Saturday 22 July 2017

இந்து மதமும் அடிமைகளும்

இந்து மதத்தில் பிராமணர்களைத் தவிர வேறு யாரும் கல்வி கற்கவே இல்லை என்பதுதான் நவீன இந்தியாவின் மெக்காலே க்ளோன்களின் முதல் முத்திரை முழக்கமாக இருந்தது. துவிஜர்களில் பிற ஜாதியினரும் சூத்திரர்களில் பெரும்பாலானவர்களும் கல்வி பெற்றதற்கான ஆதாரங்கள் வரிசையாக வந்து குவியவே, தலித்களுக்கு கல்வி தரப்படவே இல்லை என்று முழங்க ஆரம்பித்தனர். கூடவே தலித்கள் அடிமைகளாக மட்டுமே நடத்தப்பட்டதாக வெர்ஷன்.2 முழக்கமும் சேர்ந்திருக்கிறது (சேற்றில் மட்டுமே எத்தனை காலம் தான் புரளுவது. சிந்தனை முதுமை அடையும்போது அதில் தன் மலத்தையும் சிறுநீரையும் கலந்து கொள்வது தவிர்க்கமுடியாத விஷயம்தானே).

தான் ஆட்சி செய்ய விரும்பும் மக்கள் மனதில் முதல் ஆக்கிரமிப்பாளன் தான் அல்ல; ஏற்கெனவே இங்குள்ள ஆதிக்க சக்தியும் வந்தேறியே என்ற ”வரலாற்று உண்மையை’ விதைப்பது அவசியமாக இருந்தது. அதுபோலவே உலகம் முழுவதையும் அடிமைப்படுத்திய தன்செயலை நியாயப்படுத்த எல்லா ஊரிலுமே அடிமைத் தொழில் / அடிமை வாழ்க்கை இருக்கத்தான் செய்தது என்று ”விஞ்ஞானபூர்வமான வரலாற்றை’ எழுதுவதும் அதி அவசியமான அரசியல் செயலே. அவர்கள் மீது குற்றம் சொல்லவே முடியாது. நாயைக் கொல்ல விரும்பினால் அதற்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாகச் சொல்லிய பிறகு கொல்லும் சட்ட ஒழுங்குக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்லவா... அவர்கள் அப்படி வசதியான வரலாறை உருவாக்கத்தான் செய்வார்கள். நம்மவர்களில் அதை அப்படியே முழங்கும் கிளிப்பிள்ளைகளைப் பார்க்கும்போது படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான் என்ற வரியே நினைவுக்கு வருகிறது.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால் பறையர், பள்ளர் என்ற சாதியினர் தலித் ஜாதிகளின் முன்னணிப் பிரிவினராக இருக்கிறார்கள். இதில் பள்ளர்கள் தம்மை நிலவுடமை சாதிகளாகவே நினைக்கிறார்கள். நாங்கள் தலித்துகள் அல்ல என்பதுதான் இட ஒதுக்கீட்டு அரசியல் தாண்டிய அறிவுத் தளத்தில் அவர்கள் சொல்லும் வாதம். அவர்கள் நிச்சயம் அப்படியான மேலான நிலையில் இருந்திருப்பார்கள் என்பதற்கு பசு மாமிசத்தை அவர்கள் தவிர்ப்பது மிக நியாயமான அழுத்தமான ஆதாரம். பிரிட்டிஷ் ஆவணங்களில் இது இருக்காது என்றாலும் குறைந்தபட்ச தர்க்க உணர்வும் நியாய உணர்வும் தன் தாய் (மதம்) கொஞ்சமாவது கற்புடையவளாக இருந்திருப்பாள் என்ற குறைந்தபட்ச நம்பிக்கையும் உள்ளவர்களுக்குப் புரியக்கூடிய உண்மையே.

அடுத்ததாக அயோத்தி தாஸர் போன்ற பறையர் குலத் தலைவர்கள் பறையர்களைப் பூர்வ பவுத்தர்கள் என்றும் பவுத்தத்தின் வீழ்ச்சியையொட்டி சமூகத்தின் கீழடுக்குக்கு நகர்த்தப்பட்டவர்கள் என்றுமே சொல்கிறார்கள். சக்கிலியர்களுக்கு நிலம் தானமாகத் தரப்பட்டது தொடர்பான கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கவே செய்கின்றன. அப்படியாக சக்கிலியர்களும் நிலவுடமை சமூகமாக இருந்த காலமும் இருக்கத்தான் செய்திருக்கிறது.

அடுத்ததாக, பெரும்பாலான பறையர், பள்ளர், சக்கிலியர், தோட்டியர் போன்ற சாதியினர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். குத்தகை உரிமை என்பது அரை சொத்துரிமைக்கு சமம். அதிலும் கிறிஸ்தவ பிரிட்டிஷ் அரசுகள் போல் கெடு வரி வசூலிக்காத இந்து மன்னர்களின் ஆட்சி காலத்தில் குத்தகை உரிமை நிச்சயம் மேலானதாகவே இருந்திருக்கும்.

