Friday 21 July 2017

பாரதப் பாரம்பரியக் கல்வி

பாரதப் பாரம்பரியக் கல்வி பற்றிச் சொல்லப்படும் வாக்கியங்களில் பெரும்பாலானவை மேம்போக்கானவையாகவும் அரை உண்மைகளைப் பேசுபவையாகவும் அரசியல் சார்புடனுமே இருக்கின்றன.

பாரதப் பாரம்பரியக் கல்வி முறையில் அனைத்து ஜாதியினருக்கும் கல்வி தரப்படவில்லை. இந்தியாவில் கிறிஸ்தவ மடாலயங்களால் தொடங்கப்பட்ட பள்ளிகளில்தான் அனைத்து ஜாதியினருக்கும் கல்வி முதன்முதலாகத் தரப்பட்டது என்பதுதான் பலரும் உற்சாகத்துடன் சொல்ல விரும்பும் வாக்கியமாக இருக்கிறது.

தொழிற்புரட்சி நடப்பதற்கு முன்பாக உலகில் கடைநிலைப் பிரிவுகளில் இருந்தவர்களுக்கு என்றுமே எங்குமே கல்வி தரப்பட்டிருக்கவில்லை (கிறிஸ்தவம் தோன்றிய நாடுகளிலும்) என்பதை அவர்கள் சொல்லவே மாட்டார்கள்.
உலகம் முழுவதும் மன்னராட்சி காலத்தில் குலத் தொழிலே மிக முக்கியமானதாக இருந்துவந்திருக்கிறது. அனைத்து கல்வித் துறைகள் சார்ந்த பாடங்களையும் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையும் கொண்ட ஏட்டுக் கல்வி என்பது மன்னராட்சி வலுவிழக்கத் தொடங்கிய, அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட, தொழில் புரட்சி ஏற்பட்ட பிறகே உலகம் முழுவதிலும் வந்திருக்கிறது. பாரதத்திலும் அப்படியாகவே நடந்திருக்கிறது என்பதைச் சொல்லாமல் இந்து மதம் மட்டுமே கடைநிலையில் இருந்தவர்களைக் கல்வியில் ஓரங்கட்டியதுபோன்ற சித்திரத்தை உருவாக்குவார்கள்.

பாரதப் பாரம்பரியப் பள்ளிகளில் கடைநிலை சாதியைச் சேர்ந்த சிலர் படித்திருப்பதை எடுத்துக்காட்டினால் அது விதி விலக்கு என்று நிராகரித்தும்விடுவார்கள். ஆதி காவியத்தை எழுதியவர் கடை நிலைத் தொழிலில் இருந்தவர் (அல்லது ஆதி காவியம் கடைநிலைத் தொழிலில் இருந்தவரின் பெயரிலேயே தொகுக்கப்பட்டிருக்கிறது) என்பதை புராணம் என்று ஒதுக்கிவிடுவார்கள். மேற்குலக விதி விலக்குகள் மட்டுமே பொருட்படுத்தத் தகுந்தவை!

பவுத்தம், சமணம், இஸ்லாம் போன்றவை பாரதத்தில் பல நூற்றாண்டுகள் இருந்த நிலையிலும் கடைநிலைப் பிரிவினர் கல்வி கற்காமல் இருந்ததற்கு இந்து சமூக சாதி அமைப்பே காரணம் என்ற அர்த்தம் வரும்வகையிலேயே இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கவும்படும்.

அந்தக் குலவழிக் கல்வியில் இந்து சமூகம் கட்டடக்கலையில், நகைக் கலையில், விவசாயத்தில், மருத்துவத்தில், அரச நிர்வாகத்தில், ஆயுத உற்பத்தியில், ஆன்மிகத்தில், பொருளாதாரத்தில், கணிதத்தில், இலக்கியத்தில், சமூக ஒழுங்கமைவில் உன்னத நிலையில் இருந்ததைச் சொல்லமாட்டார்கள்.

கிறிஸ்தவர்களால் இந்தியாவில் கொடுக்கப்பட்ட கல்விதான் தாய் மொழிக் கல்விமீது நடத்தப்பட்ட மாபெரும் முதல் தாக்குதல். இந்துப் பள்ளிகள் ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து அதே பாதையில் வீர நடை போடத் தொடங்கியுள்ளன என்றாலும் தாய் மொழிக் கல்வியின் நெஞ்சில் கத்தியைச் செருகியது கிறிஸ்தவ மடாயலங்கள்தான் என்பதைச் சொல்லவேமாட்டார்கள்.

அந்த கிறிஸ்தவ மடாலயங்கள் கற்றுத் தந்த கல்வி என்பது பெரும்பாலும் நவீன சமூகத்து வேலை ஒன்றை இலக்காகக் கொண்டு கற்றுத் தரப்படுவது. அங்கு வேறு தர்மங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. குலவழிக் கல்வி தரப்பட்ட காலத்தில் ஒரு பிராமண மருத்துவர் தலித்துக்கு மருத்துவம் பார்த்திருக்கவில்லைதான். ஆனால், தலித்களுக்கு திறமை வாய்ந்த தலித் மருத்துவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லமாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் பிராமண மருத்துவர், பிராமணர்களுக்கு அவர் நேர்மையான மருத்துவ சிகிச்சையையே தந்திருக்கிறார். இன்றைய அலோபதி மருத்துவர்கள்போல் வாங்கிப் போட்ட மிஷின்களின் பணத்தை கறந்தாகவேண்டுமென்றும் கட்டி வைத்திருக்கும் மருத்துவமனைக்கான வட்டிக்காக நோயாளியின் உடம்பில் கத்தியைப் பாய்ச்சியாகவேண்டும் என்றும் அவர்கள் நடந்துகொள்ளவில்லை.

