Monday 13 March 2017

சுவாமி அம்பேத்கர் - 1

திரைப்படத்தின் ஆதார அம்சம் நாயகன் வில்லன் என்ற இரண்டு சக்திகளின் மோதல். நாயகன் ஒரு விஷயத்தைச் செய்ய விரும்புவான்; வில்லன் அதற்குத் தடையாக இருப்பான்; கடைசியில் நாயகன் வெல்வான். இதுதான் திரைப்படங்களின் ஆதார வடிவம். நமது இந்தக் கதையில் ஒரு சுவாமிஜி மடாலயம் (கோவில்) ஒன்றைச் சீர்திருத்த விரும்புகிறார். வில்லன் அல்லது வில்லன் குழு அவரைத் தடுக்கிறது. அவர் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதே கதை.

இப்போது அந்த சுவாமிஜியாக யாரை வடிவமைப்பது? ஏற்கெனவே ஒரு மடாயலத்தில் பல ஆண்டு துறவறம் மேற்கொண்ட ஒருவர் தனக்கு அதிகாரம் கிடைத்ததும் தான் அதுவரை நேரில் பெற்ற அனுபவங்களில் இருந்து அந்த மடாலயத்தைச் சீர்திருத்த முற்படுகிறார் என்று வைத்துக்கொள்ளலாமா..? உலகத்தை நாளைக்கே மாற்றி அமைத்துவிடவேண்டும் என்று துடிக்கும் இளம் துறவியின் துணிச்சலான சீர்திருத்தங்களாகச் சித்திரிக்கலாமா... அமிர்தானந்த மயி போன்ற பெண் துறவியின் சீர்திருத்தங்களாக வைத்துக்கொள்ளலாமா... அல்லது மேற்குலகில் இருந்து இந்திய ஆன்மிகத்தால் கவரப்பட்டு துறவறம் ஏற்கும் ஒருவர் (சகோதரி நிவேதிதா, அரவிந்த அன்னை போல்) இருக்கும் ஒருவரை மையமாக வைத்து இந்த சீர்திருத்தங்களை முன்னெடுக்கலாமா?

இதை நாம் முதலிலேயே முடிவு செய்துகொண்டால்தான் அதற்குத் தடை போட முயலும் நபர் அல்லது குழு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது தீர்மானமாக முடியும்.

இந்தியப் பெண் துறவிகளாகட்டும் அயல் நாட்டு பெண் துறவிகளாகட்டும் இந்து கோவில் பாரம்பரியத்துடன் தங்களை அவ்வளவாகப் பிணைத்துக்கொள்ளவில்லை. அரவிந்த ஆஸ்ரமத்தில் விக்ரக வழிபாடே கிடையாது. அதிலும் அரவிந்த அன்னை நெற்றியில் திலகம்கூட இட்டுக்கொண்டதில்லை. அரவிந்தரும் அப்படியான புற அடையாளங்கள், சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவர். அவர்களைப் போன்ற ஒருவரை வைத்து கோவில் பாரம்பரியத்தைச் சீர்திருத்துவது கொஞ்சம் அந்நியமானதாகத் தோன்றும். ஒரு திரைப்படத்துக்காக எழுதப்படும் கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்தான். எனினும் கொஞ்சம் யதார்த்தத்தோடு இணைந்ததாக இருந்தால் கூடுதல் நம்பகத் தன்மை கிடைக்கும். எனவே, கோவில் பாரம்பரியத்துடன் தொடர்புடைய வேறொரு நபரைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும்.

