Thursday, 22 September 2016

அதையும் தாண்டிப் புனிதமானது... (3)

ப்ளாஷ்பேக் முடிந்து அடுத்ததாக பண்ணைப்புர கிராமத்துக்குக் கதை நகர்கிறது. அங்கு அறுவடை காலம் வருகிறது. நாயகன் குரங்கும் அறுவடைக்குச் செல்கிறது. ஆனால், அது தாறுமாறாக வயலில் இறங்கி பயிர்களை மிதித்து அதற்குத் தெரிந்தவகையில் அறுவடை செய்கிறது. "தம்பிக்கு எந்த ஊரு' என்று கேட்டு ஒருவர் நாயகக் குரங்குக்கு அருவாள் பிடித்து கதிர் அறுக்கக் கற்றுத் தருகிறார். அன்று மாலைக்குள் கற்றுக்கொண்டு அருமையாக அறுத்துக் கட்டுகிறது. பண்ணையார் மர நிழலில் குடை பிடித்தபடி அமர்ந்துகொண்டு எல்லாரையும் வேலை வாங்குகிறார்.

நீங்க வயல்ல இறங்கி அறுவடை செய்ய வேண்டியதுதான என்று நாயகன் குரங்கு அவரைப் பார்த்துக் கேட்கிறது.

பண்ணையார் சிரித்தபடியே காலெல்லாம் சேறாகிடுமே என்று சொல்லிச் சமாளிக்கிறார்.

அறுத்து முடிச்சிட்டு எல்லாரையும்போல ஆத்துல இறங்கிக் கழுவிக்கிடவேண்டியதுதான என்று மடக்குகிறது.

அது சரிதான்... நாளைக்கு இறங்கி அறுக்கறேன் என்று விளையாட்டாகச் சொல்லி மற்றவர்களை வேலை வாங்குகிறார்.

மாலையில் கூலி கொடுக்கும் நேரம் வருகிறது. ஒவ்வொருவருக்கும் படியால் அளந்து போடுகிறார்கள். நாயகன் குரங்குக்கும் ஒரு கூடை நிறைய தானியம் கிடைக்கிறது. இது முழுசும் உனக்குத்தான் என்று பண்ணையார் சொல்கிறார். நாயகக் குரங்குக்கு ஒரே சந்தோஷம்... ஆசையாக அந்த கூடையை அணைத்துக்கொள்கிறது. அதன் பிறகு மலைபோல் குவித்து வைத்திருக்கும் நெல்லை மூட்டைகட்டி வண்டியில் ஏற்றுகிறார்கள். நாயகன் குரங்கு அதை வியப்புடன் பார்க்கிறது. அனைத்து மூட்டைகளும் ஏற்றிய பிறகு பண்ணையார் அவற்றின் மேலே ஏறி உட்கார்ந்து, யானைச் சவாரி செய்வதுபோல் கம்பீரமாகப் புறப்படுகிறார்.

நாயகன் குரங்குக்கு அநீதி நடக்கிறதென்று மூளைக்குள் விளக்கு எரிகிறது. பொங்கறதுக்கான நேரம் அது. நாலு சம்மர் சால்ட் அடித்து மரக்கிளைகளில் தொங்கியபடிச் சென்று பண்ணையார் போகும் மாட்டுவண்டியைத் தடுத்து நிறுத்துகிறது. கையில் இருக்கும் கதிர் அருவாளால் மூட்டைகளைக் கட்டிய கயிறை அவிழ்த்துவிட்டு கூலியாட்களை அழைத்து எடுத்துக்கொள்ளச் சொல்கிறது.

நாள் பூரா குனிஞ்சு நிமிர்ந்து அறுவடை செஞ்ச நமக்குக் கூடை நெல்லு.... வரப்போரம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தவருக்கு இத்தனை மூடை நெல்லா என்று கேட்கிறது.

பண்ணையாருக்குக் கோபம் வருகிறது. மனிதக் குரங்கைச் சாட்டையால் அடிக்கிறார். அந்தச் சாட்டையை அவரிடமிருந்து பிடுங்கி அவரைக் கீழே தள்ளிவிடுகிறது.

"நான் ஆணையிட்டால்

அது நடந்துவிட்டால்

இந்த உலகத்தில் ஏழைகள் இருக்கமாட்டார்...

ஒரு துன்பமில்லை ஒரு துயரமில்லை

அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்...

ஒரு வேலை என்றால்

அதைக் கூடிச் செய்தால்

அதில் கிடைப்பதை அனைவருக்கும் பிரித்தளிப்பேன்

நான் உள்ளவரை

ஒரு துன்பமில்லை

யாரும் கண்ணீர் கடலிலே விழவேண்டாம்

- என்று கிழவியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துப் பாடுகிறது.

ஆனால், பாடல் முடிந்ததும் கூலித் தொழிலாளர்கள் அனைவரும் கீழே விழுந்த நெல் மூட்டைகளை மீண்டும் பண்ணையாரின் வண்டியில் ஏற்றி அவரையும் தோள் கொடுத்து மேலேற்றிவிட்டு போகச் சொல்கிறார்கள். மனிதக் குரங்குக்கு ஒன்றுமே புரியவில்லை.

அவர்களைத் தடுத்து நிறுத்தி ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்கிறது.

அந்த நிலம் அவருக்கு சொந்தம்... அதுல விளையறது எல்லாம் அவருக்குத்தான் சொந்தம் என்று சொல்கிறார்கள்.

நிலம் எப்படி ஒருத்தருக்கு சொந்தமாக முடியும்... காத்து, தண்ணி, ஆகாயம், நெருப்பு மாதிரி நிலமும் கடவுள் கொடுத்தது... எல்லாருக்கும்தான சொந்தம்.

அப்படியில்லை... மனுஷங்களுக்கு நிலம் சொந்தமாக இருக்கும் என்று ஏழைகள் சொல்கிறார்கள்.

அப்படின்னா உங்களுக்கு சொந்தமான நிலம் எங்க இருக்கு... அதுல போய் உழைச்சு கிடைக்கறதை எடுத்துக்க வேண்டியதுதான..?

கூலித் தொழிலாளர்கள் தலை குனிந்து நிற்கிறார்கள்.

நிலம் எல்லா மனிதர்களுக்கும் சொந்தமா இருக்காது. சிலருக்கு மட்டுமே சொந்தம்... மத்தவங்களுக்கு உழைப்பு மட்டுமே சொந்தம்.

இது என்ன அநியாயமா இருக்கு என்று நாயகன் குரங்கு அதிர்ச்சியில் உறைகிறது.

நீங்க இத்தனை பேர் இருக்கீங்களே அவர் ஒருத்தர்தான இருக்காரு. அவரை அடிச்சிட்டு நீங்களே எடுத்துக்க வேண்டியதுதான.

அடிச்சுப் பிடுங்கறது விலங்கு குணம். நாங்க நாகரிகமானவங்க... அதெல்லாம் செய்யமாட்டோம்.

எது நாகரிகம்... ஒருத்தரே எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போறதும் அதை மத்தவங்க கை கட்டி வேடிக்கை பாக்கறதும்தான் நாகரிகமா?

இதெல்லாம் உனக்குச் சொன்னா புரியாது என்று சொல்லி கூலித் தொழிலாளர்கள் மனிதக் குரங்கைப் போகச் சொல்கிறார்கள்.

நாயகன் குரங்கு மவுனமாக சூரியன் மறைந்து கொண்டிருக்கும் தொடுவானத்தை நோக்கித் தனியாகத் தளர்ந்து நடந்து செல்கிறது. மெள்ள இருள் வந்து சூழ்கிறது.

இரவு தமன்னாவுக்கு போன் போட்டுப் பேசுகிறது.

கொள்ளைக்காரங்க கொள்ளையடிச்சுட்டுப் போனதைத் தடுத்தேன். எல்லாரும் என்னைத் தலைல தூக்கிவெச்சுக் கொண்டாடினாங்க... இப்போ ஒரு பண்ணையாரு கொள்ளையடிச்சிட்டுப் போறதைத் தடுத்தேன்... ஆனா எல்லாரும் என்னைத் திட்டறாங்களே.

அது அப்படித்தான்... ஒரு பண்ணையாரு பண்ணையாரா இருக்கறார்ன்னா பண்ணையாள்களோட முழு சம்மதமும் அதுக்கு இருக்கு. அத்தனை கூலித்தொழிலாளர்களுக்குமே பண்ணையாராகணும்னு ஆசை இருக்கு... அதனால பண்ணையாரா ஒருத்தர் இருக்கறதை அவங்க தப்பா நினைக்கறதில்லை. ஆனா, யாருக்குமே துப்பாக்கியைத் தூக்கிட்டு வந்து கொள்ளையடிக்கறது பிடிக்காது. அதனால அவங்களை அடிச்சுத் தொரத்தராங்க.

ஆக, ஒருத்தர் கொள்ளையடிக்கறாரா இல்லையாங்கறது பிரச்னையில்லை. எப்படிக் கொள்ளையடிக்கறார்ங்கறதுதான் முக்கியம் இல்லையா..?

ஆமாம்தான்... எல்லாரும் சேர்ந்து உருவாக்கியிருக்கும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுக் கொள்ளையடிக்கணும். அதுதான் நியாயம்... அதுதான் தர்மம்.

எங்க உலகத்துல எல்லாம் இப்படி நடக்கவே செய்யாது தெரியுமா..? எங்களை விலங்குன்னும் நாகரிகமில்லா ஜந்துன்னும் ஐந்தறிவு படைச்சவங்கன்னும் கேவலமா பேச இந்த மனுசங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு... ஐ ஜஸ்ட் ஹேட் மேன்கைண்ட்.

நானும் அந்த கூட்டத்துல ஒருத்திங்கறதை மறந்துடாத...

நீ ஒரு மனுஷக் குரங்கை காதலிக்கறவளாச்சே... அதனாலயே அவங்கள்ல இருந்து நீ வித்தியாசமானவ... உசந்தவ... உன் கிட்ட இருக்கற நல்ல மனசு அவங்க யார் கிட்டயும் இல்லை தமன்னா.

உன்னோட காதலின்னா சும்மாவா... அது சரி... அங்க நிறைய பொண்ணுங்க இப்படி அப்படின்னு திரிவாளுங்க... ஏதாவது சில்மிஷம் பண்ணின அவ்வளவுதான்.

செய்தி கிடைச்சு நீ புறப்பட்டு வர்றதுக்குள்ள அவளுக்கு நாலு புள்ளை பொறந்துடுமே..

