Sunday, 17 November 2013

காதல் - 2 - பாகம் 1


காதல் திரைப்படம் முடியும் இடத்தில் இருந்து இந்தப் படம் ஆரம்பிக்கிறது.

பைத்தியமாக இருக்கும் முருகனை, முன்னாள் காதலி ஐஸ்வர்யாவும் அவளுடைய கணவனும் தங்கள் பராமரிப்பில் வைத்து பார்த்துக் கொள்கிறார்கள். தன் காதலனுக்கு தன்னால் ஏற்பட்ட துன்பத்துக்குப் பிராயச்சித்தமாக அவனை ஐஸ்வர்யா அன்பாக கவனித்துக் கொள்கிறாள். மன நல மருத்துவர்களில் ஆரம்பித்து மாந்த்ரீகங்கள் செய்பவர்கள்வரை ஊர் ஊராக அழைத்துச்சென்று குணப்படுத்த முயற்சி செய்கிறாள். கடுமையான முயற்சிகளுக்குப் பிறகுஅவளுடைய தூய அன்புக்குப் பலன் கிடைக்கிறது. முருகனுக்கு மெதுவாகச் சுய நினைவு திரும்புகிறது. இனி எல்லாம் சரியாகிவிடும். முருகனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்துவிட்டால் தன் பாவமெல்லாம் கரைந்துவிடும் என்று ஐஸ்வர்யா நினைக்கிறாள். ஆனால், பிரச்னையோ அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. பைத்தியம் தெளிந்த முருகன் பழைய முருகனாகவே இருக்கிறான். ஐஸ்வர்யாவையே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். இதைத் தொடர்ந்து நடக்கும் சிக்கல்களே காதல் - பார்ட் 2.
  

(டைட்டிலில் முருகனுக்குத் தரப்படும் சிகிச்சை காட்சிகள் டிஸ்ஸால்வ் ஷாட்களாக இடம்பெறுகின்றன. பின்னணியில் அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே பாடல் வெறும் வயலின் இசையில்)

பாடல் முடிந்ததும் மருத்துவமனையில் தன்னந்தனியனாகப் படுத்திருக்கும் முருகன் கண் விழித்துப் பார்க்கிறான். ஆஸ்பத்திரிக்கு எப்படி வந்தோம் என்று அவனுக்குக் குழப்பமாக இருக்கிறது. நர்ஸ்கள் வந்து மருந்து கொடுக்கிறார்கள். எனக்கு என்ன ஆச்சு..? நான் எப்படி இங்க வந்தேன் என்று அவர்கள் போனதும் குழம்பித் தவிக்கிறான். பாத்ரூமுக்குச் செல்கிறான். அங்கு இருக்கும் கண்ணாடியில் அவனுடைய முகத்தைப் பார்க்கிறான். நீண்ட காலத்துக்குப் பிறகு அதை அவனால் இனம் காண முடிகிறது. மெள்ள நீரை அள்ளி முகத்தைத் துடைத்துக்கொள்கிறான். சட்டென்று ஐஸ்வர்யாவின் நினைவு அவனுக்கு வருகிறது. பதறியபடியே வெளியே விரைகிறான்.

மருத்துவமனை வாசலில் பூட்டாமல் வைத்திருக்கும் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஐஸ்வர்யாவின் வீட்டுக்குப் பறக்கிறான். வீட்டில் பார்வை மங்கிய ஒரே ஒரு பாட்டி மட்டும் சோஃபாவில் உட்கார்ந்திருக்கிறார். முருகன் பரபரப்புடன் அல்ட்ராமோஷனில் வீட்டுக்குள் நுழைகிறான். ஒவ்வொரு அறையாக ஐஸ்வர்யாவைத் தேடியபடி போகிறான். எல்லா அறையும் பூட்டி இருக்கிறது.

வீசும் காற்றில் ஒரு அறையின் கதவு மட்டும் லேசாகத் திறந்து மூடிக்கொண்டிருக்கிறது. கதவின் மேல் மாட்டப்பட்டிருக்கும் திரைச்சீலை எதையோ சொல்லத் துடிப்பதுபோல் படபடக்கிறது. மெள்ள அந்த அறையை நெருங்கிச் செல்கிறான். அங்கு அவன் பார்க்கும் காட்சி அவனை அதிர்ச்சி அடைய வைக்கிறது. டேபிளில் இருக்கும் புகைப்படத்தில் ஐஸ்வர்யாவும் இன்னொருவரும் மாலையும் கழுத்துமாக நிற்கிறார்கள். அதற்குப் பக்கத்தில் இன்னொரு புகைப்படம். அதில் ஐஸ்வர்யா தன் கணவனுடனும் இரண்டு குழந்தைகளுடனும் சிரித்தபடியே நின்றுகொண்டிருக்கிறாள். முருகனுக்கு தலை சுற்றுகிறது. அலமாரியில் ஒரு ஆல்பம் வைக்கப்பட்டிருக்கிறது. அவசர அவசரமாகப் புரட்டிப் பார்க்கிறான். திருமணப் படங்கள், ஹனிமூன் படங்கள், குழந்தைகளுடன் சுற்றுலா போனபோது எடுத்த படங்கள் என முருகன் இல்லாத ஐஸ்வர்யாவின் உலகம் அங்கு தெரிகிறது.

நடந்தது எல்லாம் மெதுவாக அவனுக்குப் புரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்குக் கோபம் தலைக்கு ஏறுகிறது. அப்போது மாடியில் ஏதோ சத்தம் கேட்கவே அங்கு போகிறான். மாடியில் இருந்து இறங்கி வரும் ஐஸ்வர்யாவும் அவனைப் பார்த்துவிடுகிறாள். அந்த இடத்தில் அவனைப் பார்ப்பவள் முதலில் அதிர்ச்சி அடைகிறாள். ஆனால், அவனுக்கு பைத்தியம் குணமாகிவிட்டது தெரிந்ததும் சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஆடுகிறாள். அவனைக் கட்டிப் பிடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறாள். தான் கும்பிட்ட சாமியெல்லாம் தன்னைக் காப்பாற்றிவிட்டதாகச் சொல்கிறாள். அடுத்த முகூர்த்தத்திலேயே அவனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறாள். இதைக் கேட்டதும் முருகன் அதிர்ச்சி அடைகிறான்.

தனக்கு குணமான விஷயம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டால், திருமணம் செய்து எப்படியும் வெளியே அனுப்பிவிடுவார்கள் என்பது தெரிந்ததும், சட்டென்று பைத்தியம் போல் நடிக்க ஆரம்பித்துவிடுகிறான். அதுவரை சந்தோஷமாக இருந்த ஐஸ்வர்யா இந்த மாற்றம் கண்டு அதிர்ச்சி அடைகிறாள். சுய நினைவு திரும்ப என்னவெல்லாமோ செய்து பார்க்கிறாள். முடியாமல் போகிறது. சோர்வுடன் முருகனை மீண்டும் மருத்துவமனையில் கொண்டு சேர்க்கிறாள்.

தன் காதலி வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டியுடன் இருப்பதை நினைத்து மருத்துவமனைக்குத் திரும்பியதும் முருகன் அழுகிறான். அவனுக்கு குணமான விஷயம் கரட்டாண்டிக்குத் தெரிய வருகிறது. தன்னை அடித்துப் போட்ட பிறகு என்ன நடந்தது என்று அவனிடம் கேட்கிறான். ஐஸ்வர்யா திருமணமே வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாள். பெற்றோர் வலுக்கட்டாயப்படுத்தியபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறாள். கடைசி நேரத்தில் எப்படியோ காப்பாற்றி சில காலம் கழித்து திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், திருமணம் முடிந்த பிறகும் இரண்டு வருடங்கள் அப்பா வீட்டிலேயே ஐஸ்வர்யா இருந்திருக்கிறாள்.

முருகனுக்கு அதையெல்லாம் கேட்கும்போது ஆத்திரமாகவும் வருகிறது. இன்னொரு பக்கம் சந்தோஷமாகவும் இருக்கிறது. அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது  எப்படியும் அவள் மனத்தில் தனக்கு நிச்சயம் இடம் இருக்கத்தான் செய்யும். அவளை எப்படி அழைத்துச் செல்லலாம் எங்குபோய் புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று திட்டம் போடுகிறான். கரட்டாண்டியோ, அது தவறு. அவள் இப்போது இன்னொருவருக்கு மனைவி என்று சொல்கிறான். என் மனைவியா இருந்தவளைத்தான இன்னொருத்தருக்குக் கட்டி வெச்சிருக்காங்க. அது மட்டும் சரியா என்று கேட்டு அவன் வாயை அடைத்துவிடுகிறான். நைஸாக ஐஸ்வர்யாவிடம் இது தொடர்பாகப் பேச்சுக் கொடுத்துப் பார்க்கும்படிக் கேட்டுக் கொள்கிறான்.

ஒருநாள் ஐஸ்வர்யா முருகனைப் பார்க்க மருத்துவமனைக்கு வரும்போது, முருகன் குணமான பிறகும் உன் நினைப்பாவே இருந்தா என்ன பண்ணுவ என்று ஐஸ்வர்யாவிடம் கரட்டாண்டி கேட்கிறான். அவளோஅப்படியெல்லாம் இருக்கமாட்டான். நிலைமையைப் புரிஞ்சிக்கிட்டு வேறொரு கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருப்பான் என்று சொல்கிறாள். அதைக் கேட்கும் முருகனுக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. அடக்கிக் கொள்கிறான். நாட்கள் கழிகின்றன.

ஐஸ்வர்யாவும் அவளுடைய கணவனும் அவனை அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். தன் காதலி தன் முன்னாலேயே வேறொருவருடன் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து முருகன் நிலைகொள்ளாமல் தவிக்கிறான்.

ஒரு நாள் முருகனும் கரட்டாண்டியும் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேசி முடித்துவிட்டு அவன் புறப்படும்போது, காபி வாங்கிக் கொடுத்துவிட்டுப் போகும்படிச் சொல்கிறான் முருகன். பிளாஸ்கை எடுத்துக்கொண்டு விசில் அடித்தபடியே கதவை மூடிவிட்டுப் போகும் கரட்டாண்டி வாசலில் ஐஸ்வர்யா நிற்பதைப் பார்த்து திடுக்கிடுகிறான். அவள் அவனைத் தனியாக அழைத்துச் சென்று நடந்த விஷயங்களைத் தெரிந்துகொள்கிறாள். ஐஸ்வர்யாவை இப்போதும் முருகன் காதலிப்பதாகவும் அவள் மட்டும் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துகொண்டுவிடுவேன் என்று சொன்னதாகவும் சொல்கிறான். சரி... நீ போ. ஆனால், இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாதே என்று அவனை காபி வாங்க அனுப்பிவிட்டு ஐஸ்வர்யா எதுவும் நடக்காததுபோல் முருகனின் அறைக்குள் நுழைகிறாள். முருகன் அவளைப் பார்த்ததும் பைத்தியம் போல் நடிக்கிறான். ஐஸ்வர்யாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முருகனுக்குக் குணமானது சந்தோஷத்தைத் தருகிறது. ஆனால், தன் மீது இன்னமும் காதலாக இருப்பது பயத்தைத் தருகிறது. மனதுக்குள் அழுதபடியே வீட்டுக்குத் திரும்பிவிடுகிறாள்.

மனநல மருத்துவராக இருக்கும் தன் தோழியிடம் போய் விஷயத்தைச் சொல்லி அழுகிறாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ள இப்போதும் விரும்புவதாகவும் மறுத்தால் தற்கொலை செய்து கொள்வதாகச் சொன்னதாகவும் சொல்கிறாள். அதற்கு தோழி, முருகன் தற்கொலை செய்து கொள்வானா மாட்டானா என்பது தெரியாது. ஆனால், வீட்டை விட்டு அனுப்பினாலோ வேறு திருமணம் செய்து கொள்ளக் கட்டாயப்படுத்தினாலோ மீண்டும் பைத்தியம் பிடித்துவிட வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆறேழு வருடங்கள் ஓடியது அவனுக்குத் தெரியாது. அவனைப் பொறுத்தவரையில் தூங்கி எழுந்ததுபோல்தான். எனவே, அவனை அவன் போக்கிலேயே போய் மெதுவாக வழிக்குக் கொண்டுவரவேண்டும் என்று அறிவுரை சொல்கிறாள். இருவரும் அவனைப் புதியதொரு வாழ்க்கைக்குத் தயார்படுத்துவது என்று முடிவெடுக்கிறார்கள்.

(தொடரும்)

Thursday, 14 November 2013

வட்டச் செயலாளர் வண்டு முருகன் - பாகம் 5

அடுத்ததாக, விவசாயத்துறையில் நிலவிவரும் பிரச்னைகள் குறித்து ஒரு கருத்தரங்கில் வண்டு முருகன் கலந்துகொள்வான். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிலங்கள் துண்டு துண்டாக பலருடைய கைகளில் இருப்பதால் நவீன விவசாய முறைகளை அதில் பயன்படுத்த முடியவில்லை. விவசாயம் வெற்றிகரமான தொழிலாக ஆக்கப்படவேண்டும். அதற்கு, அந்த நிலங்கள் எல்லாம் ஒன்றாக ஆக்கி எங்களிடம் ஒப்படையுங்கள் என்று சில கார்ப்பரேட் நிறுவனத்தினர் கேட்பார்கள்.

விவசாயம் லாபகரமான தொழிலாக ஆக்கப்படவேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், யாருக்கு லாபத்தை அது ஈட்டித் தரவேண்டும்? 100 ஏக்கர் நிலத்தை ஒரே ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு கொடுத்துவிடுவதன் மூலம் நிச்சயமாக அதி நவீன டிராக்டர்களைப் பயன்படுத்துதல், ஹெலிகாப்டரில் பறந்து பூச்சி மருந்து அடித்தல், உற்பத்திப் பொருட்களை பதப்படுத்துதல், சந்தையின் தேவைக்கு ஏற்ப பயிரிடுதல், நீர் பாசன வசதிகளை மேம்படுத்துதல் என அனைத்து வசதிகளையும் எளிதில் செய்ய முடியும். லாபத்தை அதிகரிக்க முடியும். ஆனால், இன்று 100 பேரிடம் ஒவ்வொரு ஏக்கராக இருப்பதை ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்தால் அதிக பட்சம் பத்தில் இருந்து இருபது பேருக்கு அந்த பண்ணையில் வேலை கிடைக்கலாம். எஞ்சிய 80 பேர் வேலையை இழந்து திண்டாட வேண்டியிருக்குமே என்று வண்டுமுருகன் கேட்பான். அவர்கள் கல்வி கற்றுக்கொண்டு, விவசாயத்துறையைவிட்டுவிட்டு வேறு பணிகளுக்குச் சென்றுவிடவேண்டும் என்று கார்ப்பரேட் நிறுவனத்தினர் சொல்வார்கள்.