இதற்கு முக்கிய காரணம் அன்றைய குல வழிக் கல்வி தர்மத்துக்கு உட்படதாக மதச் செல்லாக்குக்கு உட்பட்டதாக இருந்தது. என்றைக்கு கல்வியில் இருந்து மத நீக்கம் செய்யப்பட்டதோ அன்றே அது தனி நபரின் தர்ம நம்பிக்கைக்கு உட்பட்டதாக ஆகிவிட்டது. பெரும்பாலான இன்றைய மருத்துவர்கள் சுய நலமிகளாகிவிட்டிருப்பதற்கு நவீனக் கல்வியின் மத நீக்கமே காரணம். நவீன மருத்துவர்களின் தவறுக்கு நவீன மருத்துவமோ அறிவியலோ காரணமல்ல. ஆனால், பாரம்பரிய மனிதர்களின் தவறுகளுக்கு மட்டும் பாரம்பரிய மதமே காரணம் என்பதுதான் ஆதாயம் தரும் உண்மை என்பதால் அதுவே ஆறத் தழுவிக்கொள்ளப்படுகிறது.

முந்தைய காலகட்டத்தில் குல வழித் தொழில் உலகம் முழுவதும் இருந்தபோது ஒவ்வொரு குலத்தைச் சேர்ந்தவரும் தத்தமது குல முன்னோர்களிடமிருந்து கண்டும், கேட்டும், கைகளால் செய்து கற்றுக் கொண்டதைக் கல்வி என்று சொல்ல முடியாதா என்ன? இன்றைய நவீனக் கல்வியைவிட வேலைக்கான உத்தரவாதத்தை அது மிக தெளிவாக அழுத்தமாக 100 சதம் உறுதி செய்திருந்தது. இன்று நவீன கல்வி பெற்று வேலையில்லாமல் இருப்பதுபோல் அன்று யாரும் நடுத்தெருவில் விடப்பட்டிருக்கவில்லை.

பீ அள்ளுவது ஒரு வேலையா... குலவழித் தொழிலாக அதைச் செய்ய நேர்ந்ததற்கு இந்து சாதி அமைப்புதானே காரணம். பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய அனைத்து ஜாதியினருக்கும் கல்வி என்பதுதானே அவர்களை அந்த இழிவான தொழிலில் இருந்து மீட்டது என்ற வாதத்துக்கு மூன்று பதில்கள் சொல்ல முடியும்.

ஒன்று அந்தத் தொழில் வெகு பிந்தைய காலத்தில் தோன்றியது.

இரண்டாவதாக சிந்து சரஸ்வதி காலகட்ட நகரம் என்பது தெளிவான கழிப்பறைக் கால்வாய் வசதியுடன் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது அனைவருக்கும் கல்வி கொடுக்காததால்தான் ஒரு சாதி மலம் அள்ளும் வேலையில் முடங்கிவிட்டது என்று சொல்வதை ஏற்கவே முடியாது.

மூன்றாவதாக, ஏராளமான சீர்திருத்தச் செம்மல்களும் நவீன அறிவியல் மேதைகளும் கார்ப்பரேட் கொம்பன்களும் உருவாகிவிட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் கூட சாக்கடை வேலைகள் மனிதர்களாலேயே செய்யப்பட்டும் வருகின்றன. நவீன கல்வியும் நவீன காலகட்டமும் ஏற்படுத்தியிருக்கும் இந்த இழிநிலையைவிட இத்தகைய வசதி வாய்ப்புகள் இருந்திராத பாரம்பரிய காலகட்டத்தில் இருந்த இழிநிலைமையைக் கொஞ்சம் நிதானமாகவே விமர்சிக்கலாம். நேற்றைய ”பின்னடைவை’ விமர்சிப்பதன் மூலம் இன்றைய இழிவின் பொறுப்பில் இருந்து தப்பித்துக்கொள்ளும் சாதுரியம் மிகவும் கேவலமானது.

பத்து பதினைந்து வருடங்கள் ஒரு பாடக் கல்வியைப் பெற்றுவிட்டு வேறொரு துறையில் பணிபுரியும் அபத்தமோ, படித்த பாடத்தில் பத்து சதவிகிதம் மட்டுமே பயன்படக்கூடிய வேலையைச் செய்து வரும் அசட்டுத்தனம் பற்றியோ யாரும் சொல்லமாட்டார்கள் (ஒரு லிட்டர் பால் பாத்திரத்தில் 10 லிட்டர் பாலை ஊற்றும் மடத்தனம் இது).

ஒருவர் எவ்வளவுக்கு எவ்வளவு அறிவை வெளிப்படுத்துகிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர் அறிவற்றவர் என்பது புலனாகும் வகையில் பேசுவதே பலருக்கு வாய்த்திருக்கிறது. அதிலும் இந்து மதத்தை விமர்சிக்கும் வாக்கியங்கள் என்றால் மூளையைக் கழற்றிவிட்டுப் பேசுவதே இடதுசாரி அடையாளமாக இருக்கிறது.  

No comments:

Post a Comment