Thursday, 25 August 2016

இந்துமயமாக வேண்டிய சிலுவை, சாண்டா கிளாஸ், பிறந்த நாள் வாழ்த்து.



கொடிமரம், கொடியேற்றம், கோவில் மணி, தேர் பவனி, காவி உடை, நேர்ச்சை மொட்டை, பாத யாத்திரை என இந்து மத அடையளங்களை கிறிஸ்தவம் எப்படி ஏற்றுக்கொள்கிறதோ அதுபோலவே, இந்துக்களும் கிறிஸ்தவ அடையளங்களை அரவணைத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்தவர்களைப் போலவே கல்வி, மருத்துவப் பணிகளை முன்னெடுத்தல், நிறுவனமயமாதல் என இந்து சமயம் பல நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் வேறு சில விஷயங்களையும் செய்ய வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது.  கிறிஸ்தவர்களின் பிரதான அடையாளங்கள் மூன்று. 1. சிலுவை. 2. சாண்டா கிளாஸ். 3. பிறந்த நாள் பாடல் (கொஞ்சம் மறைமுகமாக)
இந்த மூன்றையும் இந்துமயமாக்குவது எப்படி?

இந்த இந்துமயமாக்கத்தின்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் கிறிஸ்தவத்தைப்போல் இத்தாலிய போப் தலைமை எதைத் தீர்மானிக்கிறதோ அதை ஒட்டு மொத்த உலகமும் பின்பற்ற வேண்டும் என்ற ஏக ஆதிபத்தியத் திணிப்புகூடாது. பிராந்திய மாறுதல்கள், பிரந்திய அடையாளங்கள் இவற்றை மதிக்கும் இந்து ஆன்மிகப் பண்புடன் அனைத்தையும் அரவணைத்துச் செல்லும் பரந்த மனப்பான்மையுடன் இதை வடிவமைக்கவேண்டும்.
முதலாவதாக சிலுவைக் குறியின் இரண்டு பக்கங்களையும் சிறிது வளைத்தால் திரிசூலமாக மாறிவிடும். ஆனால், திரிசூலம் என்பது உக்கிர தெய்வங்களின் கையில் இருக்கும் ஆயுதமாகவும் இந்து அடிப்படைவாதத்தின் சின்னமாகவும் இருக்கிறது. எனவே அது வேண்டாம். அடுத்ததாக குத்து விளக்கு என்பது கிட்டத்தட்ட சிலுவையைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்டது. எனவே, சிலுவையை விளக்காக மாற்றுவதே சரியாக இருக்கும். சிலுவையின் இரண்டு கைகளில் சிறு அகல் விளக்கைப் பொருத்தவேண்டும். அதன் பிறகு தாய் தெய்வ வழிபாட்டின் அடையாளமான குங்குமத்தை நடுவில் அழகாக வைக்கவேண்டும். உருவ வழிபாட்டின் சிறப்பம்சமான மாலையை மாட்டுவதற்குத் தோதாக இரண்டு கைகளுடன் சிலுவை இருக்கிறது. கடைசியாக சிலுவையின் உச்சியில் கூம்பிய சிறு தாமரையை கூப்பிய கரங்களை அல்லது சூரிய உருவத்தைப் பொறிப்பதன் மூலம் சிலுவையின் இந்துமயமாக்கம் முழுமையடையும்.


ஆனால், இதில் நாம் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். தமிழக இந்து மற நிலையத்துறை உடனடியாக இதை அமல்படுத்துகிறேன் என்று சொல்லி அப்படியே சிலுவையை அனைத்து கோபுரங்களிலும் கொண்டு சென்று நிறுத்தும். அகல் விளக்கு, குங்குமம், மாலை மரியாதைகளை அப்பறம் செய்கிறேன் என்று சொல்லும். அப்படியே குங்குமம், சூரிய வடிவம், அகல் விளக்கு போன்றவற்றை வைத்தாலும் சிறிது நாட்கள் அவற்றில் விளக்கு எரியும். அதன் பிறகு அவற்றுக்கான மின் இணைப்பு மாயமாகத் துண்டிக்கப்பட்டுவிடும். அப்பறம் எல்லா கோவில்களிலும் சிலுவை மட்டுமே ஜெகஜ்ஜோதியாக ஒளிர ஆரம்பித்துவிடும். எனவே இந்த சிலுவையை கவனமாகத்தான் கையாளவேண்டும். இந்த சிலுவை கட்டாயமாக மூவர்ண நிறத்தில்தான் இருந்தாகவேண்டும் என்று தீர்மானிப்பது ஓரளவுக்கு உதவும்.

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. சிலுவை என்பது ஏசுநாதர் கொல்லப்பட உதவிய பொருள். ஆதிக்க சக்தியின் கொலைக் கருவியைப் பயன்படுத்தியே அந்த ஆதிக்க சக்தியை எதிர்த்தவகையில் சிலுவை ஒரு முக்கிய அடையாளம்தான். மேலும் ஒட்டு மொத்த உலகுக்கும் அவர் சிந்திய தியாக ரத்தத்தை நினைவுபடுத்தும்வகையில் மாற்றிக்கொண்டிருப்பதிலும் சாமர்த்தியம் தென்படவே செய்கிறது. உண்மையில் ஏசு குறித்த பெருங்கதையடலில் என்னை ஏன் கைவிட்டுவிட்டீர் என்று அவர் புறக்கணிப்பின் வலி(யும்) தாங்காமல்தான் அரற்றியிருக்கிறார். ஆனால், கிறிஸ்தவ மதம் அதை தியாகத்தின் குறியீடாகச் சித்திரித்து மிகப் பெரிய பிராண்ட் ஆக மாற்றுவதில் பெரு வெற்றி கண்டிருக்கிறது.

உண்மையில் சிலுவையைவிட உலகத்தோர் அனைவரையும் அரவணைக்கும் வகையில் இரு கைகளையும் விரித்து நிற்கும் ஏசுவின் உருவம் கருணையையும் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் தரக்கூடியது. சிலுவை என்பது ஏசுவின் தோல்வியையும் வலியையும் கர்த்தரின் புறக்கணிப்பையும் நினைவுபடுத்தக்கூடிய அடையாளம். அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் தெய்வங்கள் தோற்பதில்லை. அரக்கர்களைக் கொன்று குவித்து தெய்வங்கள் வெற்றி பெறுவதே இங்கு வழக்கம். கிருஷ்ணர் எப்படிக் கொல்லப்பட்டார் என்ற கதைஉண்டென்றாலும் அவர் புல்லங்குழல் இசைத்தல், ஆவினங்களை மேய்த்தல், வெண்ணெய் எடுத்துத் தின்பது, சக்ராயுதத்தை ஏந்துவது (இஸ்கான்) என்ற வடிவுகளில் காணப்படுவாரே தவிர மான் என நினைத்து அம்பெய்து கொல்லப்பட்ட காட்சி பலருக்குத் தெரியவே செய்யாது. ராமருக்கும் சிவனுக்கும் விநாயகருக்கும் முருகருக்கும் அவ்விதமே. தெய்வங்களின் வெற்றியே நாம் வழிபட விரும்பும் அம்சம். எனவே படுகொலையை நினைவுபடுத்தும் சிலுவை இந்தியர்களுக்கு என்றுமே அந்நியமானதுதான்.


ஆனால், அது மிகப் பெரிய பிராண்டாக உருவாக்கப்பட்டுவிட்டதால் அதை நாம் நமக்கேற்ப மாற்றுவது அவசியமாகிவிட்டிருக்கிறது. தெய்வம் கொல்லப்படுவதுதான் நமக்கு ஏற்பில்லையே தவிர அரக்கர்கள் கொல்லப்படுவதை நாம் விரும்பிக் கொண்டாடவே செய்கிறோம். தீபாவளிபோல் நம் பல பண்டிகைகள் அரக்கனைக் கொன்ற நிகழ்வைக் கொண்டாடுபவையே. எனவே சிலுவையில் ஏதேனும் ஓர் அரக்கனை ஏற்றிக் கொன்று அதையும் நாம் வழிபடலாம். தீண்டாமை, அறியாமை, ஊழல், பொய்மை என நாம் கொல்லவேண்டிய பல அரக்கர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். இவர்களில் ஏதேனும் ஓர் அரக்கனை உரிய அடையாளங்களுடன் சித்திரித்து சிலுவையில் அறைந்து வணங்கலாம். அல்லது மயில் பீலி அணிந்த ஸ்ரீ கிருஷ்ணர் இரண்டு கைகளையும் விரித்து ணணி ஞடச்ஞீணூச்ச்ஏ டுணூச்tச்திணி தூச்ணt திடிண்டதிச்tச்ஏ லெட் ஆல் நோபிள் தட்ஸ் கம் ஃப்ரம் எவெரி வேயர் என்று சொல்வதாக அனைவரையும் அரவணைப்பதாகச் சித்திரிக்கலாம். ஒவ்வொரு மாநிலத்தினரும் மொழியினரும் தமக்கான சிலுவையைத் தாமே தேர்ந்தெடுக்கும் சுதந்தரத்தை நாம் தரவேண்டும்.