பொறக்கும் பொறக்கும்... அதுக்குத்தான் சத்தியம் வாங்கியிருக்கேனே... வேற எந்தப் பொண்ணையாவது தப்பான எண்ணத்தோட பார்த்தா ராத்திரி தூங்கும்போது சாமி உன் கண்ணைக் குத்திடும். ஜாக்ரதை.

நான்தான் படுத்துட்டு லைட்டை அணைச்சதும் தலை மாத்திப் படுத்துப்பேனே... சாமி வந்து கண்ணுன்னு நினைச்சுக் குத்தற இடத்துல என் காலு தான இருக்கும்.

சாமிக்கு இருட்டுலயும் கண்ணு தெரியும்... நீ எப்படி திரும்பிப் படுத்தாலும் கரெக்டா கண்ணைப் பார்த்து குத்திடும். ஒழுங்கா மரியாதையா நடந்துக்கோ.

இருவரும் விடியும்வரையில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இரவு சாலையில் போக்குவரத்து மெள்ள மெள்ளக் குறைந்து முற்றிலும் நின்று பிறகு அதிகாலையில் மீண்டும் வாகனங்கள் சரசரவெனப் போக ஆரம்பிக்கும்வரை டி.வி.யில் மிட் நைட் மசாலாக்கள் முடிந்து சுப்ரபாதம் தொடங்கும் வரையில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அப்பறம்... அப்பறம்... என இருவரும் பேசப் பேச பின்னணியில் "சங்கீத ஸ்வரம்... ஏழே கணக்கா... இன்னமும் இருக்கா' என்ற பாடல் மென்மையாக ஒலிக்கிறது.



***

அதையும் தாண்டிப் புனிதமானது... (2)

தமன்னா மனிதக் குரங்குகளின் உலகுக்குச் சென்று சேர்கிறார். அங்கு அவை காட்டில் மரத்தை வெட்டித் தோளில் போட்டுத் தூக்க முடியாமல் தூக்கிச் செல்கின்றன. தமன்னா அந்த மரத்தடிகளைக் கீழே போடச் சொல்கிறார். மனிதக் குரங்குகள் அவள் சொல்வதைக் கேட்காமல் போகின்றன. தமன்னா கீழே கிடக்கும் இரண்டு மூன்று மரத்தடிகளை, காட்டுக் கொடிகளால் கட்டி அதை பக்கத்தில் ஓடும் நதியில் தள்ளுகிறார். பிறகு அதன் மேல் ஏறி நின்றுகொண்டு படகுபோல் துடுப்பால் தள்ளியபடியே வருகிறார். மரத்தடிகளைத் தூக்கியபடியே செல்லும் மனிதக் குரங்குக் கூட்டம் அதைப் பார்த்ததும் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கின்றன. பிறகு எல்லா குரங்குகளுமே தமது தோளில் இருக்கும் தடியை ஆற்றில் போட்டு அதன் மேல் ஏறி உட்கார்ந்து தமது கிராமத்தை அடைகின்றன. அங்கிருப்பவர்களுக்கு மரத்தடிகளை இத்தனை சீக்கிரமாகக் கொண்டுவந்ததைப் பார்த்ததும் ஒரே ஆச்சரியம். தமன்னாதான் அந்த யோசனையைச் சொன்னாள் என்று நாட்டாமைக் குரங்கிடம் சென்று அறிமுகப்படுத்துகிறார்கள். அவர்தான் தன் ஆசை நாயகனின் அப்பா என்பது தமன்னாவுக்குத் தெரிகிறது. காலில் விழுந்து வணங்குகிறார்.

தமன்னாவுக்கு ஒரு குகையை ஒதுக்கிக் கொடுக்கிறார்கள். தனது பெட்டி படுக்கைகளை அங்கு வைத்துவிட்டு வருகிறாள். தோழி மனிதக் குரங்குகள் கிலுகிலுவெனச் சிரித்தபடியே ஒரு அருவிக்கு அழைத்துச் செல்கின்றன. அங்கு நூல் போல் தண்ணீர் விழுந்துகொண்டிருக்கிறது. குரங்குகள் எல்லாம் அருவிக்கு முன்னால் தேங்கி நிற்கும் குட்டையில் விழுந்து குளிக்கின்றன. தமன்னா சில குரங்குகளை அழைத்துக்கொண்டு அருவியின் மேல் பகுதிக்குச் சென்று சில மரத்தடிகளையும் பாறைகளையும் போட்டு சிதறலாக விழும் நீரைத் தடுத்து ஃபோர்ஸாக விழ வைக்கிறார். கீழே இறங்கிவந்து அருவியில் குளித்துக் காட்டுகிறார்.

"சின்னச் சின்ன ஆசை...

சிறகடிக்க ஆசை...

ஜூவில் இருக்கும் குரங்குகளைத்

திறந்துவிட ஆசை' என்று பாடியபடியே ஆடுகிறார். குரங்குகளும் கூட்டு சேர்ந்துகொண்டு ஆடிப்பாடுகின்றன. குளித்து முடிந்ததும் அனைவரும் சாப்பிட்டு முடித்து தத்தமது குகைகள், மரங்களுக்குச் செல்கிறார்கள். தமன்னா தனது குகைக்குள் செல்கிறார். அந்த குகையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கையில் வெளியே பவுர்ணமி நிலா தென்படுகிறது. ஃபிளாஷ் பேக்கில் மனிதக்குரங்குடனான காதல் காட்சிகள் விரிகின்றன.

***

இதுபோல் ஒரு பவுர்ணமி நாளில் நெடுஞ்சாலையில் ஸ்கூட்டியில் வரும்வழியில் ஒரு லாரி தமன்னாவை இடித்துத் தள்ளிவிட்டுப் போய்விடுகிறது. ரத்தம் சொட்டச் சொட்ட அவர் அந்தப் பக்கம் போகும் வாகனங்களில் உதவி கேட்க ஒருவரும் நிறுத்தாமல் போய்விடுகிறார்கள். அந்த நேரத்தில் நம் மனிதக் குரங்கு அங்கு வருகிறது. இவள் மேல் இரக்கப்பட்டு ஒன்றிரண்டு வண்டிகளை நிறுத்தி உதவி கேட்கிறது. யாரும் உதவி செய்யாமல் போய்விடவே, அடுத்ததாக வரும் காரில் இருப்பவரை அடித்து பின்னால் உட்கார வைத்துவிட்டு தமன்னாவைக் கைதாங்கலாக வண்டியில் ஏற்றிக்கொண்டு 100 கி.மீட்டர் வேகத்தில் வண்டியை ஓட்டுக்கொண்டு மருத்துவமனையில் சேர்க்கிறது. நல்ல நேரத்துல கொண்டுவந்து காப்பாத்தினீங்க... இல்லைன்னா உயிர் போயிருக்கும் என்று டாக்டர் சொல்கிறார். இரண்டு மூன்று நாட்கள் தூங்காமல் கண்முழித்து, "கண்ணே கலைமானே' பாடல் ஒலிக்க அக்கறையாகக் கவனித்துக்கொள்கிறது.

டிஸ்சார்ஜ் ஆகும் நாள் காலையில் ஃபிளாஸ்கில் காப்பி வாங்கிக் கொண்டு வரும்வழியில் ஆஸ்பத்திரி வளாகத்தில் இருக்கும் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனைசெய்துவிட்டு விபூதி, குங்குமம் வாங்கிக்கொண்டு வருகிறது. விகல்பமில்லாமல் மனிதக் குரங்கு குங்குமத்தை எடுத்து தமன்னாவுக்கு இட்டுவிடுகிறது. குங்குமம் இட்டுவிட்டதும் கோவில் மணி கணீரென்று ஒலிக்கிறது. தமன்னாவுக்கு உள்ளுக்குள் இனம் புரியாத உணர்வு பரவுகிறது. மனதின் வயல் வெளியில் வெண்புறாக்கள் சிறகடித்துப் பறக்கின்றன. அருவிகள் ஜோவெனப் பொங்கிப் பாய்கின்றன.

இப்ப நீங்க பண்ணினதுக்கு அர்த்தம் தெரியுமா?

மனிதக் குரங்கு எதுவும் புரியாமல், "என்ன' என்று கேட்கிறது.

தமன்னா வெட்கத்தால் முகம் சிவந்து தலை குனிந்து, "ஒரு பொண்ணுக்கு ஒரு ஆண் குங்குமம் இட்டுவிட்டா அவளோட கணவன்னு அர்த்தம்'.

மனிதக் குரங்கு பதறியபடியே, "அப்படியா என்னை மன்னிச்சிடுங்க... நான் மனிதர்களோட உலகத்துக்கு இப்பத்தான் வந்து சேர்ந்திருக்கேன். உங்க பழக்க வழக்கங்கள் எல்லாம் எனக்குத் தெரியாது. தெரியாம இட்டுவிட்டுட்டேன். மன்னிச்சிடுங்க' என்கிறது.

தமன்னா சிரித்தபடியே, நான் தெரிஞ்சுதான் இட்டுக்கிட்டேன்.

என்ன சொல்றீங்க...

நீங்க என்னைக் காப்பாத்தினபோது உங்க மனிதாபிமானத்தைப் புரிஞ்சிக்கிட்டேன். வண்டியில ஏத்த மறுத்தவர் கிட்ட நீங்க நடந்துகிட்டதைப் பார்த்தபோது உங்க வீரத்தைப் புரிஞ்சிக்கிட்டேன். ராத்திரியும் பகலுமா கண் முழிச்சிப் பார்த்தபோது உங்க அன்பைப் புரிஞ்சிக்கிட்டேன்... இனிமே வாழ்ந்தா உங்களோடதான் வாழ்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

தப்பு பண்றீங்க... உங்க இடத்துல உங்க பாட்டி இருந்திருந்தாலும் இதையேதான் செஞ்சிருப்பேன். வீணா மனசுல கற்பனையை வளர்த்துக்காதீங்க.

நான் எந்தக் கற்பனையையும் வளத்துக்கலை... இது ஆண்டவனா பார்த்து போட்ட முடிச்சு. நான் ஏன் அன்னிக்கு விபத்துல சிக்கணும்... நீங்க ஏன் வந்து என்னைக் காப்பாத்தணும்... குங்குமத்தை ஏன் நீங்க வெச்சுவிடணும்... அது வைக்கும்போது கோவில் மணி ஏன் அடிக்கணும்.

