Monday 13 March 2017

சுவாமி அம்பேத்கர் - 8

(8)

கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கால்வாய் சீரமைப்பு, ஏரி, குளங்களைத் தூர்வாருதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருத்தல் போன்ற பணிகளை வழிபாட்டின் ஓர் அங்கமாக முன்னெடுக்கிறார்கள். 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் எந்திரங்களுக்கு அனுமதி இல்லை. ஆனால், உழைப்புக் கூலி தரப்படும். இளைய மடாதிபதி எந்திரங்களுக்கான தொகையை கோவில் நிர்வாகத்திலிருந்து தருகிறார். பணியாளர்களுக்கான கூலியை 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் தர வழி செய்கிறார். அப்படியாக ஒரு வருடத்தில் நாடுமுழுவதும் தடுப்பணைகள் கட்டப்பட்டு, ஏரி குளங்கள் தூர் வாறப்பட்டு விவசாயம் உயிர்ப்பிக்கப்படுகிறது.

*

நாத்திகர்கள் புதிதாக ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்கள். எம்மதமும் சம்மதம் என்று இந்து மதம் சொல்வதாகப் பெருமை பீற்றிக் கொள்கிறீர்களே... கோவில்களில் ஏசு கிறிஸ்துவுக்கு சன்னதி கட்டவேண்டியதுதானே என்று கேட்கிறார்கள். பக்தர்களிடம் அந்த விஷயம் கலந்தாலோசிக்கப்படுகிறது. செய்யலாம்தான். ஆனால், பதிலுக்கு சர்ச்சுகளில் சிவனுக்கு தனியாக ஒரு சன்னதி கட்ட அவர்கள் முன்வருவார்களா என்று கேட்கிறார்கள். அதைக் கேட்டதும் நாத்திகர்கள் அலறி அடித்து ஓடுகிறார்கள். ஆனால், இளைய மடாதிபதிக்கு அப்படிக் கிடைக்கும் வெற்றி போதுமானதாக இல்லை. உண்மையிலேயே கோவில் வளாகத்துக்குள் மேரியம்மன், இயேசு, சிலுவை என ஏதேனும் ஒரு உருவச் சிலை வைத்து வழிபடலாம். இந்து மதத்தில் இருந்து பிரிந்து சென்ற கிறிஸ்தவர்கள் தமது வேர்ப் பிடிப்பை இழக்காமல் இருக்கும் நோக்கில் இத்தகைய கோவில்களுக்கு வந்து வணங்கிச் செல்ல அது உதவும். இந்தக் கோவில்களில் பிற இந்து தெய்வங்களுக்கு நடப்பதுபோலவே அனைத்து அபிஷேக, ஆரத்தி சடங்குகள் எந்தவித புறக்கணிப்பும் இல்லாமல் சமத்துவமாக கிறிஸ்தவ சிலைகளுக்கும் முன்னெடுக்கலாம். ஆங்கிலப் புத்தாண்டு கிறிஸ்மஸ் போன்ற எல்லா அந்நிய விழாக்களிலும் அந்த தெய்வங்களுக்கு விமரிசையான பூஜைகள் நடத்தலாம் என்று சொல்கிறார்.

அதுபோலவே, கோவிலின் மேற்கு பக்கத்தில் இஸ்லாமிய வழிபாட்டு மண்டபம் அமைக்கப்படவேண்டும். இஸ்லாமிய மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதுபோல் அல்லாமல் இங்கு ஆண்களும் பெண்களும் தனி வரிசையில் அமர்ந்து தொழுதுகொள்ள வழிசெய்து தரப்படலாம் என்று சொல்கிறார்.

இந்துக்கள் மட்டுமல்ல... கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இளைய மடாதிபதி தன் முடிவில் உறுதியாக இருக்கிறார். சபரி மலைக்குச் செல்லும் இந்து பக்தர்கள் வாபர் மசூதிக்குச் சென்று தொழுவதில்லையா... சபரிமலைக்குக் கூட இஸ்லாமியர்கள் மாலை போட்டுகொண்டு வணங்கச் செல்கிறார்களே... இதுபோல் இங்கும் வந்து போகலாமே என்கிறார். யாரும் அவருடைய கருத்தை ஏற்காமல் போகிறார்கள்.

அனைத்து மதத்தினரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தாக வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி பாரத மாதா ஆலயம் கட்டுவதுதான். மூவர்ணக் கொடியே அந்தக் கோவிலின் மூல விக்கிரஹம் (மின் விசிறி மூலம் அது பட்டொளி வீசிப் பறந்தாகவேண்டும்). இந்திய அரசியல் சாசனமே அந்த கோவிலின் வேத புத்தகம். தேசிய கீதமே அங்கு ஒலிக்கும் ஒரே மந்திரம் என தீர்மானிக்கிறார்கள். உள்ளேயும் வெளியேயும் தேசியக் கொடி பறக்க பாரத மாதா ஆலயம் கிராமந்தோறும் உருவாகிறது.