யாரிடமிருந்து நிலத்தை கையகப்படுத்துகிறீர்களோ அவர்களுக்கு உங்கள் நிறுவனத்தின் பங்குகளைப் பிரித்துக்கொடுக்கத் தயாரா என்று வண்டு முருகன் கேட்பான். நிலத்துக்கு மட்டுமே முதலீடு தேவைப்பட்டால் அப்படிச்செய்யமுடியும். ஆனால், வேறு பல செலவுகள் உண்டு என்பதால் மிகக் குறைவான பங்குகளை மட்டுமே தரமுடியும் என்று சொல்வார்கள். அவர்கள் தருவதாகச் சொல்லும் பங்குகளின் மதிப்பு நிலத்தின் மதிப்பைவிட மிகவும் குறைவாகவே இருக்கும். அதைவிட இப்போது இருக்கும் நிலத்தில் வெற்றிகரமாக பயிர் செய்ய என்ன வழி என்று சொல்லுங்கள் வண்டுமுருகன் வேறு நிபுணர்களைக் கேட்பான்.

இயற்கை விவசாயம் செய்யும் ஒருவர் எழுந்து நின்று, விவசாயத்தை லாபகரமானதாக ஆக்கவேண்டுமென்றால் முதலில் சிறு விவசாயிகள் பெரு முதலாளிகளைப்போல் சந்தைக்காக உற்பத்தி செய்வதை நிறுத்தவேண்டும். ஒவ்வொருவரும் தத்தமது வீட்டினருக்குத் தேவையான உணவைச் சமைத்துக்கொள்வதுதான் நல்லது. அனைவருமே ஹோட்டல் நடத்துகிறேன். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வீட்டுத் தேவைகளைக் கவனித்துக்கொள்கிறேன் என்று சொன்னால் அது எப்படி முட்டாள்தனமாக இருக்குமோ அதுபோல்தான் இன்று இருக்கிறது. ஒவ்வொரு சிறு விவசாயியும் பொது விற்பனைக்காக எதையும் உற்பத்தி செய்யத் தேவையில்லை. தனது தேவைகளை முதலில் பூர்த்தி செய்துகொள்ளட்டும். அதன் பிறகு எஞ்சும் உற்பத்தியை சந்தைக்குக் கொண்டுவந்துகொள்ளலாம் என்று சொல்வார்.

அப்படிப் பார்த்தாலும் ஒரு சிறு விவசாயிக்கு நஷ்டம்தானே ஏற்படும் என்று சிலர் சொல்வார்கள். இன்று விவசாயிகளுக்கு பெரிய செலவை இழுத்துவிடுவது என்ன என்று பார்த்தால், வேதி உரங்கள்தான். எனவே, அதன் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும். நிலத்தின் கால் பகுதியில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றுக்கான பயிர்களை வளர்க்க வேண்டும். அவை தரும் உரத்தையே எஞ்சிய நிலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தழையுரம், மண் புழு உரம், பஞ்சகவ்யம் என இயற்கை முறையில் உரங்களை தயாரித்துக் கொள்ளவேண்டும். மா, பலா, வாழை என பலதரப்பட்ட மரங்களை கால் பகுதி நிலத்தில் பயிரிட வேண்டும்.

மழைக்காலத்தில் சேரும் வெள்ளத்தை தேக்கி வைக்க ஒரு ஏக்கர் நிலத்திலேயே சிறிய குட்டை அல்லது கிணறு ஒன்றை வெட்டிக்கொள்ளவேண்டும். வரப்போரங்களில் மிளகாய், தக்காளி, வெங்காயம், கீரை போன்றவற்றை விளைவித்துக் கொள்ளவேண்டும். ஷெல்ஃப், பாட்டில் ஃபார்மிங் என்ற முறையில் பல அடுக்குகளில் இந்த சிறிய பயிர்களைப் போதிய அளவு வளர்த்துக்கொள்ள முடியும். சொட்டு நீர் பாசனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் குறைந்த நீரை வைத்தே அதிக விளைச்சலைக் கொண்டுவந்துவிட முடியும். இப்படியாக ஒரு ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயி முதலில் தன்னிறைவை அடைவதற்கு அதிக கவனம் செலுத்தவேண்டும். அதன் பிறகு கூடுதலாகக் கிடைப்பவற்றை சுற்றுவட்டார உழவர் சந்தையில் விற்றுக்கொள்ளவேண்டும். விவசாயிக்கு விவசாயமே மன நிறைவைத் தரும். ஒவ்வொரு ஏக்கர் நிலமும் பொன் முட்டையிடும் வாத்தைப் போன்றது. அதை பக்குவமாக வளர்த்தால் வளமான வாழ்க்கை எல்லாருக்கும் கிடைக்கும்.

நில உச்சவரம்பு சட்டத்தை முறையாக அமல்படுத்தியும் கோயில் நிலங்களை நிலமற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தும் ஒவ்வொருவரும் தன்னிறைவு அடைய வழி செய்து தரவேண்டும். நாட்டுமக்களின் உணவுத் தேவைக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் மட்டும் பெரிய அளவிலான பண்ணைகளை அமைத்து விவசாயம் செய்தால் போதும் என்று ஒரு திட்டத்தை முன்வைக்கிறார். பரிசோதனை முயற்சியாக சில மாவட்டங்களில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அது பெரிய வெற்றியைத் தந்ததும் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.

அடுத்ததாக கூடங்குளத்தில் பிரச்னை பெரிதாகிறது. வண்டு முருகன் இடிந்தகரைக்குச் செல்கின்றான். போராட்டக்காரர்களை நேரில் சந்திக்கிறான். நம்பிராஜன் தன்னுடைய ஆட்களை அந்தக் கூட்டத்தில் அனுப்பி நாட்டு வெடிகுண்டுகளை எறியச் செய்து கலவரத்தை உருவாக்குகிறான். நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபடுகிறது. பிரச்னையைத் தீர்க்கப்போன இடத்தில் அது பெரிதானது குறித்து வண்டு முருகன் கலங்குகிறான். இருந்தும் காவல்துறையில் இருந்து அத்துமீறி நடந்துகொண்டவர்களை அழைத்து எச்சரிக்கிறான். உங்கள் உயிருக்கு ஆபத்து வந்ததைப் பொறுக்காமல்தான் அப்படி நடந்துகொண்டோம் என்று சொல்கிறார்கள். உண்மையில் அவர்கள் நம்பிராஜனின் விசுவாசிகளே. அவனுடைய ஆட்களை நாட்டு வெடிகுண்டுடன் கூட்டத்துக்குள் அனுமதித்ததே அவர்கள்தான். அதைச் சாக்காக வைத்து போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை அவிழ்த்துவிட்டதும் அவர்கள்தான். ஆனால், நம்பிராஜனின் திட்டம் ஒருவகையில் வண்டு முருகனுக்கு சாதகமாகவே அமைந்துவிட்டது. அவன் அணு மின் நிலையத்தை மூடிவிட்டு அந்த ஊரில் காற்றாலைகளையும் சூரிய மின் வயலையும் நிர்மாணிக்கத்தான் திட்டமிட்டிருந்தான். மத்திய அரசு அதற்கு அனுமதி கொடுக்காமல் இருந்தது. இப்போது போராட்டக்காரகளில் பலர் சுட்டுக்கொல்லப்பட்டதால் அந்தப் பகுதி மக்கள் அணு உலையை எக்காரணம் கொண்டு அந்தப் பகுதியில் இயங்க விடுவதில்லை என்று முடிவெடுக்கிறார்கள். அக்கம் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் அவர்களுக்கு ஆதரவு பெருகுகிறது.

வண்டு முருகன் அதைச் சாக்காக வைத்து தன் திட்டத்தை ஒத்துக்கொள்ளும்படி மத்திய அரசை நிர்பந்திக்கிறான். மத்திய அரசு கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தாகிவிட்டதால் திட்டத்தைக் கைவிட முடியாது. புதிய திட்டங்களுக்குக் கூடுதலாக நிதி ஒதுக்க முடியாது என்று சொல்கிறது. புதிய திட்டத்துக்கான நிதியை நாங்களே செலவிட்டுக் கொள்கிறோம். எங்களுக்கு மின்சாரமும் வேண்டும். மக்களுடைய உயிரும் பாதுகாக்கப்படவேண்டும். நாளை அணு விபத்து நடந்து மக்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கொடுக்க ஏராளமான பணத்தை ஒதுக்கிவைப்பதைவிட அந்தப்பணத்தை வைத்து ஆபத்து அதிகம் இல்லாத திட்டத்தை அமல்படுத்துவதே சிறந்தது என்று சொல்கிறான்.

இந்த விஷயத்தில் குறுகிய சிந்தை கூடாது. இந்தியனாக இருந்து சிந்தித்துப் பாருங்கள். ஒருவகையில் இந்த அணு உலை என்பது மின்சார உற்பத்திக்காக ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதில் இருந்து கிடைக்கும் அணுக் கழிவுகளைக் கொண்டு அணு ஆயுதங்கள் தயாரிப்பதுதான் உண்மையான நோக்கம். எனவே, நிலைமையைப் புரிந்துகொண்டு ஒதுங்கி நில்லுங்கள். மேலும் இலங்கை அரசுக்கு மின்சாரம் தருவதாக வேறு நாம் ஒப்புக் கொண்டிருக்கிறோம். அதைச் செய்யவில்லையென்றால் அயல் நாட்டு நல்லுறவு பாதிக்கப்படும். மேலும் இந்தியாவில் இதுபோல் அணு உலை அமைக்க தடை விதிக்கப்பட்டால், அயல் நாட்டினர் வேறு எந்த திட்டத்துக்கும் நம் நாட்டில் முதலீடு செய்ய மாட்டார்கள். எனவே, இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு சிந்தியுங்கள் என்று மத்திய அரசு சொல்லும்.

அணு ஆயுதங்கள் நமக்குத் தேவையே இல்லை. அதோடு, நான் முதலில் தமிழனாக இருக்கிறேன். அதன் பிறகு இந்தியனாகிக் கொள்கிறேன். நல்ல தமிழனாக இருந்தால்தான் நல்ல இந்தியனாகவும் ஆக முடியும். இலங்கைக்கு மின்சாரம் கொடுக்க தமிழர்களின் வாழ்க்கையைப்பணயம் வைக்க விரும்பவில்லை. எனவே, இந்த அணு மின் நிலைய திட்டத்தை அப்படியே நிறுத்திவிட்டு மாற்று மின்சாரத்திட்டத்தை ஆரம்பிக்கிறேன். விருப்பமிருந்தால் நிதி ஒதுக்குங்கள் என்று சொல்லி சூரிய, காற்றாலை மின்சாரத் திட்டத்தை சட்ட சபையில் தைரியமாக அறிவிப்பான். தமிழக மக்களின் பூரண ஆதரவு வண்டு முருகனுக்குக் கிடைக்கிறது. அப்படியாக நம்பிராஜன் செய்த சிறிய கலவரம் மறைமுகமாகப் பெரிய நன்மையை உருவாக்கிவிடுகிறது.

இந்தப் பிரச்னை ஓய்ந்ததும் அடுத்த பிரச்னை முளைக்கிறது. இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற் பகுதியில் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வரும் நிலை தீவிரமடைகிறது. இரு நாட்டு மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறான் வண்டு முருகன். தமிழக கடலோரப்பகுதிகளில் தமிழக மீனவர்கள் மோட்டார் படகுகளைப் பயன்படுத்துவது நவீன மீன்பிடிக் கருவிகளைப் பயன்படுத்துவது என தீவிர வேட்டையில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் மீன் வளம் குறைந்துவிட்டிருக்கிறது. அதோடு பழங்காலத்தில் எல்லாம் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலகட்டத்தில் மீன் பிடிக்க கடலுக்குப் போகமாட்டார்கள். உள் நாட்டு மக்களும் அந்தக் காலகட்டத்தை விரதகாலமாக அனுசரித்து அசைவ உணவைத் தவிர்த்துவிடுவார்கள். இது மீன் வளம் குறையாமல் இருக்க உதவியிருந்தது. ஆனால், இப்போது மீன் பெருக்க காலகட்டத்திலும் கூட விட்டுவைக்காமல் மீன்களை வேட்டையாடியதால் மீன்கள் வெகுவாகக் குறைந்துவிட்டிருக்கின்றன. இதனால் இலங்கைக் கடல் பகுதிக்குள் போனால்தான் கொஞ்சமாவது மீன்கள்கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. இலங்கை கடலோர மீனவர்களே இந்திய மீனவர்களை எதிரிகளாகப் பார்க்கும் நிலையே நிலவுகிறது. இந்த நிலையில் கடலோரப் பகுதியில் வேறு என்ன வகையில் வாழ்வாதாரத்தைப் பெருக்கலாம் என்று வண்டு முருகன் ஆலோசிக்கிறான். இறால் பண்ணைகள் அமைத்தல், கடல் பாசி வளர்த்தல் என பல வழிகள் முன்வைக்கப்படுகின்றன. மீனவர்களுக்கு குறைந்த வட்டியில் கடம் கொடுத்து இந்தத் தொழில்களில் ஈடுபட ஊக்கம் தருகிறான். அதோடு கடலோரப் பகுதியில் ஏராளமான பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கு வாய்ப்பு உண்டு. மேற்கத்திய நாடுகளில் இருப்பதுபோல் உல்லாசப் படகு சவாரியில் ஆரம்பித்து சர்ஃபிங், டைவிங், ஆழ் கடல் நீச்சல் என பல விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகிறான். இந்த விளையாட்டுகளை நிர்வகிக்கும் பொறுப்பை மீனவர்களிடமே ஒப்படைக்கிறான். புதிய வாழ்வாதாரம் கிடைத்ததைத் தொடர்ந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்பவர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைகிறது. தமிழக கடலோரப் பகுதிகள் அருமையான சுற்றுலா மையமாகப் புகழ் பெறுகின்றன.