காஞ்சி சங்கராச்சாரியர் காமாட்சி அம்மனை வழிபடுபவர். மேல்மருவத்தூர் அடிகளார் ஆதிபராசக்தி அம்மனை வழிபடுபவர். குன்றக்குடி இளையவர் சிவ பெருமானை அடிப்படையாக வைத்தே தனது மடாலயத்தை வளர்த்தெடுத்திருக்கிறார். இந்த மூவரில் குன்றக்குடி அடிகளாரே கோவில் சார்ந்த சீர்திருத்தங்களுக்கு உகந்த நபர். காஞ்சி மடாதிபதி பழமை மீது மிகுந்த பற்று கொண்டவர். அதோடு அசட்டுத்தனமும் அராஜகமும் ஊழலும் மலிந்த ஜெயலலிதாவால் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டவர். ஜெயலலிதாவை முற்றாக நிராகரிக்கும் ஒருவர் கூட காஞ்சி மடாதிபதி விஷயத்தில் ஜெயலலிதா செய்த அராஜகத்தை சரியென்று ஏற்கவே செய்வார். தமிழர்களில் சந்தர்ப்பவாத, போலி முற்போக்கு பாவனைகொண்ட, போலி பெருமித உணர்வுகள் கொண்ட, பிராமண வெறுப்பாளர்களின் கருத்துத் திணிப்பு அது. இத்தனைக்கும் காஞ்சி மடாலய மரபிலேயே தலித்களின் குடியிருப்புகளுக்குச் சென்றும் தலித் கல்விக்கும் மருத்துவத்துக்கும் சில சேவைகளை முன்னெடுத்த முதல் குரு அவரே. ஆனால், அவர் இன்று பிராமண, சூத்திர, தலித் சாதியினர் அனைவரும் காலகாலமாகச் செய்த சாதி வெறிச் செயல்பாடுகளுக்குக் குறியீட்டுக் காரணகர்த்தாவாக்கப்பட்டுப் பலிகடாவாக ஆக்கப்பட்டிருக்கிறார். எனவே, அவரைப் போன்ற ஒருவர் நம் திரைக்கதையின் நாயகனாக இருக்கமுடியாது என்பதை வருத்தத்துடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.

மேல் மருவத்தூர் பங்காரு அடிகளாரைப் பொறுத்தவரையில் கல்வி, மருத்துவமனை என சமூக சேவைகளில் ஒப்பீட்டளவில் அவர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். ஆனால், அவர் தன்னையே ஆதி பராசக்தியாக முன்னெடுக்கவும் செய்கிறார். குருவாக வணங்கப் பெறுவதென்பது வேறு. தன்னையே கடவுளாக்கிக் கொண்டு வணங்கச் சொல்வதென்பது வேறு. இந்த வகையில் குன்றக்குடி அடிகளாரே நம் திரைக்கதைக்கு மிகவும் பொருத்தமான முன்மாதிரி. எனவே, அவரைப் போன்ற ஒருவரை நாயகனாக எடுத்துக்கொள்வோம். இன்னும் கூடுதல் அழுத்தம் கிடைக்கவேண்டி இந்திய ஆன்மிக மரபின் வேறொரு அழுத்தமான முன்னோடியையும் அவருடன் இணைப்போம். இந்து மதத்தைச் சீர்திருத்தியவர்களில் மிகவும் முக்கியமானவர் புத்தரைத் தவிர வேறு யார் இருக்கமுடியும். தன் மதத்தை ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் பரப்ப வழிகண்ட ஆன்ம ஞான குருவும் இந்திய சீர்திருத்த மரபின் ஆதி வழிகாட்டியும் அல்லவா... நவீன மனு அம்பேத்கர்கூட அந்த மரபில் வந்தவர்தானே.

மேலும் நமது நாயகர்கூட உயிர் கொலையைத் தடுப்பது, கல்விக்கு முக்கியத்துவம் தருதல், யாகங்களை எதிர்த்தல், வாத பிரதிவாதங்களில் ஈடுபாடு கொண்டிருத்தல் என இருக்கப்போகிறார். இப்படியான அம்சங்களுக்கு புத்தர்தானே ஆதி வழிகாட்டி. எனவே நம் கதாநாயகர் சைவ மடத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் காசி யாத்திரை முடித்து கயாவுக்குச் சென்று வணங்கும்போது போதி மரத்தினடியில் அமர்ந்து தியானம் செய்கையில் புத்தருடைய ஆன்மா அவருக்குள் இறங்குவதாகக் கதையை வடிவமைத்துக் கொள்ளலாம். வெளியே சைவம்... உள்ளே பவுத்தம்... வெளியே பக்தி... உள்ளே ஞானம்.. வெளியே பழமை... உள்ளே சீர்திருத்தம்.