குங்குமத்தைத் தெரியாம வெச்சிட்டேன்... அப்போ அடிச்சது கோவில் மணி இல்லை... குல்ஃபி ஐஸ் விக்கறவன் அடிச்ச மணி...

அதெல்லாம் எனக்குத் தெரியாது... ஒரு வேலை செய்யும்போது மணி அடிச்சா கடவுளோட ஆசீர்வாதம் இருக்குன்னு அர்த்தம். உங்களுக்கு நான்... எனக்கு நீங்க... இதை யாராலயும் மாத்த முடியாது.

உங்களுக்கு வந்திருக்கறது காதல் இல்லை... இன்ஃபாச்சுவேஷன். உங்களுக்கு என்னைப் பத்தி என்ன தெரியும்... நாம சந்திச்சு முழுசா மூணு நாள் கூட ஆகலை. மனசை அலைபாயவிடாதீங்க. அப்பா அம்மா பாத்து வைக்கற பையனை கல்யாணம் பண்ணிக்குங்க.

உங்களோட இந்த நிதானமும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு என்கிறார் தமன்னா வெட்கப்பட்டபடியே.

எனக்கென்னமோ உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னுதான் தோணுது. அடிபட்டதுல மூளைல ஏதோ நரம்பு பிசகி பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைக்கறேன்.

ஆமாம் எனக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு... உங்க மேல பைத்தியம் பிடிச்சிருக்கு.

ஐய்யோ... என்னை விடுங்க... இது தெரிஞ்சுதான் ஒருத்தரும் காப்பாத்தாம போனாங்க போல இருக்கு.

இதைக் கேட்டதும் தமன்னாவின் முகம் வாடுகிறது. என் அன்பை நீங்க புரிஞ்சுக்கலைல்ல... உங்களை எப்படி வழிக்குக் கொண்டுவர்றதுன்னு எனக்குத் தெரியும் என்று சொல்கிறார்.

அது நடக்காது.

நடத்திக்காட்டறேன் என்று சவால்விடுகிறார் தமன்னா.

***

சில நாட்கள் கழித்து மனிதக் குரங்கு பஸ்ஸில் போகும்போது திடீரென்று டிராஃபிக் ஜாம் ஆகிறது. என்ன என்று எல்லாரும் எட்டிப் பார்க்கிறார்கள். அப்போது தமன்னா, மனிதக் குரங்கின் பக்கத்து சீட்டில் வந்து உட்காருகிறார்.

ஹாய்...

ஹாய்..!

என் கூட காஃபி சாப்பிட வா.

எனக்கு வேற வேலை இருக்கு.

ஆனா எனக்கு வேற வேலை இல்லையே.

அதுக்கு நான் என்ன பண்ண..? வேலையை நாமதான் தேடிக்கணும். அது நம்மளைத் தேடிவராது.

நீங்க உங்க வேலையைப் பாக்கணும்னா இந்த வண்டி புறப்பட்டாத்தான முடியும்.

ஆமாம். டிராஃபிக் சரியானதும் வண்டி புறப்படப்போகுது.

ஆனா, நீங்க காபி குடிக்க என் கூட வரலைன்னா டிராஃபிக் இன்னிக்கு சரியாகாதே.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

சம்பந்தம் தானா உருவாகாது. நாமளா ஏற்படுத்திக்கணும்.

என்ன சொல்றீங்க?

நீங்க காபி குடிக்க வந்தாத்தான முன்னால டிராஃபிக் ஜாமை ஏற்படுத்திட்டிருக்கற என் வண்டியை நான் எடுக்கமுடியும். அப்பத்தான உங்க வேலைக்கு நீங்க போகமுடியும்.

சிறிது நேரம்மனிதக் குரங்கு பேசாமல் உட்கார்ந்திருக்கிறது. டிராஃபிக் நெரிசலாகி பைக், கார் ஹார்ன்கள் காதைத் துளைக்கின்றன.

அடுத்த காட்சி : இரண்டு பேரும் உட்லண்ட்ஸ் காஃபி ஷாப்பில் அமர்ந்திருக்கிறார்கள்.

இங்க பாருங்க...

பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்.

காதலுக்கு கண் இல்லைன்னு சொல்லிக் கேட்டுருக்கேன். இப்பத்தான் பாக்கறேன். உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கமுடியாது.

ஏன் உங்களுக்கு உலகத்துல யாராலும் தீர்க்க முடியாத வியாதி இருக்கா..?

அதெல்லாம் இல்லை.

கரையேத்த வேண்டிய அக்கா, தங்கைங்க, சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பொண்ணுங்க நிறைய இருக்காங்களா?

அதுவும் இல்லை.

உங்களுக்கு இடுப்புல தாலியைக் கட்டிட்டுச் சுத்திவர்ற முறைப்பொண்ணு இருக்கா?

இல்லை.

லிவ்-இன் டுகெதர் ரிலேஷன்ஷிப்தான் உங்களுக்கு பிடிக்குமா?

இல்லை...

சற்று குரலைத் தனித்து, ஆர் யு அ கை..?

ஐய்யோ...

அப்பாடா... அப்பறம் என்னதான் பிரச்னை?

ஏன்னா எனக்கு கல்யாணம் ஆகியிருச்சு.

சோ வாட்?

சோ வாட்டா?

அவங்களை டைவர்ஸ் பண்ணுங்க.

ஏங்க... நீங்க என்னதாங்க நினைச்சிட்டிருக்கீங்க..?

ஆமாம். சரியாச் சொன்னீங்க உங்களைத்தான் நினைச்சிட்டிருக்கேன்.

காதல்ங்கறது ரொம்ப விசேஷமானதுங்க... சிலர் அதைப் புனிதமானதுன்னு சொல்றாங்க... சிலர் அதைக் கத்திரிக்காய்ன்னு சொல்றாங்க... என்னைப் பொறுத்தவரை அது ஒரு புனிதமான கத்திரிக்காய்!

எனக்கும் அப்படித்தான் தோணுதுங்க...

ஒருத்தரை ஒரு நிமிஷம் பார்த்ததுமே அவங்க கூடவே ஓராயிரம் வருஷம் வாழணும்னு தோணனும்... ஓராயிரம் வருஷம் வாழ்ந்த மாதிரியும் தோணனும்.

சரியாச் சொன்னீங்க. எனக்கு உங்களைப் பார்த்ததும் அப்படித்தான் தோணிச்சுது.

ஒருத்தருக்கு மட்டும் அப்படித் தோணினாப் போதாது. ரெண்டுபேருக்குமே தோணனும். உங்களைப் பார்த்ததும் எனக்கு அப்படி எதுவும் தோணலைங்க.

தோணும்... போகப் போகத் தோணும்.

சரி... உங்க கிட்டப் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை. நான் வர்றேன் என்று சொல்லிவிட்டு மனிதக் குரங்கு புறப்படுகிறது. சிறிது தூரம் போனதும் சட்டென்று ஓடி வந்து தமன்னா முன்னால் உட்கார்ந்துகொள்கிறது.

தமன்னா ஆச்சரியத்துடன், "என்ன' என்று கேட்கிறார்.

ஐய்யோ கொஞ்ச நேரம் பேசாம இருங்க.

ஏன்...

எங்க அப்பா...

அப்பாவா... எங்க?

அதோ போறாரே...

அவரோட பேர் என்ன..?

அனுமந்த ராவ்.

தமன்னா உற்சாகமாக, ராவ்ஜி... அனுமந்த ராவ்ஜி...

அனுமந்தராவ் தன்னைக் கூப்பிடுவது யார் என்று புரியாமல் 'என்னம்மா' என்கிறார்.

இங்க வாங்கஜி... ஒரு கப் காஃபி சாப்டுட்டுப்போங்க.

இப்பத்தான்மா ஒரு ரவா தோசை, ஒரு மசால் தோசை சாப்பிட்டு முடிச்சு, ரெண்டு ஃபில்டர் காபி குடிச்சு முடிச்சேம்மா.

பரவாயில்லைஜி... உங்களைப் பார்த்தா இன்னும் ரெண்டு செட்தோசை, நாலுபூரி செட் சாப்பிட்டு இன்னும் ரெண்டு ஃபில்டர் காபி குடிக்கறவர் மாதிரி இருக்கீங்க... வாங்கஜி. இன்னொரு ரவுண்ட் ஆரம்பியுங்க.

அனுமந்தராவ் உற்சாகமாக வருகிறார். நாயகன் குரங்கு பதறியபடியே டேபிளுக்குக் கீழே போய் பதுங்கிக்கொள்கிறது.

காஃபி வருகிறது. தமன்னாவும் அனுமந்தராவும் சிரித்துப் பேசுகிறார்கள். நாயகன் டேபிளுக்கு அடியில் இருந்தபடி, 'ப்ளீஸ் காட்டிக்கொடுத்துடாத' என்று கெஞ்சுகிறது.

உங்களுக்கு குழந்தைங்க இருக்காங்களாஜி...

இருக்காங்கம்மா....

ஒரு பையன்... ஒரு பொண்ணு.

உங்களுக்கு பையன் இருக்காரா... ஒரே ஒரு பையனா... என்ன பண்றாங்கஜி.

காலேஜ்ல ஃப்ரஃபசரா இருக்கான்.

அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

இல்லையேம்மா.

கீழே குனிந்து, பொய்தான் சொல்லியிருக்கியா..? அப்போ என் ரூட் க்ளியர்தானா..?

யார் கிட்டம்மா பேசற.

கீழே குனிந்து, 'சொல்லட்டுமா'.

மனிதக் குரங்கு அஞ்சிநடுங்கி "வேணாம்' என்று கெஞ்சுகிறது.

அப்போ, ஐ லவ் யூ சொல்லு...

ஐ லவ் யூவா?

ஆமா... ஐ... லவ்... யூ..!

சொல்ல முடியாது...

முடியாதா... (மேலே நிமிர்ந்து) உங்க பையன் இப்போ எங்க இருப்பார்ன்னு சொல்ல முடியுமாஜி..?

அவன் காலேஜ்ல கிளாஸ் எடுத்திட்டு இருப்பான்.

அதான் இல்லை... அவனோட காதலிகூட ஏதாவது காஃபி ஷாப்ல உட்கார்ந்து கடலை போட்டிருப்பார். நீங்க வர்றதைப் பார்த்து டேபிளுக்குக் கீழ கூட ஒளிஞ்சிருக்கலாம்.

என் பையனா... ச்சேச்சே... அவன் அப்படியெல்லாம் செய்யவேமாட்டான். நாங்க அவன அப்படி வளக்கலையேம்மா...