வண்டு முருகன் பெற்று வரும் தொடர் வெற்றிகளினால் ஆத்திரத்தின் உச்சிக்கே போகும் நம்பிராஜன் வண்டு முருகன் தேர்தலில் நின்று வெற்றி பெறவில்லை என்பதால் அது செல்லாது என்று வழக்குத் தொடுப்பார். நீதிமன்றம் அந்த வழக்கை ஏற்று ஆறு மாதகாலத்தில் வண்டுமுருகன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறவேண்டும் என்று தீர்ப்பு வழங்கும். தேர்தல் முறையாக நடந்தால் வண்டு முருகன்தான் ஜெயிப்பான் என்பதால், நம்பிராஜன் என்ன செய்வதென்று புரியாமல் தவிப்பான்.

தேர்தல் பிரசாரத்துக்கு வண்டு முருகன் போயிருக்கையில் அவனை ஒரு கிராமத்தில் கொன்றுவிடுவதென்று திட்டம் தீட்டுவான். வண்டு முருகன் மாலை நேரத்தில் ஒரு கிராமத்தில் தேர்தல் பிரசாரம் முடித்துவிட்டுத் திரும்பி வரும்வழியில் ஒரு சிலர் அவனுடைய காரை மறிப்பார்கள். பக்கத்தில் தமது கிராமத்துக்கும் வந்து பேசிவிட்டுச் செல்லவேண்டும் என்று சொல்வார்கள். நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஊருக்குச் செல்லவேண்டாம் என்று பூனைப்படையினர் சொல்வார்கள். ஆனால், வண்டு முருகனோ மக்கள்தான் முக்கியம். அவர்கள் கூப்பிட்டுப் போகாமல் இருந்தால் சரியாக இருக்காது என்று அந்த கிராமத்துக்கு வண்டியைவிடச் சொல்வார். வழியை மறித்தவர்கள் முள்ளுக்காட்டு வழியே அழைத்துச் செல்வார்கள். பூனைப்படையினரை ஒவ்வொரு திருப்பத்தில் தவறான வழியில் திசை திருப்பிவிட்டு வண்டு முருகன் இருக்கும் காரை மட்டும் ஒரு இடத்தில் சுற்றி வளைப்பார்கள். வண்டு முருகனைக் கார் கதவைத் திறக்கவிடாமல் வெளியில் இருந்தபடியே ஈட்டிகளால் சரமாரியாக காருக்குள் குத்துவார்கள். உள்ளேயிருந்து எந்த சப்தமும் வராது. இறந்துவிட்டான் போலிருக்கிறது என்று மெதுவாக கார் கதவைத் திறக்க நெருங்குவார்கள். அப்போது மடாரென்று காரின் நான்கு கதவுகளும் உள்ளிருந்து மின்னல் வேகத்தில் வீசி எறியப்படும். காரை நெருங்கியவர்கள் அந்தக் கதவுகளால் தூக்கி எறியப்படுவார்கள். எஞ்சியவர்கள் பாய்ந்து காரை நெருங்கும்போது காரின் மேல் கூரையை அப்படியே மஹாவிஷ்ணு சக்கரத்தை ஏந்தியதுபோல் பிடித்தபடி வண்டு முருகன் விஸ்வரூபம் எடுப்பான். மேல் கூரையை வேகமாகச் சுழட்டி வீசி எறிவான். அவனைக் கொல்லவந்தவர்கள் பயந்து பின்வாங்குவார்கள். எம்.ஜி.ஆரின் ஆவி உடலில் புகுந்த வண்டு முருகன் தன் காலால் காரில் இருந்து சிலம்புக் கம்பு ஒன்றை ஸ்டைலாக எடுத்தபடி வெளியே பாய்ந்து அவர்களைப் பந்தாடுவான். கடைசியில் பூனைப்படையினரும் வந்து சேர்ந்துவிடவே வண்டு முருகனைக் கொல்ல வந்தவர்கள் தப்பி ஓடிவிடுவார்கள். அவர்களில் ஒருவன் மட்டும் பிடிபட்டுவிடுவான். அவனை முறைப்படி விசாரித்ததில் நம்பிராஜன்தான் அவர்களை அனுப்பியதாகச் சொல்லிவிடுவான். இதனால், மக்கள் மத்தியில் வண்டு முருகனுக்கு அனுதாபமும் பெருகும். ஏற்கெனவே அவன் செய்த நல்ல செயல்களே அவனை வெற்றிபெற வைக்கப் போதுமானதாக இருக்க இப்போது இதுவும் சேர்ந்துவிடவே அவன் அசைக்க முடியாத வெற்றியைப் பெறுவான் என்பது உறுதியாகிறது.

நம்பிராஜன் இதை எப்படியாவது தடுக்கத் திட்டமிடுவான். முன்பென்றால், வாக்குச் சாவடியைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டு வென்றுவிடலாம். இப்போதோ மின்னணு வாக்கு எந்திரம் வந்துவிட்டது. ஒன்றும் செய்ய முடியாது என்று புலம்பித் தவிப்பான். நம்பிராஜன் வெற்றி பெற்றாக வேண்டும் என்று விரும்பும் முதலாளிகள் சிலர் வாக்கு எந்திரத்தில் எளிதில் மோசடி செய்ய முடியும் கவலைப்படாதீர்கள் என்று சொல்வார்கள். நம்பிராஜனுக்கு அவர்கள் சொல்வதில் நம்பிக்கை வராது. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தைக் கொண்டுவந்து செய்துகாட்டினால்தான் நம்புவேன் என்பான். அதன்படியே அந்த வாக்குப் பதிவு எந்திரத்தின் மென் பொருளைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் பிரதிநிதியை முதலாளிகள் அழைத்து வருவார்கள். அவர் எப்படி மோசடி செய்ய முடியும் என்பதை விளக்கிக் காட்டுவார். முதலில் வண்டு முருகனுடைய சின்னத்துக்கு பத்து வாக்குகள் பதிவு செய்வார்கள். நம்பிராஜனின் சின்னத்துக்கு ஆறு வாக்குகள் பதிவு செய்வார்கள். ஆனால், ரிசல்ட் அறிவிக்கும்போது நம்பிராஜனுக்கு பத்து வாக்குகள் பதிவானதாகவும் வண்டுமுருகனுக்கு ஆறு வாக்குகள் பதிவானதாகவும் காட்டும். நம்பிராஜன் அதைப் பார்த்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடுவான். எந்தக் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அந்த எண்ணிக்கைகள் உங்கள் சின்னத்துக்கு விழுந்ததாகவும் உங்களுக்குக் கிடைக்கும் வாக்குகள் அந்த கட்சிக்கு கிடைத்ததாகவும் மாற்றிக்காட்டும்படி ப்ரோக்ராம் எழுதியிருக்கிறோம். அவ்வளவுதான் என்று அவர்கள் சொல்வார்கள். இந்திய அரசு அமெரிக்காவில் தயாராகி வரும் மென் பொருளை ஒருபோதும் சோதிக்க முடியாதவகையில்தான் இந்த மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தையே வடிவமைத்திருக்கிறார்கள். எனவே கவலைப்படவேண்டாம் என்று அவர்கள் சொல்வார்கள்.

ஆனால், தேர்தல் நாளில் எல்லார் முன்னிலையிலும் ஒரு சிறிய நகல் வாக்கெடுப்பு நடத்துவார்களே அதில் இந்த சதி அம்பலமாகிவிடுமே என்று நம்பிராஜன் சந்தேகம் கேட்பார். சுமார்  200 வாக்குகளுக்கு உள்ளாக பதிவானால், உண்மையான ரிசல்ட்டைக் காட்டும்படி மென் பொருளில் பதிவு செய்திருப்போம். அதற்கு அதிகமாக வாக்குகள் பதிவானால்தான் நாம் விரும்படியான ரிசல்ட்டை தரும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுடைய சின்னம் எத்தனையாவது இடத்தில் வரும் என்பதைத் தீர்மானம் செய்யவேண்டியதுமட்டுமே என்று அவர்கள் சொல்வார்கள். அதன்படியே நம்பிராஜனின் சின்னத்தை ஐந்தாவது இடத்தில் கொண்டுவருவது என்றும் அந்த சின்னமே வெற்றி பெறும்படிச் செய்வது என்று தீர்மானம் ஆகும். அப்படியாக மக்களின் ஆதரவு அமோகமாக இருந்த நிலையிலும் வண்டு முருகன் தேர்தலில் தோற்றுப் போய்விடுவான். வண்டு முருகனுக்கு என்ன செய்வதென்றே தெரியாது. எம்.ஜி.ஆரிடம் நிலைமையைச் சொல்லி வருந்துவான்.

நம்பிராஜன் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவான். முதல் வேலையாக வண்டு முருகனை ஒரு பொய் வழக்கில் சிக்கவைத்து சிறையில் அடைப்பான். சிறையில் வண்டு முருகனைச் சந்தித்து எகத்தாளம் செய்வான். வண்டு முருகன் பதிலுக்கு சவால் விடுவான். இந்தத் தேர்தலில் வேண்டுமானால் நான் தோற்றிருக்கலாம். ஆனால், அடுத்த தேர்தலில் எப்படியும் ஜெயிப்பேன். ஜெயித்து உன்னை அரசியலை விட்டே துரத்தியடிப்பேன் என்று சவால்விடுவான். நம்பிராஜனோ, இந்தத் தேர்தலில் மட்டுமல்ல இனி எந்தத் தேர்தலிலும் தன்னை யாராலும் அசைக்க முடியாது என்று கொக்கரிப்பான். நம்பிராஜன் போன பிறகு வண்டு முருகன் அவன் சொன்னதை யோசித்துப் பார்ப்பான். எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்க முடியாது என்று சொல்கிறானே. அவ்வளவு உறுதியாக அவன் சொல்ல என்ன காரணம் என்று எம்.ஜி.ஆரிடம் கேட்பான். அவருக்கும் அந்த சந்தேகம் வருகிறது. இதனிடையில் அமெரிக்க மின்னணு வாக்குப் பதிவு எந்திர நிறுவனத்தில் இருந்து ஒருவர் நம்பிராஜனை வந்து சந்தித்து விட்டுப் போன விஷயம் வண்டு முருகனுக்குத் தெரியவரும். அப்படியானால் மின்னணு எந்திரத்தில் ஏதோ திருட்டுத்தனம் செய்துதான் இந்த வெற்றியை அடைந்திருக்கிறான் என்ற சந்தேகம் வரும்.

வண்டு முருகன் ஜாமீனில் வெளியே வந்ததும் முதல் வேலையாக, மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தின் செயல்பாடு குறித்து முன்பே சந்தேகங்களைக் கிளப்பியிருந்த நிபுணர்களை அழைத்துப் பேசுவான். அவர்கள் எப்படியெல்லாம் மோசடி செய்ய முடியும் என்பதை விளக்குவார்கள். செல்போன் மூலமாக வாக்குகளை மாற்ற முடியும். அல்லது அந்த எந்திரங்கள், வாக்கெடுப்பு முடிந்து காவலில் இருக்கும் நேரத்தில் அதைக் கைப்பற்றி கள்ள வோட்டுகளைப் போடமுடியும். வாக்கு எந்திரத்தையே மாற்றிவிடமுடியும் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், இவையெதுவும் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அப்போது நான்தான் ஆட்சியில் இருந்தேன். முதலமைச்சரே தேர்தலில் போட்டியிட்டிருந்ததால் அதிகாரவர்க்கமும் எனக்கு விசுவாசமாகவே நடந்துகொண்டார்கள். வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருந்த அறையில் 24 மணி நேரமும் காமரா வேறு வைக்கப்பட்டிருந்தது. எனவே அந்தவகையில் எந்தத் தவறும் நடந்திருக்க வழியில்லை என்று வண்டு முருகன் உறுதியாகச் சொல்வான். அப்படியானால், மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்துக்குள் பொருத்தப்படும் மென் பொருளிலேயே ஏதேனும் திருட்டுத்தனம் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று சொல்வார்கள். நம்பிராஜன் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தனக்கு ராசியான எண்ணான ஐந்தில் தன்னுடைய கட்சியின் சின்னம் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட விவரம் வண்டு முருகனுக்கு தெரியவந்திருக்கும். அதை இந்த நிபுணர்களிடம் சொல்வான். அப்படியானால், சந்தேகமே இல்லை. அந்த எண்ணில் வரும் சின்னம் வெற்றி பெறும் வகையில் ப்ரோக்ராம் எழுதியிருப்பார்கள் என்று அவர்கள் சொல்வார்கள்.

சரி என்று அவர்களைப் போகச் சொல்லிவிட்டு வண்டு முருகன் எம்.ஜி.ஆரிடம் தன் திட்டத்தைச் சொல்வான். அமெரிக்காவுக்குச் சென்று அந்த மோசடி நபர்களைச் சந்தித்து அடுத்த தேர்தலில் தனக்கு வெற்றி கிடைக்கும்படிச் செய்யப் போவதாகச் சொல்வான். எம்.ஜி.ஆர். அது கூடாது. மக்களை ஏமாத்தற மாதிரி ஆகிடும். ஒரு தவறை இன்னொரு தவறால் வெல்ல முயற்சி செய்யக்கூடாது. நம்பிராஜனுக்கும் நமக்கும் அப்பறம் என்ன வித்தியாசம் என்று சொல்வார். வண்டு முருகன் அதைக் கேட்கமாட்டான். இந்த மக்களுக்கு வெற்றி பெற்றவர்களைத்தான் பிடிக்கும். எப்படி வெற்றி பெறுகிறான் என்பது முக்கியமல்ல. சேர்ற இடம் கோவிலா இருந்தாப் போதும். போற வழி  எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்வான். எம்.ஜி.ஆரோ, இலக்கு மட்டுமல்ல... வழியுமே முக்கியம்தான். சாக்கடை வழியாபோனா கோவிலுக்குப் போய்ச்சேர முடியாது. சன்னதித்தெரு வழியாப் போனாத்தான் கோவிலுக்குப் போகமுடியும். நீ அமெரிக்கா போகாதே என்று சொல்வார். உங்களை நம்பியிருந்ததுக்கான பலனைத்தான் பாத்துட்டேனே. இனிமே உங்க தயவு எனக்குத் தேவையில்லை. என் வழி தனி வழி என்று சொடக்குப் போட்டுச் சொல்வான். ஒருத்தரோட வழி தனி வழியா இருக்கலாம். ஆனால், தப்பான வழியா இருக்கக்கூடாது என்று எம்.ஜி.ஆர். சொல்வார். அதை அவன் கேட்கமாட்டான்.