அடுத்ததாக, சாண்டா கிளாஸ். தாடி, சிவப்பு நிறம் மேற்கத்திய கோமாளி உடை. இந்த மூன்றையும் சிறிது மாற்றினால் போதும். திருவள்ளுவரை அடிப்படையாக வைத்து தமிழகத்துக்கு வடிவமைக்கலாம். தாடி அவருக்கு ஏற்கெனவே இருக்கிறது. சிவப்பு உடைக்கு பதிலாக மஞ்சள் நிற உடையைத் தேர்ந்தெடுக்கலாம். மேற்கத்திய கோமாளி உடைக்கு பதிலாக பழம் பெரும் புலவனின் உடையை எடுத்துகொள்ளலாம். தோளில் ஒரு மஞ்சள் நிறச் சால்வை. தார்பாய்ச்சிக் கட்டிய வெள்ளை வேட்டி. மார்பில் புரளும் தாடி... இந்த திருவள்ளுவர் தாத்தா குழதைகளுக்கு புத்தகங்களையும் பரிசாகக் கொடுப்பர் என்று சாண்டா கிளாஸை இந்திய சூழலுக்கு ஏர்ப மாற்றிக்கொள்ளலாம். திருவள்ளுவருக்கு பதிலாக வால்மீகியை சிலர் எடுத்துக்கொள்ளலாம். வேத வியாசரை எடுத்துக்கொள்ளலாம். கபீர் தாசரை எடுத்துக்கொள்ளலாம். தமிழக சால்வையில் தமிழ் எழுத்துகள். கர்நாடக சால்வையில் கர்நாடக எழுத்துகள். ஆந்திர சால்வையில் அந்திர எழுத்துகள் என ஒவ்வொரு மாநில சால்வையிலும் அந்தந்த மாநில எழுத்துகள் அச்சிடப்பட்டிருக்கும். சமஸ்கிருத எழுத்துகள் அச்சிடப்பட்ட சால்வையை அணிந்த ஞான மூப்பனை ஆதி மொழியின் பெருமையை உணர்ந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஹேப்பி பர்த் டே டு யு என்ற பாடலைக் கிறிஸ்தவ பாடல் என்று சொல்ல முடியதென்றாலும் அது மறைமுகமாக கிறிஸ்தவ அடையாளமாகவே இருக்கிறது. அதிலும் மெழுகுவர்த்தி கிறிஸ்தவ அடையாளமே. விளக்கை அணைக்கும் அமங்கலச் செயல் என்பதும் நமக்கு அந்நியமானதே. எனவே, இவற்றை அப்படியே மாற்றிக்கொள்ளலாம். கேக்குக்கு பதிலாக பால் ஸ்வீட் ஏதாவது ஒன்று. பர்பி அல்லது பால்கோவா அல்லது மைசூர் பாகு போன்ற ஏதேனும் ஒன்றை தட்டு முழுவதும் அப்படியே கொண்டுவந்து வைத்துக்கொள்ளலாம். மெழுகு வர்த்திக்கு பதிலாக அகல் விளக்கு ஏற்றி வைத்து பிறந்த நாளைக் கொண்டாடவேண்டும். ஹேப்பி பர்த் டே டு யு என்ற பாடலின் அதே மெட்டில் அசதோமா சத் கமய.. தமசோமா ஜ்யோதிர் கமய... மிருத்யோமா அமிர்தம் கமய என்ற பாடலை அப்படியே பாடிவிடலாம். இருள் நீக்கி ஒளி கொண்டு வா.... பொய் நீக்கி மெய் கொண்டு வா... மரணம் நீக்கி அமுது கொண்டுவா... அன்புச் சிறுவனின் பிறந்த நாளிலே என்று இந்தப் பாடலை தமிழிலும் பாடலாம்.

கிறிஸ்தவர்கள் இந்த மாற்றங்களை நிச்சயம் எதிர்க்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் கொடிமரம், கொடியேற்றம், கோவில் மணி, தேர் பவனி, காவி உடை, நேர்ச்சை மொட்டை, பாத யாத்திரை என இந்து அடையாளங்களை ஏற்றுக்கொள்வதில் பெருமிதம் கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். எனவே நாம் கிறிஸ்தவ அடையாளங்களை இப்படி ஏற்றுக்கொள்வதை அவர்கள் நிச்சயம் வரவேற்கவே செய்வார்கள்.

Tuesday, 23 August 2016

ஜோக்கர்

 மாறுபட்ட கதை, சிறப்பான நடிப்பு, அருமையான பாடல்கள், இதமான காதல் காட்சிகள், சமூக அக்கறை, அனைத்து அதிகார மையங்கள் மீதான விமர்சனம் என பல அம்சங்களில் ஜோக்கர் திரைப்படம் அற்புதமான அனுபவத்தைத் தருகிறது.

படத்தில் வரும் கதாநாயகன் சமூக அநீதிகளைத் தட்டிக் கேட்கிறான். ஆனால், அவனை உலகம் கோமாளி என்கிறது என்று போராளிகள் மீது ஒருபக்கத்தில் கரிசனத்தைக் கோருகிறது. மறுபக்கம், சமூக அநீதிகளைத் துணிச்சலாக, தந்திரமாக ஜோக்கர் வேடத்தில் வந்து பேசி மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் என்று பாராட்டவும்படுகிறது. இருந்தும் ஜோக்கரின் சிந்தனையும் செயல்பாடுகளும் சிதறலாகப் பல விஷயங்களைப் பேசுவதால் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தாமல் போய்விட்டிருக்கிறது.




திரைப்படத்தில் பல அடிப்படை, அரசியல் குறைபாடுகள் உள்ளன.
முதலாவதாக, அது பெரும்பாலான தமிழ் திரைப்படங்களைப்போல் இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிறது. கழிப்பிடம் கட்டக்கூட வசதியில்லாத ஒரு ஏழைக் கிராமத்தானின் வேதனை நிறைந்த வாழ்க்கை ஒருபக்கம். சமூகச் சீர்கேடுகளை லூசுத்தனமான அறச்சீற்றத்துடன் எதிர்க்கும் நபர் பற்றிய சித்திரம் மறுபுறம் என இரண்டு மாறுபட்ட விஷயங்கள் படத்தில் பிரதானமாகச் சித்திரிக்கப்படுகின்றன. அப்பாவி கிராமத்தான் விதிவசத்தால் ஜோக்கர் போராளியாக மாறுவது படத்தில் படு செயற்கையாக நிகழ்கிறது. கக்கூஸ் சுவர் இடிந்து விழுவதால் கோமா நிலைக்குச் சென்றுவிடும் மனைவியைக் கருணைக் கொலை செய்யக் கோருகிறான் நாயகன். அது முடியாது என்று நீதிமன்றம் சொன்னதும் நாயகன் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா..?  சட்டத்துல முடியாதுன்னு சொல்லிட்டா போதுமா... நாம ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் அரசை டிஸ்மிஸ் செய்ய நமக்கு உரிமை கிடையாதா? என்று சீறுகிறார்.

இந்த டிரெஸ்ஸைப் போட்டா ஜனாதிபதி மாதிரி இருப்ப, கொடுக்கலைன்னா எடுக்கணும், ஜனாதிபதிக்குத்தான் ஃபுல் பவரு என்ற காட்பாதர் கதாபாத்திரத்தின் வசனங்கள் இடம்பெறுகின்றன. என்றாலும் கதாநாயகனின் பிந்தைய செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கும்வகையில் இடம்பெறும் இந்த வசனம் எளிய கிராமத்தானுக்கும் கோமாளிப் போராளிக்கும் இடையிலான உரு மாற்றத்தைப் பிரதிபலிக்கும் பலவீனமான வசனமாக இடம்பெற்றிருக்கிறது.

ஒரு கதாபாத்திரம் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளைத் தேடித் தேடிக் கொல்கிறது என்றால், அதன் ஃப்ளாஷ்பேக்கில் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளால் பெரும் இழப்பை அந்தக் கதாபாத்திரம் சந்தித்ததாகக் காட்டுவார்கள். அதுபோல் அழகான பெண் ஒருத்தியால் ஏமாற்றப்படும் நபர் அழகான பெண்களையெல்லாம் கொலை செய்யப் புறப்படுவார்... அரசியல்வாதியால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் அரசியல்வதிகளைத் தேடிப் பழிவாங்குவார்... இப்படியாக கதாநாயகனின் பிற்காலச் செயல்களுக்கு அவன் வாழ்க்கையில் முற்காலத்தில் நடந்த ஒரு சம்பவம் காரணமாக இருக்கிறது என்ற திரைக்கதை வகைமை நியாயமானது, தர்க்கரீதியாகச் சரியானதுதான். ஜோக்கரில் ஜோக்கருக்குக் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புக்கு அதிகாரவர்க்கத்தின் அலட்சியம் காரணமாகக் காட்டப்படுகிறது. ஆனால், உடனே சித்தம் கலங்கி அல்லது சித்தம் தெளிந்து தன்னையே அதிகாரவர்க்கத்தின் தலைவராக நினைத்துக்கொண்டுவிடுகிறார். இது கொஞ்சம் அதீத ஜம்ப்.

