Monday 13 March 2017

சுவாமி அம்பேத்கர் - 9

(9)

ஏற்கெனவே மடாலயத்தை சீர்திருத்த அவர் எடுத்த நடவடிக்கைகள் பலரைக் கோபப்பட வைத்திருந்தது. இப்போது அறநிலையத்துறையையும் அரசியல்வாதிகளையும் நேரடியாகப் பகைத்துக்கொள்ளவே அவர்கள் இவரை பழிவாங்க முடிவுசெய்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் சுவாமிஜிக்களுக்கு இழைக்கப்படும் துரோகங்கள் அல்லது எதிரிகள் அவரை வீழ்த்த முன்னெடுக்கும் அவதூறுகள் என்பவை பாலியல் அவதூறுகள், கொலைப் பழி, சுற்றுச் சூழலை சீரழித்ததாகப் புகார், அந்நியச் செலாவணி மாற்றத்தில் ஊழல் போன்றவை முன்வைக்கப்படுகின்றன. சில பிழையான சுவாமிஜிக்கள் தாமே இவற்றைச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படிச் செய்யாதவர்களை அப்படிச் செய்ததாக வலையில் சிக்கவைக்கிறார்கள். ஆக நம் நாட்டில் இரண்டுவகையான சுவாமிஜிக்கள் இருக்கிறார்கள். ஒன்று: தவறு செய்பவர்கள். இன்னொன்று தவறு செய்ததாக அவதூறு செய்யப்படுபவர்கள். நிஜத்தில் இரண்டு வகை சுவாமிஜிக்களுமே தோற்றவர்களாக இருக்கின்றார்கள். நமது கதாநாயகர் அடிப்படையில் நல்லவர் மட்டுமல்ல, அவருக்கு இழைக்கப்படும் அவதூறுகளையும் தீமைகளையும் வென்றுகாட்டக்கூடியவரும் கூட.

சுவாமி அம்பேத்கர் மீதும் பாலியல் புகார் முன்வைக்கப்படுகிறது. சதிகாரர்கள் வேண்டுமென்றே ஒரு பெண்ணை சிஷ்யையாக (அருந்ததி தாய் என்பவரை) அனுப்பி சில வீடியோக்களை எடுத்துவைத்து மிரட்டுகிறார்கள். பிற மதத்தினரை இழிவுபடுத்தும்வகையில் அறிக்கைவிடும்படி பிணை மிரட்டல் விடுக்கிறார்கள். இளையவரோ மறுத்துவிடுவார். எதிரிகள் அந்த வீடியோவை வெளியிட்டு அவரை சந்தி சிரிக்கச் செய்வார்கள். ஊரே கூடி அவரைத் தூற்றும். அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும். சுவாமிஜி அமர்ந்தபடியே சாட்சி சொல்லலாம் என்று நீதிபதி அனுமதி கொடுப்பார். ஆனால், அவரோ வேண்டாம் அந்த நடைமுறையை எல்லா குற்றவாளிக்கும் நீங்கள் மாற்றி அமைத்து சட்டம் இயற்றுங்கள். இப்போதைக்கு நான் குற்றவாளிக் கூண்டில் நின்றபடியே பதில் சொல்கிறேன் என்று சொல்கிறார்.

அந்த வீடியோவில் இருப்பது அவரல்ல... அது கிராஃபிக்ஸ் செய்யப்பட்டது என்று சொல்லும்படி வழக்கறிஞர் சொல்லியிருப்பார். நீதிபதியும் அதை ஏற்றுக்கொண்டு அவரை விடுதலை செய்ய சம்மதித்திருப்பார். பக்தர்களும் அவரை ஏற்கத் தயாராக இருப்பார்கள். ஆனால், குற்றவாளிக் கூண்டில் ஏறிய சுவாமிஜி... அந்த வீடியோவில் இருப்பது நான் தான். துறவறம் மிகவும் உயர்வான லட்சியம். என்னால் அதை நிறைவேற்ற முடியவில்லை. என்னை மன்னியுங்கள். நீங்கள் என்ன தண்டனை தந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்கிறார்.