 எவ்வளவு தடுத்தும் நிற்காமல் மாறு வேடத்தில் வண்டு முருகன் அமெரிக்கா செல்வான். அது ஒரிஸ்ஸாவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நேரம். ஆளை அடையாளமே காண முடியாதபடி இடது கன்னத்தில் மச்சம் வைத்துக் கொண்டிருக்கும் வண்டு முருகன் ஒரிஸ்ஸா தேர்தலில் மோசடி செய்யவேண்டும் என்று சொல்லியபடி க்ரிமினல்களைச் சந்திப்பான். அவர்கள் மென்பொருள் நிறுவனத்தின் பிரதிநிதியைச் சந்திக்க அழைத்துச் செல்வார்கள். பேரமெல்லாம் பேசி முடித்த பிறகு, மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் எப்படி மோசடி செய்கிறீர்கள் என்று வண்டுமுருகன் கேட்பான். அவர்களோ அது ரகசியம். அதைச் சொல்ல முடியாது என்பார்கள். அப்படியானால், உங்களை எப்படி நம்ப என்று வண்டு முருகன் கேட்பான். சமீபத்தில் தமிழகத்தில் நம்பிராஜன் ஜெயித்த கதை தெரியுமா? மக்கள் செல்வாக்கு அப்போது முதல்வராக இருந்த வண்டு முருகனுக்குத்தான் இருந்தது. ஆனால், அதை அப்படியே நம்பிராஜனுக்கு மாற்றிவிட்டோம். அது எங்கள் வேலைதான் என்று சொல்வார்கள். அவர்கள் பேசியதைக் கேட்டதும்  வண்டு முருகனுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வரும். அவர்களுடைய கோட்டையில் இருக்கிறோம் என்பது தெரியாமல் பாய்ந்து அடிக்கப் போய்விடுவான். அதோடு இடது கன்னத்தில் ஒட்டியிருந்த மச்சமும் கீழே விழுந்து வண்டு முருகன் யார் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிடும். அவனைச் சிறைப்பிடித்துவிடுவார்கள். நம்பிராஜனுக்கு அந்தத் தகவல் சொல்லப்படும். ரகசியமாக அமெரிக்கா வந்து சேருவார்.

வண்டு முருகனை சங்கிலியால் கட்டிப்போட்டிருப்பார்கள். நம்பிராஜன் அவனைப் பார்த்து வெறிச்சிரிப்பு சிரித்தபடியே சாட்டையால் அடிப்பான். என்னமோ பேர் சொல்லுவியே... கறுப்பு எம்.ஜி.ஆரா... எங்க இரண்டு அடி மேலே பட்டதும் சிலிர்த்துக்கிட்டு சண்டை போடு பார்ப்போம் என்று எகத்தாளம் செய்தபடியே வண்டு முருகனை அடிப்பான். இரண்டு அடி வாங்கிய வண்டுமுருகன் துவண்டு விழும்போது ஒரு கை அவனைத் தாங்கிப் பிடிக்கும். உனக்கு வேணும்னா நான் தேவையில்லாம இருக்கலாம். ஆனா எனக்கு நீ தேவை. என் மக்களுக்கு நல்லது செய்ய எனக்கு நீ தேவை என்று சொல்லி அவனுடைய கன்னத்தில் வழியும் ரத்தத்தைத் துடைப்பார் எம்.ஜி.ஆர்.

என்னை மன்னிச்சிடுங்க. நீங்க சொன்னதைக் கேக்காம வந்தது தப்புத்தான் என்று வண்டு முருகன் அவர் காலில் விழுவான். மூன்றாவது அடிக்காக சாட்டை வீசப்படும். வண்டு முருகனுக்கு ஆறுதல் சொன்னபடியே எம்.ஜி.ஆர். அந்தச் சாட்டையை லாகவமாகப் பிடித்து இழுப்பார். நம்பிராஜன் தடுமாறி விழுவான். வண்டுமுருகன் தன்னைக் கட்டிப் போட்டிருக்கும் சங்கிலிகளை அறுத்து எறிவான். ஊரைச் சுத்தற வாலிபன்களைத்தான் இதுவரை பார்த்திருக்க. இனிமே உலகம் சுத்தற வாலிபனைப் பாருடா என்று கர்ஜித்தபடியே அமெரிக்க வில்லன்களையும் நம்பிராஜனையும் பந்தாடுவான். வில்லன் கூட்டத்தைச் சிறைப்பிடித்து நேராக அவர்கள் அனைவரையும் நார்க்கோ அனாலிசிஸ் டெஸ்டுக்கு உட்படுத்துவான். அவர்கள் அனைவரும் கிளிப்பிள்ளை போல் இந்திய தேர்தலில் நடத்திய மோசடிகள் அனைத்தையும் சொல்லிவிடுவார்கள். நம்பிராஜனோ ஒருபடி மேலே போய் தனது கட்சியில் தனக்குப் போட்டியாக இருந்தவர்களைக் கொன்று அதிகாரத்தைக் கைப்பற்றியதில் ஆரம்பித்து முதலமைச்சர் பதவிக்கு வந்த பிறகு செய்த ஊழல்கள், கொலைகள் என அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்வான்.

அவர்களுடைய வாக்கு மூலத்தை வீடியோவில் பதிவு செய்துகொள்ளும் வண்டுமுருகன் அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து கெட்டவர்களுக்கு கடுமையான தண்டனையை வாங்கிக் கொடுத்து தர்மத்தை நிலைநாட்டுவான். அடுத்து நடந்த தேர்தலில் வண்டு முருகனின் கட்சி அமோக வெற்றி பெற்று மக்கள் அதன் பிறகு சந்தோஷமாக வாழ்ந்துகொண்டேயிருப்பார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா என்ன? தனது பணிகளைத் தொடர்ந்து செய்ய வண்டு முருகன் கிடைத்த நிம்மதியில் எம்.ஜி.ஆர். புஷ்பக விமானத்தில் ஏறி வானுலகம் செல்வார். அப்படியாக, கறுப்பு எம்.ஜி.ஆர். வண்டு முருகனின் பொற்கால ஆட்சி சிறிது கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அமோகமாக நடக்க ஆரம்பிக்கிறது.

(இது முடிவல்ல... ஆரம்பமே)





வட்டச் செயலாளர் வண்டு முருகன் - பாகம் 4

ஒரு கிராமத்தில் தேவர் பெண்ணும் தலித் பையனும் திருமணம் செய்துகொண்டிருப்பார்கள். நம்பிராஜன் அந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்குவார். தன்னுடைய ஆட்களை விட்டு தலித் பையனின் கிராமத்துக்குப் போய் துவம்சம் செய்வார். இரு பிரிவினருக்கும் இடையில் கலவரம் வெடிக்கும். நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். தென்மாவட்டங்களில் 144 தடையுத்தரவு போடப்படும். நம்பிராஜன் வட மாவட்டங்களிலும் இதுபோல் இன்னொரு கலவரத்தைத் தூண்டுவார். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் போதிய காவல்துறைப் பணியாளர்கள் இல்லாமல் திண்டாடுவார்கள்.

வண்டு முருகன் எம்.ஜி.ஆரின் ஆலோசனையின் பேரில் அனைத்து சாதி சங்கத் தலைவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பான். மேல் சாதியினர் அனைவரும் சேர்ந்துகொண்டு தலித்கள் மீது சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள். பணம் உள்ள மேல்சாதிப் பெண்களாகப் பார்த்து நாடகக் காதலில் ஈடுபட்டு அவர்களுடைய வாழ்க்கையைச் சீரழிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவார்கள். அப்போ பணம், சொத்து எதுவும் வேண்டாம்னு அந்த ஜோடிகள் சொன்னா அவங்களை விட்ருவீங்களா என்று வண்டு முருகன் எம்.ஜி.ஆர். சொல்லிக் கொடுத்தபடிக் கேட்பான். அதெப்படி முடியும். பணம் கேக்கறதும் தப்புத்தான். எங்க பொண்ணுங்களை இழுத்துட்டு ஓடறதும் தப்புத்தான். நாங்க அவங்களைவிட உசந்தவங்க என்று தேவர் சாதித்தலைவர்கள் சொல்வார்கள்.

அப்போ, அந்தப் பையனை தேவரா சாதி மாறச் சொன்னா கல்யாணம் பண்ணி வைப்பீங்களா என்று வண்டுமுருகன் கேட்பான். அதெப்படி முடியும்? சாதிங்கறது பிறப்பால வர்றதுல்ல என்று சொல்வார்கள். மதம் மாறறது சரின்னா சாதி மாறறது மட்டும் எப்படி தப்பா இருக்க முடியும்? இனிமே சாதிவிட்டு சாதி மாறித் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் இரண்டுபேரில் எந்த சாதிக்குப் போக விரும்புகிறார்களோ அந்த சாதிக்கு மாறலாம்னு சட்டம் கொண்டுவரப்போகிறேன் என்பான். காலகாலமா இருக்கற சாதியை எப்படிங்க இப்படி மாத்திக்க முடியும் என்று சாதி சங்கத் தலைவர்கள் கேட்பார்கள்.

காலகாலமா இருந்த உணவுப் பொருட்களை இழந்துட்டோம். காலகாலமா இருந்த உடைகளை விட்டுட்டோம். காலகாலமா இருந்த மூலிகை மருந்துகளை இழந்துட்டோம். காலகாலமா இருந்த பண்டிகைகளை இழந்துட்டோம். காலகாலமா இருந்த நல்ல விஷயங்களையெல்லாம் இழந்துட்டு கெட்ட விஷயத்தை மட்டும் பிடிச்சித் தொங்கிட்டு இருக்கறதுல என்ன நியாயம் இருக்கு? பழைய காலத்துல இருந்த மாதிரியேதான் இருப்போம்னா, பனை ஓலை விசிறிலதான் வீசிக்கணும். ஃபேன் போடக்கூடாது. மாட்டு வண்டிலதான் வந்து போகணும். கார் பைக்குன்னு வாங்கக் கூடாது. அரிக்கேன் லைட்டு அகல் விளக்குலதான் இருக்கணும். கரண்டை எல்லாம் கட் பண்ணிடனும். காலத்துக்கு ஏற்ப இதையெல்லாம் ஏத்துக்கிட்ட நாம இந்த சாதியை மட்டும் ஏன் பிடிச்சி தொங்கிட்டு இருக்கணும் என்று கேட்பான்.

சாதிக் கட்சித் தலைவர்கள் அவன் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். சாதி மாறறதுன்னா எப்படிங்க? அதுக்கு சடங்கு சம்பிரதாயம் எதுனா இருக்கா என்ன என்பார்கள். தலித் பையன் தேவர் சன்னதியில் விழுந்து வணங்கி அவர் முன்னால் தாலி கட்டட்டும். அவன் தேவர் சாதிக்கு மாறியதாக அதுவே அர்த்தம் என்பான் வண்டு முருகன். அப்ப, அந்த தேவர் சாதிப் பொண்ணை இம்மானுவேல் சேகர் சமாதியில் விழுந்து வணங்கவும் சொல்லுங்கள் என்று தலித் தலைவர்கள் குரல் எழுப்புவார்கள். அதை ஏற்றுக்கொள்ளும் வண்டு முருகன் சந்தோஷமாக காவல்துறை சகிதமாக வந்து அந்த திருமணத்தை இருவர் சன்னதியிலும் வெகு விமரிசையாக நடத்தி வைப்பான்.

ஆனால், தேவர் சாதில பிறந்த ஒரு பொண்ணு இமானுவேல் சேகரன் சன்னதியில் விழுந்து வணங்குவதா என்று கொதித்தெழும் அந்தப் பெண்ணின் அண்ணன் அவளை நடுரோட்டில் எல்லாரும் பார்க்க கண்டந்துண்டமாக வெட்டி எறிவான். அவளுடைய தலையை அறுத்து அதை ஏந்தியபடியே காவல் நிலையத்துக்குச் சென்று, நான் தேவண்டா... உசிரு பெரிசில்லடா... மானம் தாண்டா பெரிசு இந்தத் தேவனுக்கு என்று கர்ஜித்தபடியே சரணடைவான். அவனுடைய அந்த செயலுக்கு கிராமத்தினர் மலர் தூவி வாழ்த்தி ஊர்வலமாக பின்னால் வந்து ஆதரவு தெரிவிப்பார்கள்.

நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என தேவர் சன்னதியில் விழுந்து வணங்கிய தலித் பையனை தலித்கள் பெட்ரோல் ஊத்திக் கொளுத்திக் கொல்வார்கள். அதையும் ஊரே கூடி நின்று கை தட்டி எங்களுக்கும் மான ரோசம் உண்டு என்று உற்சாகத்துடன் ஆர்ப்பரித்துக் கொண்டாடுவார்கள்.