ஒரு நிகழ்வின் தூண்டுதல், ஒரு இழப்பின் வலி அதற்கு இணையான எதிர்வினையைத் தூண்டினால்தான் நம்ப முடிவதாக இருக்கும். ஒரு சாலை விபத்தில் தன் மகனைப் பறி கொடுக்கும் நபர் அந்த விபத்து நடந்த சிக்னலில் தினமும் வந்து நின்று வேறு விபத்துகள் எதுவும் நடக்கவிடாமல் தடுத்தார் என்றால் அது யதார்த்தமான படம்... அதே தந்தை சிக்னலில் இருக்கும் காவலர், வாகனத் தயரிப்பாளர்கள், போக்குவரத்து அமைச்சர் என அனைவரையும் கொல்கிறார் என்று சொன்னால் அது ஹீரோயிஸப் படம். ஜோக்கர் யதார்த்தமாகவும் எதிர்வினையாற்றவில்லை. சாகஸ ஹீரோவாகவும் நடந்து கொள்ளவில்லை.

எனவே, எந்தவொரு காரணமும் இல்லாமல் ஒருவர் சமூக அநீதிகளைத் தானாகவே எதிர்த்துப் போராடுகிறார் என்று காட்டியிருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். டிராஃபிக் ராமசாமியும் நாகர்கோவில் பூமேடையும், சசி பெருமாளும் எந்த சொந்த இழப்புகளைப் பார்த்துவிட்டு போராடக் களம் இறங்கினார்கள். இந்தப் படத்தில்கூட ஜெயகாந்தன் தாத்தா எந்தவித சொந்த வாழ்க்கைக் காரணமும் இல்லாமல்தான் போரட முன்வந்திருக்கிறார். இசையும்கூட எந்தவித தனிப்பட்ட காரணமும் இல்லாமல்தான் போராட வந்திருக்கிறார். ஆனால், நாயகனுக்கு பலவீனமான ஒரு காரணம் விரிவாகக் காட்டப்படுகிறது.

காரணம்... தமிழ் நாயகனுக்கு காதல் இல்லாமல் இருக்கலாமா என்ன..? அவன் மன நோயாளியாக இருந்தாலே காதல் இருக்கும். இங்கு முதலில் நாயகன் தெளிந்த சிந்தையுடன் காதலிக்கத் தோதான மனதுடன் தானே இருக்கிறான். எனவே, அவனுடைய வாழ்க்கையில் முதல் பாதியில் எளிய, ஆத்மார்த்தமான காதல் சித்திரிக்கப்படுகிறது. ஆனால், இயக்குநரின் நோக்கம் காதல்கதை சொல்வது அல்லவே... ஜோக்கர் போராளிதானே அவருடைய நாயகன். எனவே வணிக சமரசமாக உருவாக்கிய காதல் நாயகனை ஜோக்கர் போராளியாக ஆக்கியாக வேண்டிவருகிறது. அதில்தான் சிறு நிரடல். இந்த இடத்தில்தான் தமிழ் திரையுலகின் உள்ளார்ந்த பலவீனம் தலைதூக்குகிறது. வேறு நாட்டுத் திரைப்படமென்றால் காதல் கதையைத் தனிப் படமாக எடுப்பார்கள்; ஜோக்கரை வேறொரு படமாக எடுப்பார்கள்.
*


இந்தப் படத்தின் அடுத்த முக்கிய பலம்/பலவீனம் நாயகன். பொதுவாக ஒருவர் சமூக அநீதிகளை எதிர்கொள்ளும்போது காணாததுபோல் ஒதுங்கிப் போகலாம். அல்லது எதிர்த்துப் போராடலாம். நிஜத்தில் ஒதுங்கிப் போவதே அதிகம் என்றாலும் நிழலில் எதிர்த்துப் போராடுவதே அதிகம். நிழல் நாயகன் பெரும்பாலும் தனது சாகசத் திறமைகள் மூலம் தனி ஒருவனாகவே போராடி வெற்றிபெறுவான்.

அதிலும் திரைப்படங்களில் நாயகனுடைய வழிமுறை புத்திசாலித்தனம் மிகுந்ததாகவும் பெரும்பாலும் நாயகனுக்கு இறுதியில் வெற்றி கிடைப்பதாகவும் இருக்கும். நிஜத்தில் எதிர்த்துப் போராடும் ஒரு நபர் ஏதேனும் கட்சியில் சேர்ந்து போராட ஆரம்பிக்கலாம். ஏதேனும் சங்கத்தில் சேர்ந்துகொண்டு அல்லது ஏதேனும் அமைப்பில் சேர்ந்துகொண்டு போராட ஆரம்பிக்கலாம். தான் பார்க்கும் வேலையில் ஈடுபட்டிருக்கும் பிறரையும் சேர்த்துக்கொண்டு போராடலாம். நண்பர்கள் சேர்ந்துகொண்டு போராடலாம். இவையெல்லாம்தான் சாதாரணமாக ஒருவர் செய்யும் வழிமுறை.

ஜோக்கர் சாகச நாயகன் போலவும் நடந்துகொள்ளவில்லை. யதார்த்த மனிதன் போலவும் நடந்துகொள்ளவில்லை. டிராஃபிக் ராமசாமி, பூமேடை, சசி பெருமாள் போன்றவர்கள் போல் நடந்துகொள்கிறான். இவர்கள் எல்லாம் சுத்த சுயம்புவான ஒன் மேன் ஆர்மிகள். அவர்களுடைய போராட்ட வழிமுறைகள் கொஞ்சம் வேடிக்கையாகவே இருக்கும். அவர்கள் அப்படியான போராட்ட வழிமுறையை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்?

நாட்டில் இருக்கும் கட்சிகள், அமைப்புகள் மீதான அதிருப்தியும் கோபமுமே அவர்கள் கூட இணைந்து போராடாமல் தனித்துச் செயல்படவைக்கின்றன என்று ஒரு காரணம் சொல்லலாம். இந்த ஜோக்கர்களுக்கு அப்படியான அரசியல் புரிதல் இருக்குமா என்ற கேள்வியைக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. நாட்டில் இருக்கும் அமைப்புகள் எல்லாமே தள்ளி நின்று பார்த்தாலே நாறும் அளவுக்கு அரசியல் சாக்கடையகவும் ஊழல் குட்டைகளாகவும்தான் இருக்கின்றன. எனவே, ஒரு நேர்மையான போராளி இவற்றில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொள்வதை நாம் கேள்விகேட்கவே முடியாது. இதன் எதிர் நிலையில் இவர்களுடைய போராட்ட வழிமுறைகள் மீது அமைப்புகளுக்கு ஒருவித எள்ளல் மனோபாவமே இருக்கும். சீத்தாராம் யெச்சூரியைக் கூப்பிட்டு மழை நீர் தேங்கிய சாலையில் உருளச் சொன்னால் அவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தையே கலைத்துவிட்டு ஓடிவிடுவார். இதுபோன்ற கோமாளிப் போராளிகளுக்கு கட்சிகள், அமைப்புகள் எல்லாம் வெளியில் இருந்துதான் ஆதரவு தரமுடியும். அப்படியாக ஜோக்கர் போராளியும் அரசியல் இயக்கமும் சேர்ந்து இயங்கவே முடியாது.

ஜோக்கர்ர்களுடைய சமூக அக்கறையையோ துணிச்சலையோ, நேர்மையையோ நிச்சயம் குறை சொல்லமுடியாது. ஆனால், அவர்களுடைய போராட்ட வழிமுறை செயல் திறன் குறைந்தது. அவர்களுடைய உழைப்பை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவர்களுக்குக் கிடைக்கும் வெற்றியும் அதிகாரமும் செல்வாக்கும் மிக மிகக் குறைவாக இருக்கும். டான் குயிசாட் காற்றாலையை எதிர்த்து போர் புரியப் புறப்படுவதுபோல் இவர்களுடைய போராட்டங்கள் ஆகிவிடுகின்றன. அந்தவகையில் இந்த ஜோக்கர் கதாபாத்திரத்தில் பவர் ஸ்டார் சீனிவாசர் நடித்திருந்தால் படம் நிச்சயம் பெரிய வெற்றியை எட்டியிருக்கும். படத்தின் சீரியஸ்னெஸ் குறைந்திருக்கும் என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், வேறுவகையில் அதை சமன்படுத்தியிருக்கவேண்டும்.

மேலும் ஜோக்கர்களின் லட்சியம் சரியானது என்றாலும் வழிமுறை கேலிக்குரியதாக இருப்பதால் லட்சியத்தின் மீதான மதிப்பும் போராடுபவர் மீதான மதிப்பும் குறைந்துவிடுகிறது. கடன் தொல்லை தாங்க முடியாமல் போகும்போது ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார். அதுவும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஒரு வழிதான். அதை ஒருவர் ஏற்க முடியாதென்றாலும் பிரச்னையின் தீவிரத்தை மற்றவர்களுக்குப் புரியவைப்பதில் அது அதிக வெற்றி பெறும். சேற்றில் குளிக்கிறேன்... தவழ்ந்தபடியே நடக்கப்போகிறேன் என்றெல்லாம் நடத்தப்படும் போராட்டங்கள் வெறும் கவன ஈர்ப்பு என்பதைத் தாண்டி எதையும் சாதிக்காது. இதுதான் யதார்த்தம்.



