Monday 13 March 2017

சுவாமி அம்பேத்கர் - 5



(5)

கோவில் கட்டமைப்பை நவீனப்படுத்துவதை தன் லட்சியமாக எடுத்துக்கொள்கிறார் இளையவர். கருவறைக்குள் அனைத்து சாதியினரையும் அனுமதிக்கலாமா... கோவிலில் அசைவ படையல் கொடுக்கலாமா... கோவில் பணத்தை யார் நிர்வகிக்கவேண்டும் என்பதுபோல் அவர் கொண்டுவரவிரும்பும் சீர்திருத்தம் குறித்து ஒவ்வொரு மாதமும் ஒரு பக்தர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துகிறார். அந்தக் கூட்டத்துக்கு முன்பாக அந்த விஷயம் தொடர்பாக ஒரு பட்டிமன்றம் நடத்துகிறார். பக்தர்களுக்கு அந்த விஷயம் குறித்து சாதக பாதக அம்சங்கள் முழுமையாக முன்வைக்கப்படுகின்றன. பக்தர்கள் அந்த விஷயம் தொடர்பாக முன்வைக்கும் தீர்ப்பை அமல்படுத்துகிறார். அப்படியாக அந்த கோவில் என்பது பக்தர்களால் பக்தர்களுக்காக நடத்தப்படும் மையமாகச் செயல்படுகிறது.

முதல் முதலாக கோவில் கருவறைக்குள் அனைத்து சதியினரையும் அனுமதிப்பது தேவையா என்று ஒரு பட்டிமன்றத்தை நடத்துகிறார். விஞ்ஞானப் பார்வை கொண்டவர்கள், நாத்திகர்கள், பிற மத பேச்சாளர்கள் என பலரும் அந்தப் பட்டிமன்றத்துக்கு அழைக்கப்படுகிறார்கள்.

கோவில் என்பது ஏதேனும் ஒரு தெய்வத்தை மையமாகக்கொண்டு எழுப்பப்படும் கட்டுமானம்.

அது அமைந்திருக்கும் இடத்தைச் சுற்றி வாழும் மக்களின் ஆன்மிகம், பொருளாதாரம், அரசியல், அறிவு, கலை, கலாசாரம், பேரிடர் கால மேலாண்மை என ஒட்டுமொத்த, சமூக வாழ்க்கையின் ஆதாரப் புள்ளியாக அது இருக்கும்.

கோவிலில் இருந்து எவ்வளவு தொலைவில் ஒருவருடைய வசிப்பிடம் இருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து பழங்காலத்தில் அவருடைய சமூக அந்தஸ்து தீர்மானிக்கப்பட்டது. அதற்கேற்பவே அந்தப் பிரிவு மக்களின் வாழ்க்கை நிலையும் இருந்தது. கோவிலைச் சுற்றி வசித்த பிராமணர்கள் சமூக அந்தஸ்திலும் வாழ்க்கை நிலையிலும் உயர்ந்தவர்களாக இருந்தார்கள். கோவிலில் இருந்து தொலைவில் வசித்த கடைநிலை சாதியினருடைய வாழ்க்கை அந்தஸ்து கடைநிலையிலும் வாழ்க்கை வசதிகள் அதற்கேற்பவும் இருந்தன. அப்படியாக சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு கோவில் என்பது ஓர் அங்கீகாரத்தைத் தந்ததாகவும் இருந்திருக்கிறது.

கோவில் என்பது கூட்டம் குழுமும் இடமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை அந்த சமூகத்து அடையாளங்கள், மதிப்பீடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவைக்கவும் செய்கிறது.

நவீன காலக் கோவில்கள் என்பவை பாரம்பரியக் கோவில்களின் நல்ல அம்சங்களைக் கொண்டவையாகவும் அதில் இருக்கும் தீமை களைக் களைந்தவையாகவும் இருக்கவேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் நவீனக் கோவில் = பாரம்பரியக் கோவில் மைனஸ் சாதி ஏற்றத் தாழ்வு என்று இருக்கவேண்டும். எனவே கோவிலில் கருவறைக்குள் யார் வேண்டுமானாலும் நுழைய முடியவேண்டும் என்று நாத்திகர்கள் சொல்கிறார்கள்.