எம்.ஜி.ஆருக்கு நடக்கும் விஷயங்கள் மிகுந்த வேதனையைத் தரும். இது சரியில்ல. இதை எப்படியாவது மாத்தியே ஆகணும் என்று தவிப்பார். அப்போது, பார்வதி அக்கம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு காக்காவும் பாம்பும் கதையைச் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்ப்பார். வலிமை குறைந்த ஒருவர் வலிமை மிகுந்த ஒருவரை எதிர்க்கவேண்டுமென்றால், அவரைவிட வலிமையான ஒருவருடன் அவரை மோதவிடவேண்டும் என்ற தந்திரம் புரியவரும். சாதியை எதிர்க்கும் வலு வேறு எந்த அடையாளத்துக்கு இருக்கிறது என்று பார்ப்பார். மதத்துக்கு சாதியைவிட வலிமை அதிகம் என்பது அவருக்கு நினைவுக்கு வரும். வண்டு முருகனை அழைத்து அவன் காதில் ஒரு விஷயம் சொல்வார். மறுநாள் செய்தித்தாள்களில், வேறு சாதியில்  திருமணம் செய்து கொள்பவர்கள் எந்த மதத்துக்குப் போக விரும்புவார்களோ அந்த மதத்துக்கு மாறிக் கொள்ளலாம். அவர்கள் எந்த மதத்துக்கு மாறுகிறார்களோ  அந்த மதத்தினர் அந்த காதல் ஜோடிக்கு அடைக்கலம் தரவேண்டும் என்று செய்தி வெளியாகும்.

கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தினர் வெகு உற்சாகமாக, காதல் ஜோடிகளுக்கு பகிரங்கமாக உற்சாக அழைப்பு விடுப்பார்கள். உங்களை ஆஹா ஓஹோன்னு வழ வைப்போம்னு எல்லாம் நாங்க சொல்லலை. ஆனால், உசிரோட மனுஷனா வாழ வைக்க எங்களால முடியும். எங்க மதத்தின் கதவுகள் உங்களுக்காகத் திறந்தே இருக்கும் என்று சொல்வார்கள். இதையெல்லாம் பார்த்ததும் இந்து மதத்தலைவர்கள் அதிர்ந்துபோய்விடுவார்கள். கூட்டமாக வந்து முதலமைச்சரைச் சந்தித்து தங்கள் வருத்தத்தைத் தெரிவிப்பார்கள். அரசாங்கமே இப்படி மத மாற்றத்தை ஊக்குவிக்கலாமா என்று கோபப்படுவார்கள். நான் இந்த மதத்துக்கு மாறுங்கன்னு ஒன்ணும் சொல்லலியே. அவங்க இந்து மத்த்தை விட்டுப் போக்க்கூடாதுன்னு நீங்க நினைச்சா, அவங்க இந்துக்கள்ன்னு நீங்க நினைச்சா பாதுகாப்பை நீங்களே கொடுங்க. யார் தடுக்கப்போறாங்க என்று வண்டு முருகன் சொல்வார்.

எங்க கிட்ட அதுக்கான பண வசதியோ பிற வசதியோ கிடையாது. கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் வெளிநாட்டுல இருந்து கோடிக்கணக்குல பணம் வருது. அவங்க இந்த காதல் ஜோடிக்கு திருமணம் செஞ்சு வெச்சு வேலையும் வாங்கித் தந்து பாத்துக்க முடியும். மத மாற்றத்துக்குன்னு அவங்களுக்கு வர்ற கோடிக்கணக்கான பணத்துல இதை அவங்க எளிதா செஞ்சிருவாங்க. சிறுபான்மையினருக்குன்னு அரசு வேலைகள்ல ஆரம்பிச்சு ஸ்கூல் நடத்தறது  கம்பெனி நடத்தறதுன்னு நிறைய சலுகைகள் இருக்கு. எங்களால அவங்களை எதிர்த்து போட்டிபோடமுடியாது. இது தவறான சட்டம் இதை வாபஸ் வாங்குங்கன்னு கேட்டுக்கொள்வார்கள்.

நீங்க சொல்றதுல எல்லாம் உண்மை இல்லை. உங்களுக்கு தலித்கள் மேல அக்கறை கிடையாது. மேல் சாதி பக்கம்தான் நீங்க நிப்பீங்க. தலித்களை நீங்க மனுஷனா மதிக்கறதே கிடையாது. அதனால், மனுஷனா நடத்தற மதத்துக்கு அவங்க போக விரும்பினா அதுல என்ன தப்பு என்று கேட்பான்.

இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்துக்காரங்களுக்கு மட்டும் தலித்கள் மேல அக்கறை இருக்கா என்ன? மனுஷங்களை சம்மா நடத்தணும்னு எண்ணம் இருக்கா என்ன? அவங்களும் அதை வெறும் ஆள் பிடிக்கறதுக்கான டெக்னிக்காத்தான் வெச்சிருக்காங்க. மனுஷங்களை சமமா நடத்தறவங்கன்னா, ஒரு விஷயம் செய்யட்டுமே. பத்து கிறிஸ்தவ இஸ்லாமிய ஜோடிகளுக்கு  ஊரறிய கல்யாணம் செஞ்சு வெக்கச் சொல்லுங்க பார்ப்போம். சாதி பார்க்க்கூடாதுன்னு சொல்றீங்கல்ல. மதம் பார்க்க வேண்டாம்னு அவங்க கிட்ட சொல்லுங்க பார்ப்போம். இவ்வளவு ஏன்... காதல் ஜோடிகள் நீங்க மதம் மாறலாம்னு சொன்னீங்களே, அதுல ஒருத்தர் கிறிஸ்தவராகவும் இன்னொருத்தர் முஸ்லீமாகவும் மாறறாங்கன்னு வெச்சிப்போம். அப்போ இந்த இரண்டு மதக்காரங்களும் அந்த கல்யாணத்தை நடத்தி வெப்பாங்களா என்று கேட்பார்கள். கிறிஸ்தவ இஸ்லாமிய மதத் தலைவர்கள், தங்களோட மதத்துக்கு வந்தாத்தான்  ஏத்துப்போம். ஏன்னா ஏசுதான் பெரியவர், அல்லாதான் பெரியவர் என்று இரு பிரிவினரும் சண்டையிட ஆரம்பிப்பார்கள்.

தான் நினைத்ததைவிட பிரச்னை சிக்கலாகிக் கொண்டுவருவதை எம்.ஜி.ஆர். புரிந்துகொள்வார். அப்போது, வெளியே பாலசந்திரனின் நினைவு அஞ்சலி போஸ்டர் ஒன்று அவர் கண்ணில் படும். மாணவர் சமுதாயம் ஒன்று திரண்டு போராடிய அந்த நிகழ்வு அவருக்கு ஒரு பொறியைத் தரும். காதல் திருமணம் என்பது இளைய தலைமுறை முதிய தலைமுறைக்கு விடும் சவால்தானே. அப்படியானால், அதற்கு இளைய சமுதாயமே ஒன்று திரண்டு போராடவேண்டியதுதானே என்று லயோலா கல்லூரி நிர்வாகத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார். அவர்களோ, தங்களால் அது முடியாது என்று பின்வாங்கிவிடுவார்கள். இந்திய அரசை எதிர்த்து கோஷம் போட வாய்ப்பு இருப்பதால்தான் ஈழப் பிரச்னை பற்றியே இவர்கள் பேசுகிறார்கள். மற்றபடி இவர்களுக்கு ஈழத் தமிழர் மீது பெரிய அக்கறை ஒன்றும் கிடையாது என்று ஈழத்தமிழ் தலைவர்கள் சிலர் சொல்வார்கள்.

மாணவர்களை ஒன்று திரட்ட வேறு யார் சரியானவர்கள் என்று யோசித்து ராம கிருஷ்ண விவேகானந்த நிறுவனங்களை வண்டுமுருகன் தொடர்புகொள்வான். அவர்கள் முழு மனதுடன் முன்வருவார்கள். அப்படியாக அவர்கள் தலைமையில் வண்டு முருகன் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர்களைச் சந்திப்பார். உங்கள் ஊரில் கலப்புத் திருமணம் செய்துகொள்ள யாராவது முன்வந்தால் அவர்களுக்கு நீங்கள்தான் பாதுகாப்பு தரவேண்டும். இது உங்கள் பிரச்னை. இதற்கான தீர்வும் உங்களால்தான் முடியும். ஈழத்து பாலசந்திரனுக்கு காட்டிய ஆதரவில் நூறில் ஒரு பங்குகூட நீங்கள் தர்மபுரி இளவரசனுக்குக் காட்டவில்லையே. இது தவறு அல்லவா என்று சொல்லி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார்.

இளைய சமுதாயம் இந்த முறை தன்னிச்சையாக வெகுண்டெழும். இது எங்கள் போராட்டம். இதை நாங்கள், முன்னெடுப்போம் என்று சூளுரைத்து ஒவ்வொரு கிராமத்திலும் காதலர் நலச் சங்கம் ஒன்றை உருவாக்கி களம் இறங்குவார்கள். சாதி வெறி தலைக்கு ஏறாத அந்த இளைய தலைமுறை காதலுக்காக உயிர் போனாலும் பரவாயில்லை என்று துணிச்சலும் போராடத் தொடங்கும். ஆரம்பத்தில் இளைஞர்களை மிரட்டி அடித்து வழிக்குக் கொண்டுவர முயற்சி செய்யும் சாதிக் கட்சித் தலைவர்கள், தமது சாதி இளைஞர்களே தமக்கு எதிராக இருப்பதைப் பார்த்து மிரண்டுவிடுவார்கள். அந்த இளைஞர்களை அடித்தால், அவர்களுடைய குடும்பத்தினரின் வெறுப்பையும் சம்பாதிக்க நேரும் என்று பயந்து ஒதுங்கிக்கொள்வார்கள். வண்டு முருகன் தலைமையில் காதலர் தினத்தன்று சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு வெகு விமரிசையாக திருமணம் நடத்தி வைக்கப்படும்.

இதைப் பார்த்து மேலும் ஆத்திரமடையும் நம்பிராஜன், அடுத்ததாக கண்டதேவியில் நடக்கும் தேரோட்டதைவைத்து பிரச்னையைக் கிளப்புவான். தலித் தலைவர்களும் கம்யூனிஸ்ட் தலைவர்களையும் சந்தித்து பேசுவான். இந்தியாவில் தலித்கள் மனிதர்களாகவே மதிக்கப்படுவதில்லை. இந்து மதம் இருக்கும்வரை தலித்களுக்கு விடிவே பிறக்காது என்று கோஷங்கள் எழுப்புவார்கள். இந்திய ஊடகங்கள் அனைத்தும் இந்தப் பிரச்னையைப் பெரிய அளவில் கொண்டுசெல்வார்கள். 

வண்டு முருகன் அவர்கள் அனைவரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவான். இந்தியக் குடிமகன்கள் அனைவரும் சமம் என்ற வகையில்  எங்களுக்கும் அந்தத் தேரை இழுக்கும் உரிமை உண்டு. இந்திய அரசு எங்களுக்கு அந்த உரிமையை மீட்டுத் தரவில்லையென்றால் நாங்கள் இந்திய குடியுரிமையையே துறந்துவிடுவோம் என்று ரேஷன் கார்ட், வாக்காளர் அட்டை முதலானவற்றை எடுத்துவந்து அவர் முன்னால் வீசிஎறிவார்கள். வண்டு முருகன் நிதானமாக அவற்றை ஒவ்வொன்றாகச் சேகரிப்பான்.

கிறிஸ்தவ மதத்துக்குள்ளும் சாதிக் கொடுமைகள் உண்டு. தனிச் சுடுகாடு, தனி சர்ச், கல்யாணம் செய்துகொள்வதில்லை என பல கொடுமைகள் உண்டு. இஸ்லாமுக்குள்ளும் இந்தக் கொடுமைகள் உண்டு இல்லையா..? அந்த மதத்தை விட்டு வெளியேறப் போறதா என்னிக்காவது நீங்க சொல்லியிருக்கீங்களா? என்று வண்டு முருகன் கேட்பான்.

இந்து மதம்தான் எல்லாவற்றுக்கும் மூல காரணம். மதம் மாறிய பிறகும் சாதி உணர்வு மாறாமல் இருக்கும் அளவுக்கு இந்து மதத்தின் விஷம் ஆழமாக ஊடுருவி இருக்கிறது என்று தலித் தலைவர்கள் சொல்வார்கள்.

காசுக்கோ வேறு எதுக்குமோ மதம் மாறலை. இந்து மதத்துல இருக்கற சாதிக் கொடுமை தாங்காமத்தான் தானாகவே மதம் மாறினதாத்தான சொல்றீங்க. அப்படின்னா மாறின மதத்துல அது இருக்கவே கூடாதே. அந்த மதத்துக்குப் போன பிறகும் அந்தக் கொடுமை இருக்கும்னு அதுக்கு யார் காரணம்? எது காரணம்?

உண்மையில இந்தப் பிரச்னையை நீங்க வேற மாதிரி பாக்கணும். தலித்கள் மதம் மாறுறதை விடுதலைச் செயல்பாடாகத்தான் பாக்கறாங்க. ஆனா, அவங்க அப்படி தப்பிச்சுப் போறது இந்து மேல் சாதிக்குப் பொறுக்கலை. அதனால, அவங்களும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறி தங்களோட அடக்குமுறையை அங்கயும் அமல்படுத்தறாங்க. அதுக்கு இத்தனை வருஷங்களா அவங்க இந்துவா இருந்ததுதான் காரணம். இன்னும் ஐம்பது 100 வருஷத்துல நிலைமை மாறிரும். அதுக்காக கிறிஸ்தவ, இஸ்லாம்மதத்துக்கு மாறறது தப்புன்னு சொல்ல முடியாது. அந்த வகையில இந்து மதத்தை விட்டும் இந்தியாவை விட்டும் வெளியேறறதுதான் தலித்களுக்கு நல்லது.

ஒரு கண்டதேவிக்காக ஒட்டு மொத்த இந்து மதத்தையும் இந்தியாவையும் எதிர்க்கணுமா என்று சொல்லும் வண்டு முருகன் அதிகாரிகளைப் பார்த்து இந்தியாவில் மொத்தம் எத்தனை ஊர்களில் தேரோட்டங்கள் நடக்கிறது என்று கேட்பான்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் எழுந்து நின்று அதற்கான பதிலைச் சொல்வார்.

தமிழகத்தில் எத்தனை தேரோட்டங்கள் நடக்கின்றன?