அனைவரும் அதிர்கிறார்கள். ஆனால், நீதிபதி இளையவருக்கு சாதகமாகவே தீர்ப்பை வழங்குகிறார். நீங்கள் குற்றம் செய்ததாகச் சொல்கிறீர்கள். ஆனால், அந்த வீடியோ கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டதுதான். நீங்கள் செய்த நல்ல செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை அவமானப்படுத்த அப்படிச் செய்திருக்கிறார்கள். எனவே உங்களை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது என்று தீர்ப்பளிக்கிறார். ஆனால் இளையவரோ உங்கள் தீர்ப்பைவிட எனக்கு என் பக்தர்கள் தரும் தீர்ப்பே மிக முக்கியம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அமல்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்.

பக்தர்கள் கூடிக் கலந்து பேசிவிட்டு இளையவர் குற்றவாளியே என்று தங்கள் தீர்ப்பை எழுதிக் கொடுக்கிறார்கள்.

நம்பிக்கை மோசடி, திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்ட உறவு, திருமணம் செய்துகொள்வதாகப் பொய் சொன்னது என பல குற்றங்களின் அடிப்படையில் இளையவருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற புனிதமான இடத்தில் இருப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும் என்பதால் எந்தவித அபராதமோ, பிணை வாய்ப்புகளோ இல்லாமல் முழு ஏழாண்டும் சிறையில் இருந்தாகவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார்.

தீர்ப்பை வழங்கிவிட்டு பக்தர்களிடம் திருப்திதானே என்கிறார். திருப்திதான். ஆனால்... எங்களிடம் இரண்டு பரிந்துரைகளும் இருக்கின்றன என்கிறார்கள்.

என்ன அவை என்கிறார் நீதிபதி.

முதலாவது: அவருடைய ஏழாண்டு சிறைத் தண்டனையை அவர் அனுபவித்து முடித்துவிட்டதாக தீர்ப்பு வழங்கவேண்டும்.

இரண்டாவதாக அவர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும். இதுவே எங்கள் தீர்ப்பு என்கிறார்கள்.

மக்களுக்கு சேவை செய்ய முன்வருபவர்களை துறவறம் என்ற சிலுவையில் இனியும் அடிக்கத்தான் வேண்டுமா... ஊருக்கு நல்லது செய்வதற்காக ஒருவர் தன் உள்ளத்துக்கும் உடலுக்கும் துன்பம் தந்துகொள்ளவேண்டுமா? இந்த நவீன யுகத்திலாவது இல்லறத்தில் இருந்தபடியே சமூக சேவை செய்ய மடாலயங்கள் அனுமதிக்கவேண்டும். மேற்கத்திய போப், பாதிரிகளில் ஆரம்பித்து கிழக்கத்திய மடாதிபதிகள் வரை பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். நம் புராணங்களில் கூட தவத்தில் ஈடுபடும் முனிவர்கள் ரம்பை, மேனகை போன்றவர்களால் சம நிலை தடுமாறியதாகப் படித்திருக்கிறோம்.