திருப்பதி, சபரிமலை, பழனி எனப் பெரும் கூட்டம் கூடும் கோவில்களில் ஆரம்பித்து பிராமண பூஜை நடக்கும் கிராமப்புற சிறிய கோவில்கள் வரை பெரும்பாலான கோவில்கள் இன்று சாதி சார்ந்த ஏற்றத் தாழ்வுகளில் இருந்து பெருமளவுக்கு வெளியேறிவிட்டிருக்கின்றன. இன்றும் எந்த பிராமணக் கோவிலிலும் கருவறைக்குள் பிற சாதியினர் யாரும் நுழைய அனுமதி இல்லை என்றபோதிலும் அது சாதி சார்ந்த ஒடுக்குதல் அல்ல. ஏனென்றால் பூஜை செய்யும் பிராமணர் நீங்கலாக பிற பிராமணர்களுக்குக்கூட அந்தக் கோவில்களின் கருவறைக்குள் நுழைய அனுமதி கிடையாது. நம்பூதிரிகள், ஐயர்கள், ஐயங்கார்கள், மாத்வர்கள், போத்தி என பிராமணர்களில் இருக்கும் பல்வேறு பிரிவினர் வேறொரு பிரிவைச் சேர்ந்த கோவிலுக்கு அர்ச்சகராக முடியாது. எனவே, எல்லா பிராமணரும் எல்லா பிராமண கோவில் கருவறைக்குள்ளும் நுழைய முடியாது என்ற விதியை அந்தந்தக் கோவில்களின் நிர்வாகம் சார்ந்த, ஆகம விதிகள் சார்ந்த ஒரு வழிமுறையாக மட்டுமே பார்க்கவேண்டும். இது சாதி சார்ந்த பிரச்னை அல்ல. ஒரு இஸ்லாமியர் சர்ச் ஒன்றில் ஒருநாளும் பாதிரியாக முடியாது. ஒரு கிறிஸ்தவர் ஒருநாளும் இமாம் ஆக முடியாது. இங்கு இருப்பது சமத்துவ மறுப்பு அல்ல... மாறுபட்ட வாழ்க்கைப் பார்வைகளுக்கான அங்கீகாரம் மற்றும் விலகி நிற்கும் தன்மை. இந்து மதத்தில் ஒவ்வொரு சாதிப் பிரிவுக்கும் சாதி உட்பிரிவுக்கும் அப்படியான ஒரு தனித்தன்மை இருப்பதால் அதை அனுசரித்துச் செல்வதையே மக்கள் தமது வழிமுறையாக எந்தவித உறுத்தலும் இல்லாமல் பின்பற்றிவந்திருக்கிறார்கள். நம்பூதிரி சந்தனத்தை கிட்டத்தட்ட தூக்கி எறிவதுபோல் போடுவதை அதி உயர்ந்த ஐயர்கூட பவ்யமாகப் பெற்றுக்கொள்ளவே செய்துவந்திருக்கிறார்.

நவீன கோவில் என்பது யார் வேண்டுமானாலும் எந்தக் கோவிலின் கருவறைக்குள் வேண்டுமானாலும் போகமுடியும்படியாக இருக்கவேண்டும். யார் வேண்டுமானாலும் அர்ச்சகராக முடியும்படியாக இருக்கவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், இந்த இடத்தில் பாரம்பரிய வழிமுறையை எந்த அளவுக்குத் தக்கவைத்துக்கொண்டு நவீனமாக முடியும் என்று பார்க்கவேண்டும் என்று இளைய மடாதிபதி சொல்கிறார்.