சுமார் நூறுக்கு மேல் இருக்கும் சார்.

அதில் பெரிய ஊர்களில் நடக்கும் தேரோட்டங்கள் எத்தனை இருக்கும்?

திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர் என 35க்கு மேல் இருக்கும் சார்.

இதில் எதிலெல்லாம் தலித்களுக்கு தேர் இழுக்கத் தடை இருக்கிறது?

எதிலுமே கிடையாது சார். தங்கத்தேர் இழுக்கக்கூட அவர்களுக்கு அனுமதி உண்டு.

ஆக, இந்தியாவிலும் சரி, இந்து மதத்திலும் சரி நடக்கும் தேரோட்டங்களில் 99 சதவிகித விழாக்களில் தலித்களுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. கண்டதேவி போல் ஒரு சில இடங்களில் மட்டும்தான் இப்படி நடக்கிறது இல்லையா? என்று தலித் தலைவர்களைப் பார்த்துக் கேட்பான்.

அவர்கள் வாய் மூடி மவுனமாக இருப்பார்கள்.

கண்ட தேவியில் தலித்களைத் தேர் இழுக்க அனுமதிக்க வேண்டியது நியாயமே... அரசு அதற்கான உதவியை நிச்சயம் செய்யும். அதே நேரம் நீங்களும் நீட்டப்படும் நட்புக் கரங்களைப் பற்றிக் கொள்வது அவசியம் என்று சொல்லிவிட்டு தேர் இழுக்கவிடாமல் தடுக்கும் அம்பலக்காரர்களை நோக்கிப் பேசுவான்.

நாட்டில் இருக்கும் அனைத்து கோவில் தேரோட்டங்களிலும் தலித்கள் பங்கு பெற அனுமதிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் மட்டும் ஏன் தடுக்கிறீர்கள்?

எங்களுடைய தேரை நாங்கள் மட்டுமே இழுப்போம். அது எங்களுடைய உரிமை. பாரம்பரியம். இதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

உங்கள் கிராமத்தில் தீண்டாமை உண்டா?

எங்கள் கிராமங்களில் நாங்கள் தீண்டாமை கடைப்பிடிப்பது கிடையாது.

உங்கள் தெருவுக்குள் நுழையக்கூடாது என்று தடுப்பதுண்டா?

கிடையாது.

செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். சைக்கிளில் ஏறிச் செல்லக்கூடாது என்று சொல்கிறீர்களா?

இல்லை.

இரட்டைக் குவளை உண்டா?

கிடையாது.

ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இவையெல்லாம் இருந்ததா?

ஆமாம்.

இப்போது அவற்றைக் கைவிட்டதுபோல் தேர் இழுக்கவும் அனுமதித்தால் என்ன?

அதுதான் அவ்வளவு விட்டுக் கொடுத்திருக்கிறோமே. அது பத்தாதா? தேவனும் பள்ளனும் சமம் என்று சொன்னால் உன் பொண்ணைக் கட்டிக் கொடு என்று கேட்பார்கள். எனவே, ஏதாவது ஒன்றில் அவர்களை விலக்கி வைத்தால்தான் நல்லது. இல்லையென்றால், தலைக்கு மேலே ஏறிவிடுவார்கள்.

இந்த விஷயங்களில் உங்களைவிட தீவிரமாக இருந்த பிராமணர்களே இன்று வெகுவாக மாறிவிட்டிருக்கிறார்கள். இன்றைக்கு பிராமணர் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்தவொரு கோவிலிலும் தலித்களை அனுமதிக்க மறுத்து யாரும் எதுவும் சொல்வதில்லை.

சிதம்பரத்தில் தேவாரம் பாடவிடுகிறார்களா என்ன?

பூஜை நேரம் தவிர மீதி நேரத்தில் தாராளமாகப் பாடலாமே. யாரும் எதுவும் சொல்வதில்லையே.

பூஜை நேரத்தில் ஏன் பாட அனுமதிப்பதில்லை.  அது சரி... கர்ப்ப கிரஹத்துக்குள்  எங்களை அனுமதிப்பார்களா?

கர்ப்ப கிரஹத்துக்குள் பூஜை செய்யும் அதிகாரம் உள்ள பிராமணரைத் தவிர வேறு பிராமணர்களுக்குக்கூட அனுமதி கிடையாதே... பிராமணர் அல்லாதவர் மீதான ஒடுக்குமுறை ஒன்றும் இல்லையே இது.

அதெல்லாம் தெரியாது. ஒவ்வொரு சாதியினருக்கும் ஒவ்வொரு உரிமை இருக்கிறது. ஒவ்வொரு பாரம்பரியம் இருக்கிறது. உடைத்துச் சொல்வதானால், ஒவ்வொரு பிரிவினருக்கும்  பிறரின் மீதான வெறுப்பு இருக்கிறது. நகமே இல்லாத மனிதர் கிடையாது. அடுத்தவரைக் கீறினால்தான் தவறு. மதத்தை எடுத்துக்கொண்டால் ஷியாவும் சன்னியும் வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டு சாகிறார்கள். ப்ராட்டஸ்டண்டும் ரோமன் கத்தோலிக்கரும் நேற்றுவரை எப்படி இருந்தார்கள்? நாங்கள் சில விஷயங்களை விட்டுக் கொடுக்கமாட்டோம். பல உயிர்களை இழக்க நேர்ந்தாலும் சரி... பல உயிர்களைக் கொல்ல நேர்ந்தாலும் சரி... எங்கள் தேரை நீ இழுக்கக்கூடாது என்று நாங்கள் சொல்வதால், பள்ளன் எதையும் இழப்பதில்லை. வேண்டுமானால், வேறு ஒரு தேரைச் செய்து இழுத்துக் கொள்ளட்டும். இந்தத் தேர் மீது கை வைக்கக்கூடாது.

சரி... வேறு ஒரு தேரை இழுக்கலாம் என்கிறீர்கள் அல்லவா... அதுபோதும். இந்த வருடத்தில் இருந்து தலித்கள் மட்டுமே இழுப்பதற்கு ஒரு தேர் அரசு சார்பில் உருவாக்கித் தரப்படும். உங்கள் தேரில் ஈஸ்வரன் எழுந்தருளட்டும். அரசின் தேரில் அம்மன் எழுந்தருளட்டும். ஈஸ்வரன் தேரை தேவர்கள் இழுக்கட்டும். அதே நாளில் அம்மன் தேரை பள்ளர்கள் இழுக்கட்டும்.

வண்டு முருகன் சொன்னதை அம்பலக்காரர்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். தலித் தலைவர்கள் முதலில் மறுப்பார்கள். ஈஸ்வரன் தேரை தேவர்களோடு சேர்ந்து இழுப்போம்; அதுவே எங்களுடைய கோரிக்கை என்று சொல்வார்கள். ஒரு பேச்சுவார்த்தையில் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நம்முடைய இலக்குகளை எட்ட முடியும். இப்போதைக்கு இதை ஒப்புக்கொள்ளுங்கள். ஐந்தாறு வருடங்களில் சுவாமி தேரையும் நீங்கள் இழுக்க நான் வழி செய்து தருகிறேன் என்னை நம்புங்கள் என்று வண்டு முருகன் சொல்கிறான். தலித் தலைவர்கள் தயக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள். போர்க்கால அடிப்படையில் ஆறே மாதத்தில் ஒட்டு மொத்த தமிழகத்தின் ஆதரவுடன் புதிய பிரமாண்ட தேர் தயாரிக்கப்படுகிறது.

தேரோட்ட நாளில் சுவாமி தேருக்கு பரிவட்டம் அம்பலத்தாருக்குக் கட்டப்படுகிறது. அம்மன் தேருக்கான பரிவட்டம் தலித் தலைவருக்குக் கட்டப்படுகிறது. தலித் பெண்கள் தமிழகம் முழுவதிலுமிருந்தும் சாரை சாரையாக பால்குடமும் முளைப்பாரியும் ஏந்தி வந்து கலந்து கொள்கிறார்கள். அம்மன் தேர் ஆடி அசைந்து பெரும் ஆரவாரத்துடன் புறப்படுகிறது. தேவர் இனப் பெண்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அப்போது தலித் மூதாட்டி ஒருவர் தேவர் பெண்களைப் பார்த்து, வாங்க தாயி... இதுவும் உங்க தேருதான். எங்களைக் காப்பாத்தற ஆத்தா உங்களை வேண்டாம்னா சொல்லிடப் போறா... வாங்க தாயி... சாதி வேறயானாலும் நாமெல்லாம் பொம்பளைங்கதான. என்கிறார். இதைப் பார்க்கும் சில தேவரின ஆண்களும் தலித் ஆண்களும் பாய்ந்து தடுக்கிறார்கள். 

இந்த ஆம்பளைங்களோட வெட்டி வீராப்புக்கு அடங்கி இன்னும் எத்தனை நாள்தான் ஒடுங்கிக் கிடக்கணும். வாங்க தாயி. இதுவும் உங்க தேருதான். வந்து ஒரு வடத்தைப் பிடிங்க தாயி என்று அழைக்கிறாள். ஓரிரு தேவர் பெண்கள் தயங்கித் தயங்கி வருகிறார்கள். ஆத்தாவுக்கு முன்னால எல்லாரும் சமந்தேன்... வா தாயி என்று வேறு சில தலித் பெண்களும் தேவர் பெண்களை அழைத்து வருகிறார்கள். தேவர் பெண்கள் தேர் இழுக்க வந்ததைப் பார்த்ததும் பிற தலித் பெண்கள் உற்சாகத்தில் குலவையிட்டு தங்கள் சந்தோஷத்தைத் தெரிவிக்கிறார்கள். இரண்டு தரப்பு ஆண்களும் என்ன செய்வதென்று தெரியாமல் ஒதுங்கி நிற்கிறார்கள். அப்படியாக, இரண்டு தேர்களும் கம்பீரமாக வலம் வருகின்றன. உலகமே இந்த ஒற்றுமையைப் பாராட்டுகின்றன. சாதி வெறியின் சின்னமாக இருந்த கண்ட தேவி சாதி ஒற்றுமையின் சின்னமாக ஆகிறது.

(தொடரும்)





வட்டச் செயலாளர் வண்டு முருகன் : பாகம் - 3

மத்திய அரசு இரு மாநில முதல்வர்களையும் பேசி பிரச்னையைத் தீர்க்கும்படி கேட்டுக்கொள்ளும்.

இரு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், நீர் மேலாண்மை நிபுணர்கள், அரசியல் நோக்கர்கள் எல்லாரும் கலந்துகொண்டு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைப்பார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் தான் காவிரி நதி உற்பத்தி ஆகிறது. அதில் இருந்து கிடைக்கும் தண்ணீரை ஆந்திரா, கர்நாடகா, தமிழ் நாடு என மூன்று மாநிலங்கள் பங்குபோட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியில் இதைவிட அதிக மழை பெய்கிறது. அந்த வெள்ளமெல்லாம் வீணாக அரபிக் கடலில் சென்று கலக்கிறது. அந்த மேற்குப் பகுதி நீரை கிழக்குப் பகுதிக்கு திசை திருப்பிவிட்டால், மூன்று மாநிலங்களின் தண்ணீர் பிரச்னை அடியோடு நீங்கிவிடும் என்று காந்தியவாதி ஒருவர் ஒரு திட்டத்தை முன்வைப்பார். இந்தத் திட்டம் உலக வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது. ஆனால், நிதி ஒதுக்கிடுதான் கிடைக்கவில்லை. அவர்களிடமிருந்து பணம் பெறுவது எப்படி என்று தெரியவில்லை என்று சொல்வார்.

வண்டு முருகன், உலக வங்கி பிரமுகர்களைச் சென்று சந்திக்க ஏற்பாடு செய்யலாம் என்பான். உடனே எம்.ஜி.ஆர். நமது தேவையை நாமேதான் பார்த்துக்கொள்ள வேண்டும். என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில். ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில் என்று சொல்வார். அதன்படியே தமிழக, கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இருக்கும் பண முதலைகள், பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து வேண்டிய பணம் சேகரித்துக்கொள்ள என்று முடிவெடுக்கப்படும்.

மறு நாள் வண்டு முருகன் எழுந்து வீட்டின் பால்கனியில் வந்து நிற்பவன் வீட்டின் முன்னால் தாய்க்குலங்களும் பாட்டாளிகளும் கூட்டம் கூட்டமாகக் குழுமி நிற்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துவிடுவான். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பணத்தை வண்டு முருகனிடம் கொடுப்பார்கள். ஐஞ்சும் பத்துமாகக் கசங்கிய ரூபாய்கள், சில்லரைக்காசுகள் என ஏழைகள் தங்கள் பங்கைக் கொடுக்க வந்திருப்பார்கள். வண்டு முருகன் அவர்களுடைய நல்ல மனசைப் பார்த்து கண்ணீர் விடுவான்.

ஒரு பாட்டி, திருப்பதிக்குப் போறதுக்காக உண்டியல்ல போட்டு வெச்சிருந்த பணத்தை அவர் முன்னாலேயே உடைத்து அவரிடம் கொடுப்பாள். அப்போது எம்.ஜி.ஆர். வண்டு முருகன் காதில் ஏதோ சொல்வார் (ஓரிரு காட்சிகள் கழித்து அந்தப் பாட்டி திருப்பதியில் லகு தரிசனத்தில் பெருமாளின் முன் தாரை தாரையாகக் கண்ணீர் கசிய நிற்பது காட்டப்படும்)

அப்படியாக, தேவைக்கு அதிகமாகவே பணம் வந்து சேர்ந்துவிடவே, வெள்ளத்தைத் திருப்பி அனுப்பும் பணிகள் நடக்க ஆரம்பிக்கும். மலையில் வசிக்கும் மக்களும் நாட்டுக்கு நன்மை பயக்கும் இந்தத் திட்டத்துக்காக தங்கள் வசிப்பிடங்களை மாற்றிக்கொள்ள மனப்பூர்வமாக சம்மதிப்பார்கள். அப்படியாக, காவிரி பிரச்னை ஒரேயடியாகத் தீர்த்துவைக்கப்படும்.