இந்தக் காலத்துல பசங்கள்லாம் தானா வளர்ந்திருதுங்கஜி.

என் பையன் அப்படியில்லைம்மா...

அப்படியா பையா... உங்க அப்பா உன்னை நல்லா வளர்த்திருக்காங்களாமே... இப்படி காதலிகூட காஃபி ஷாப்ல கடலை போடலாமா பையா...

நான் எங்க உன்னைக் காதலிச்சேன். கடலைபோட்டேன்?

காதலிக்காமலா கிளாஸுக்குப் போகாம காஃபி ஷாப்புக்கு வந்திருக்க?

நீ தான என்னை மிரட்டி வரவெச்ச?

அது உங்க அப்பாக்குத் தெரியாதே.. நீ என்னைக் காதலிக்க இங்க வந்திருக்கறதாதான் அவர் நினைக்கப் போறாரு...

ப்ளீஸ் வேண்டாம்.

அப்போ ஐ லவ் யூ சொல்லு...

சொன்னா விட்ருவியா...

அங்க யார் கூடம்மா பேசற...

சொல்லட்டுமா...

ப்ளீஸ் வேண்டாம்..

அப்போ ஐ லவ் யூ சொல்லு...

சரீ சொல்றேன்... சொல்லித் தொலைக்கறேன்...

சொல்லு சொல்லு...

ஐ...

அப்பறம்.... அப்பறம்...

லவ்...

சொல்லு சொல்லு...

god

god ஆ?

and... you are my god now.

ஓ... ப்ரொஃபசர் கெத்தைக் காட்டறியா..? இந்தக் கதையெல்லாம் வேலைக்காகாது. நேரா, தெளிவா ஐ லவ் யூன்னு சொல்லு. இல்லைன்னா... ஜி... உங்க பையன் இப்போ எங்க இருக்கார் தெரியுமா... அவரோட செல்லுக்கு போன் போடுங்க.

"அய்யோ' என்றபடியே மனிதக் குரங்கு தன் செல் போனைத் தேடுகிறது. அது தமன்னாவின் கையில் இருக்கிறது.

நம்பர் ஞாபகம் இருக்கு இல்லைஜி...

மனிதக் குரங்கு பதறியபடியே... "சொல்றேன் சொல்றேன்... ஐ லவ் யு' (படுவேகமாகச் சொல்கிறது).

இப்படியெல்லாம் சொல்லக்கூடாது... ரொமாண்டிக்கா, பொயட்டிக்கா அழகாச் சொல்லணும்... ஐ வாண்ட் மோர் எமோஷன்...

மனிதக் குரங்கு வேறு வழியின்றி "ஐ லவ் யூ...' சொல்கிறது.

அதைக் கேட்டதும் டூயட் ஆரம்பிக்கிறது...

வாழ வைக்கும் காதலுக்கு ஜே...

வாலிபத்தின் பாடலுக்கு ஜே...

தூதுவிட்ட கண்களுக்கு ஜே...

அம்புவிட்ட காமனுக்கும் ஜே..!

***

கல்லூரியில் மரத்தடியில் மனிதக் குரங்கு இறுக்கமான முகத்துடன் நின்றுகொண்டிருக்கிறது.

தமன்னா கைகளைக் கட்டிக்கொண்டு சோகமாக நிற்கிறார்.

இங்க பாரு... படிக்கற வயசு... மொதல்ல படிச்சு முடி. உண்மைலயே உனக்கு என் மேல காதல் இருந்தா கோல்ட் மெடல் வாங்கிக் காட்டு. அதுக்குப் பிறகு உன் காதலை ஏத்துக்கறேன்.

சரி... இனிமே நான் பாடத்துல கவனம் செலுத்தறேன். உங்க மேல எனக்கு இருக்கற காதலை கோல்ட் மெடல் வாங்கித்தான் நிரூபிக்க முடியும்னா அதையே செய்யறேன்.

நீ மட்டும் அதைச் செஞ்சிட்டேன்னா உன் காதலை ஏத்துக்கறேன். அதோ தெரியுது பார் அந்த மலைக்கோவில்ல ஒரு விளக்கு ஏத்தி வெச்சி என் காதலை உனக்குச் சொல்றேன்.

சரி... கோல்ட் மெடலோட வர்றேன். ரிசல்ட் வந்த அன்னிக்கு அந்த மலைக்கோவில்ல விளக்கு எரியலைன்னா நான் அந்த மலைல இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிப்பேன். இது என் மேல சத்தியம். என் காதல் மேல சத்தியம்.

ஓகே... போ... இப்ப போய் படி.

தமன்னா அதன் பிறகு படிப்பில் முழு கவனமும் செலுத்துகிறார். மற்ற மாணவர்கள் எல்லாம் சினிமா, விளையாட்டு என்று போகும்போது இவர்மட்டும் புத்தகம் புத்தகம் என்று இருக்கிறார். மனிதக் குரங்கு பேராசிரியர் அங்குமிங்கும் வந்துபோகும்போதும் அவரை ஏறெடுத்தும் பார்க்காமல் படிப்பிலேயே தீவிரமாக ஈடுபடுகிறார். தேர்வுகள் வருகின்றன. சிறப்பாக எழுதுகிறார். ரிசல்ட் நாள் நெருங்குகிறது. ரிசல்ட்டும் அறிவிக்கப்படுகிறது. தமன்னா ஒரு மார்க் வித்தியாசத்தில் கோல்ட் மெடலை இழக்கிறார். மனம் வெறுத்து மலைக்கோவிலுக்கு தற்கொலை எண்ணத்துடன் செல்கிறார். இருண்ட மலைக்கோவிலின் ஒவ்வொரு படியாக ஏறுகிறார். ஆனால், அங்கு மனிதக் குரங்கு பேராசிரியர் கோவில் முற்றம் முழுவதும் விளக்கு ஏற்றி வைத்துக் காத்திருக்கிறார்.

அப்போது பார்த்து எங்கிருந்தோ வீசுகிறது புயல் காற்று. உண்மைக் காதலை யார்தான் வாழ விட்டிருக்கிறார்கள்? மனிதக் குரங்கு காற்றைப் பார்த்ததும் பதறுகிறது. நாயகி ஒவ்வொரு படியாக ஏற ஏற ஒவ்வொரு விளக்காக அணைகிறது. மனிதக் குரங்கு ஓடி ஓடி ஒவ்வொரு விளக்கையாக அணையவிடாமல் தடுக்கிறது. ஒரு விளக்கைத் தடுத்தால் இன்னொரு விளக்கு அணைகிறது. அதைத் தடுக்கப் போனால் வேறொன்று அணைகிறது. நாயகி மலை உச்சியை அடைகிறார். அவர் வரவும் கடைசி விளக்கும் காற்றில் அணைகிறது. இருண்ட மலைக்கோவிலில் மனிதக் குரங்கு நிற்பது அவருக்குத் தெரியவில்லை. தான் கோல்ட் மெடல் வாங்காததால் தன் காதலை ஏற்கவில்லை போலிருக்கிறது என்று நினைத்து விரக்தியில் மலையில் இருந்து குதிக்கப்போகிறார்.

மனிதக் குரங்கு நாயகன் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறது. அப்போது மேற்கு வானம் பொன்னிறமாக ஜொலிக்கத் தொடங்குகிறது.

அணையும் அகல் விளக்கை ஏற்றி வைக்கச் சொன்ன ஆருயிரே

அழியா நம் காதலை தெரிவிக்க ஏற்றிவைக்கிறேன்

அணையா ஆனிப்பொன் விளக்கை...

என்று பாடிய படியே கை காட்டுகிறது... அங்கே பவுர்ணமி நிலா மெள்ள மேகத்தைக் கிழித்தபடி மேலெழுகிறது... மலையில் இருந்து குதிக்கப்போன நாயகி திரும்பிப் பாக்கிறார். பவுர்ணமி நிலவொளியில் அவளது காதலன் கைகளை அகல விரித்து காதல் மீதுற நிற்பது தெரிகிறது... ஓடிச் சென்று கட்டிப் பிடித்து முத்த மழை பொழிகிறார்.

மலைக் கோவில் வானத்தில்

பௌர்ணமி தீபம் மின்னுதே

விளக்கேற்றும் வேளையில்

ஆனந்த ராகம் ஒலிக்குதே...

***

அதையும் தாண்டிப் புனிதமானது... (1)

மனிதக் குரங்குக்கும் தமன்னாவுக்கும் இடையில் தெய்விகக் காதல்!

இருவரும் வெவ்வேறு சாதி (?!) என்பதால் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. ஒருமுறை எங்கள் வாழ்க்கைத் துணைவராக வரப்போகிறவரை பார்த்துப் பேசுங்கள்... அதன் பிறகு முடிவு செய்யுங்கள் என்று காதலர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் உன் காதலன் நாட்டுக்கே அதிபராக இருந்தாலும் வேறு சாதி என்றால் வேண்டவே வேண்டாம்; உன் காதலி ரம்பை ஊர்வசியாக இருந்தாலும் வேறு சாதி என்றால் பார்க்கவே தேவையில்லை என்று இரு குடும்பத்துப் பெற்றோரும் செய்தி கேட்ட மாத்திரத்திலேயே கலப்புக் காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காதல் ஜோடிகள் உண்ணாவிரதம், ஒத்துழையாமை இயக்கம் என வீட்டில் என்னவெல்லாமோ போராடிப் பார்த்தும் முடியாமல் போகவே கடைசியில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். அதற்கு முன்னால் கணவன் மனைவியாக ஒரு நாள் வாழ்ந்துவிட முடிவெடுக்கிறார்கள்.

"என்ன சத்தம் இந்த நேரம்...' பாடல் பின்னணியில் ஒலிக்க இருவரும் தமது வாழ்க்கையின் கடைசி நிமிடங்களை, வேதனையையெல்லாம் உள்ளே மறைத்துக்கொண்டு, பசுமை மாறாக் காடொன்றில் ஆடிப்பாடுகிறார்கள். தமன்னாவுக்கு நாயகன் குரங்கு பவுடர் போட்டு, பொட்டு வைத்து பூச்சூடி அலங்கரிக்கிறது. காட்டு மலர்களையும் இலைகளையும் மாலையாகக் கட்டி திருமணம் செய்துகொள்கிறார்கள். மனிதக் குரங்குகள் உடலுறவு முடிந்த ஒரு சில நிமிடங்களிலேயே மீண்டும் தயாராகிவிடுமென்பதால் அந்தக் கடைசி நாளில் கிட்டத்தட்ட பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை வாழ்க்கையை எஞ்சாய் பண்ணுகிறார்கள் (நாயகிக்கு நாயகனைப் பிடித்ததற்கான முக்கியமான காரணங்களில் அதுவும் ஒன்று).

"மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல... அதையும் தாண்டிப் புனிதமானது' என்று "குணா' குகையில் இருந்துகொண்டு மனிதக் குரங்கு உலகம் முழுவதும் எதிரொலிக்கக் கத்துகிறது. கடைசியாக மலை உச்சியில் கைகளைப் பிடித்தபடி குதிப்பதற்குத் தயாராக நிற்கிறார்கள்... சாகறதுக்கு முன்னால உன்னோட சிரிச்ச முகத்தைப் பாக்கணும் என்று தமன்னா சொல்கிறார். மனிதக் குரங்கு சிரிக்க முயற்சி செய்கிறது. முடியவில்லை. பிறகு தன் ஆருயிர் காதலிக்காக அழுகையை மறைத்துக்கொண்டு சிரிக்கிறது. பிறகு ஒன்... டூ... என்று சொல்கிறது. த்ரீ என்று சொல்வதற்கு முன்பாக தமன்னாவுக்கு ஒரு டீப் கிஸ் அடிக்கிறது... தமன்னா மனிதக் குரங்கை இறுக்கிக் கட்டிப்பிடித்து அழுகிறாள். இருவரும் கட்டிப்பிடித்தபடியே குதிக்கிறார்கள்... ஆனால், என்ன ஆச்சரியம்... மரங்களின் வழியாக கீழே விழுகையில் ஒவ்வொரு கிளையாக அனிச்சையாகப் பற்றிக்கொண்டு ஏதோ மாடிப்படியில் வேகமாக கீழே இறங்கி வருவதுபோல் தரையை வந்து அடைகிறார்கள்! தமன்னா கண் முழித்துப் பார்த்தால் இருவருமே தரையில் ஜம்மென்று நிற்கிறார்கள். என்ன நடந்தது என்று அவர்களுக்கு சிறிது நேரம் கழித்தே புரிகிறது. அசட்டுத் தற்கொலை எல்லாம் முட்டாள் மனிதக் காதலர்களுக்குத்தான். இவர்களுடைய காதலோ அதையும் தாண்டிப் புனிதமானது அல்லவா.

இனி ஆகவேண்டியது என்ன என்று மனிதக் குரங்கின் மடியில் தமன்னா படுத்துக்கொண்டு எதிர்காலத்தைப்பற்றி தீவிரமாக யோசிக்கிறார். நாம் சாகப் பிறந்தவர்கள் அல்ல... வாழப் பிறந்தவர்கள். இந்த உலகுக்கு நம் மூலம் ஏதோ ஒரு செய்தி சொல்லப்பட வேண்டியிருக்கிறது. அதனால்தான் கடவுள் நம்மைக் காப்பாற்றியிருக்கிறார் என்று சொல்லும் மனிதக் குரங்கு ஒரு யோசனை சொல்கிறது: அதாவது அது தமன்னாவின் வீட்டுக்குச் சென்று அவர்கள் குடும்பத்தினரின் மனதில் இடம் பிடிப்பது என்றும் அதுபோல் தமன்னா மனிதக் குரங்குகளின் உலகுக்குச் சென்று அவருடைய குடும்பத்தினரிடையே நல்ல மதிப்பைப் பெறுவது என்றும் சொல்கிறது.

தமன்னா சிறிது நேரம் யோசிக்கிறார். உண்மையில் நம் பெற்றோர் எதிர்ப்பதற்கு அவர்கள் காரணமல்ல. இரண்டுபேரும் வெவ்வேறு இனம் (சாதி) என்பதால் அந்த இரண்டு சமூக மக்களின் நெருக்கடிக்கு பயந்துதான் அப்படிச் சொல்கிறார்கள். முதலில் அந்த இரண்டு சாதியினரைச் சம்மதிக்க வைக்கவேண்டும். அதற்கு இவர்கள் இருவரும் அந்த இரண்டு சமூகத்தினரிடையே நன் மதிப்பைப் பெறவேண்டும்; குடும்பத்தினரை மட்டும் சமாளித்தால் போதாது என்று சொல்கிறார்.

மனித இனத்தினரிடையே நன் மதிப்பு பெற என்ன செய்யவேண்டும் என்று மனிதக் குரங்கு கேட்கிறது. அதற்கு தமன்னா, "அநீதியைக் கண்டு பொங்கணும்... அப்பத்தான் எங்க இனத்தில நல்ல பேர் எடுக்கமுடியும்' என்கிறார்.

"சரி... இதுவரை நான் உண்டு என் வேலை உண்டுன்னு சுயநலமா இருந்துட்டேன். இனிமே நான் அநீதியைக் கண்டு பொங்கறேன்' என்று கம்பீரமாக எழுந்து நிற்கிறது (பின்னணியில் பரித்ரானாய சாதூனாம் விநாசாய துஷ்க்ருதாம்... தர்ம ஸ்தம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே... அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் நான் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டுவேன் என்ற பாடல் ஒலிக்கிறது).

உங்க இனத்துல இருக்கறவங்ககிட்ட நல்ல பேரு எடுக்க என்ன செய்யணுமென்று தமன்னா கேட்கிறாள். "எங்க ஆளுங்க குரங்காவே இருக்காங்க... மனுஷரா மாத்திக்காட்டு' என்று சொல்கிறது.

இருவரும் தத்தமது லட்சியத்தை நிறைவேற்றப் புறப்படுகிறார்கள். சிறிது தூரம் சென்றதும் தமன்னா ஓடிவந்து தன் ஆசைக் காதலனுக்கு அழுத்தமாக ஒரு முத்தம் கொடுக்கிறார். இரண்டு பேரும் தயங்கித் தயங்கி விடைபெறுகிறார்கள். க்ளோசப்பில் இருவருடைய கைகளும் மெள்ளப் பிரிகின்றன.

***

மனிதக் குரங்கு தமன்னாவின் பண்ணைப்புர கிராமத்துக்குப் போய்ச்சேருகிறது. அப்போது அந்த கிராமமே களேபரமாக இருக்கிறது. அந்த கிராமத்துக்கு அடிக்கடி "ஷோலே' கப்பார் சிங்கின் ஆட்கள் வந்து கொள்ளையடித்துச் செல்வார்கள். அவர்களில் ஒருவன் ஒரு கறுப்புப் போர்வையை ஊரின் மைதானத்தில் விரித்துவைத்துவிட்டு ஒரு தீப்பந்தத்தை நட்டுவிட்டுப் போவான். ஊரில் உள்ளவர்கள் அந்தத் தீப்பந்தம் அணையாமல் பார்த்துக்கொள்வதோடு தமது நகைகள், பணம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி அந்தப் போர்வையில் போட்டுவிடவேண்டும். ஒவ்வொரு வீட்டுக்காரரும் மூட்டையில் தமது பேர் எழுதிப் போட்டிருக்கவேண்டும். ஏதாவது வீட்டில் இருந்து மூட்டை சிறியதாக இருந்தால் அந்த வீட்டு ஆண்களை குதிரைக்குப் பின்னால் கட்டி இழுத்துச் சென்று கொன்றுவிடுவார்கள்.

மனிதக்குரங்கு போய்ச் சேர்ந்த நேரத்தில் கறுப்புப் போர்வை ஊர் நடுவில் விரிக்கப்பட்டிருக்கும். தீப்பந்தம் அணையாமல் இருக்க சிலர் அருகில் எண்ணெய் கொப்பரையுடன் நின்றுகொண்டிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டினரும் தமது வீட்டில் இருக்கும் நகைகள், பணம் அனைத்தையும் கட்டி போர்வையில் வைத்திருப்பார்கள். சிறிது நேரத்தில் புழுதி பறக்க குதிரையில் வாள், துப்பாக்கிகளைச் சுழட்டியபடியே கொள்ளையர்கள் வந்து சேருவார்கள். கறுப்புப் போர்வையில் நகைகளும் பணமும் குவிந்துகிடக்கும். கொள்ளையர்கள் குதிரையில் அதைச் சுற்றிச்சுற்றி வந்து வெறிச்சிரிப்பு சிரிப்பார்கள். கிராமத்தார்களில் ஒருவன் போர்வையை மூட்டையாகக் கட்டுவான். மிகப் பெரிய முடிச்சு ஒன்றைப் போட்டு, கப்பார் சிங்கைப் பார்த்து மண்டியிட்டு வணங்கி நிற்பான். கப்பர் சிங் சிரித்தபடியே அதை எடுத்து குதிரைமேல் வைக்கச் சொல்வான். கிராமத்தான் மூட்டையை எடுக்கப்போகும்போது எங்கிருந்தோ ஒரு ஈட்டி பாய்ந்து வந்து மூட்டை முன்னால் குத்தி நிற்கும். கிராமத்தான் பயந்து பின் வாங்குவான். கப்பர் சிங்குக்கு அதைப் பார்த்ததும் ஆத்திரம் தலைக்கு ஏறும். ஈட்டி வந்த திசையைப் பார்ப்பான். ஒரு வீட்டுக்கூரையில் வான் முழுவதுமாக விஸ்வரூபமெடுத்தபடி மனிதக் குரங்கு நின்றுகொண்டிருக்கும்.

கப்பர் சிங் துப்பாக்கியை எடுத்துச் சுடுவான். சீறிப் பாய்ந்து வரும் புல்லட்டிலிருந்து மேட்ரிக்ஸ் ஹீரோபோல் உடம்பை வில்லாக வளைத்து தப்பிக்கும் மனிதக் குரங்கு, ஒலிம்பிக் கோல்ட் மெடலிஸ்ட் போல் ஏகப்பட்ட கர்ணங்கள் அடித்து நேராக கறுப்பு மூட்டைக்கு அருகில் வந்து குதிக்கும்.

மனிதக் குரங்கைப் பார்த்ததும் குதிரை மிரண்டு காலைத் தூக்கியபடி கனைக்கவே கப்பர் சிங் தலை குப்புறக் கீழே விழுந்துவிடுவான். மனிதக் குரங்கு சட்டென்று மூட்டையை எடுத்துக்கொண்டு குதிரைமேல் பாய்ந்து ஏறும். மனிதக் குரங்கைப் பார்த்து எல்லா குதிரையும் மிரண்டுவிடவே கப்பர் சிங்கின் ஆட்களும் நிலை தடுமாறி துப்பாக்கி கை நழுவிக் கீழே விழுந்துவிடுவார்கள். அவர்கள் சுதாரித்து எழுவதற்குள் மனிதக் குரங்கு பண மூட்டையுடன் ஒற்றையடிப்பாதையில் சிட்டாய்ப் பறந்துவிடும்.