அதோடு இன்றைய காலகட்டத்தில் ஆதிக்கசக்தியாக இருப்பதுமட்டுமல்ல... ஆதிக்க சக்தியை எதிர்ப்பதுமே நல்ல வருமானம் தரக்கூடிய விஷயமாகிவிட்டிருக்கிறது. இன்று நாட்டின் பெரும்பாலான அதிகாரமையங்களில் சொகுசாக, அழுத்தமாக உட்கார்ந்துகொண்டு அதிகாரத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கும் இடதுசாரி சக்திகளுக்குப் பஞ்சமே இல்லை. பணக்காரனைவிட ஏழைக்காக என்.ஜி.ஓ. நடத்துபவன் பெரும் பணக்காரனாக இருக்கும் காலம் இது. எனவே ஜோக்கர் அந்த சாமர்த்தியமும் இல்லாமல் இருக்கிறான் என்று அவன் மேல் வருத்தமே நமக்கு வருகிறது. ஒரு காந்தியவாதியாக நேர்மையாக நடந்துகொண்டு பிழைக்கத் தெரியாமல் இருப்பதைவிட ஒரு கலகக்காரராக இருந்துகொண்டு சம்பாதிக்கத் தெரியாமல் இருப்பது மிகப்பெரிய முட்டாள்த்தனம் (ஆனால் ஜோக்கர்தான் அப்படி முட்டாளாக இருக்கிறானே தவிர இயக்குநர் படு கெட்டிதான். சகாயத்துக்கு ஒரு ஷொட்டு, பார்ப்பானுக்கு ஒரு குட்டு; கொடுக்கலைன்னா எடுத்துடணும், தமிழகக் குக்கிராமத்தில் கக்கூஸ் இல்லைன்னாலும் தில்லியே காரணம் என இடதுசாரி புஷ்பக விமானத்தில் தன்னுடைய ஜன்னலோர இருக்கையை வெகு அருமையாக உறுதிசெய்துகொண்டுதானிருக்கிறார்).

அதோடு, ஜோக்கர் சுயம்புவான ஜோக்கராக இருந்திருந்தால் அவர் செய்யும் போராட்டங்களான ஆமையை அவிழ்த்துவிடுதல், கோமணம் கட்டிக்கொண்டு போராடுதல், பாம்புடன் தனியாக இருத்தல், தீ வைத்துக் கொள்ளுதல் என்பவையெல்லாம் கடைசிவரை ரசிக்க முடிந்திருக்கும். ஆனால், ஜோக்கருக்கு காதலி ஒருவர் காட்டப்பட்டதாலும் அவருடைய கோமா நிலை என்ற வேதனை நிறைந்த கதையைக் காட்டி பாறைபோல் பார்வையாளர் மனதைக் கனக்கச் செய்துவிட்டதாலும் அந்த கேணத்தனத்தின் நீட்சியாக கருணைக் கொலையை அவர் தீர்வாக முன்வைக்கும்போது எரிச்சலே வருகிறது.
*

அடுத்ததாக, காதல் கதையின் முடிவுக்கு காரணமாகச் சொல்லப்பட்டிருக்கும் கக்கூஸ் எபிசோட் படத்தின் மிகப் பெரிய பலவீனம். அல்லது அதை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம். கதை சமகாலத்தில் நிகழ்கிறது. நாயகனும் நாயகியும் குவார்ட்டர், பிரியாணிக்காக கட்சிக் கூட்டங்களுக்குப் போய்வருகிறார்கள். அங்குதான் அவர்களுக்கிடையே காதல் மலர்கிறது. உலக சினிமாக்களில் கதை நிகழும் காலமும் கதாபாத்திரங்களும் மண் வாசனையோடு பதிவு பெறுவதுபோல் இந்தக் காதலர்களும் பொதுக்கூட்டக் காட்சிகளும் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த 2000க்குப் பிந்தைய காலகட்டத்திலும் வீட்டில் கக்கூஸ் இல்லை என்பது நம்ப முடிவதாக இல்லை. அதிலும் தூய்மை இந்தியா என பல லட்ச ரூபாய்செலவில் நவீன டாய்லெட்கள் கிராமந்தோறும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இது பார்வையாளர்களுக்கு நெருக்கமான பிரச்னையாக இருக்கவே இல்லை.



அப்படியே இப்போதும் கிராமத்தினருக்கு அது பெரியதொரு பிரச்னையே என்று ஒரு பேச்சுக்காக எடுத்துக்கொண்டால், அதற்குக் காரணம் யார் என்ற அரசியல் திரைப்படத்தில் அழுத்தமாக இடம்பெறவில்லை. அல்லது தவறான நபரை அதற்கான காரணமாகச் சித்திரித்திருக்கிறார் இயக்குநர். உண்மையில் மத்திய அரசுதான் ஓரளவுக்காவது இந்தப் பிரச்னையை தீர்க்க உருப்படியாக நடவடிக்கை எடுத்துவருகிறது. எந்த மாநில அரசு மத்திய அரசுடன் ஒழுங்காகக் கை கோர்க்கிறதோ அந்த மாநிலத்தில் தூய்மையும் சுகாதாரமும் நிலவும். மத்திய அரசால் பணத்தைக் கொடுக்கத்தான்முடியும். ஒழுங்காக வேலை செய்ய வேண்டியது மாநில அரசுதான். தமிழக மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும், கிராமப் பஞ்சாயத்துகளும்தான் இந்த விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொள்கின்றன. அவைதான் உண்மையான குற்றவாளிகள். திரைப்படத்தில் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு தில்லி தலைமை அழுத்தமாக குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுகிறது. ஜோக்கருக்குள் இப்படியான அபாய அரசியல் இருப்பது அதிர்ச்சியையே தருகிறது.

நிறைமாத கர்ப்பிணியான நாயகி மழைபெய்யும் நள்ளிரவில் கழிப்பறைக்குத் தனியாகச் செல்கிறாள். உண்மையில் அவள் தன் கணவனைத்தான் எழுப்பிக்கொண்டு சென்றிருக்கவேண்டும். அதுதான் நிஜத்தில் நடக்கும். அன்புக் கணவனைத் தூக்கத்தில் இருந்து எழுப்பவேண்டாம் என்ற காதலைவிட வயிற்றில் வளரும் வாரிசின் மீதான தாய்ப்பாசமே மிகுதியாக இருக்கும். எனவே, கணவனை எழுப்பிக் கொண்டுதான் போவாள். சரி... அதுதான் இல்லை என்றாலும் கக்கூஸ் சுவர் இடிந்துவிழுந்ததும் கூக்குரல் எழுப்பி இருப்பாளே... அந்த கக்கூஸ் அவர்களுடைய வீட்டுக்கு வெகு அருகில்தான் இருக்கிறது. அக்கம் பக்கத்திலும் வீடுகள் இருக்கின்றன. என்னதான் மழை பெய்தாலும் ஒரு உயிரின் அதுவும் வயிற்றில் குழந்தையை வைத்திருக்கும் ஒருத்தியின் அபயக் குரல்  ஓங்கியே ஒலித்திருக்கும்.

சரி... அதுகூட யாருக்கும் கேட்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம்... மறு நாள் ஆறேழு மணிக்காவது நாயகன் எழுந்திருந்து பார்த்திருக்கமாட்டானா... அவன் இந்திய ஜனாதிபதி பத்து பதினோருமணி அளவில் வந்து கூட்டத்தில் பேசும்வரை காத்திருக்கத்தான் வேண்டுமா..? கர்ப்பிணி நாயகி உயிருக்குப் போராடுகிறாள்... நாயகன் அவளை மருத்துவமனைக்குக்கொண்டு செல்லத் துடிக்கிறான். இந்திய ஜனாதிபதி நேரம்காலம் புரியாமல் பெண்கள் முன்னேற்றம், நாட்டின் வளர்ச்சி என்று ஜல்லியடித்துக்கொண்டிருக்கிறார் என்று அவரையும் இந்திய அரசையும் வில்லனாக, தெளிவாக, விலாவாரியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இத்தனைக்கும் லட்சங்களைக் கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசின் பிரதிநிதி அவர். லஞ்ச ஊழலால் அதை சுரண்டிச் சென்ற பஞ்சாயத்து தலைவரும் மாவட்ட அதிகாரிகளும் எம்.எல்.ஏ.வும் இங்கு பின்னுக்குத் தள்ளப்பட்டு இந்திய ஜனாதிபதி முழு வில்லனாகச் சித்திரிக்கப்படுகிறார். அவர் தான் முக்கிய குற்றவாளி என்று காட்டப்படுவதற்காகத்தான் நள்ளிரவில் விபத்தில் சிக்கிய நாயகி சொட்டச் சொட்ட இரவுமுழுவதும் மட்டுமல்ல பகல் பத்து பதினோரு மணிவரை யார் கண்ணிலும் படாமல் வயிற்றில் குழந்தையுடன் இடிபாடுகளுக்கு நடுவே தவித்துக்கொண்டிருக்கும்படிவிடப்பட்டிருக்கிறாள்.

