய்தால் நமக்குத் தேவையானதை எளிதில் பெறலாம் என்று சொல்லி மனிதக் குரங்குகளுக்கு விவசாயம் செய்யக் கற்றுத் தருகிறாள்.

"கடவுள் எனும் முதலாளி

கண்டெடுத்த தொழிலாளி...

விவசாயி... விவசாயி'

- என்று பாடியபடியே அந்தக் காட்டை பச்சைப் பசேலென்ற வயல் வெளியாக மாற்றிவிடுகிறார்கள்.

அருவி நீரைப் பயன்படுத்தி சக்கரத்தைச் சுழல வைத்தும் ஒவ்வொரு குகையின் மீதும் சூரிய தகடுகள் பொருத்தியும் அந்த காட்டையே மின் மிகைக் காடாக மாற்றுகிறாள். இருண்ட குகைக்குள் இருக்கும் வயதான மனிதக்குரங்கின் முகம் அந்த குகையில் எரியும் முதல் குழல் விளக்கில் பிரகாசிப்பதைப் பார்த்து குரங்கு உலகமே ஆனந்தத்தில் ஆடுகிறது.

***

மனிதர்கள் இனத்தில் சிலர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்துகிறார்கள். மனிதக் குரங்கு அது தொடர்பான பல கேள்விகளைக் கேட்கிறது.

பிராமணர்கள் எல்லாருக்குமே கருவறைக்குள்ள போகமுடியுமா?

முடியாது. அர்ச்சக பிராமணர்கள் மட்டுமே போக முடியும்.

பிராமண அர்ச்சகர்கள் ஏன் கருவறைக்குள்ள மத்தவங்க வரக்கூடாதுன்னு சொல்றாங்க.

கோவிலுக்கு அர்ச்சகர்ங்கறவர் முதலாளி மாதிரி. ஒரு அலுவலகத்துல முதலாளியோட நாற்காலில அவர் மட்டும் தான் உட்கார முடியும் இல்லையா... அந்த அலுவலகத்துக்கு வர்றவங்க எல்லாருமே நானும் முதலாளியோட நாற்காலில உட்காருவேன்னு சொன்னா சரியா இருக்குமா..?

தமிழ் நாட்டுல எத்தனை கோவில்கள்ல இது மாதிரி கருவறைக்குள நுழையக்கூடாதுன்னு சொல்றாங்க..?

பெரும்பாலும் எல்லா கோவில்கள்ளயுமே அதுதான் நிலைமை. பூசாரிக்கு கருவறை... பக்தருக்கு பிரகாரம்.

பூசாரிங்க எல்லாருமே பிராமணர்கள்தானா..?

இல்லை... முப்பது நாற்பது சதவிகிதம்பேர் பிராமணரா இருப்பாங்க. மத்ததெல்லாம் ஒவ்வொரு சாதிலயும் இருப்பாங்க.

பிராமணரல்லாத கோவில்ல கருவறைல எல்லாரும் போக முடியுமா..?

அங்கயும் அந்த பூசாரி மட்டும்தான் போக முடியும்.

இந்த மாதிரியான போராட்டங்கள் எங்கெல்லாம் நடக்குது?

பிராமணர்கள் குருக்களா இருக்கற கோவில்கள்ல மட்டும்தான்.

ஏன் அப்படி?

ஏன்னா, கருவறைக்குள்ள அர்ச்சகரைத் தவிர வேற யாரும் நுழையக்கூடாதுன்னு சொன்னது அவங்கதான்.

ஆனால், அதை எல்லாரும்தானே பின்பற்றறாங்க.

ஆமாம்.

சரி... கோவில் குருக்களுக்கு சம்பளம் எங்க இருந்து கிடைக்குது?

சில கோவில்களுக்கு தனி நிர்வாகம் இருக்கும். அவங்க சம்பளம் தருவாங்க. சில கோவில்களை அரசாங்கம் எடுத்து நடத்துது. அவங்க அந்தக் கோவில் அர்ச்சகர்களுக்கு சம்பளம் தருவாங்க. பொதுவா, அர்ச்சகர்களுக்கு தீபாரதனைத் தட்டுல பக்தர்கள் காசு போடுவாங்க. ஆனால், அரசாங்கம் எடுத்து நடத்தாத கோவில்கள்ல அர்ச்சகர்களுக்குக் கூடுதல் பணம் தீபாராதனைத் தட்டுல இருந்தே கிடைக்கும்.

அதாவது, கருவறைக்குள்ள அனுமதிக்கமாட்டேன்னு சொல்ற அர்ச்சகருக்கு பக்தர்கள் அதிக காணிக்கை தர்றாங்க இல்லையா. அப்பறம் அரசாங்கம் எடுத்து நடத்தற கோவில்கள்லயும் அர்ச்சகர் தவிர வேற யாரும் நுழைய முடியாது இல்லையா..?

ஆமாம். ஏன்னா எந்த பக்தரும் கருவறைக்குள்ள நுழையணும்னு கேட்கலை. பிராமணர்கள் ஆகம விதி முறைப்படி அர்ச்சகர்களுக்கு மட்டுமே கருவறையில் நுழைய அனுமதி உண்டுன்னு சொல்றாங்க. அதை பக்தர்கள் ஏத்துக்கறாங்க. அப்பறம் அரசாங்கம் எல்லாரையும் கருவறைக்குள்ள நுழையலாம்னு சொன்னா அப்பறம் எந்த பக்தரும் அந்தக் கோவிலுக்குப் போகமாட்டார்ங்கறதுனால அவங்களாலயும் ஒண்ணும் செய்ய முடியலை.