அடுத்ததாகப் பள்ளிகளில் ஆங்கில வழியில் வகுப்புகள் எடுப்பதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று தமிழார்வலர்கள் மனு கொடுப்பார்கள். வண்டு முருகன் எம்.ஜி.ஆரிடம் இது தொடர்பான ஆலோசனை கேட்பார். எம்.ஜி.ஆரும் ஒன்றாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்புவரை அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் சி.டி.களாக தயாரித்து மாணவர்களுக்குத் தந்துவிடவேண்டும். யாருக்கு எது வசதியாக இருக்கிறதோ அதைப் படித்துக்கொள்ளலாம். இந்த பாடங்களை சுவாரசியமாக, பாடல்கள், சம்பந்தப்பட்ட வீடியோக்கள் என திரைத்துறையினரை விட்டு சுவாரசியமாகத் தயாரித்துத் தரும்படி கேட்டுக்கொள்வார். அதன்படியே ஆறு மாதத்தில் மிக அருமையான முறையில் அந்த சி.டி.கள் தயாரிக்கப்பட்டுவிடும். நிலா பற்றிய பாடத்தின்போது ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த காட்சிகள் இடம்பெறும். சித்தன்ன வாசல் ஓவியங்கள் என்ற பாடத்தின்போது அது தொடர்பான வீடியோக்கள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு மாணவரும் தமிழில் பார்த்துப் புரிந்துகொண்டு அதன் பிறகு ஆங்கில அறிவு வளர்வதற்காக அதை ஆங்கிலத்திலும் பார்த்துக்கொள்ள வழி செய்துதரப்படும்.

கூடவே, எந்தவொரு விஷயம் பற்றியும் அது தொடர்பான நிபுணர்களிடம் வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலம் கேள்விகள் கேட்டுத் தெரிந்துகொள்ளவும் வழி செய்து தரப்படும். சன் டி.வி.யில் ஆரம்பித்து சத்யம் டி.வி வரை அனைத்து சேனல்களும் கல்விக்கு என்று தனியாக ஒரு சேனலை ஆரம்பித்து தினமும் பாடம் சம்பந்தமாகவும் பொது அறிவு சம்பந்தமாகவும் தரமான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படும். கூடவே பத்மா சேஷாத்ரி, டான் பாஸ்கொ போன்ற முன்னணி பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் எடுப்பது நேரடி ஒளிபரப்பாக தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்படும். இதனால், தமிழகத்தின் குக்கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்குக்கூட நாட்டின் அதி உயர்ந்த பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களிடமிருந்து கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும். இதை மாணவர்கள் நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது ஆசிரியர்கள் இந்த வகுப்புகளைப் பார்த்து தங்களை மேம்படுத்திக்கொண்டு மாணவர்களுக்குக் கற்றுத் தரலாம் என்று சொல்லப்படும். அப்படியாக, தரமான கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்க வழி செய்துதரப்பட்டுவிடும். 

இதுபோன்ற செயல்களால் வண்டு முருகனின் செல்வாக்கு வெகுவாக அதிகரித்து கறுப்பு எம்.ஜி.ஆர். என்று மக்களால் கொண்டாடப்படுவான் (அப்பாடா... ஒருவழியா டைட்டிலைக் கொண்டுவந்து நுழைச்சாச்சு!).

நம்பிராஜனுக்கு நிலைமை கை மீறிப் போவது தெரிந்துவிடும். தனக்கு நெஞ்சு வலி என்று சொல்லி ஜாமீன் கேட்டு விண்ணப்பிப்பான். வெளியேவந்ததும் நேராக, வண்டு முருகனை வந்து பார்த்து ஒரு சி.டி.யைக் கொடுப்பான். அதில் வண்டு முருகன் குடித்துவிட்டுக் கும்மாளம் போட்ட காட்சிகள் இருக்கும். வண்டு முருகன் அதைப் பார்த்ததும் அதிர்ந்துவிடுவான். உனக்கு ஒரு மாசம் டயம் கொடுக்கறேன். என் மேல போட்டிருக்கற கேஸ்ல நான் நிரபராதின்னு தீர்ப்பு வரவை. அதோட நீ செஞ்ச நல்ல காரியமெல்லாம் நான் சொல்லித்தான் செஞ்சேன்னு சொல்லி ஆட்சியை என் கிட்ட ஒப்படைச்சிட்டு ஓடிடு. இல்லைன்னா இந்த கேஸட்டை ஊருக்கே போட்டுக்காட்டி உன்னை நாறடிச்சிடுவேன். நீ பொன் முட்டை போடற வாத்து. உன்னை நான் ஒரேயடியா அறுக்கமாட்டேன். ஆனா, போடற பொன் முட்டையை எல்லாம் எனக்குக் கொடுத்துடு என்று சொல்லி மிரட்டிவிட்டுச் செல்வார்.

வண்டு முருகன் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டதைப் புரிந்துகொள்வான். ஆனால், எம்.ஜி.ஆரோ இதுக்கெல்லாம் கவலைப்படாதே. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்வார். ஒரு மாத காலம் முடியும். வண்டு முருகன் தான் சொன்னதை செய்யவில்லை என்றதும் நம்பிராஜன், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சியினர் என அனைவரையும் அழைத்து கேஸட்டை வெளியிடுவான். அன்றைய தினம்கூட வண்டு முருகனை டீலுக்கு ஒப்புக்கொள்ள வைக்க தொலைபேசியில் பேசிக்கொண்டே இருப்பான். வண்டு முருகனோ உன்னால் முடிந்ததைச் செய்துகொள். மக்களை எப்படிச் சமாளிக்க என்பது எனக்குத் தெரியும் என்று எம்.ஜி.ஆர். தந்த தைரியத்தில் தெனாவெட்டாகச் சொல்லிவிடுவான்.

வேறு வழியில்லாமல் நம்பிராஜன் ஆத்திரத்தில் அந்த கேஸட்டை ஊடகத்தினர் முன்னால் போட்டுக்காட்டுவார். ஆனால், அந்த கேஸட்டில் வண்டு முருகனுடைய லீலைகளுக்குப் பதிலாக நம்பிராஜனின் லீலைகள் இடம்பெற்றிருக்கும். நெஞ்சு வலிக்கு சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற அவர் அங்கு குடித்து, பெண்களுடன் கும்மாளம் போட்ட காட்சிகள் அந்த கேஸட்டில் இடம்பெற்றிருக்கும். எம்.ஜி.ஆர். நம்பிராஜனின் அசிஸ்டெண்டுக்கும் காட்சி தந்து இந்த வீடியோவை எடுக்க வைத்திருப்பார். அதைப் பார்த்ததும் நம்பி ராஜன் வெலவெலத்துப் போய்விடுவார். ஊடங்களுக்கு அந்த சி.டியின் காப்பியை அவசரப்பட்டு தந்திருப்பார். ஒரு வார காலத்துக்கு ஊடகங்கள் நம்பிராஜனைப் போட்டு நாறடித்துவிடுவார்கள். இவையெல்லாம் கிராபிக்ஸில் செய்தவை நான் இல்லை என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்ப்பான். அவன் போகும் இடங்களில் எல்லாம் தாய்மார்கள், செருப்பாலும் விளக்கமாத்தாலும் அவனை அடித்து விரட்டுவார்கள்.

வண்டு முருகனைக் கொல்வதைத்தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு நம்பிராஜன் வருவார். வண்டு முருகன் சென்னை மியூசியத்தில் நவீன வசதிகளை அறிமுகப்படுத்தியிருப்பான். ஒரு நாள் இரவில் அதைச் சென்று பார்த்துவிட்டுவர விரும்புவான். தன்னுடைய பூனைப்படையுடன் அங்கு செல்வான். அவன் அப்படி அங்கு செல்லப் போவதைத் தெரிந்துகொள்ளும் நம்பிராஜன், தனது அடியாட்களை அதே உடையில் சென்று அவனைக் கொன்றுவிடச் சொல்லி அனுப்பிவைப்பான். நம்பி ராஜனின் ஆட்கள், உண்மையான பூனைப்படையினரை ஒவ்வொருவராக அடித்து வீழ்த்திவிட்டு வண்டு முருகனைச் சுற்றி வளைப்பார்கள். வண்டு முருகன் அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடுவான். போலிப் பூனைப் படையினர் மியூசியத்தின் வெளியே செல்லும் வாசலில் இருக்கும் ஷட்டரை இழுத்து மூடப்போவார்கள். அப்போது சட்டென்று மின்சாரம் போய்விடும். எனினும் அவர்கள் கைவசம் டார்ச்கள் உண்டு என்பதால், அதை எரியவிட்டபடியே ஷட்டரை மூடப் போவார்கள். அப்போது ஒரு அதிசயம் நடக்கும். பள பள வென வண்ண விளக்குகள் அணைந்து அணைந்து பிரகாசிக்க, வண்டு முருகன் மதுரைமீட்ட சுந்தரபாண்டிய உடையில் சரவிளக்கைப் பிடித்துத் தொங்கியபடி பாய்ந்து வருவார். 

மாதவனுக்கு ஷட்டர் போடலாம். மன்னனுக்கு ஷட்டர் போடலாம். இந்த மன்னாதி மன்னனுக்குப் போட முடியுமாடா..? என்று கர்ஜித்தபடியே ஒரு கேடயத்தை எடுத்து வீசுவார். அது ஷட்டர் மூடப்போகும் தருணத்தில் மிகச் சரியாக அதனடியில் பாய்ந்து சொருகி அதைத் தடுக்கும். போலி பூனைப்படையினர் கைக்குக் கிடைத்த வாள்களை எடுத்தபடி வண்டு முருகனை நோக்கிப் பாய்வார்கள். அவனுடைய உடம்புக்குள் புகுந்திருக்கும் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைவரையும் சுழன்று சுழன்று பந்தாடுவார். 

அடுத்ததாக, அடி மட்டத் தொண்டனாக இருந்து மாநிலத்தின் முதல் அமைச்சராக உயர்ந்த வண்டு முருகனின் வாழ்க்கை வரலாற்றை எழுத முன்னணி பத்திரிகை முன்வருகிறது. அந்தப் பத்திரிகையில் இருந்து பார்வதி என்ற பெண் நிருபர் அந்தப் பணிக்கு நியமிக்கப்படுகிறார். வண்டு முருகன் தன் வாழ்க்கையில் நடந்த சொந்தக் கதை சோகக்கதைகளை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்வான்.

அவனுடைய தாய் தந்தையர் சிறுவயதிலேயே இறந்துவிட அக்காதான் அவனை எடுத்து வளர்த்திருப்பார். தன் பிள்ளைகளுக்கு சாப்பாடு இல்லாம இருந்தாக்கூட அவ பொறுத்துக்குவா. ஆனா, நான் ஒருவேளை பட்டினி கிடந்தாலும் அவ மனசு தாங்காது. இட்லி சுட்டு வித்து அதுல கெடைச்ச காசை வெச்சு குடும்பத்தைக் கரையேத்தினா. படிப்பு ஏறாம கட்சி, அரசியல்ன்னு திரிஞ்சப்ப எல்லாம் ஆதரவா இருந்தது அவதான். எனக்கு அவ அக்கா இல்ல. அம்மா என்று சொல்வான்.

அதன் பிறகு இள வயதில் நடந்த பல விஷயங்களை நினைவுகூர்வான். எம்.ஜி.ஆர். படத்தைப் பார்க்க காசு இல்லாமல் போகவே ரத்த தானம் செய்து அதில் கிடைத்த பணத்தை வைத்துப் படம் பார்த்த கதையைச் சொல்வான். தனது நண்பர் ஒருவர் அடிமைப் பெண் படம் பார்க்க காசு இல்லை என்றதும் குடும்பக் கட்டுப்பாடு செய்தால் பணம் கிடைக்கும் என்று சொல்லி குடும்பக் கட்டுப்பாடே செய்துகொண்டதைச் சொல்வான்.

எம்.ஜி.ஆர். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர். கையில் இருக்கும் வாள் கீழே விழுந்துவிடும்; கொலைவெறியுடன் நம்பியார் அவரைக் கொல்லப் பாய்வார். இதைப் பார்த்ததும் பதறிப் போகும் வண்டு முருகன் தன் இடையில் செருகியிருந்த கத்தியை எடுத்து ஸ்கீரீனைப் பார்த்து வீசி, வாத்யாரே இதை வெச்சு அந்த நம்பியார் தாயோளியை கொன்னு போடு என்று கூவியிருக்கிறார். வண்டு முருகன் வீசிய கத்தி திரையில் பட்டு திரை கிழிந்ததோடு நில்லாமல் தீப் பிடித்து எரிந்துபோய்விட்டதாம்.

கட்சிப் பணிகள், அரசுப் பணிகள் இவற்றுக்கு இடையே வாழ்க்கை வரலாறை எழுத போதிய நேரம் கிடைக்காது என்பதால், காரில், விமானத்தில் போகும் நேரங்களில் பேட்டி எடுப்பாள் பார்வதி. ஒருமுறை வண்டு முருகனுடன் நெடுஞ்சாலையில் காரில் போய்க்கொண்டிருக்கையில்  கிழவி ஒருத்தி காலில் செருப்பு இல்லாமல் தார் ரோட்டில் நடந்துசென்றுகொண்டிருப்பாள். அதைப் பார்த்துவிடும் எம்.ஜி.ஆர். வண்டுமுருகனிடம் காரை நிறுத்தி அந்தப் பாட்டிக்கு ஒரு ஜோடி செருப்பைக் கொடுக்கும்படிச் சொல்வார். அதன்படியே வண்டு முருகன் வண்டியை நிறுத்தி ரிவர்ஸில் வந்து அந்தப் பாட்டிக்கு பார்வதியின் செருப்பை வாங்கிக் கொடுப்பான். கூடவே பத்து ரூபாய் கட்டு ஒன்றையும் எடுத்துக்கொடுத்து அந்தப் பாட்டியைத் தன் காரிலேயே அவருடைய கிராமத்தில் இறக்கிவிடுவான் வண்டுமுருகன்.