கப்பார் சிங் உடனே வேறொரு குதிரையில் ஏறி மனிதக் குரங்கைத் துரத்துவான். அவனுடைய ஆட்களும் பின்னாலேயே பாய்ந்து செல்வார்கள். ஒரு தெறி சேஸுக்குப் பிறகு மனிதக் குரங்கு நேராக ஒரு குகைக்குள் போய்விடும். கப்பர் சிங்கும் அவனுடைய ஆட்களும் "வசமா மாட்டிக்கிட்டியா...' என்று எகத்தாளமிட்டபடியே குகைக்குள் வெறித்தனமாக நுழைவார்கள். உள்ளே போன மனிதக் குரங்கு பயந்தபடியே பின்வாங்கிச் செல்லும்.

"இப்படித் தனியா வந்து மாட்டிக்கிட்டியே...' என்று கப்பர் சிங் கொக்கரிப்பான்.

"கண்ணா... பன்னிங்கதான் கூட்டமா வரும்... சிங்கம் சிங்கிளாத்தான் வரும்' என்று கர்ஜித்தபடியே பின்பக்கம் திரும்பி ஓடிச் சுவரில் காலை ஊன்றி பேக் சம்மர் சால்ட் அடித்து கப்பர் சிங்கின் ஆட்களுக்குப் பின்னால் பாய்ந்து நிற்கும். அவர்கள் திரும்பியபடி துரத்தவே வாசலை நோக்கி மனிதக் குரங்கு வேகமாக ஓடும். வாசலை அடைந்ததும் சட்டென்று துள்ளி வாசலில் இருக்கும் ஷட்டரை இழுத்து மூடும்.

"மாட்டிக்கிட்டது நான் இல்லைடா... நீங்கதாண்டா... ஸ்கெட்ச் போட்டது உங்களுக்குத்தான் கப்பாரு. ஊருக்குள்ள சண்டை போட்டா நீ துப்பாக்கியால சுடும்போது ஊர்க்காரங்க மேலயும் பட்ரும்... நான் அடிக்கும்போது சில அடி மக்கள் மேல பட்ரும். இங்கன்னா செய்கூலியும் கிடையாது... சேதாரமும் கிடையாது. மொத்த அடியும் வட்டியும் அசலுமா உங்களுக்கே உங்களுக்குத்தான்' என்று கர்ஜித்தபடியே துரத்தி வந்தவனை ஒரே அடியில் வீழ்த்திவிட்டு வெறிச் சிரிப்பு சிரிக்கும். அதன் பிறகு பறந்து பறந்து அடித்து கப்பர் சிங்கையும் அவன் ஆட்களையும் துவம்சம் செய்து ஒரு கயிற்றில் கட்டி இழுத்துக்கொண்டு ஊரார் முன்னால் வந்து மண்டியிடவைக்கும். அதுவரை கொள்ளையடித்துச் சென்ற பணத்தையும் மீட்டு கிராமத்தினருக்குக் கொடுக்கும். தன் வேலை முடிந்தது என்று அது கம்பீரமாக நடந்து செல்கையில் அதன் காலடி மண்ணை எடுத்து நெற்றியில் இட்டபடி "எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில பொட்டு வைப்போம்... உங்களத்தான் நம்புதிந்த பூமி எங்களுக்கு நல்ல வழி காமி...' என்று கிராமத்தினர் ஆடிப்பாடி அவரைத் தமது எஜமானாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஒரு பட்டு வேட்டி சட்டையையும் துண்டையும் கொடுக்கிறார்கள். வேட்டியைக் கட்டிக்கொண்டு துண்டை ரஜினி ஸ்டைலில் தோளில் போட்டுகொண்டு கண்ணடிக்கும்.


***

Tuesday, 20 September 2016

தமிழர்கள் தமிழர்களும் அல்ல..!

தமிழர்கள் இந்துக்கள் அல்ல... தமிழர்கள் இந்தியர்கள் அல்ல... இவை உண்மையென்றால் இவற்றைவிட பேருண்மை ஒன்றும் இருக்கிறது : தமிழர்கள் தமிழர்களும் அல்ல..!

ஏனென்றால் தமிழ் நாட்டில் பிராமணர்கள் உண்டு, பிள்ளைமார் உண்டு, முதலியார் உண்டு, செட்டியார் உண்டு, தேவர் உண்டு, வன்னியர் உண்டு, கவுண்டர் உண்டு, பள்லர் உண்டு, பரையர் உண்டு, வண்ணார் உண்டு, அருந்ததியர் உண்டு, சக்கிலியர் உண்டு... இன்னும் பலர் உண்டு... தமிழர் யாரும் கிடையாது இந்துக்களும் இந்தியர்களும் கிடையாது என்பதைப் போலவே.

ஒவ்வொரு சாதியும் ஒவ்வொருவிதமான வாழ்க்கைப் பார்வை, வாழ்க்கை முறை, வாழ்விடம் என அனைத்திலும் தனித்தன்மைகொண்டவர்கள் தமிழர் என்ற அடையாளத்தை அவர்கள் மேல் திணிப்பது நிச்சயம் தவறுதான் இந்து, இந்திய அடையாளத்தைத் திணிப்பது போலவே.


தமிழ் நாட்டில் ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் இன்னொரு சாதியினரைத் திருமணம் செய்துகொள்வதில்லை. சொற்ப விதி விலக்குகள் நீங்கலாக.

தமிழர்களின் பண்டிகைகளான பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு போன்றவற்றை தமிழ் நாட்டில் இருக்கும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கொண்டாடுவதில்லை. அதைவிட இஸ்லாமிய, கிறிஸ்தவர்களின் பண்டிகைகளை மதம் மாறாத தமிழர்கள் கொண்டாடுவதில்லை.

தமிழர்கள் நேற்றுவரை குறுநிலமன்னர்கள், முப்பெரும் வேந்தர்கள் என தனித்தனியாகப் பிரிந்து தமக்குள் கொன்றும் செத்தும் வாழ்ந்த மக்கள் திரளே... பிற இந்திய மொழி அரசுகளுடன் சண்டையிட்டதைவிட தமக்குள் சண்டையிட்டுக் கொண்டதே அதிகம்.

மொழி தமிழர்களை என்றுமே இணைத்திருக்கவில்லை. ஏனென்றால் அனைவர் பேசும் தமிழ் மொழியும் ஒன்று அல்ல. இன்று ஒரு வட்டார மொழியில் எழுதப்படும் எந்தவொரு கதையையவது நாவலையாவது வேறொரு வட்டாரத்தைச் சேர்ந்தவரால் அருஞ்சொற்பொருள் தராமல் வாசித்துவிட முடியாது. குமரித் தமிழில் ஆரம்பித்து நெல்லைத் தமிழ், மதுரைத் தமிழ், கொங்கு தமிழ், சென்னைத் தமிழ் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வட்டார தனித்தன்மையைக் கொண்டவை. உரை நடை பொதுத் தமிழ் என்பது முழுக்கவே வட்டார அழகுகளையும் தனித்தன்மைகளையும் அழித்து உருவாக்கப்பட்ட மொழியே.

தமிழர்களின் பாரம்பரிய இலக்கிய நூல்களில் பெரும்பாலானவை இந்து மத புராணங்களைத் தழுவி அமைந்தவையே.

தமிழர்களின் வழிபாட்டு மையங்கள் என்பவை இந்து ஆலயங்களே.

வர்க்கரீதியாகப் பார்த்தால் ஏழைத் தமிழர்கள் வேறு பணக்காரத் தமிழர்கள் வேறு. உண்மையில் இதுவே சாதி தாண்டி ஓடும் அதி உண்மையாக இருக்கிறது.

தமிழர்களின் தனித் தன்மை என்று சிலவற்றைப் பட்டியலிட்டு இந்தியாவில் இருந்தும் இந்து மதத்தில் இருந்தும் பிரிக்க முடியுமென்றால் அதே அளவுகோலைப் பயன்படுத்தினால் தமிழர் என்று ஒரு இனம் இல்லை என்ற உண்மையையும் ஒருவர் வந்தடைய முடியும். தமிழர்களை பிரிக்கும் விஷயங்களைப் புறமொதுக்கிவிட்டு ஓர் ஒற்றுமையை அவர்களிடையே ஏற்படுத்த முடியுமென்றால் அதை அடிப்படையாக வைத்து இந்து, இந்திய ஒற்றுமையையும் உருவாக்க முடியும். உருவாக்க வேண்டும்.

இந்தியாவின் இன்றைய மற்றும் எதிர்கால பலங்களில் ஒன்று அதன் இளைய தலைமுறை. அடுத்த இன்றும் சரி வரும் 25 ஆண்டுகளிலும் சரி இந்தியாவில் படித்து முடித்துவிட்டுவரும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகப் பெருமளவில் இருக்கப்போகிறது. அந்த சக்தியை உரிய கல்வித் திறமையைப் பூட்டி உரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிப் பயன்படுத்தினால் இந்தியா உலக அரங்கில் மேலான இடத்தை அடைய முடியும். இந்தியாவில் இந்த விஷயங்களைப் புரிந்துகொண்டு ஆக்கபூர்வ முயற்சிகளை எடுப்பவர்கள் அஞ்சும் வகையில் இதே இளைஞர் திரளை அடிப்படைவாதம் நோக்கியும் வன்முறை நோக்கியும் பிரிவினை நோக்கியும் வழி நடத்தும் சக்திகள் பலம் பெறத் தொடங்கிவிட்டிருக்கின்றன.

ஜெ.என்.யு. புகழ் கன்னையா குமாரில் ஆரம்பித்து நம் திலீபன் மகேந்திரன் வரை இளைய தலைமுறை மூளைச் சலவை செய்யப்பட்டுவிட்டிருக்கின்றன. இள வயது என்பது களி மண் போன்றது. நாம் என்னவிதமாக வனைய விரும்புகிறோமோ அதன்படி அழகாக வளைந்து கொடுக்கும். மண்ணெண்ணையை ஊற்றிக்கொள்.. எப்படியும் காப்பற்றிவிடுகிறோம் என்று சொல்லி உசுப்பேற்றிவிட்டால் போதும்... சமத்தாக ஊற்றிக்கொண்டுவிடும். காப்பாற்றுவதாகச் சொன்னவர் கால் பிடறியில் பட ஓடுகிறாரே என்று சுதாரிப்பதற்குள் தீ உடலைப் பொசுக்கிவிடும்.