ஆரிய சமாஜத்தில் ஆரம்பித்து பாரதியார் வரை பிராமணரல்லாத சாதியினருக்குப் பூணூல் அணிவித்து அனைவரையும் பிராமணர் ஆக்கியிருக்கிறார்கள். ஆரிய சமாஜத்தினர் அதை இன்றும் செய்துவருகிறார்கள். அம்பேத்கர்கூடத் தன் வாழ்நாளில் அப்படியான ஒரு பூணல் வைபவத்துக்குத் தலைமை தாங்கியிருக்கிறார். ராமானுஜர் அஷ்ட அக்ஷர முக்தி மந்திரத்தை  ஊருக்குச் சொன்னால் நரகம் கிடைக்கும் என்று சொன்னபோது என் ஒருவனுக்கு நகரம் கிடைத்தால் பரவாயில்லை.... அதைக் கேட்கும் நபர்கள் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள் என்றால் அதை நான் மனமுவந்து ஏற்பேனென்று சொல்லி கோவிலின் உச்சியில் ஏறி அதை முழங்கியிருக்கிறார். அவர் திருக்குலத்து அதாவது தலித் சாதியினரை பிராமண ஜாதிக்குள் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்.

இந்து தர்மத்தின் ஆரம்ப காலகட்டமான வேத காலம் பிறப்பின் அடிப்படையிலான ஜாதிகளை ஏற்கவில்லை. குணத்தின் அடிப்படையிலான வர்ணத்தையே ஏற்கிறது. அந்தவகையில் சூத்திர ஜாதியில் பிறந்த ஒருவர் தனது நடத்தை மூலம் பிராமணராக முடியும். எனவே, நவீன கோவிலில் இந்த பிராமண வாழ்க்கை முறையை ஏற்க முன்வரும் யாரையும் அர்ச்சகராக அனுமதிக்கலாம். ஒரு பிராமணர் பிராமண வாழ்க்கை முறையில் வாழவில்லையென்றால் பிராமணர்களுக்குப் பிறந்தார் என்ற ஒரு காரணத்துக்காகவே அவருக்குத் தரப்படும் சலுகையைப் பறித்தும்விடலாம். ஆக, கருவறைக்குள் நுழையும் அதிகாரத்தை பிராமணராக வாழ உறுதியெடுக்கும் யாருக்கு வேண்டுமானாலும் தரலாம் என்று முன்வைக்கவேண்டும். இதை கோவில்களை நவீனப்படுத்தும் முயற்சி என்று சொல்ல விரும்புபவர்கள் அப்படிச் சொல்லிக் கொள்ளலாம். பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி என்று சொல்ல விரும்புபவர்கள் அப்படியும் சொல்லிக் கொள்ளலாம். ஆக பிராமண ஜாதியை பிராமண வர்ணமாக மாற்றுவதே முதலில் செய்யவேண்டிய சீர்திருத்தம் என்று ஒருவர் சொல்கிறார்.

இந்த வாத பிரதிவாதங்களைக் கேட்ட பக்தர்கள் கடைசியில் கருவறைக்குள் யார் வேண்டுமானாலும் நுழையலாம். ஆனால், அங்கு நுழையும் முன் பூணூல் போட்டுக்கொண்டுபோகவேண்டும் என்று தீர்ப்பு வழங்குகிறார்கள்.

அதன்படி கோவிலில் கருவறைக்குள் சென்று வழிபடவேண்டும் என்று விரும்புபவர்கள் முன்கூட்டியே தமது பெயரை பதிவு செய்துகொள்ளவேண்டும். அவர்களுக்கு அனுமதி கிடைக்கும் நாளில் காலையில் கோவிலுக்கு வந்து கோவில் குளத்தில் குளித்து சிறிய யாகம் செய்து சமஷ்டி பூணுல் அணிந்துகொண்டு கருவறைக்குள் நுழைந்து இறைவனைக் கும்பிடலாம். இந்த பூணூல் வைபவம் நடத்த நபர் ஒன்றுக்கு 108 ரூபாய் கட்டணம் பூசாரிக்குக் கொடுத்துவிடவேண்டும். பிராமண பூசாரிகள் இதை உற்சகத்துடன் வரவேற்கிறார்கள். நாளொன்றுக்கு பத்துபேர் இப்படி கருவறை நுழைய முன்வந்தால்கூட சுமார் ஆயிரம் ரூபாய்க்கு மேல் அவர்களுக்கு தட்சணை கிடைத்துவிடுகிறது. அனைத்து சாதி பக்தர்களுக்கும் கோவிலில் நடத்தப்படும் பூணூல் வைபவம் என்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது.




(தொடரும்)

No comments:

Post a Comment