Friday 6 July 2018

துயருறு ஆன்மாவின் அரசியல் சீற்றம் - 1

துயருறு ஆன்மாவின் அறச் அரசியல் சீற்றம்



அம்பேத்கருடைய பங்களிப்பு மூன்று வகையில் மிகவும் முக்கியமானது. முதலாவதாக, அம்பேத்கர் இந்திய சாதி அமைப்பின் வேர் சாதிகளாக இருந்த பிரிவினரின் துயரத்தின் அழுத்தமான அரசியல் குரலாக வெளிப்பட்டவர். காந்த ஊசி எந்நிலையிலும் தன் திசையை மாற்றிக்கொள்ளாமல் இருப்பதுபோல் அம்பேத்கர் தன் வாழ்வின் அனைத்துச் செயல்களிலும் அனைத்துக் கட்டங்களிலும் உறுதியாக ஒரே குறிக்கோளுடன் இயங்கினார்.


சாதி இந்துக்களால் பாதிக்கமட்டுமே பட்டதாக அவர் கருதிய கடைநிலை பிரிவினரின் நலனுக்காக (அவர் விரும்பிய பாணியிலான நலனுக்காக) முழு மூச்சாகப் பாடுபட்டார். அவர் யாருக்காகப் போராடினாரோ அவர்கள் அவருக்கு ஆதரவு தரவில்லை. அவர் எதிர்க்க வேண்டியிருந்த சக்திகள் அராஜக வலிமையுடன் இருந்தன. நேசக் கரம் நீட்டியவர்கள் எல்லாருமே தத்தமது அரசியல் கணக்குகளைக் கொண்டிருந்தனர். ஒரே மீட்பராக நம்பிய ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து எதுவுமே பேச முடிந்திருக்கவில்லை. ஜாதிரீதியான அடையாளம் மட்டுமே போதுமா... வர்க்க ரீதியான பார்வையும் அவசியமா என்ற குழப்பம் அவருக்கு இறுதி வரை இருந்திருக்கிறது. இப்படியான பல நெருக்கடிகள் இருந்த நிலையிலும் அவருடைய கொள்கையில் அவர் கொண்டிருந்த பிடிப்பு, சமரசமற்ற தன்மை போற்றுதலுக்குரியது. ஒரு தலித் அறீவுஜீவியாக அவர் வர்ண சமூகம் பற்றிய சித்திரிப்பு, ஜாதியின் தோற்றுவாய், இந்தியாவின் பூர்வகுடிகள், இந்தியாவின் சமூகவியல் வரலாறு, மத மாற்றத்தின் தீமைகள், வலுவான இந்திய தேசியத்தின் அவசியம் என பல்வேறு விஷயங்கள் பற்றி மிக விரிவான மிகவும் அழுத்தமான பார்வையை முன்வைத்திருக்கிறார். அந்தவகையில் தலித் பார்வையில் இந்தியா என்ற அறிவுத் துறையின் முன்னோடியாக விளங்குகிறார்.


இரண்டாவதாக, இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார். மையத்தில் தேவையான அளவுக்கு அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்களுக்கு தேவையான சுதந்தரத்தைக் கொடுத்து ஒரு சமநிலையிலான கூட்டாட்சிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அனைவரையும் உள்ளடக்கிய, குறிப்பாக நலிவடைந்த பிரிவினருக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இந்திய அரசியல் சாசனம் நீதியும் நேர்மையும் சமத்துவமும் நவீனப் பார்வையும் கொண்டதாக உருவானதில் அவருடைய பங்கு கணிசமானது.


மூன்றாவதாக, இந்து சமூக வேர் ஜாதி மக்களின் விடுதலைக்காக அவர் முன்வைத்த பெளத்த மத மாற்றம் என்பது அவருடைய வாழ்வின் ஆகப் பெரிய சாதனையாகத் திகழ்கிறது. இந்தியாவுக்கு குறைந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலேயே தன் மத மாற்ற முடிவு இருக்கும் என்று காந்தியடிகளுக்குக் கொடுத்த வாக்குறுதியை அவர் முழுமனதுடன் பரிபூரணமாக நிறைவேற்றியிருக்கிறார்.



இந்த மூன்று பங்களிப்புகளின் மூலம் நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளில் முக்கியமானவராக அம்பேத்கர் இருந்திருக்கிறார். முஹம்மது அலி ஜின்னா, ஈ.வெ.ராமசாமி போன்றோரைப் போலவே இந்து விரோதம் தலை முதல் அடி வரை கொண்டவர் என்றாலும் செயல் அளவில் அம்பேத்கர் செய்திருப்பவை மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக அமுதுக்கும் விஷத்துக்கும் இடையிலான வித்தியாசமாக அம்பேத்கரை உயரத்தில் கொண்டு நிறுத்தியிருக்கின்றன.



*

யாருடைய அரசியல் சாசனத்தை அம்பேத்கர் எழுதினார்..?