அப்போ போராடறவங்களுக்கு மட்டும்தான் இது பெரிய பிரச்னையா இருக்கு இல்லையா..?

ஆமாம்.

போராடறவங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?

கிடையாது.

ஒருவேளை கருவறைல எல்லாரும் நுழைய அனுமதி கிடைச்சா அப்பவாவது கோவிலுக்குப் போவாங்களா...

அதெல்லாம் மாட்டாங்க. ஒரு அநீதி நடக்கறதைப் பார்த்தா அவங்களால சும்மா இருக்க முடியாது. அதனால பொங்கறாங்க.

நல்ல விஷயம்தான். எல்லா அநீதியையும் எதிர்த்து இதே மாதிரி பொங்குவாங்களா..?

ஐ... நல்ல கதையா இருக்கே... பாதுகாப்பான, ஆதாயம் தரக்கூடிய உண்மைகளை மட்டும்தான் பேசுவாங்க. அதுக்கு மட்டும்தான் போராடுவாங்க. அவங்களுக்கும் குடும்பம் குட்டியெல்லாம் உண்டு இல்லையா.

அது சரி... காசு கொடுத்தால் பிற சாதியினரையும் பிற பிராமணர்களையும் அர்ச்சகர்கள் உள்ளே அனுமதிப்பாங்களா..?

மாட்டாங்க.

அப்போ, பிற சாதிக்காரங்களுக்கு பிராமணர்கள் சடங்கு சம்பிரதாயம் எதுவுமே செய்து தரமாட்டாங்களா.

அதெல்லாம் கிடையாது. எல்லா விசேஷங்களையும் நடத்திக்கொடுப்பாங்க. கோவிலுக்குள்ள கூட தர்ம தரிசனம், காசு தரிசனம் எல்லாம் உண்டு. ஆனா கருவறை தரிசனம் மட்டும் கிடையாது.

இந்தியா பூராவுமே இதுதான் நிலைமையா?

வட இந்தியாவிலும் தென்னிந்தியாவில் திறந்த வெளி சிறு தெய்வக் கோவில்களிலும் பக்தர்களே கருவறைக்குள் சென்று அபிஷேகமே செய்ய முடியும்.

சரி... இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? ஆக இது தீர்க்க வேண்டிய பிரச்னைதான். ஆனா போராட வேண்டிய விஷயமா எனக்குத் தோணலை. இந்தப் பிரச்னையைத் தீர்க்கப் பெருந்தெய்வக் கோவிலில் ஒரு புதிய சன்னதி கட்டி அந்த ஸ்வாமியின் கருவறைக்குள் பக்தர்கள் எல்லாரும் சென்று அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யலாமே என்று யோசனை சொல்கிறது. பூசாரி இல்லாத அந்தக் கருவறையில் அபிஷேகம் செய்யப்படும் பாலை பக்தர்கள் தாமே எடுத்துச் செல்கிறார்கள். அல்லது முன்பு வழக்கத்தில் இருந்ததுபோல் பிற பக்தர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. மெள்ள மெள்ள புதிய கருவறை தெய்வத்துக்கு பக்தர்கள் பெருகி பழைய கருவறை தெய்வத்தின் சன்னதியில் கூட்டம் குறைகிறது. பழைய குருக்கள் மங்கலான விளக்கு எரியும் கருவறையில் இருந்து நூற்றி எட்டு அகல் விலக்குகள் ஜொலிக்கும் புதிய கருவறையை ஏக்கத்துடன் பார்க்கிறார். பிறகு மெள்ள வெளியே வந்து அந்தக் கோவிலின் ஸ்தல விருட்சத்தை நோக்கி நடக்கிறார். அங்கு இருளடைந்து கிடக்கும் புற்று மண்ணுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பூசாரியைப் பார்க்கிறார். குருக்கள் வருவதைப் பார்த்ததும் பூசாரி பதறி எழுந்து நிற்கிறார். குருக்கள் பெருமூச்சுவிட்டபடியே இரு கைகளைத் தலைக்கு மேலே தூக்கி புற்றுக் கோவிலை வணங்குகிறார். பூசாரி புற்று மண் தட்டை எடுத்து குருக்களிடம் நீட்டுகிறார். அவரோ புற்றுக் கோவில் பூசாரி முன் குனிந்து தன் நெற்றியைக் காட்டுகிறார். பூசாரி நடுங்கும் விரல்களால் குருக்களுக்கு புற்று மண்ணை இட்டு விடுகிறார். இருவர் கண்களில் இருந்தும் கண்ணீர் அருவியாகக் கொட்டுகிறது.

மனிதக் குரங்கு அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அதிகக் கவனிப்பின்றிக் கிடக்கும் சரஸ்வதி சன்னதிக்குச் செல்கிறது. வலதுபக்கம் புற்றுக்கோவில் பூசாரியை அமர வைக்கிறது. இடது பக்கம் குருக்களை அமரவைக்கிறது. அவர்களுக்கு முன்னால் ஒரு புத்தகப் பலகையைக் கொண்டுவந்து வைக்கிறது. இருவரும் தமிழ் மந்திரங்களையும் சமஸ்கிருத மந்திரங்களையும் கோவிலுக்கு வரும் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறார்கள். சரஸ்வதி சன்னதியில் விளக்குகள் பிரகாசிக்கத் தொடங்குகின்றன.

***

No comments:

Post a Comment