இந்திய அரசைக் குற்றம் சாட்டவேண்டியதுதான். அதற்காக இப்படியா..?
உண்மையில் இந்தக் காட்சி எப்படி எடுக்கப்பட்டிருக்கவேண்டும். நாயகி சிரமப்பட்டு எழுந்ததைப் பார்த்ததுமே நாயகனுக்கும் தூக்கம் கலைந்துவிட்டிருக்கவேண்டும். அவனுக்கும் அவள் மேல் காதல் உண்டுதானே... எனவே, அவனே அவளைக் கைத்தாங்கலாக கழிப்பறைக்கு அந்த மழை பெய்யும் நள்ளிரவில் அழைத்துச் செல்கிறான். அவளை அங்கே விட்டுவிட்டு கக்கூஸ் மேலே சாக்கு ஒன்றைப் போர்த்திவிட்டு குடிசைக்கு வந்து ஒடுங்கிக் கொள்கிறான். திடீரென்று இடி இடித்து மின்னல் வெட்டி கக்கூஸ் இடிந்து விழுந்துவிடுகிறது. நாயகன் பதறி அடித்தபடி ஓடிச் சென்று கற்களை விலக்கிவிட்டு அவளைத் தூக்கி வீட்டில் கிடத்துகிறான். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்கச் சொல்கிறான்.

முதல் வீட்டில், ‘நெருப்புடா நெருங்குடா’ என்று பாடலை அதிர வைத்தபடி படம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நாயகன் வாசலில் நின்று கொண்டு கத்துவது அவர்களுக்குக் கேட்கவே இல்லை. அடுத்ததாக  இன்னொரு வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டுகிறான். அங்கே, ‘வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே என்றோ இந்த நாட்டாமை சொல்றதுதாண்டா தீர்ப்பு என்றோ டி.வி. முழங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கும் நாயகனின் கூக்குரல் கேட்பதில்லை.

வேறோரு வீட்டுக்கு ஓடுகிறான். அங்கே மாரியாத்தா வேப்பிலை அடித்துக்கொண்டு சன்னதம் கொண்டு ஆடுகிறாள். இன்னொரு வீட்டில் அல்லேலூயா சத்தம்,   நிறுத்துங்கள் என்று ஏசுவே சொல்லும் அளவுக்கு ஒலிக்கிறது. அவர்களுக்கும் நாயகனுடைய அபயக் குரல் கேட்கவில்லை.
பஞ்சாயத்துத் தலைவர் வீட்டுக்கு ஓடுகிறான். அவரோ தொலைபேசியில் பேசும் எதிர்முனைக்கு ரிசீவர் காலில் விழுந்து கும்பிட்டபடியே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இப்படியாக நாயகன் சென்று தட்டும் உள் புறம் தாழிடப்பட்ட வீடுகளில் ஒன்றுகூடத் திறக்காமல் இருக்கின்றன. நாயகன் மழையில் நனைந்தபடியே வீட்டுக்கு  ஓடுகிறான். மனைவியைத் தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு இழுத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கிறான் என்று இந்தக் காட்சியைச் சித்திரித்திருக்கவேண்டும். ஏனென்றால், கிராமத்தில் ஒரு வீட்டில் கக்கூஸ் இல்லையென்றால் இந்த நபர்கள்தான் முதல் குற்றவாளிகள். இவர்களை விமர்சித்தால் கோவித்துக்கொள்வார்கள்... இந்திய தில்லி அரசை விமர்சித்தால் முற்போக்கு பிம்பம் கிடைக்கும். இடதுசாரிகளில் ஆரம்பித்து பிராந்திய ஆதிக்க சக்திகள், சிறுபான்மையினர், தலித் சக்திகள் என அனைவருடைய ஆதரவும் கிடைக்கும் என்ற தெளிவான கணக்கு இதன் பின்னால் இருக்கிறது. (படம் வன்னியர்களின் கோட்டையான தர்மபுரியில் நடப்பதால் திருமாவளவன் கம்பீரமாக வந்து இந்தப் படத்தை வாழ்த்திவிட்டிருக்கிறார்). இந்த அனைத்து சக்திகள் குறித்த மென்மையான விமர்சனங்கள் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன என்பது உண்மைதான். பிற தமிழ் படங்களில் இந்த அளவுக்கூட அவைமீது விமர்சனம் வைக்கப்பட்டதில்லை என்பதும் உண்மைதான். ஆனால், அது இந்தப் படத்தின் இந்த அபாய அரசியலை ஒருபோதும் நியாயப்படுத்திவிடாது.

இந்திய அரசை விமர்சிக்கக்கூடாது என்ற அர்த்தத்தில் இதை நான் சொல்லவில்லை. இந்திய அரசை விமர்சிப்பது உங்கள் நோக்கமென்றால், அதை ஒழுங்காகச் செய்யுங்கள். கக்கூஸ் கட்டிக் கொடுக்காமல் இருப்பது இந்திய அரசின் தவறு அல்ல... இன்றும் மனித மலத்தை மனிதரே அள்ளும்படிச் செய்துவருகிறதே அதுதான் இந்திய அரசின் மாபெரும் தவறு. அந்தப் பிரச்னை தமிழகத்தில் இல்லை என்றால் எங்கு அந்தப் பிரச்னை இருக்கிறதோ அங்கு கதையை நகர்த்தியிருக்கவேண்டும். கக்கூஸ் கட்டித் தராததற்கு தலித் கட்சிகள், ஆண்ட பரம்பரைகள், அம்மன் கோஷ்டியினர், அல்லேலூயா கோஷ்டியினர், அதிமுக, திமுக அல்லக்கைகள் என அனைவரையும் விமர்சிக்கவேண்டும். அதன் பிறகு இந்திய அரசையும் விமர்சிக்கும் நோக்கில் கதையை மனித மலத்தை மனிதர்களே அள்ளும் இடமான உத்தரபிரதேஷுக்கு நகர்த்தியிருக்கவேண்டும்.

உத்தரபிரதேஷின் நிலை இதைவிடப் படு மோசமானது. இந்தியாவின் பிரதமரையே தேர்ந்தெடுக்கும்  அளவுக்குச் செல்வாக்கு படைந்த அந்த மாநிலத்தில்தான் இந்தியாவிலேயே மனித மலத்தை மனிதர்களே அள்ளும் அவலம் தொடர்ந்து நடந்துவருகிறது. கிராமங்களை அழுகி நாறும் குட்டைகளாக வெறுத்து விமர்சித்த நேருவும் சரி அவருடைய வாரிசுகளும் சரி அவருடைய பக்தர்களும் சரி யாருமே அந்த அவலத்தை அழிக்க எந்த முயற்சியும் எடுத்திருக்கவில்லை. மேற்கத்திய தொழில்மயமும் உயர் கல்வியுமே நமக்கான விடுதலை என்று நம்பியவர் நேரு. உண்மையில் அவர் இந்திய கிராமங்களை விமர்சித்ததற்கு உண்மைக்காரணம் அதில் துயரத்தில் இருந்தவர்கள் மீதான அக்கறை அல்ல. மேற்கத்திய எஜமானர்களுக்கு அதுதான் பிடிக்கும் என்பதால் அப்படிப் பேசினார்.. இந்திய கிராமங்களுக்குத் தேவையான தொழில்நுட்பமென்று யோசித்திருந்தால் முதன் முதலில் அத்தனை வீடுகளுக்கும் ஃபிளஷ் அவுட் டாய்லெட் என்பதுதான் அவருக்குத் தோன்றியிருக்கும். தோட்டி ஜாதியில் பிறந்த ஒருவர் முதல்வராகியிருந்தாலோ பண்டிட் நேரு தோட்டி ஜாதியில் பிறந்திருந்தாலோ அல்லது ஒரு காந்தியவாதி பிரதமராகியிருந்தாலோ அதைத்தான் செய்திருப்பார்.. இத்தனைக்கும் காங்கிரஸின் கோட்டையான ரேபெரேலியும் அமேதியும் உத்தரபிரதேசத்தில்தான் இருக்கின்றன.



அரசியல் சாசனத்தை அழுத்தமாக எழுதிய அம்பேத்கரும் சம வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் நாட்டில் சகோதரத்துவமும் சமத்துவமும் தானாக ஏற்பட்டு தலித்களின் இழிநிலை தானாக மாறிவிடும் என்று பேசாமல் இருந்துவிட்டார். பகுஜன் சமாஜ் கட்சி என்ற ஒன்று வலுவாக உருவான பூமியும் அதுதான். அவர்களும் அந்த அவலத்தைப் போக்கியிருக்கவில்லை.

சாதி வெறியை எதிர்த்து போராடிக் கொண்டே வரும் திராவிடர் பூமியில் கூட தலித் கட்சிகளுக்கு எந்த முக்கியத்துவமும் இருந்திருக்கவில்லை. 20 சதவிகித தலித்களின் பிரதிநிதியான திருமா சட்டசபைத்தேர்தலில் குறைந்தது 50 சீட்டாவது தரவேண்டும் என்று கேட்கும் தார்மிக வலுகொண்டவர். ஆனால், அவர் கூட 5-10 சீட் என பிறர் சாப்பிட்டு புறக்கடையில் போடும் எச்சில் இலையைப் பொறுக்குவதுபோல் திராவிட ஆண்டைகள் எறிவதை எடுத்துக்கொண்டு திருப்திப்பட்டுத்தான் வந்திருக்கிறார். ஆனால், உத்தரபிரதேசத்தில் ஒரு தலித் அதுவும் தலித் பெண் முதல்வராகவே ஆகியிருக்கிறார். அதன் பிறகும் மனித மலத்தை மனிதர் அள்ளுவது முடிவுக்கு வந்திருக்கவில்லை.

