Monday 26 September 2016

நாகினி - 1

பொலிட்டிகல் திரில்லர்.

இந்தியப் பிரதமர் அமெரிக்காவுடன் ஓர் அணு உலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்புகிறார். ஆனால், அதற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்புகள் வருகின்றன. பிரதமர் தனக்கு ஆதரவாக இருப்பவர்களை அழைத்துப் பேசுகிறார். அந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களை எவ்வளவோ வழிகளில் முயன்றும் பிரதமருக்கு ஆதரவாகத் திருப்பமுடியவில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். ஒவ்வொருவராக விடைபெற்றுச் செல்கிறார்கள். கடைசியாக பிரதமரும் அவருடைய உதவியாளரும் மட்டும் அந்த அறையில் உட்கார்ந்து இருக்கிறார்கள். பிரதமர் மாளிகையின் ஒவ்வொரு விளக்குகளாக அணைக்கப்படுகின்றன. பிரதமர் சோகமாகப் புறப்படுகிறார்.

அது மிகவும் முக்கியமான ஒப்பந்தம். நாட்டின் பெருகிவரும் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அணு உலைகள் மிகவும் அவசியம். ஆனால், ஒவ்வொரு கட்சித் தலைவரும் தத்தமது அரசியல் காரணங்களினால் அந்த ஒப்பந்தத்தை எதிர்க்கிறார்கள்.

பிரதமரின் கட்சியினர் தங்களுடைய இஸ்லாமிய வாக்குவங்கியைத் திருப்திப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவுடனான நட்புறவை எதிர்க்கிறார்கள். மேலும் கட்சிக்குள் இந்த விஷயத்தில் இருக்கும் கருத்துவேறுபாட்டைப் பயன்படுத்தி கட்சியின் அடுத்தகட்டத் தலைவர்கள் பிரதமரை ஓரங்கட்டப் பார்க்கிறார்கள்.

எதிர்கட்சியினர் தங்கள் ஆட்சியில்தான் அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவேண்டும் என்ற எண்ணத்தில் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

பிரதமரின் ஆட்சி இடதுசாரிகளின் கூட்டணி ஆதரவில்தான் இயங்குகிறது. அவர்கள் அமெரிக்கா என்றாலே எதிர்க்கவேண்டும் என்ற உயரிய கொள்கையை உடையவர்கள். ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் ஆதரவை விலக்கிக்கொள்வேன் என்று மிரட்டியிருக்கிறார்கள். எனவே, அவர்களையும் பகைக்க முடியவில்லை.

ஊடகங்களில் இடதுசாரி ஆதரவு பத்திரிகைகள், தொலைகாட்சிகள் எல்லாம் இந்தியா அணு வல்லமை பெறுவதை விரும்பவில்லை. எனவே, அவர்களும் பிரதமருக்கு எதிராகப் பெரும் எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், அனைவரும் எதிர்க்கும் ஒப்பந்தத்தை பிரதமர் கொண்டுவந்தே ஆகவேண்டும் என்று விரும்புகிறார்.

காரில் ஏறுவதற்கு முன்பாக பிரதமரிடம் அவருடைய உதவியாளர் ஒரு பெயரைச் சொல்கிறார்: நாகினி!

இந்திய உளவுத்துறையின் மூத்த அதிகாரியின் பட்டப் பெயர் அது. அவர் நினைத்தால் யாரையும் வழிக்குக் கொண்டுவந்துவிடுவார். அரசியலில் இருக்கும் யாருமே நேர்மையானவர்கள் இல்லையே. அவர்கள் செய்திருக்கும் ஏதேனும் திரைமறைவுச் செயலை உளவுபார்த்து அவர்களை பிளாக் மெயில் செய்வதில் நாகினி கில்லாடி. பொதுவாக ஆட்சியாளர்கள் தமக்கு வேண்டாதவர்களையும் போட்டியாளர்களையும் அப்புறப்படுத்த உளவுத்துறையைப் பயன்படுத்திக்கொள்வதுண்டு. ஆனால், பிரதமருக்கு அப்படிச் செய்வதில் உடன்பாடு கிடையாது. அது தர்மமல்ல என்று சொல்லக்கூடியவர்.