இன்னொரு ஊரில் எம்.ஜி.ஆர். இறந்தது தெரியாமல் அவருடைய வருகைக்காக காத்திருக்கும் ஒரு பாட்டி பற்றி செய்தி தெரியவரும். அதைக் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கே கண் கலங்கிவிடும். நேராக அந்தப் பாட்டியின் வீட்டுக்குச் செல்வார்கள். உண்மையில் எம்.ஜி.ஆர். அந்தப் பாட்டியின் வீட்டுக்கு தேர்தல் நேரத்தில் மதிய நேரத்தில் ஒருமுறை போயிருப்பார். எப்படியும் தன் வீட்டுல சாப்பிட்டுத்தான் போகணும் என்று அந்தப் பாட்டி எம்.ஜி.ஆரிடம் பிடிவாதம் பிடித்திருப்பார். எம்.ஜி.ஆரும் இன்னொரு நாள் கட்டாயம் வந்து உன் கையால சாப்பாடு வாங்கிச் சாப்பிடறேன். இப்போ எனக்கு நிறைய இடங்களுக்குப் போகவேண்டியிருக்கு என்று சொல்லியிருப்பார்.

ஆனால், அதன் பிறகு உடல் நிலை மோசமாகி அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பியவர் இந்தப் பாட்டியை மறந்தேவிட்டிருப்பார். ஆனால், அந்தப் பாட்டியோ, எம்.ஜி.ஆரு கொடுத்த வாக்கைக் காப்பாத்தாம இருக்கமாட்டாரு. எப்படியும் என் வீட்டுக்கு வருவாரு. என் கையால ஒரு வாய் சாப்பிடாம போகமாட்டாரு என்று தினமும் அவருக்காக சாப்பாடு தயார் பண்ணி வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பார். எம்.ஜி.ஆர். இறந்துவிட்டதாக யார் சொன்னாலும் அதை நம்பாமல், அவருக்காக காத்துக்கொண்டிருப்பார். இந்த விஷயங்களைக் கேட்ட எம்.ஜி.ஆர். குழந்தைபோல் அழுவார். நேராக அந்தப் பாட்டியின் ஊருக்குச் செல்வார். பாட்டிக்கு கண் பார்வை மங்கிவிட்டது. ஆனால், எம்.ஜி.ஆரின் குரலைக் கேட்டதும் அந்தப் பாட்டி இனம் கண்டுகொண்டுவிடுவார். பாட்டிக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. வீட்டில் சமைத்து வைத்த உணவை ஆசை ஆசையாகப் பரிமாறுவார். என் ராசா... இந்தப் பாவியோட வீட்டைத் தேடி வர உனக்கு இவ்வளவு நாளாகிடிச்சா... எல்லாரும் நீ போயிட்டன்னு சொல்லி என்னை எம்புட்டு அழவெச்சாங்கன்னு தெரியுமா? எனக்குத் தெரியும். நீ சொன்ன சொல் தவறமாட்ட. நீ யாரு... நினைச்சதை முடிக்கறவனாச்சே. மன்னாதி மன்னனாச்சே என்று அவருக்கு உணவு பரிமாறுவாள். எம்.ஜி.ஆருக்கு பதிலாக வண்டு முருகன் அந்தப் பாட்டி பரிமாறும் உணவை கண்களில் நீர் வழிய சாப்பிட்டு முடிப்பான்.

இதுபோன்ற விஷயங்களையெல்லாம் பார்க்கும் பார்வதிக்கு வண்டு முருகன் மீது இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது. வண்டு முருகனுக்கும் அந்தப் பெண் மீது அதே இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. ஆனால், இருவருக்கும் வாயைத் திறந்து ஐ லவ் யூ என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது. அதனால், வண்டுமுருகன் பார்வதியைப் பார்த்து தட்டுத்தடுமாறி ஒரு விஷயத்தைச் சொல்கிறான். உன் வீட்டு மொட்டை மாடியில் வரும் வெள்ளிக்கிழமை அன்று மாலையில் ஒரு அகல் விளக்கை ஏற்றி வை. அப்படிச் செய்தால் உனக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்று புரிந்துகொள்வேன் என்று சொல்வான். பார்வதியும் எப்போதுடா வெள்ளிக்கிழமை வரும் என்று காத்திருந்து மாலை நேரம் வந்ததும் மொட்டை மாடி முழுவதும் நூற்றுக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றி வைத்து ஆவலுடன் காத்திருப்பாள். ஆனால், காதலர்களை அப்படி எளிதில் ஒன்று சேரவிட்டுவிடுமா என்ன இந்தப் பொல்லாத உலகம். இந்த முறை வண்டு முருகன் பார்வதி காதலுக்கு இடையே இயற்கை சதி செய்கிறது. மாலை ஐந்து மணிவரை அமைதியாக இருந்த வானில் திடீரென்று புயல் காற்று வீச ஆரம்பிக்கிறது. பார்வதி ஏற்றி வைத்த ஆசை விளக்குகள் ஒவ்வொன்றாக அணைய ஆரம்பிக்கிறது. பார்வது இங்குமங்கும் ஓடி ஓடி அவற்றைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார். ஆனால், மானுட சக்தியைவிட இயற்கை வலியது அல்லவா... பெரும்பாலான விளக்குகள் அணைந்துவிடுகின்றன.

வண்டுமுருகன் வரும் நேரம் வருகிறது. தூரத்தில் அவனுடைய முகம் தெரிகிறது. சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறும் உற்சாகத்தில் வருகிறான் . பார்வதி அவனுக்காக ஒற்றை விளக்கை அணையாமல் தடுத்து பாதுகாத்து வருகிறாள். தெருமுனைக்கு வண்டு முருகன் வருகிறான். அவனைப் பார்த்த உற்சாகத்தில் பார்வதி எழுந்து கைகாட்டுகிறாள். அந்தோ பரிதாபம். அந்த ஒரு நொடியில் புயல் காற்று கடைசி விளக்கையும் அணைத்துவிடுகிறது. வண்டுமுருகன் வந்து பார்க்கையில் மொட்டை மாடி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சோகமாக சிறிது நேரம் மொட்டை மாடியையே வெறித்துப் பார்ப்பவன் நடை தளர்ந்து திரும்புகிறான். அப்போது, ஒரு குரல் ஏக்கமும் உற்சாகமும் கலந்து ஓங்கி ஒலிக்கிறது... அன்பான என் காதலைச் சொல்ல அகல் விளக்கை ஏற்றச் சொன்ன மன்னவரே... அழியாத நம் காதலுக்கு அணையாத விளக்கு ஒண்ணை ஏற்றி வெச்சேன் சின்னவரே என்று சொல்லி கைகாட்டுகிறாள். இருண்ட வானில் பௌர்ணமி நிலா ஜகஜ்ஜோதியாய் பிரகாசித்தபடி  மேலே எழுகிறது. வண்டு முருகனின் உடம்பெங்கும் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறப்பதுபோல் சிலிர்க்கிறது. லட்சம் சந்திரோதயங்களின் ஒளி அவன் முகத்தில் மலர்கிறது. மாடியில் இருந்து படிகளில் தடதடவென ஓடி வருகிறாள் பார்வதி. வண்டு முருகனும் காற்று போல் பறந்து அவள் முன் வந்து நிற்கிறான். இருவரும் மூச்சு வாங்கியபடியே சிறுது நேரம் நிற்கிறார்கள். வண்டுமுருகன் அவளை பாய்ந்து அணைத்துக் கொள்கிறான் (வேறன்ன இன்னொரு எம்.ஜி.ஆர். டூயட்தான்)

இதனிடையில் வண்டு முருகனின் அக்காவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. பார்வதியையும் அழைத்துக் கொண்டு உடனே வண்டு முருகன் அவரைப் பார்க்கச் செல்கிறான். அக்காவிடம் பார்வதியைக் காட்டி திருமணத்துக்கு சம்மதம் வாங்கலாம் என்பது அவனுடைய எண்ணம். ஆனால், அங்கு அவனுக்கு ஒரு பேரிடி காத்திருக்கிறது.

மரணப் படுக்கையில் படுத்திருக்கும் வண்டு முருகனின் அக்கா, பார்வதியைப் பார்த்து சாமி படத்துக்குக் கீழே இருக்கும் மஞ்சக் கயிறு ஒன்றை எடுத்து வரும்படிச் சொல்கிறாள். நம்முடைய காதல் அக்காவுக்குத் தெரிந்திருக்கிறதே என்று சந்தோஷப்படும் வண்டு முருகன் அதை விரைவாக எடுத்து வரும்படி பார்வதியைக் கேட்டுக்கொள்கிறான். அக்கா, அந்த மஞ்சக் கயிறை வண்டுமுருகனின் கையில் கொடுக்கச் சொல்கிறாள். வண்டுமுருகன் அதைக் கையில் வாங்கியதும், அவனுடைய அக்கா தலைமாட்டில் அமர்ந்திருக்கும் தன் மகளின் கழுத்தில் தாலியைக் கட்டும்படிக் கேட்டுக்கொள்கிறாள். வண்டு முருகனுக்குத் தூக்கி வாரிப்போடுகிறது. பார்வதியைத் திரும்பிப் பார்க்கிறான். அவளும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறாள். வண்டு முருகனின் அக்கா, தான் ரொம்ப காலம் வாழப் போவதில்லை. கண்ணை மூடுவதற்குள் மகளை ஒரு நல்ல இடத்தில் கொடுத்துவிட்டுப் போகவேண்டும் என்று காத்திருப்பதாகச் சொல்கிறாள்.

மரணப்படுக்கையில் படுத்தபடி அக்கா கெஞ்சிக் கேட்கும்போது அதை மறுக்கத் திராணி இல்லாமல் வண்டு முருகன் தாலியை தன் முறைப் பெண்ணின் கழுத்தில் கட்டுகிறான். பார்வதியிடம் குங்குமச் சிமிழை எடுத்துவரும்படி அக்கா கேட்டுக் கொள்கிறாள். பார்வதி தன் கண்ணீரைத் துடைத்தபடியே எடுத்து வந்து கொடுக்கிறாள். வண்டு முருகன் குங்குமத்தை எடுத்து முறைப் பெண்ணின் நெற்றியில் இடுகிறான். அவர்கள் இருவருடைய கையையும் சேர்த்து வைத்தபடியே அக்கா நிம்மதியாகக் கண் மூடுகிறாள்.

திருமணம் முடிந்த பிறகும் மாமா தன் மீது ப்ரியம் இல்லாமல் இருப்பதைப் பார்த்து முறைப் பெண் வருத்தமடைகிறாள். அவள் அவருடன் நெருங்கிப் பழக வரும்போதெல்லாம் கட்சிப் பணி, ஆட்சிப் பணி என்று எதையாவது சாக்குச் சொல்லி விலகி விலகி ஓடிவிடுகிறான். வெளியிடங்களுக்குப் போகும்போது அவளுடைய கட்டுப்பெட்டித்தனத்தினால் வண்டு முருகனுக்கு அவமானமே நேருகிறது. அதைச் சொல்லிக் காட்டியும் அவளை திட்டி விலக்குகிறான்.

வண்டுமுருகனின் நண்பர் ஒருவர் மூலமாக அவன் பார்வதியை உயிருக்கு உயிராக நேசிப்பது முறைப்பெண்ணுக்குத் தெரியவருகிறது. சோகத்தில் துவண்டுவிடுகிறாள். சில மாதங்கள் இப்படியே கழிகிறது. பிறகு ஒருநாள் தன்னுடைய பிறந்த நாள் என்று வண்டுமுருகனை ஒரு நாள் கோவிலுக்கு அழைத்துச் செல்கிறாள். வேண்டா வெறுப்புடன் வரும் வண்டு முருகன் அங்கு பார்வதியைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இருந்தும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சன்னதி முன் வந்து நிற்கிறான். பூசாரி தட்டில் ஒரு மாங்கல்யத்தைக் கொண்டு வந்து வண்டுமுருகனிடம் தருவார். வண்டு முருகன் தாலி பிரித்துக் கட்டும் சடங்கு என்று நினைத்து அதை எடுத்து முறைப்பெண் கழுத்தில் கட்டப் போகிறான். அவளோ சற்று தள்ளியிருக்கும் பார்வதியை அழைத்து, இவுக கழுத்துல கட்டுங்க மாமா... எங்க அம்மா ஒரு விவரம் இல்லாதவ. உங்களுக்கு இவுகதான் சரியான பொருத்தம். நான் பட்டிக்காடு. எனக்கு இந்த அரசியல், நாகரிகம் எல்லாம் தெரியாது. அதுவும் போக உங்க மனசுல இவுகளுக்குத்தான் இடம் இருக்கு. நீங்களே மகராசனும் மகராசியுமா வாழுங்க. ஆனா, நீங்க கட்டின இந்தத் தாலிய மட்டும் அவுக்கச் சொல்லிராதீங்க. நீங்க எனக்கு புருஷனா இருக்காவிட்டாலும் நான் உங்களுக்கு மனைவியா காலம் பூரா இருந்துட்டுப் போறேன் என்று சொல்லி இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்துவிட்டு அவர்களிடமிருந்து விடை பெற்றுச் செல்வாள்.

பார்வதி ஓடிச் சென்று அவளைக் கை பிடித்து அழைத்தபடியே முருகனுக்கு வள்ளியும் தெய்வானையும் இருந்தது மாதிரி நாம் இருப்போம் என்று சொல்வாள். வண்டு முருகன் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தபடி அவர்கள் பின்னால் செல்வான். அங்கே ஒரு சாரட் நின்று கொண்டிருக்கும். துள்ளி ஏறி பார்வதியையும் முறைப் பெண்ணையும் அள்ளி அணைத்து அருகில் அமர்த்திக் கொள்வான். ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்... கண் தேடுதே வெட்கம்... பொன் மாலை மயக்கம் என்று பாடியபடியே வானுலகங்களில் எல்லாம் சஞ்சரித்த பிறகு மறக்காமல், பூமிக்கு வந்து இரண்டு நாயகிகளுடன் இணைந்து வாழ்க்கையை ஆரம்பிப்பான்.
  
நம்பிராஜன் அடுத்த வெடி குண்டை வீசுவான். அது முன்பு வீசப்பட்டவற்றைவிட மூர்க்கத்தனமான ஒன்று.
  
(தொடரும்)