கம்யூனிஸம், முதலாளித்துவம் என எல்லாமே எத்தனையோ வெற்றிகளைக் குவித்து விட்டிருக்கின்றன. எனினும் இன்னும் மனிதமலத்தை மனிதரே அள்ளுகிறார்.

மத மாற்றத்துக்கு மிகவும் அருமையான களம் என்ற நிலையிலும் கூட கிறிஸ்தவமோ இஸ்லாமோ இந்த அவலத்தைப் போக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்கள்  அந்தப்பக்கம் போகவில்லை என்பதால் இந்துத்துவர்களும் தோட்டித் தொழிலை சீர்திருத்த பெரிய அக்கறை காட்டவில்லை. இந்து சாம்ராஜ்ஜியம், ராம ராஜ்ஜியம் என முழங்கும் இந்துத்துவம் இன்று ஆட்சிப் பொறுப்புக்கே வந்துவிட்டிருக்கிறது. அயோத்தியில் ராமருக்கு ஆலயம் கட்டுவதில் காட்டும் அக்கறையில் ஆயிரத்தில் ஒருபங்கு கூட மனித மலத்தை மனிதரே அள்ளுவதைத் தடுப்பதில் காட்டவில்லை. இது ஒட்டு மொத்த இந்தியாவின் அவமானம்.

இதில் வேடிக்கையான வேதனை என்னவென்றால், நேருவியர்களில் ஆரம்பித்து இடதுசாரிகள். இடைநிலை சாதிகள். தலித்கள், ஒற்றை இறைத் திணிப்பு மதத்தினர் என அனைவருமே இந்தப் பிரச்னைக்கு மனுவே காரணம் என்று சொல்லித் தமது பொறூப்பைத் தட்டிக்கழித்துவருகிறார்கள். இத்தனைக்கும் மனுவின் காலத்தில் மனித மலத்தை மனிதர் அள்ளியிருக்கவில்லை. இத்தனை மோசமான சாக்கடைகள் இருந்திருக்கவில்லை. மருத்துவக் கழிவுகள், குப்பைகள் இருந்திருக்கவில்லை. ஒருவேளை அவர் காலத்தில் இவையெல்லாம் இருந்திருந்தால் குலத் தொழிலில் குறைந்தபட்சம் தோட்டிகளுக்காவது விலக்கு தந்திருப்பார். சுமார் 70 ஆண்டுகளாக ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்துவருபவர்கள் அனைவருமே 70 நாட்களில் தீர்த்திருக்க முடிந்த இந்தப் பிரச்னைக்கு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மனுவைக் குற்றம்சாட்டுவதிலேயே தீவிரமாக இருக்கிறார்கள்.

ஃபிள்ஷ் அவுட் டாய்லெட்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்புவரை உலகம் முழுவதிலுமே மனித மலத்தை மனிதர்களே அள்ளியிருகிறார்கள் என்பது உண்மைதான் ஆனால், இன்று உலகில் எங்குமே அந்தக் கேவலம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டிருக்கிறது. ஆனால், இந்தியா அப்படிப் பெருமைப்பட முடியவில்லை. 
முன்பைவிட வெகுவாகக் குறைந்திருக்கிறது என்ற வாதத்துக்கு இடமே கிடையாது. ஒரே ஒரு நபர் தலையில் மலக்கூடை இருந்தாலும் அது அவமானத்துக்குரியதே. அதை ஜோக்கர் எடுத்துக்கொண்டு அம்பலப்படுத்தியிருக்கவேண்டும்.

தமிழகத்தில் கக்கூஸ் இடிந்ததால் தன் குழந்தையையும் மனைவியையும் இழக்கும் நாயகன் ஊர் ஊராக பைத்தியம் போல் அலைகிறான். ஒருகட்டத்தில் உத்தரபிரதேசம் வருகிறான். அங்கு மனித மலத்தை மனிதர்களே அள்ளுவதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைகிறான். நாம் காலைக் கடன்கழிக்க ஒரு மறைவிடம் கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டோம். இங்கோ ஒரு மனிதனுடைய தலையையே கழிப்பிடமாக ஆக்கும் கொடூரம்  இன்னும் நடக்கிறதே என்று ஆத்திரப்படுகிறான்.

இந்த இடத்தில் கக்கூஸ், மனிதக் கழிவு போன்ற அம்சங்களை கொஞ்சம் அழுத்தமாக சித்திரிக்கும் கடமையை இயக்குநர் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கும். நாயக நாயகியை தோட்டி ஜாதியினராகச் சித்திரிப்பது படத்துக்குக் கூடுதல் கனத்தைத் தரும். நாயகியின் அப்பா, ‘என் பொண்ணு கல்யாணமே ஆகாம செத்தாலும் பரவாயில்லை... ஒரு தோட்டிக்கு கட்டிக்கொடுக்க மாட்டேன் என்கிறார். ஐயர்மாரும் ஆண்டைமாரும் அவனுங்க வளக்கற பசுவோடயும் காளையோடவும் மூஞ்சில முழிப்பானுங்க... நாம அவனுங்க பேண்டு வைக்கற பீயிலதான் முழிக்கணும்.

ஒவ்வொருத்தரும் எப்பாடா விடியும்... என்னென்னா வேலையெல்லாம் செய்யலாம்னு ஆசை ஆசையா படுத்துத் தூங்குவானுங்க... நாம மட்டும்தான் ஐய்யய்யோ இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சிடுமேன்னு பதறிக்கிட்டே தூங்காமத் தவிக்க வேண்டி வந்திருச்சி... எல்லாரும் வெளிச்சத்தைத்தான் விரும்புவாங்க... இருட்டை விரும்பற மனுஷனைப் பாத்திருக்கியா... இருட்டுலயே வாழ்ந்து இருட்டுலயே செத்துப் பொயிடணும்னு நினைக்கறவனைப் பாத்திருக்கியா... அன்னிக்குப் பீ... இன்னிக்கு சாக்கடை... நல்ல முன்னேற்றம்தான்... இந்த கஷ்டத்தை என் மக இனியும் படக்கூடாது. ஒரு தோட்டிக்கு என் பொண்ணைக் கட்டிக் கொடுக்கவே மாட்டேன் என்கிறார்.  

அப்படின்னா வேற யாரு கட்டிப்பாங்க என்று நாயகன் கேட்கவே, பிறந்தது தோட்டி சாதியில இருந்தாலும் அந்த வேலையைப் பாக்காத ஒருத்தனைத்தான் மருமகனா ஏத்துப்பேன். தனியார் வேலைலயோ சொந்தமா வேலை பார்த்தாலோ கட்டிக்கொடுக்கமாட்டேன். அரசாங்க வேலைல இருந்தாத்தான் அதை மாத்திக்காம இருப்பான். அதனால அரசாங்க வேலைல இருக்கறவனைத்தான் கட்டி வைப்பேன் என்கிறார்.
தனது இடதுசாரித் தோழரின் செல்வாக்கைப் பயன்படுத்தி நாயகன் ரயில்வேயில் வேலையில் சேருகிறான்.



ஒருநாள் அவனைப் பார்க்க வருங்கால மாமனாரும் மாமியாரும் மச்சினியும் நாயகியும் ஆர்வத்துடன் ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறார்கள். நாயகன் ஷெட்டில் நிற்கும் வண்டியில் இருக்கிறான் என்று சொல்கிறார்கள். குடும்பத்தினர் அனைவரும்  சிரிப்பும் கும்மாளமுமாக அங்கு செல்கிறார்கள். சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கும் இவர்களைப் பார்த்ததும் நாயகனுக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. சட்டென்று பெட்டிக்குள் ஒளிந்துகொள்கிறான். அதைப் பார்த்துவிடும் மச்சினியும் நாயகியும் ஓடிச் சென்று ரயிலில் ஏறி இருண்ட பெட்டியில் ஒவ்வொரு விளக்கையாகப் போட்டபடியே அவனைத் தேடிச் செல்கிறார்கள்.

மாமனாரும் மாமியாரும் சின்னஞ்சிறுசுகளின் விளையாட்டை வேடிக்கை பார்த்தபடியே வெளியில் இருந்தபடியே அதோ ஓடறான்.. பிடி பிடி என்று உற்சாகப்படுத்துகிறார்கள். நாயகன் இருளில் பெட்டி பெட்டியாக ஓடிச் செல்கிறான். நாயகியும் மச்சினியும் சிரித்துப் பேசியபடியே ஓடி வருகிறார்கள். கடைசிப் பெட்டி வந்து சேருகிறது. இனியும் தப்பிக்க முடியாதென்று கழிப்பறைக்குள் புகுந்து கதவைப் பூட்டிக் கொள்கிறான். நாயகி வெளியில் இருந்தபடியே தட்டுகிறாள்.