இலங்கையில் இப்படியான செயல்பாடுகள் அருமையாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. அங்கே தனி நாடு கனவுகள் நிராசையானதும் இங்கே தனிநாடு கனவுகள் துளிர்விடத் தொடங்கியிருக்கின்றன. இலங்கையை எரித்து முடித்திருக்கும் நெருப்பில் இருந்து இரண்டு மெழுகுவர்த்திகள் பற்றவைக்கப்பட்டு தமிழகத்துக்கு அணையாமல் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இறையாண்மையைக் காக்கிறேன் என்ற போர்வையில் இலங்கை அரசு மேற்கொண்ட வன்முறைகளை இந்திய அரசும் முன்னெடுக்க அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. இன்று தமிழகத்தில் பற்றவைக்கப்பட்டிருக்கும் சிறு பொறி நாளை ஏதேனும் போராட்டக்காரர்களை இந்திய மத்திய அரசுக் காவல் படை சுட்டு வீழ்த்தினாலோ இந்திய ராணுவ, கடற்படை, வான் வழிப் படையை கலவரக்காரர்கள் தாக்கினாலோ அனைத்துக் கூரைகளுக்கும் பரவத்தொடங்கிவிடும். அதைத் தடுத்து நிறுத்துவது கடினம்.

ஏனென்றால், பிரச்னையை சிறிதாக இருக்கும்போதே அடக்க நினைக்கிறேன் என்ற எண்ணத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, ராணுவம் மூலம் ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் தமிழர்களை இந்தியா ஒடுக்குகிறது என்ற வாதம் மேலும் வலுப்பெறவே செய்யும். பரமக்குடியிலும் வாச்சாத்தியிலும் இன்னபிற பல இடங்களிலும் தமிழக காவல்துறை செய்த அராஜகங்களை வைத்து தமிழ் நாட்டில் / தமிழ் இனத்தில் இருந்து பிரிந்து செல்கிறேன் என்று ஒருவர் சொல்ல முடியுமே.. இந்தியர் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தாத, ஐந்தாண்டு மட்டுமே ஆட்சியில் இருக்கப் போகும் ஒரு மத்திய அரசு செய்யும் வன்முறையை வைத்து இந்தியாவில் இருந்து ஏன் பிரிந்துபோகவேண்டும் என்ற கேள்விக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போய்விடும். மூளையை உணர்ச்சி வென்றுவிடும்.

அதிலும் இன்றைய இளைய தலைமுறை காதல் நிராகரிப்புக்கே அருவாளைத் தூக்கும் அளவுக்கு மன நிலை பிறழத் தொடங்கியிருக்கும் நிலையில் போலிப் பெருமித பிராந்திய தேசிய இலக்குகள் கற்றுக்கொடுக்கப்பட்டால் விளக்கைத் தேடி ஓடி விழுந்து இறக்கும் விட்டில் பூச்சிகளாக விழுந்து தாமும் இறப்பதோடு பெரும் இருளையும் கொண்டுவந்து சேர்த்துவிடும். நம் தலைவர்களோ வீர வணக்கம் செய்யக் கைகளைத் தூக்கிக்கொண்டு துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மணல் லாரியைத் தடுத்து நிறுத்து அது வீரம்... சாராயக் கடையை அடிச்சு உடை அது வீரம்... தய் மொழிக் கல்வி கற்றுத் தராத பள்ளியை மூடு அது வீரம்... கேவலம் ரெண்டு வைக்கோலை போட்டா அடங்கிப் போகற அப்பாவி மாட்டை அடக்கறதா வீரம் என்று கேட்டால் இந்திய அரசு தமிழ் கலாசாரத்தை ஒடுக்குவதாகக் கிளர்ந்தெழுகிறார்கள். ஜல்லிக் கட்டு நடத்தப்படலாமா கூடாதா என்பது வேறு விஷயம். ஆனால் அதை நடத்தவிடாமல் தடுக்க எடுக்கும் முயற்சிகள் தமிழ் கலாசாரத்தை அழிக்க நினைக்கும் இந்திய ஏகாதிபத்திய சதியாகப் பார்ப்பதில் உண்மை இல்லை.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலுமே பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. வட கிழக்கு மாநிலங்களில் தொழில் வளர்ச்சி இல்லை. பிகார், ஒருசா ஆந்திராவில் இருந்து கூலி வேலை தேடி சாரை சாரையாக தமிழகம் வருகிறார்கள். கேரளாவினர் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து சென்றுதான் வயிற்றைக் கழுவியாக வேண்டியிருக்கிறது. ஆனால், இவர்கள் யாரும் இந்தியாவில் இருப்பதால்தான் இந்தப் பிரச்னை என்று சொல்வதில்லை. இத்தனைக்கும் அந்த மாநிலங்கள் அனைத்தையும் விட தமிழகம் முன்னணியில் இருப்பதற்கு இந்திய மத்திய அரசின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கிறது. கர்நாடகாவில் தமிழர் என்பதால் அடிக்கிறார்கள் என்று இன்று சொல்பவர்கள் அதே கர்நாடகாவில் தமிழர் என்பதால்தான் வேலை வாய்ப்பு பெற்று வாழ்வாங்கு வாழும் நபர்களைப் பற்றி பேசுவதே இல்லை.


இலங்கையும் தன் நாட்டுக்குள் தமிழர் பிரச்னை தலை தூக்காமல் இருக்கவேண்டுமென்றால் இந்தியாவில் தமிழர் பிரச்னை தலை தூக்க வேண்டும். தமிழ் தேசியவாதிகள் எல்லாரும் இதுவரை இலங்கையை மையமாகக் கொண்டு ஆட்டம் போட்டதுபோல் தமிழகத்தில் ஆடத் தொடங்கினால் நாம் நிம்மதியாக ச்ண்டை போடாதீர்கள்.. அமைதியாக இருங்கள் என்று அறிவுரை சொல்லிக் கொண்டு இருந்துவிடலாம் என்று நினைத்து தமிழகத் தமிழ் தேசியவாதிகளுக்கு தன்னுடைய இலங்கைத் தமிழ் உளவாளிகள் மூலம் பண உதவியில் இருந்து அனைத்தும் செய்துவருகிறது. பஞ்சாப், காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் போல தமிழகத்தையும் இன்னும் ஐம்பது ஆண்டுகள் பின்னிழுத்துச் செல்லும் வேலையை அது தொடர்ந்து செய்யும். புலம் பெயர்ந்த தமிழர்களும் ஈழத்தில் விட்டதை தமிழகத்தில் பிடித்துவிடும் முனைப்பில் ஜோதியில் ஐக்கியமாகக்கூடும்.

இந்திய அதிகார, அரசு வர்க்கத்துக்கு இந்த அபாயம் உறைத்திருப்பதாகத் தெரியவில்லை. வேலை வாய்ப்புகளைப் பெருக்குதல், கல்வி வசதிகளைப் பெருக்குதல் என இளைய தலைமுறையை முறையாக வழி நடத்தி இந்திய தேசிய உணர்வுடன் வளர்த்தெடுக்காவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு நம் அருகிலேயே ஒரு வரலாறு உருவாகி முடிந்திருக்கிறது.

வரலாறு திரும்பக்கூடாது... அதுவும் இத்தனை சீக்கிரமாக.

Thursday, 25 August 2016

இந்துமயமாக வேண்டிய சிலுவை, சாண்டா கிளாஸ், பிறந்த நாள் வாழ்த்து.



கொடிமரம், கொடியேற்றம், கோவில் மணி, தேர் பவனி, காவி உடை, நேர்ச்சை மொட்டை, பாத யாத்திரை என இந்து மத அடையளங்களை கிறிஸ்தவம் எப்படி ஏற்றுக்கொள்கிறதோ அதுபோலவே, இந்துக்களும் கிறிஸ்தவ அடையளங்களை அரவணைத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்தவர்களைப் போலவே கல்வி, மருத்துவப் பணிகளை முன்னெடுத்தல், நிறுவனமயமாதல் என இந்து சமயம் பல நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் வேறு சில விஷயங்களையும் செய்ய வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது.  கிறிஸ்தவர்களின் பிரதான அடையாளங்கள் மூன்று. 1. சிலுவை. 2. சாண்டா கிளாஸ். 3. பிறந்த நாள் பாடல் (கொஞ்சம் மறைமுகமாக)
இந்த மூன்றையும் இந்துமயமாக்குவது எப்படி?

இந்த இந்துமயமாக்கத்தின்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் கிறிஸ்தவத்தைப்போல் இத்தாலிய போப் தலைமை எதைத் தீர்மானிக்கிறதோ அதை ஒட்டு மொத்த உலகமும் பின்பற்ற வேண்டும் என்ற ஏக ஆதிபத்தியத் திணிப்புகூடாது. பிராந்திய மாறுதல்கள், பிரந்திய அடையாளங்கள் இவற்றை மதிக்கும் இந்து ஆன்மிகப் பண்புடன் அனைத்தையும் அரவணைத்துச் செல்லும் பரந்த மனப்பான்மையுடன் இதை வடிவமைக்கவேண்டும்.
முதலாவதாக சிலுவைக் குறியின் இரண்டு பக்கங்களையும் சிறிது வளைத்தால் திரிசூலமாக மாறிவிடும். ஆனால், திரிசூலம் என்பது உக்கிர தெய்வங்களின் கையில் இருக்கும் ஆயுதமாகவும் இந்து அடிப்படைவாதத்தின் சின்னமாகவும் இருக்கிறது. எனவே அது வேண்டாம். அடுத்ததாக குத்து விளக்கு என்பது கிட்டத்தட்ட சிலுவையைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்டது. எனவே, சிலுவையை விளக்காக மாற்றுவதே சரியாக இருக்கும். சிலுவையின் இரண்டு கைகளில் சிறு அகல் விளக்கைப் பொருத்தவேண்டும். அதன் பிறகு தாய் தெய்வ வழிபாட்டின் அடையாளமான குங்குமத்தை நடுவில் அழகாக வைக்கவேண்டும். உருவ வழிபாட்டின் சிறப்பம்சமான மாலையை மாட்டுவதற்குத் தோதாக இரண்டு கைகளுடன் சிலுவை இருக்கிறது. கடைசியாக சிலுவையின் உச்சியில் கூம்பிய சிறு தாமரையை கூப்பிய கரங்களை அல்லது சூரிய உருவத்தைப் பொறிப்பதன் மூலம் சிலுவையின் இந்துமயமாக்கம் முழுமையடையும்.