*

மடாலயத்து மலைக் கோவில் ஒன்றில் விழா நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்த விழாவில் கூட்ட நெரிசல், வேலி சவுக்குக் கம்பு உடைதல், விபத்து, காயம் என நடந்துகொண்டே இருக்கும். அந்த மலைக்கோவிலுக்கு முன்னேற்பாடுகள் செய்ய இளைய மடாதிபதி செல்லுவார். மலைக் கோவிலுக்கான பாதையில் சமதளமாக இருக்கும் பகுதிகளிலும் மலை உச்சியிலும் கடைகள் போடப்படும். அவையே நடைபாதையின் பாதி இடத்தை அடைத்துக் கொள்ளும் என்பதால்தான் மக்களுக்கு பெரும் இடைஞ்சல் என்று புரிந்துகொள்கிறார். ஆனால், அந்த சிறு வியாபாரிகளை கடை போடாமல் தடுக்கவும் முடியாது. என்ன வழியென்று யோசிக்கிறார். ஒரு மீட்டர், இரண்டு மீட்டர் பாய் விரித்துப் பரப்பி வைக்கும் விற்பனைப் பொருட்களை அலமாரி போல் செய்து அடுக்கி வைத்தால் ஐம்பது மீட்டருக்குள் அடக்கிவிடமுடியும் என்று ஆலோசனை சொல்கிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பில் அலமாரிகள் செய்ய உத்தரவிட்டு அவற்றுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கச் சொல்கிறார். விழா விமர்சையாக நடக்கிறது. மக்கள் கூட்டம் நெரிசல் இல்லாமல் வந்துபோகிறது.

விழாவெல்லாம் முடிந்து கடைகள் எல்லாம் ஏரைக் கட்டும்போது ஏதோ தகராறு நடக்கிறது. ஆலய அலுவலகத்தில் இருக்கும் இளைய மடாதிபதி என்ன என்று விசாரிக்கச் சொல்கிறார். ஒரு சிறு வியாபாரி தரை வாடகை, அலமாரி வாடகை கட்டமுடியாமல் தவிக்கிறார். வாடகையைக் குறைத்துக்கொள்ளும்படிக் கேட்கிறாராம். உங்களைச் சந்தித்துப் பேசவிரும்புவதாகவும் சொல்கிறார். கோவில் பணியாளர்கள் அதுமுடியாதென்று தடுக்கிறார்கள் என்று உதவியாளர் சொல்கிறார். அவரை அழைத்துவா நான் பேசுகிறேன். இரண்டுக்கும் சேர்த்து 500 ரூபய்தானே நிச்சயித்திருக்கிறோம். அதுகூடவா கட்டமுடியவில்லை என்கிறார் இளைய மடாதிபதி. கோவில் பணியாளர்களே பார்த்து சரி செய்துவிடுவார்கள். நாம் இதில் தலையிடவேண்டாம் என்று உதவியாளர் சொல்கிறார். இளையவருக்கு குழப்பம் வருகிறது. என்ன விஷயம் என்று கேட்கிறார். உதவியாளர் தயங்கியபடியே உண்மையைச் சொல்கிறார். கோவில் கணக்கில் 500 ரூபாய்தான் வசூலிக்கப்படும். கோவில் பணியாளர் தன்னுடைய கணக்காக ஐந்தாயிரம் வசூலித்துக்கொள்வார் என்று சொல்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியுறும் இளையவர் சட்டென்று எழுந்து புறப்படுகிறார். உதவியாளர் அவரை சமாதானப்படுத்தி கோவில், மடாலயக் கணக்குகள் நிர்வகிக்கப்படும் விதம் பற்றி எடுத்துச் சொல்கிறார். எல்லா வருவாயும் இப்படித்தான். ஆயிரம் ரூபாய் வசூலிச்சிட்டு அம்பது ரூபாய்தான் கணக்கு காட்டுவார்கள் என்கிறார்.

இளையவர் மறு நாள் பூஜை புனஸ்காரங்கள் முடிந்ததும் நேராக மூத்த மடாதிபதியிடம் இது பற்றிப் பேசுகிறார். அவரோ நம்மால் எதுவும் செய்ய முடியாது. இதுவொரு பெரிய புதைகுழி இறங்கினால் நம்மை அழித்துவிடும். கூடுமானவரை இந்த லெளகீக கணக்கு வழக்குகளில் நாம தலையிடாம இருக்கறதுதான் நமக்கு நல்லது. நம்ம மடாலயத்தோட நிலைமை மட்டுமல்ல... எல்லா இந்துக் கோவில்களோட நிலைமையும் இதுதான் என்கிறார். இளையவருக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அரசியல்வாதிகளையும் அற நிலையத்துறை அதிகார வர்க்கத்தையும் எதிர்க்கவும் முடியாது. இந்த முறைகேடு தொடர அனுமதிக்கவும் முடியாது. என்ன செய்ய என்று யோசிக்கிறார். வணிக நிறுவனங்களைப் பொறுத்தவரையில் அரசின் கட்டுப்பாடு குறைவாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் தனியார்மயமாக்கம் நடந்தேறியிருப்பதைப் போல் ஒவ்வொரு கோவிலும் ஓர் அறக்கட்டளையாக பதிவுசெய்யப்பட்டு பக்தர்களை உறுப்பினர்களாகக் கொண்டு பக்தர்களாலேயே நிர்வகிக்கப்படுவதாக ஆக்கவேண்டும் என்று முடிவுசெய்கிறார். தனது கொள்கைக்கு ஆதரவாக மக்களை ஒருங்கிணைக்க முதலில் விவேகானந்தர் பாறையில் இருந்து தொடங்கி நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொள்ள முடிவுசெய்கிறார். கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கே என்ற முழக்கத்துடன் யாத்திரை தொடங்குகிறது. For Devotees... By Devotees... Of Devotees... பக்தர்களுக்காக பக்தர்களால் பக்தர்களின் கோவில் என்று ஒவ்வொரு கிராமத்துக்கும் அந்த ரதம் செல்கிறது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு அறக்கட்டளைக் குழுவை அந்த இடத்திலேயே உருவாக்குகிறது.

*

(தொடரும்)

No comments:

Post a Comment