சுதந்தரம் பெற்ற காலகட்டத்தில் இந்தியாவில் நான்கு சிந்தனைப் போக்குகள் பிரதானமாக இருந்தன. முதலாவதாக, காந்திய சிந்தனைகள். இரண்டாவதாக, நேருவிய அதாவது மேற்கத்திய, நவீன சிந்தனைகள். மூன்றாவதாக, இந்துத்துவ சிந்தனைகள். நான்காவதாக இந்து-இந்திய விரோத சிந்தனைகள் (ஜின்னா, ஈ.வெ.ரா. முன்னெடுத்தவை).


இந்திய அரசியல் சாசனம் இவற்றில் நான்காவதின் போக்கில் அமைய வாய்ப்பு அப்போது இருந்திருக்கவில்லை. கிராம ராஜ்ஜியம், கதர்-கைத் தொழில் பொருளாதாரம், மது விலக்கு, பசு பாதுகாப்பு போன்ற காந்திய சிந்தனைகள் வெகு அழகாக வழிகாட்டு நெறிப் பகுதிக்குக் கொண்டுசெல்லப்பட்டன. வேண்டுமானால் மாநிலங்கள் அமல்படுத்திக் கொள்ளலாம். வேண்டாமென்றால் விட்டுவிடலாம் என்று சொல்லியதோடு மத்திய நேரு அரசு இவற்றுக்கு எதிரான விஷயங்களையே தீவிரமாக அமல்படுத்தி காந்திய தாக்கத்தை ஓரங்கட்டியது.


இஸ்லாமியத் தீவிரவாதம் இந்துகளுக்கு இழைத்த கொடூரங்களின் அடிப்படையில் சிந்தித்த கோட்சேவின் செயலினால் இந்துத்துவர்களுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஏற்கெனவே சனாதன - இந்துத்துவ சிந்தனைகளுக்கு நவீன உலகில் இடமில்லாமல் போய்விட்டிருந்தது. எனவே இந்திய அரசியல் சாசனம் அவற்றையும் எளிதில் ஓரங்கட்டிவிட்டது.



அப்படியாக இந்திய அரசியல் சாசனம் நேருவிய மேற்கத்திய சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.



இப்போது அம்பேத்கருமே நேருவியத்தின் பெரும்பாலான கொள்கைகளை அப்படியே அவர் பாணியில் அவருடைய சிந்தனையின் போக்கில் கண்டடைந்தவரே. அந்தவகையில் இந்திய அரசியல் சாசனம் அம்பேத்கருடைய முத்திரையையே கொண்டிருப்பதாகச் சொல்லவும்முடியும். ஆனால்...


*


காந்தி, நேரு, படேல், ஜெகஜீவன்ராம் போன்ற சீர்திருத்த மனோபாவம் கொண்டவர்களால் நிறைந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கடும் விமர்சகராக இருந்தார் அம்பேத்கர். ஆனால், இந்தியா சுதந்தரம் பெற்றதும் ஆட்சிப் பொறுப்பில் வந்த காங்கிரஸ் கட்சி அந்த அம்பேத்கரை சட்ட அமைச்சராக ஆக்கியது. முதலில் அம்பேத்கருக்கு அந்தப் பதவி பிடித்திருக்கவில்லை.


மேல் ஜாதி ஆதிக்கம் நிறைந்த நாடாளுமன்றத்தில், தான் விரும்புவதுபோல் எதுவும் செய்யமுடியாது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. எனவே, தொழிலாளர் நலத்துறை அல்லது திட்டமிடல் துறையைத்தான் கேட்டார். ஆனால், காந்தியின் அழுத்தமான பரிந்துரையின் பேரில் அம்பேத்கர் சட்ட அமைச்சராக ஆக்கப்பட்டார். இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவின் தலைமைப் பதவியிலும் அமர்த்தப்பட்டார். முடிந்தவரை தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு நன்மை தரும் விஷயங்களைச் செய்வோம் என்ற தீர்மானத்துடன் பணியைத் தொடர்ந்தார்.


ஆனால், அவரால் அதையாவது செய்ய முடிந்தா?

ஒருபக்கம், தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று அவர் செய்ய நினைத்தவற்றில் முக்கியமானவற்றைச் செய்ய முடிந்திருக்கவில்லை. இன்னொருபக்கம், தாழ்த்தப்பட்டவர்களுடைய நலனுக்கென்று அவர் செய்தவை அந்தப் பலனைத் தந்திருக்கவில்லை. அப்படியாக இரண்டுவகையிலும் அவருக்குப் பின்னடைவே ஏற்பட்டிருக்கிறது.


தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதிகளை உருவாக்கவேண்டும். அப்போதுதான் தாழ்த்தப்பட்டவர்களின் உண்மையான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படமுடியும் என்று அவர் நம்பினார். 1930களில் பிரிட்டிஷாரிடம் அது தொடர்பான கோரிக்கையை முன்வைத்தபோது காந்தியடிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து அதைத் தடுத்தார். தாழ்த்தப்பட்ட ஜாதியினர் இந்து சமூகத்தின் ஓர் அங்கமே. தனித் தொகுதி என்பது அவர்களை இந்து சமூகத்தில் இருந்து பிரித்துவிடும். மேல் ஜாதி இந்துக்கள் தாம் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்து ஹரியின் குழந்தைகளை மேல் நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்று காந்தி சொன்னார்.


தாழ்த்தப்பட்ட மக்களுமே திறக்க மறுத்த கோவில்களின் முன் கூப்பிய கரங்களுடன் காத்திருந்தனர். தம்முடைய இந்துக் கோவில்களில் தமக்கான விழாக்களைக் கொண்டாடி வந்தனர். அவர்கள் ஒருபோதும் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளவோ இந்து சமயத்தில் இருந்து விலக்கிக் கொள்ளவோ விரும்பவே இல்லை. இந்து சமூகத்தின் பெருமை மிகு பாரம்பரியத்தின் அங்கமாக அங்கீகரிக்கப்படவே விரும்பினார்கள்.


உண்மையில் காந்தி அப்படி விரும்பியதால் தாழ்த்தப்பட்டவர்கள் அவர் பின்னால் அணி திரண்டு அதை விரும்பினார்கள் என்று நிச்சயம் சொல்லவே முடியாது. தாழ்த்தப்பட்டவர்கள் அப்படி விரும்பியதால் காந்தி அதைத் தனது அரசியலாக முன்னெடுத்தார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பேசினார். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் விரும்பியதுபோல் பேசவில்லை. அம்பேத்கரின் கோபம் மேலிருந்து பார்த்தால் நியாயமானது. மக்களின் மத்தியில் இருந்து பார்த்தால் தவறானது.


பிரிட்டிஷார் தன்னை தாழ்த்தப்பட்ட ஜாதியினரின் அரசியல் பிரதிநிதியாக அங்கீகரித்திருக்கும் நிலையில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்று சொல்லி இப்படி உண்ணாவிரதம் இருக்கும் உரிமையை காந்திக்கு யார் கொடுத்தது... என்னுடன் வந்து சாப்பிடச் சொல்லுங்கள் அவரை என்று கடிந்துகொண்டிருக்கிறார் அம்பேத்கர்.



தாழ்த்தப்பட்ட ஜாதியினரின் இன்னொரு தலைவரான எம்.சி.ராஜா ஏற்கெனவே வேதனையில் உழலும் நம் ஜாதியினருக்கு காந்தியைக் கொன்ற பாவமும் வந்து சேர்ந்தால் மீட்சியே கிடைக்காது... நீங்கள் தனித் தொகுதி கோரிக்கையைக் கைவிடவில்லையென்றால் நான் போய் அது வேண்டாம் என்று சொல்லப் போகிறேன் என்று சொன்னதைத் தொடர்ந்து அம்பேத்கர் தனித் தொகுதி கோரிக்கையைக் கைவிட்டிருந்தார்.



தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு (ரிசர்வ்ட்) செய்யப்பட்டிருக்கும் தொகுதியில் நிறுத்தப்படும் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களில், தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கில் 35%க்கு மேல் பெறுபவரைத்தான் வெற்றிபெற்றவராக அறிவிக்கவேண்டும் என்ற நியாயமான கோரிக்கையைக்கூட அம்பேத்கரால் அரசியல் சாசனத்தில் இடம்பெறச் செய்யமுடியவில்லை.


மேல் ஜாதியினர் ஒன்று கூடி, தமக்குக் கை கட்டிப் பணி புரியத் தயாராக இருக்கும் தாழ்த்தப்பட்டவர் ஒருவரை வெற்றி பெற வைத்து, ரிசர்வ்ட் தொகுதி வழிமுறையை செல்லாக்காசாக்கிவிடுவார்கள் என்று பயந்தார். ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு அப்படியான தேர்தல் வழிமுறையை உருவாக்கிக் கொடுத்தால் எங்களுக்கும் அதுபோல் கொடுக்கவேண்டும் என்று முஸ்லீம் லீகினர் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.


இது 1930களில் நடந்த சம்பவம். பாகிஸ்தான் எனத் தனி நாடு கொடுத்துவிட்டிருக்கும் நிலையில், 1948, ஜனவரி 30-ல் காந்தியும் இறந்துவிட்ட நிலையில் அம்பேத்கர் தனித் தொகுதித் தீர்மானத்தையோ 35% தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கு என்றதையோ இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெறச் செய்திருக்க முடியும். ஆனால், அதற்கு அவர் முயற்சி செய்யவில்லை. அதாவது, அதற்கு இடம் தரப்படவில்லை.


(தொடரும்)


No comments:

Post a Comment