இவர்கள் சத்தம் போடுவதைக் கேட்டு ரயில்வே காவலர் விரைந்துவருகிறார். உள்ளே நாயகன் கதைவைப் பூட்டிக்கொண்டு இருப்பதைப் பார்த்ததும் யார் என்று தெரியாமல் வெளியே வந்துவிடச் சொல்லி அதட்டுகிறான். நாயகன் வேறு வழியில்லாமல் கதவின் தாழ்ப்பாளை விலக்குகிறான்... கதவு மெள்ளத் திறக்கிறது. உள்ளே நாயகன் துப்புரவுப் பணியாளரின் சீருடையில் கையில் விளக்கமாறும் வாளியுமாக நின்றுகொண்டிருக்கிறான். நாயகிக்கும் மச்சினிக்கும் தூக்கிவாரிப்போடுகிறது. நாயகி என்ன செய்வதென்று தெரியாமல் தலையில் கைவைத்துக் கொண்டு தரையில் உட்கார்ந்துவிடுகிறாள்.

வருங்கால மாமனாரும் மாமியாரும் என்ன என்று புரியாமல் பெட்டியில் ஏறிப் பார்க்கிறார்கள். நாயகன் அவமானத்தில் கூனிக் குறுகி நிற்கிறான். மாமனாருக்கு அழுகையும் ஆத்திரமும் பொத்துக்கொண்டு வருகிறது. அந்தத் தாயோளி மத்தவங்களுக்கு சந்தனக் கையால தலை எழுத்தை எழுதிட்டு நமக்கு பீ கையால எழுதியிருக்கான். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதை அழிக்க முடியாதா... என்று கதறுகிறார். வேடிக்கை பார்க்கும் காவலரைப் பார்த்து காறி உமிழ்ந்தபடியே நீங்க பேண்டதை நீங்களே கழுவ வேண்டியதுதானடா என்று சீறுகிறார். நாயகன் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்கிறான். அவர்கள் நடக்க நடக்க நீண்டு கொண்டே செல்கிறது இருண்ட ஃபிளாட்ஃபார்ம்.

உத்தர பிரதேசத்தில் இன்னொரு காட்சி. வயதான பிராமணர் அதிகாலையில் எழுந்து தன் பேரனையும் அழைத்துக்கொண்டு நதியில் நீராடச் செல்கிறார். நதிக்கரையோரமாகவும் அருகில் இருக்கும் காட்டுப் பகுதியை நோக்கியும் பெண்களும் ஆண்களும் சாரை சாரையாகப் போகிறார்கள். அவர்களைப் பார்த்து அலட்சியமாகச் சிரித்தபடியே பிராமணர் நதிக்கரையில் இறங்குகிறார்.
யார் தாத்தா இவாள்லாம். குளிக்க வராம நேரா காட்டுக்குள்ள ஏன் போறா..?

சிரித்தபடியே, அவாள்லாம் கொல்லைக்குப் போறா..

ஏன் ஆத்துல போலாமே. காட்டுக்கு ஏன் போறா..? அங்கெல்லாம் ஒரே அசிங்கமா ஆயிடுமே.

காட்டுல போய் ஆய்ப்போனா நாய், பன்னில்லாம் அதைச் சாப்பிட்டுட்டு போயிடும். அசிங்கமால்லாம் ஆகாது.

அப்போ நாமளும் அவாள மாதிரி காட்டுல போய் ஆய் போலாமே. ஆத்துல ஏன் போறோம்?

ஏன்னா நாமள்ளாம் உசந்தவா. அவாள்லாம் தாழ்ந்தவா...

எப்படித் தாத்தா... பன்னியும் நாயும் வந்து போற இடத்துல ஆய்ப்போறதுதானே சரி... நாம போய் வைக்கற ஆயை எல்லாம் ஒரு மனுஷன வரச் சொல்லி தலைல அள்ளிண்டு போக வைக்கறது தப்பில்லையா... நம்மளவிட உண்மையிலயே அவாதானே உசந்தவா...

பிராமணர் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார்.

சிறிது சுதாரித்துகொண்டு, நம்ம ஆத்து பொம்மனாட்டியெல்லாம் காட்டுல மேட்டுல அலைய வேண்டாமேன்னுதான் ஆத்துக்குப் பின்னாலயே கட்டி வெச்சிருக்கோம்.

நம்ம ஆத்துப் பொம்மனாட்டிகள் மேல இருந்த அக்கறைல கொஞ்சமாவது அதைத் தூக்கிண்டு போக வர்றவா மேல நாம காட்டியிருக்கலாமே தாத்தா.

பெருமூச்சு விட்டபடியே, காட்டியிருக்கலாம்தான். என்ன பண்றது... யார் யார் என்ன செய்யணும்னு அந்த பகவான் எழுதி வெச்சிருக்கான். அதை மாத்த யாரால முடியும்?

அவா நாலைஞ்சு பன்னியையும் நாயையும் நம்ம ஆத்துக்குக் கொண்டுவந்து சுத்தம் பண்ணியிருக்கலேமே...

தாத்தா முகம் மலர்ந்து, ஆமாம் அதைச் செய்திருக்கலாமோல்லியோ... அவாளுக்கு மூளை கிடையாது. அதான் கஷ்டப்படறா.

அவாளுக்குத்தான் மூளை இல்லை... நமக்கு உண்டோல்லியோ. நாம சொல்லித் தந்திருக்கலாமே... அந்த இதயம் நமக்கு இல்லாம போச்சே... அது தப்பில்லையா..?

ஆமாண்டா குழந்தை, சரியாச் சொன்னாய்... கீழ இருந்தவாளுக்கு தங்களோட கஷ்டத்தைப் போக்கிக்கற மூளை இல்லை... மேல இருந்தவாளுக்கு அவாளோட கஷ்டத்தைப் போக்கற இதயம் இல்லை... நாம சில விஷயங்கள்ல ரொம்பப் பெரிய தப்பு பண்ணிண்டிருக்கோம். பகவான்தான் நம்ம எல்லாரையும் கரையேத்தணும் என்று சொல்லியபடியே நதிநீரில் முங்கி எழுகிறார். கரையில் நிற்கும் குழந்தைக்குப் பின்னால் இருக்கும் வானில் உதிக்கும் புதிய சூரியனின் கதிர்கள் இருண்ட நதியை ஒளி பெறச் செய்கிறது.
*


சுலப் இண்டர்நெஷனலுக்குத் தகவல் தெரிவித்தால் கழிப்பறை கட்டிக் கொடுத்து மலத்திலிருந்து உரமோ எரிவாயுவோ தயாரிக்கக் கற்றுக் கொடுக்கவும் செய்வார்கள் என்ற தீர்வைப் படத்தில் காட்டினால் அது வெறும் டாக்குமெண்டரியாகிப் போய்விடும். எனவே, தீர்க்க முடியாத பிரச்னையாக அது நீடிப்பதாக வைத்துக்கொண்டுதான் கதை செய்தாகவேண்டியிருக்கும்.

உத்தரபிரதேச தோட்டிகளின் வேதனையைப் பார்க்கும் ஜோக்கர் பஞ்சாயத்து தலைவரிடம் முறையிடுகிறான். ஊருக்கு ஒரு பொதுக் கழிப்பறை கட்டித் தரச் சொல்லித் தன் போராட்டத்தை ஆரம்பிக்கிறான். மெத்தனமாக நடந்துகொள்ளும் பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் ஆமையை அவிழ்த்துவிடுகிறான். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பை அவிழ்த்துவிடுகிறான். சுகாதார அமைச்சர் வீட்டு முன்னால் மலக்கூடையைக் கொட்டிப் போராடுகிறான். சேற்றில் குளித்தல், ரோட்டில் தவழ்ந்து செல்லுதல், தீ வைத்துக்கொள்ளுதல் என எல்லா போராட்டங்களையும் பொதுக் கழிப்பிடம் என்ற ஒற்றை இலக்கை முன்வைத்துப் போராடுகிறான்.

அவனுடைய போராட்டம் அன்னா ஹசாரேயின் ஊழல் ஒழிப்புப் போர் போல் மாநில அளவில், தேச அளவில், உலக அளவில் என பெரிதாகிறது.  இந்தியா மிளிர்கிறது என்ற பதாகைகளில் எல்லாம் இந்தியா நாறுகிறது என்று எழுதுகிறார். இடதுசாரிகள், எதிர்கட்சிகள், தலித் அமைப்புகள், ஊடகங்கள் எல்லாம் பெரும் ஆதரவு தருகின்றன. புண்ணிய சாக்கடை நதியில் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு போராட அனைவரையும் அழைக்கிறான். அனைவரும் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறார்கள்.