இப்படியாக தலித்களின் கடந்த காலம் தொடர்பாக அந்த மக்களின் தலைவர்களும் அவர்களுடைய நூல்களும் வேறுவிதமாகச் சொல்லும் நிலையிலும் அதெல்லாம், கிடையாது நீ அடிமையாகத்தான் இருந்தாய் என்று அடித்துச் சொல்லும் அளவுக்கு அவர்கள் மீது வெறுப்பு அதுவும் நல்லெண்ணப் போர்வையில் வெளிப்படுவதைப் பார்க்கும்போது அப்படிச் சொல்பவர்களின் எதிரி யார் என்ற குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது.
அடுத்ததாக, பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களின் வருகையென்பது தலித்களுக்கு (ஏட்டுக்) கல்விக் கண்ணைத் திறந்துவிட்டது என்ற கூற்றில் இருக்கும் உண்மையைவிட அதுதான் அயல்நாட்டுத் தேயிலைத் தோட்டங்களுக்கு தலித்களை அடிமைகளாகக் கடத்திச் சென்று கொடூரமாக ஒடுக்கியது என்ற சொல்லப்படாத கூற்றில் அதிக உண்மை இருக்கிறது. இதற்கும் பிரிட்டிஷ் ஆவணங்களில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்காது. அதில் தேயிலைத் தோட்டங்களில் தலித்கள் சந்தோஷமாக இருந்ததாகவும் ஊருக்குத் திரும்பி அந்தப் பணத்தில் நில புலன் வாங்கிய கதைகளை மட்டுமே ஆவணப்படுத்தியிருப்பார்கள். நீக்ரோக்களைப் பெருங்கருணையுடன் நடத்திய ஐரோப்பிய சமூகம் இந்திய தலித்களை மட்டும் கொடுமைப்படுத்தியிருக்குமா என்ன..? எனவே இதுவும் பெரும்பான்மை ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியாத உண்மையாகவே இருக்கும். ஆனால், மேற்குப் பக்கம் திரும்பி நின்று கிழக்குக்கு முதுகைக் காட்டும் நபர்கள் தவிர மற்றவர்களுக்குத் தென்படும் பிரமாண்ட பிரத்யட்ச சூரியன் போன்றதே இந்த உண்மை.

அடுத்ததாக, அவர்ணர்கள் என்ற வகைப்பாட்டில் மிகவும் இழிவான நிலையில் பஞ்சமர்கள் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுபவை பிராமணர்களால் மட்டும் வேண்டுமானால் (ஒரு வாதத்துக்காகத்தான்) பின்பற்றப்பட்டிருக்கலாம். பிற சாதியினர் இப்படியாக விலக்கி வைத்திருக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. சாதிக் கலப்பை பிற சாதியினர் மூர்க்கமாகத் தவிர்த்த/தடுத்த நிலையிலும் கண்ணில் படவே கூடாது என்றெல்லாம் செய்திருப்பார்கள் என்று நம்பமுடியவில்லை. அதிலும் பவுத்த, சமண, இஸ்லாமிய அரசுகள் இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அரசாண்டிருக்கும் நிலையில் இப்படியான நிலை நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. புத்தர் சாதி ஏற்றத் தாழ்வு குறித்து இப்படியான கொடூரச் சித்திரத்தையோ எதிர்ப்பையோ எங்குமே பதிவு செய்திருக்கவில்லை. இந்தியாவுக்கு வந்து சென்ற பயணிகள் எழுதிய குறிப்புகளில் கூட இணக்கமான சமூகச் சித்திரமே இருக்கிறது. எனவே, தலித்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர் என்பது எஜமானரே நாணி வெட்கும் அளவுக்கான அறிவுஜீவி ஜால்ரா மட்டுமே.

கடைநிலை சாதியினர் குறைந்த எண்ணிக்கையில் கல்வி பெற்றதற்கு மேல் சாதியினரின் ஒடுக்குமுறை மட்டுமேதான் காரணமாக இருக்குமா... கருணை மிகு மிஷனரிகள் சமத்துவப் பள்ளிகளை வதவதவெனத் திறந்துவிட்டு 200-300 ஆண்டுகள் கழித்தும் காமராஜர் மதிய உணவு போட்டுத்தான் வரவழைக்கவேண்டியிருந்தது; அப்போதும் இடை நிற்றல் அந்தப் பிரிவு மக்களிடையே அதிகமாக இருந்தது என்றால் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற எளிய நம்பிக்கையும், ஏட்டுக் கல்வியின் இறுக்கமான கெடுபிடிகள் அந்தப் பிரிவினரின் சுதந்தரக் கற்றலுக்கு எதிரிடையாக இருந்ததும் கூடத்தான் காரணமாக இருந்திருக்கும்.