இதை இன்னும் சமகால இந்திய சமூகத்துக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதென்றால் புத்தரின் ஆன்மாவுக்கு பதிலாக அம்பேத்கரின் ஆன்மா நாயகனின் உடலுக்குள் இறங்குவதாகக் காட்டலாம். என்னதான் புத்தர் இந்தியாவில் தோன்றிய லோக குரு என்றாலும் இன்று இந்தியாவில் அவருக்கான மதிப்பும் செல்வாக்கும் மிக மிகக் குறைவு. சிறு தெய்வ வழிபாட்டு மரபுகளை ஒறுத்தமை, பெளத்த துறவிகள் மன்னர்களைச் சார்ந்து செயல்பட்டமை, பெளத்தம் துறவுக்குக் கொடுத்த அதீத முக்கியத்துவம், இஸ்லாமிய அழித்தொழிப்பு, பெளத்த விழுமியங்களை இந்து மதம் உள்வாங்கிக்கொண்டமை போன்ற காரணங்களால் பெளத்தம் இந்தியாவில் இருந்து இடம் நகர்த்தப்பட்டுவிட்டிருக்கிறது. உலகின் மூன்றாவது பெரிய மதமாக இருந்தபோதிலும் இந்தியாவில் அரசியல் தளத்தில் இயங்கிய அம்பேத்கருக்கு இருக்கும் முக்கியத்துவம்கூட புத்தருக்கு இல்லை. எனவே, நம் நாயகரை அம்பேத்கரின் மறு பிறவியாக வைத்துக்கொள்வோம். சுவாமி அம்பேத்கர் என்ற தலைப்பு கதையின் ஆன்மாவை வழித்து இட்ட திலகமாகத் திகழும். கேட்பவரின் கவனத்தைச் சட்டென்று ஈர்க்கவும் செய்யும்.

ஆக நம் கதைக்குப் பொருத்தமான நாயகர் சைவ அம்பேத்கரே.

ஆனால், அம்பேத்கர் இந்து மதத்தை முற்றாக நிராகரித்தவர். அதன் சடங்கு ஆசாரங்கள், பக்தி, ஆன்மிகம், கலை, வாழ்க்கைப் பார்வை ஆகிய அனைத்தையும் சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வை மாற்றப் பெரிய முயற்சி எதுவும் எடுக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக நிராகரித்தவர். அவரை கோவில் கலாசார அமைப்பின் சீர்திருத்தத்துக்கு எப்படிப் பயன்படுத்த என்ற கேள்வி நிச்சயம் வரும். ஆனால், அம்பேத்கர் இந்து மதத்தைத்தான் நிராகரித்தார். இந்தியாவை மனதார நேசித்தார். இந்தியா என்ன விதிமுறைகளின்படிச் செயல்படவேண்டும் என்று அவர் உருவாக்கித் தந்திருக்கும் அரசியல் சாசனம் என்பது அவரை தலித் தலைவராகவோ இந்து மத வெறுப்பாளராகவோ அல்ல; இந்திய தேசியத்தின் ஒப்பற்ற சிற்பியாகவே வெளிக்காட்டுகிறது. அவர் உருவாக்கிய இந்திய அரசியல் சாசனத்தில் இந்து மத வெறுப்பு துளி கூட இல்லை. தலித் அப்பீஸ்மெண்ட்டும் அறவே இல்லை. இட ஒதுக்கீட்டைக் கூட பத்தாண்டுகளுக்கு ஒரு தடவை மறு பரிசீலனை செய்யச் சொல்லியிருக்கிறார். அவர் இந்திய தேசியம் ஒரு நியாயமான, கண்ணியமான, நேர்மையான அரசாக இருக்கவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அதை வடிவமைத்திருக்கிறார்.

அவர் முன்வைத்த அதே உயரிய மதிப்பீடுகளின் அடிப்படையில் கோவில் கலாசாரத்தை மாற்றி அமைக்கும்போது அவர் பெயரில் அதை முன்னெடுப்பதென்பது தேசத்தின் சிற்பிக்குத் தரும் எளிய மரியாதையே. அவரும் கூட சாதி ஏற்றத் தாழ்வுகளில் இருந்து இந்து மதத்தை சீர்திருத்த முயன்ற இந்துத்துவர்களைத் தனது சக பயணியாகவே பார்த்திருக்கிறார். சுவாமி விவேகானந்தர் உலக அளவில் இந்தியாவையும் இந்து மதத்தையும் எப்படிப் பெருமிதப்படுத்தினாரோ இந்தியாவில் ராம கிருஷ்ண மிஷன் அமைப்பை உருவாக்கி இந்து மத மறு மலர்ச்சிக்கு வித்திட்டாரோ அதற்கு இணையான ஒரு சாதனைதான் அம்பேத்கர் இந்திய மறுமலர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பும். இன்னொருவகையில் இந்தக் கதையில் வரப்போகும் இந்து மத சீர்திருத்தம் என்பது புத்த மத வழியில் முன்னெடுக்கப்படும் ஒன்று என்பதால் சுவாமி அம்பேத்கர் என்று பெயரைச் சூட்டுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும்.
(தொடரும்)



*

No comments:

Post a Comment