ஆனால், இதில் நாம் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். தமிழக இந்து மற நிலையத்துறை உடனடியாக இதை அமல்படுத்துகிறேன் என்று சொல்லி அப்படியே சிலுவையை அனைத்து கோபுரங்களிலும் கொண்டு சென்று நிறுத்தும். அகல் விளக்கு, குங்குமம், மாலை மரியாதைகளை அப்பறம் செய்கிறேன் என்று சொல்லும். அப்படியே குங்குமம், சூரிய வடிவம், அகல் விளக்கு போன்றவற்றை வைத்தாலும் சிறிது நாட்கள் அவற்றில் விளக்கு எரியும். அதன் பிறகு அவற்றுக்கான மின் இணைப்பு மாயமாகத் துண்டிக்கப்பட்டுவிடும். அப்பறம் எல்லா கோவில்களிலும் சிலுவை மட்டுமே ஜெகஜ்ஜோதியாக ஒளிர ஆரம்பித்துவிடும். எனவே இந்த சிலுவையை கவனமாகத்தான் கையாளவேண்டும். இந்த சிலுவை கட்டாயமாக மூவர்ண நிறத்தில்தான் இருந்தாகவேண்டும் என்று தீர்மானிப்பது ஓரளவுக்கு உதவும்.

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. சிலுவை என்பது ஏசுநாதர் கொல்லப்பட உதவிய பொருள். ஆதிக்க சக்தியின் கொலைக் கருவியைப் பயன்படுத்தியே அந்த ஆதிக்க சக்தியை எதிர்த்தவகையில் சிலுவை ஒரு முக்கிய அடையாளம்தான். மேலும் ஒட்டு மொத்த உலகுக்கும் அவர் சிந்திய தியாக ரத்தத்தை நினைவுபடுத்தும்வகையில் மாற்றிக்கொண்டிருப்பதிலும் சாமர்த்தியம் தென்படவே செய்கிறது. உண்மையில் ஏசு குறித்த பெருங்கதையடலில் என்னை ஏன் கைவிட்டுவிட்டீர் என்று அவர் புறக்கணிப்பின் வலி(யும்) தாங்காமல்தான் அரற்றியிருக்கிறார். ஆனால், கிறிஸ்தவ மதம் அதை தியாகத்தின் குறியீடாகச் சித்திரித்து மிகப் பெரிய பிராண்ட் ஆக மாற்றுவதில் பெரு வெற்றி கண்டிருக்கிறது.

உண்மையில் சிலுவையைவிட உலகத்தோர் அனைவரையும் அரவணைக்கும் வகையில் இரு கைகளையும் விரித்து நிற்கும் ஏசுவின் உருவம் கருணையையும் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் தரக்கூடியது. சிலுவை என்பது ஏசுவின் தோல்வியையும் வலியையும் கர்த்தரின் புறக்கணிப்பையும் நினைவுபடுத்தக்கூடிய அடையாளம். அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் தெய்வங்கள் தோற்பதில்லை. அரக்கர்களைக் கொன்று குவித்து தெய்வங்கள் வெற்றி பெறுவதே இங்கு வழக்கம். கிருஷ்ணர் எப்படிக் கொல்லப்பட்டார் என்ற கதைஉண்டென்றாலும் அவர் புல்லங்குழல் இசைத்தல், ஆவினங்களை மேய்த்தல், வெண்ணெய் எடுத்துத் தின்பது, சக்ராயுதத்தை ஏந்துவது (இஸ்கான்) என்ற வடிவுகளில் காணப்படுவாரே தவிர மான் என நினைத்து அம்பெய்து கொல்லப்பட்ட காட்சி பலருக்குத் தெரியவே செய்யாது. ராமருக்கும் சிவனுக்கும் விநாயகருக்கும் முருகருக்கும் அவ்விதமே. தெய்வங்களின் வெற்றியே நாம் வழிபட விரும்பும் அம்சம். எனவே படுகொலையை நினைவுபடுத்தும் சிலுவை இந்தியர்களுக்கு என்றுமே அந்நியமானதுதான்.


ஆனால், அது மிகப் பெரிய பிராண்டாக உருவாக்கப்பட்டுவிட்டதால் அதை நாம் நமக்கேற்ப மாற்றுவது அவசியமாகிவிட்டிருக்கிறது. தெய்வம் கொல்லப்படுவதுதான் நமக்கு ஏற்பில்லையே தவிர அரக்கர்கள் கொல்லப்படுவதை நாம் விரும்பிக் கொண்டாடவே செய்கிறோம். தீபாவளிபோல் நம் பல பண்டிகைகள் அரக்கனைக் கொன்ற நிகழ்வைக் கொண்டாடுபவையே. எனவே சிலுவையில் ஏதேனும் ஓர் அரக்கனை ஏற்றிக் கொன்று அதையும் நாம் வழிபடலாம். தீண்டாமை, அறியாமை, ஊழல், பொய்மை என நாம் கொல்லவேண்டிய பல அரக்கர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். இவர்களில் ஏதேனும் ஓர் அரக்கனை உரிய அடையாளங்களுடன் சித்திரித்து சிலுவையில் அறைந்து வணங்கலாம். அல்லது மயில் பீலி அணிந்த ஸ்ரீ கிருஷ்ணர் இரண்டு கைகளையும் விரித்து ணணி ஞடச்ஞீணூச்ச்ஏ டுணூச்tச்திணி தூச்ணt திடிண்டதிச்tச்ஏ லெட் ஆல் நோபிள் தட்ஸ் கம் ஃப்ரம் எவெரி வேயர் என்று சொல்வதாக அனைவரையும் அரவணைப்பதாகச் சித்திரிக்கலாம். ஒவ்வொரு மாநிலத்தினரும் மொழியினரும் தமக்கான சிலுவையைத் தாமே தேர்ந்தெடுக்கும் சுதந்தரத்தை நாம் தரவேண்டும்.

அடுத்ததாக, சாண்டா கிளாஸ். தாடி, சிவப்பு நிறம் மேற்கத்திய கோமாளி உடை. இந்த மூன்றையும் சிறிது மாற்றினால் போதும். திருவள்ளுவரை அடிப்படையாக வைத்து தமிழகத்துக்கு வடிவமைக்கலாம். தாடி அவருக்கு ஏற்கெனவே இருக்கிறது. சிவப்பு உடைக்கு பதிலாக மஞ்சள் நிற உடையைத் தேர்ந்தெடுக்கலாம். மேற்கத்திய கோமாளி உடைக்கு பதிலாக பழம் பெரும் புலவனின் உடையை எடுத்துகொள்ளலாம். தோளில் ஒரு மஞ்சள் நிறச் சால்வை. தார்பாய்ச்சிக் கட்டிய வெள்ளை வேட்டி. மார்பில் புரளும் தாடி... இந்த திருவள்ளுவர் தாத்தா குழதைகளுக்கு புத்தகங்களையும் பரிசாகக் கொடுப்பர் என்று சாண்டா கிளாஸை இந்திய சூழலுக்கு ஏர்ப மாற்றிக்கொள்ளலாம். திருவள்ளுவருக்கு பதிலாக வால்மீகியை சிலர் எடுத்துக்கொள்ளலாம். வேத வியாசரை எடுத்துக்கொள்ளலாம். கபீர் தாசரை எடுத்துக்கொள்ளலாம். தமிழக சால்வையில் தமிழ் எழுத்துகள். கர்நாடக சால்வையில் கர்நாடக எழுத்துகள். ஆந்திர சால்வையில் அந்திர எழுத்துகள் என ஒவ்வொரு மாநில சால்வையிலும் அந்தந்த மாநில எழுத்துகள் அச்சிடப்பட்டிருக்கும். சமஸ்கிருத எழுத்துகள் அச்சிடப்பட்ட சால்வையை அணிந்த ஞான மூப்பனை ஆதி மொழியின் பெருமையை உணர்ந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஹேப்பி பர்த் டே டு யு என்ற பாடலைக் கிறிஸ்தவ பாடல் என்று சொல்ல முடியதென்றாலும் அது மறைமுகமாக கிறிஸ்தவ அடையாளமாகவே இருக்கிறது. அதிலும் மெழுகுவர்த்தி கிறிஸ்தவ அடையாளமே. விளக்கை அணைக்கும் அமங்கலச் செயல் என்பதும் நமக்கு அந்நியமானதே. எனவே, இவற்றை அப்படியே மாற்றிக்கொள்ளலாம். கேக்குக்கு பதிலாக பால் ஸ்வீட் ஏதாவது ஒன்று. பர்பி அல்லது பால்கோவா அல்லது மைசூர் பாகு போன்ற ஏதேனும் ஒன்றை தட்டு முழுவதும் அப்படியே கொண்டுவந்து வைத்துக்கொள்ளலாம். மெழுகு வர்த்திக்கு பதிலாக அகல் விளக்கு ஏற்றி வைத்து பிறந்த நாளைக் கொண்டாடவேண்டும். ஹேப்பி பர்த் டே டு யு என்ற பாடலின் அதே மெட்டில் அசதோமா சத் கமய.. தமசோமா ஜ்யோதிர் கமய... மிருத்யோமா அமிர்தம் கமய என்ற பாடலை அப்படியே பாடிவிடலாம். இருள் நீக்கி ஒளி கொண்டு வா.... பொய் நீக்கி மெய் கொண்டு வா... மரணம் நீக்கி அமுது கொண்டுவா... அன்புச் சிறுவனின் பிறந்த நாளிலே என்று இந்தப் பாடலை தமிழிலும் பாடலாம்.

கிறிஸ்தவர்கள் இந்த மாற்றங்களை நிச்சயம் எதிர்க்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் கொடிமரம், கொடியேற்றம், கோவில் மணி, தேர் பவனி, காவி உடை, நேர்ச்சை மொட்டை, பாத யாத்திரை என இந்து அடையாளங்களை ஏற்றுக்கொள்வதில் பெருமிதம் கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். எனவே நாம் கிறிஸ்தவ அடையாளங்களை இப்படி ஏற்றுக்கொள்வதை அவர்கள் நிச்சயம் வரவேற்கவே செய்வார்கள்.