இந்திய அளவில் ஜாதிய வாழ்க்கை என்பதே குலத் தொழில் வாழ்க்கைக்கான ஆதாரமாக இருந்திருக்கிறது. குலத் தொழில் வாழ்க்கையே கல்விப் பரவலுக்கான தேவையை நெறிப்படுத்தியதாக இருக்கிறது. தெய்வங்கள் பல... வாழ்க்கை மதிப்பீடுகள் பல... என்ற உயரிய பன்மைத்துவ ஆன்மிக நம்பிக்கையின் தவிர்க்க முடியாத கருநிழலே/நீட்சியே ஜாதியப் பார்வை. ஒவ்வொரு தெய்வத்தை வணங்குபவர்களும் ஒவ்வொரு குலம் என்பதே ஜாதி உணர்வின் அடிப்படை. அதுவே சமூகத் தளத்தில் ஒவ்வொரு குலத்துக்கும் ஒவ்வொரு தொழில் என்பதாக நிலைபெற்றிருக்கிறது. ஏட்டுக் கல்வி மூலம் பல தொழில் கற்று பிடித்ததைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பை அதுவே தள்ளியும்போட்டிருக்கிறது. மன்னராட்சி மறைவு, தொழில்புரட்சி உதயம், அச்சு இயந்திரக் கண்டுபிடிப்பு போன்ற காரணங்களோடு இதுவும் ஒரு காரணமாக அதனளவில் இருந்திருக்கிறது.

ஜாதிவிட்டு ஜாதி மாறுதல் என்றால் தெய்வத்தை மாற்றிக்கொள்ளுதல் என்பதால்தான் சமூக அங்கீகாரம் அதற்குக் கிடைக்கவில்லை. சிவனை வணங்கும் சைவர்களை விஷ்ணுவை வணங்கும் வைஷ்ணவர் விலக்கிவைப்பதற்கும் பறையர்களிலேயே ஒரு பறையர் குலம் இன்னொரு பறையர் குலத்துடன் கொள்வினை கொடுப்பினை செய்யாமல் இருப்பதற்கும் இந்த வெவ்வேறு தெய்வ நம்பிக்கையே காரணம். பல தெய்வங்களை அனுமதிக்கும் சமூகத்தில் பல ஜாதிகள் இருந்தே தீரும். ஒற்றை தெய்வத்தை வலிந்து திணிக்கும் மதங்களில் ஜாதிகள் இல்லை என்பதில் இருந்து இந்த உண்மையை ஒருவர் புரிந்துகொள்ளமுடியும்.

தெய்வங்களையோ அதனால் ஜாதிகளையோ மாற்றிக்கொள்ள அனுமதிக்காததில் பெரிய தவறில்லை. ஆனால், தொழில்களை மாற்றிக்கொள்ள அனுமதித்திருக்கலாமே என்ற கேள்வி ஒருவருக்கு இங்கு நிச்சயம் எழும். ஆனால், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற ஒற்றை தெய்வத்தை வணங்கிய சமூகத்திலேயே மன்னரின் மகனே மன்னராகவும் அடிமையின் மகன் அடிமையாகவுமே இருந்த நிலையில் வேறு வேறு ஜாதிகளாக இருந்தவர்கள் குலத் தொழிலை மாற்றிக்கொள்ளாதது பற்றி அப்படி ஒன்றும் தர்மாவேசம் கொண்டுவிட முடியாதென்பதே உண்மை.

எனவே, பன்மைத்துவத்தை அடிப்படையாகக்கொண்ட இந்து ஆன்மிகக் காமதேனுவின் தவிர்க்க இயலா சாணியே ஜாதிய ஒடுக்குமுறை. காமதேனு என்பது சாணி போடும் ஒரு விலங்கு மட்டுமே என்று அதன் ஆசனவாயை மட்டுமே பார்த்துச் சொல்பவர்கள் நிச்சயம் ஓர் அறிவியல்பூர்வமான நேர்மையான உண்மையைத்தான் சொல்கிறார்கள். ஆனால், அது சாணியை மட்டுமே போடவில்லை என்பது அதன் பாலை ஒரு சொட்டாவது அருந்தியவர்களுக்கு மட்டுமே தெரியவரும். அதற்கு ஆசனவாயில் இருந்து கண்ணை அகற்றிக் கொண்டாகவேண்டியிருக்கும். கழுகுக்குப் பிணம்; பன்றிக்கு மலம்; இடதுசாரிகளுக்கு மிகைப்படுத்தப்பட்ட எதிர்தரப்புக் குறைகள் (மட்டுமே) என்ற நிலையில் இது சாத்தியமில்லாத விஷயமே. ஆனால், இழப்பு காமதேனுவுக்கோ அதன் பாலைச் சில சொட்டுகள் அருந்தியவர்களுக்கோ அல்ல.

No comments:

Post a Comment