ஒரு பெரிய நல்ல காரியத்துக்காக சிறிய தப்பைச் செய்யலாம்... ஒரு ஊரைக் காப்பாத்த ஒரு வீட்டுக்குத் தீவைக்கலாம். ஒரு நாட்டைக் காப்பாத்த ஒரு ஊருக்கே தீ வைக்கலாம். நாம அதெல்லாம் செய்யப்போறதில்லை. நமக்கும் நாட்டுக்கும் சரியான ஒண்ணைச் செய்யப்போறோம். நேர்வழிலயே இது நடக்கணும்னுதான் நாம விரும்பறோம். முடியலைன்னா என்ன செய்ய..? என்று உதவியாளர் சொல்கிறார். பிரதமர் பதில் எதுவும் சொல்லாமல் காரில் ஏறிக்கொள்கிறார். கார் சிறிது தூரம் சென்ற பிறகு நிற்கிறது. உதவியாளர் ஓடிச் செல்கிறார். ‘கால் நாகினி’ என்கிறார்.

*

மறுநாள் பிரதமருடைய அப்பாயிண்ட்மெண்ட்களில் ஒன்று ரத்து செய்யப்படுகிறது. பிரதமர் அந்த மதிய நேரத்தில் ஓய்வெடுக்கப் போவதாகக் குறிப்பிடப்படுகிறது. அந்த நேரத்தில் நாகினியை உதவியாளர் விசேஷ வழியில் அழைத்துவருகிறார். பிரதமரும் நாகினியும் சந்திக்கிறார்கள்.

பிரதமர் இப்படியான திரை மறைவு வேலைகளில் தனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை என்கிறார்.

நாட்டை ஆள காவல், நீதி, அரசாங்கம் அப்படின்னு கண்ணுக்குத் தெரியற மூணு சிங்கங்கள் மட்டுமே போதாது. நாலாவதா நாகம் மாதிரி மறைஞ்சி செயல்படற இன்னொரு விலங்கும் தேவை.

அது யாரையும் கொத்திக் கொல்றதுல எனக்கு சம்மதம் இல்லை.

அது சரிதான். நான் சீற மட்டுமே செய்வேன்.

நல்லது. அதுதான் வேணும் என்கிறார் பிரதமர்.

உதவியாளர் சரிக்கட்டவேண்டிய தலைவர்களின் பெயரை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி பிரதமரிடம் தருகிறார். பிரதமர் அதைப் பார்த்துவிட்டு நாகினியிடம் தருகிறார்.

சொந்தக் கட்சித் தலைவர், எதிர்கட்சித் தலைவர், இடதுசாரித் தலைவர், தொலைக்காட்சி ஊடக நிறுவனர் ஒருவர் என நான்கு பெயரின் பெயர்கள் அதில் இருக்கின்றன.

நாகினி அதைச் சிறிது நேரம் உற்றுப் பார்க்கிறார். பிறகு பாக்கெட்டில் இருக்கும் லைட்டரை எடுத்து அந்தத் துண்டுக் காகிதத்தை எரிக்கிறார்.

வேறொரு துண்டுச் சீட்டில் வேறு நான்கு சம்பந்தமே இல்லாத பெயர்களை எழுதச் சொல்கிறார். அதைக் கிழித்து பிரதமர் மேஜைக்குப் பக்கத்தில் இருக்கும் குப்பைக் கூடையில் போடச் சொல்கிறார். பிரதமரிடம் விடைபெற்றுச் செல்கிறார்.

மறுநாள் அந்தக் குப்பைக் கூடை பிரதமர் அலுவலகத்தில் ஒருவரால் எடுக்கப்பட்டு அந்தத் துண்டு காகிதங்கள் ஒட்டி வைத்து பெயர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அந்த நபர் செல் போனை எடுத்து அந்தப் பெயர்களை எதிர்முனையில் இருப்பவரிடம் சொல்கிறார்.

‘இந்தப் பெயர்களில் இருந்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது’ என்று எதிர்முனை கேட்கிறது.

‘வந்துட்டுப் போனது நாகினிங்கறது தெரியுது’ என்கிறார் பிரதமர் அலுவலக ஊழியர்.

‘சரி நான் பாத்துக்கறேன்’ என்று எதிர்முனை சொல்லிவிட்டு போனை வைக்கிறது

***

No comments:

Post a Comment