துறவறம் அடிப்படையில் இயற்கைக்கு எதிரானது... இறைவனுக்கும் எதிரானது. துறவிகள் உலகுக்குத் தேவை என்று இறைவன் கருதியிருந்தால் இனப்பெருக்க உறுப்புகள் இல்லாமல் சிலரைப் படைத்து அனுப்பியிருப்பானே... எனவே அது இறைவனுக்கு எதிரானதுதான். குடும்பம், குழந்தைகள் என்று வந்துவிட்டால் ஒருவர் சமூகத்துக்கு நன்மைகள் செய்வதில் வேகமும் ஆர்வமும் குறைந்துவிடுமென்றால் குறையட்டுமே. சமூகத்தின் நன்மைக்காக தனி ஒருவரை இந்த அளவுக்கு ஒடுக்கவேண்டுமா... அது ஒருவகையில் குழந்தைகளின் இன்பத்துக்காக விலங்குகளைக் கூண்டில் அடைத்து வைப்பதுபோன்ற கொடூரம் அல்லவா..? பொதி சுமப்பதற்காக காளையை லாடம் கட்டி காயடித்து வண்டியில் பூட்டுவதுபோன்ற அராஜகம் அல்லவா..? அது இனியும் தொடரத்தான்வேண்டுமா... நாம் லெளகிக இன்பத்தில் திளைக்க துறவிகளைக் காயடிக்கவேண்டுமா என்ன..? அவர்கள் நமக்குத் தரும் மன நிறைவுக்கும் வழிகாட்டுதலுக்கும் இன்ன பிற உதவிகளுக்கும் நாம் காட்டும் நன்றி விசுவாசம் என்பது இதுதானா..?

துறவிகளுக்கும் தென்றல் வீசும் மாலைகளையும் நிலவு பொழியும் இரவுகளையும் கடக்கத்தானே வேண்டியிருக்கிறது. பட்டாடைகளும் நறுமணத் திரவங்களும் பூசி பூவும் பொட்டுமாக வளைகள் குலுங்க கொலுசுகள் ஒலிக்க வந்துபோகும் பெண்களையெல்லாம் பார்த்த பிறகும் உணர்சியற்றுக் கிடக்கவேண்டுமென்றால் எவ்வளவு பெரிய தண்டனை அது... துறவிகளின் பகல்களை மட்டுமே நாம் பார்க்கிறோம். முடிவற்று நீளும் அவர்களுடைய தனிமை இரவுகளை நாம் யோசித்துப் பார்ப்பதே இல்லை. இது தவறு... அதிலும் ஆண் துறவிகளின் நிலைமை மிக மிக பரிதாபமானது. பெண்களுக்காவது அடிப்படையிலேயே பாலியல் சுதந்தரம் மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆண்களுக்கு அப்படியல்ல. விரும்பித் தேர்ந்தெடுத்த வாழ்க்கையென்றாலும் ஆணாகப் பிறந்தும் துறவியாக இருக்க நேர்வதென்பது மிகவும் துயரம் மிகுந்தது. சொர்க்கத்துக்குப் போயும் சோகமாக வாழ நேர்வதைப் போன்றது. எனவே துறவிகள் திருமணம் செய்துகொள்ள அனுமதிப்போம். அந்தக் காலத்தில் ரிஷியும் ரிஷி பத்தினியுமாக வாழ்ந்ததில்லையா அதுபோல் வாழ அனுமதிப்போம் என்று சொல்கிறார்கள்.

இளைய மடாதிபதி பக்தர்கள் அவர் மீதும் துறவிகள் மீதும் காட்டிய பேரன்பை நினைத்து கண்ணீர் மல்குகிறார். அவரை வீழ்த்துவதற்காக அனுப்பப்பட்டவர்தான் என்றாலும் அந்த நடிகைக்கு சுவாமிஜியின் மீது பரிதாபமே இருந்தது. அதிலும் பாலியல்ரீதியாகத் தன்னைச் சுரண்டியவர்களை மட்டுமே பார்த்துவந்த அவருக்கு சுவாமிஜியைத் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் விடுதலையாகவே உணர்கிறார்.

இளையவரின் லட்சியக் கோவிலில் திருமணம் நடக்கிறது. காவி உடை அணிந்தபடியே தாலி கட்டுகிறார்.

திருமணக் கோலத்திலேயே இளைய மடாதிபதியும் அவருடைய பத்தினியும் ரதத்தில் ஏறி அமர்கிறார்கள். கோவில்களை பக்தர்கள் வசம் ஒப்படைக்கும் புனித யாத்திரை தொடர்கிறது.

No comments:

Post a Comment