ஜோக்கரின் லட்சியம் சரிதான். ஆனால், இயங்கியல் பொருள் முதல் வாதமும் கருத்தியல் எதிர் பிரதிவாதமும் கொள்ளும் முரணியக்கத்தில் உருவாகும் நவீன பூர்ஷ்வா ஆதிக்க மையங்களை அரவணைத்தபடியே எதிர்க்கவும் எதிர்த்தபடியே அரவணைக்கவுமான வழிமுறைகளைத் தேடுவதே நம் முன்னால் இருக்கும் பெரும் சவால் என்பதை நாம் புரிந்துகொளும்போது இந்தப் போராட்ட முறையின் போதாமையும் நமக்குப் புரியவரும் என்று இடாலியன் செண்ட் மணம் கமழும் கம்யூனிஸ்ட் பிராமணர்கள் (இரட்டுற மொழிதல்?!) மேற்கு வங்காளத்திலேயே உண்ணாவிரதம் இருந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

தெய்வத்திண்ட சொந்த தேசத்து தோழர்கள் அடிபொளி தெறி முழக்கங்கள் தயாரித்து அனுப்பி தமது ஆதரவைத் தெரிவிக்கிறார்கள். அறிவுஜீவிப் போராளிகள் அன்று சம்பளப் பட்டுவாடா தினமாகையால் தங்களால் பெருந்திரளில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்து ஆன் லைன் ஆதரவுக் கடிதத்தில் ஒருவர் விடாமல் கையெழுத்து போட்டு தமது பேராதரவைத் தருகிறார்கள்.

அல்ட்ரா மாடர்ன் இந்து ராஷ்டிர, ராம ராஜ்ஜியத்தை கொண்டுவர சபதமெடுத்த இந்துத்துவர்கள் அன்றைய தினம் அமாவாசையாகிப்போய்விட்டதால் அடுத்த போராட்டத்தில் கட்டாயம் பங்குபெறுவோம் என்றும் பீமாராவ்ஜியின் வழியில் தமது பகுஜன் விகாஸ் விஷால் விலாஷ் யோஜ்னா தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று உறுதி தெரிவிக்கின்றனர்.

ஊடகத்தினர் ஹெலிகாப்டரில் இருந்தபடியே அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலை தூர கேமராவில் இருந்து இந்த அரிய காட்சியைப் படம் பிடித்து உலகெங்கும் கொண்டு செல்ல முடிவெடுக்கிறார்கள். வானம் ஹெலிகாப்டர்களால் நிரம்புகிறது. கை நகத்தில் மிகப் பெரிய அடிபட்டுவிட்டதாகத் தான் கனவு கண்டதால் எழுந்து நிற்கவேமுடியவில்லை என்று திராவிட, தமிழின, தலித்திய சிறுபான்மை போராளியான கருணாநிதி போராட்டத்தில் இருந்து தனக்கு கருணையுடன் விலக்கு தரும்படிக் கேட்டுக்கொள்கிறார். ஈ.வே.ராவின் பாதையில் உலகம் தன்னைப் போலவே நடந்து போராட்டம் வெற்றி பெற தன் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்.

தியாக தீபம், எளிமையின் இமயம், காங்கிரஸின் நிரந்தர தலைவர் அன்னை சோனியா தனது உள் மனதின் உத்தரவுக்காக காத்துக்கொண்டு இருப்பதால் கட்சித்தலைவர்களை அனுப்பிவைப்பதாகத் தெரிவிக்கிறார். காங்கிரஸ் பவனில் நீ போயேன் நீ போயேன் என அனைத்து தலைவர்களும் உலக அதிசயமாக ஏக மனதுடன் ஜனநாயக மாண்பு மிளிர நள்ளிரவு தாண்டியும் (வாகான தலையணைகளில் சாய்ந்துகொண்டு)  தீவிரமாக கலந்தாலோசிக்கிறார்கள்.

ஜோக்கரும் ஜெயகாந்தன் தாத்தாவும் இளம் போராளி இசையும் சாக்கடை நதியில் இறங்குகிறார்கள். துரதிஷ்டவசமாக அல்லது அதிர்ஷ்டவசமாக அவர்கள் இறங்கிய இடம் புதைமணல் பகுதியாக இருக்கிறது. மெள்ள மெள்ள அவர்களுடைய உடல் சாக்கடை நதிக்குள் மூழ்க ஆரம்பிக்கிறது. பெருந்திரளாகக் கூடிய இளைய தலைமுறை பல்வேறு போஸ்களில் செல்ஃபி எடுத்தபடி தமது உற்சாக ஆதரவை ஜோக்கருக்குத் தருகிறது.
ஒட்டுமொத்த சமூகம் வேடிக்கை பார்க்க ஜோக்கர்கள் மெள்ள மூழ்குகிறார்கள். இசை நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்து அபயக்குரல் எழுப்பி காப்பாற்றச் சொல்வோம் என்று சொல்கிறார்.

இப்படியான சமூகத்தில் நாம் வாழ்ந்து எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. நம் மரணமாவது இவர்களுடைய தடித்த தோலில் சொரணையை ஏற்படுத்தட்டும் என்று ஜோக்கர் சொல்கிறார்.

ஜெயகாந்தனும் அதுதான் சரி என்கிறார். மார்பளவுக்கு உடல் புதைகிறது. வேடிக்கை பார்க்கும் கூட்டம் கைதட்டி ஆர்ப்பரிக்கிறது.

நாம யாருக்காகப் போராடறோமோ அவங்களே நம்மள ஜோக்கரா நினைக்கறாங்களே... கக்கூஸ் இடிஞ்சு மனைவி செத்துபோனா கட்டின கொத்தனாரையும் காண்டிராக்டரையும் பஞ்சாயத்து தலைவரையும் எம்.எல்.ஏயையும் பறந்து பறந்து அடிச்சுக் கொல்ற மாதிரி நடிக்கறவனை இந்த உலகம் கொண்டாடும். அவன் பின்னால ஆட்டுமந்தைமாதிரி கூடி நிக்கும். அவன் கைல ஆட்சியைக் கொடுக்கும். அவன் நாளைக்கு வர்றேன்... நாளன்னிக்கு வர்றேன்னு ஃபிலிம் காட்டினா அப்பயும் அவன் வீட்டு வாசல்ல பழியாக் காத்துக்கிடக்கும். நம்மள மாதிரி உண்மையா தெருல இறங்கிப் போராடறவங்களை கோமாளியாப் பாத்து சிரிக்கும்.  நாம சமூகத்தோட கண்ணாடி மாதிரி... கண்ணாடி முன்னால நின்னு சிரிக்கறவன், அதுவும் கண்ணாடில தெரியற தன்னோட பிம்பத்தைப் பார்த்துச் சிரிக்கறவனுக்கு, அந்தக் கண்ணாடியில்லை... தான் தான் ஜோக்கர்ங்கறது கடைசிவரை புரியறதே இல்லை என்று சொல்லி வருந்துகிறார்.

நாம ஜெயிச்சிருந்தா இந்த மக்கள் நம்ம பின்னால வந்துநின்னிருப்பாங்க இல்லையா என்கிறாள் இசை ஏக்கமாக.

அப்படி இல்லைம்மா... மக்கள் பின்னால வந்து நின்னாத்தான் நாம் ஜெயிக்க முடியும். சரியான ஆள் பின்னால போய் நின்னாத்தான் ரெண்டுபேருமே ஜெயிக்க முடியும். கதவுதான் திறந்து வழி கொடுக்கும். சுவரு வழிகொடுக்காதும்மா... நாம கதவு... இவனுங்க கல் சுவத்துக்கு முன்னால  போல் காலமெல்லாம் காத்துக்கிட்டு நிக்கறாங்க. அவங்க நம்மளைப் பார்த்துச் சிரிக்கும்போது கோபம் வரலைம்மா... பரிதாபம்தான் வருது... சரி, நீ வேணும்னா போய்க்கோம்மா... எங்களுக்கு இனி ஒண்ணும் இல்லை வாழ வேண்டிய வயசு. நீ வாழணும் என்று ஜோக்கர் இசையிடம் சொல்கிறார்.

இவங்க மத்தியில வாழ்றதைவிட சாகறதே மேல் தோழர் என்கிறாள் கண்களில் நீர் கோக்க.

மூவரும் கைகளைக் கோர்த்துக்கொள்கிறார்கள். கழுத்தளவுக்கு புதைகிறார்கள். கூடியிருப்பவர்களுக்கு மெள்ள விபரீதம் புரிகிறது. அனைவருடைய சத்தமும் மெதுவாக அடங்குகிறது. மூக்கு வரை மூழ்குகிறார்கள். மூவரும் தமது கைகளைக் கோர்த்தபடியே மேலே தூக்குகிறார்கள். கண்கள் மூழ்குகின்றன. மேலே உயர்ந்த கைகளின் உறுதி கூடுகிறது. தலை வரை சாக்கடை நதிக்குள் மூழ்குகிறார்கள். நீருக்கு மேலே தென்படும் கரங்களில் உயிர் பிரியும் வலியும் பிடிவாதமாக உயிரை மாய்த்துக்கொள்ளும் உறுதியும் தென்படுகின்றன. கைகோர்த்து நின்ற கரங்கள், ஏன் எங்களைக் கைவிட்டீர் ஆண்டவரே என்று வான் பார்த்துக் கதறும் வகையில் மெள்ளப் பிரிந்து உறைகின்றன. 

Tuesday, 16 August 2016

குஜராத் ‘தலித் எழுச்சி’யும் கார்ப்பரேட் கோசாலைகளும்


குஜராத்தில் இருக்கும் யுனா - பகுதியில் தலித்களில் ஒரு பிரிவினர் மாபெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். மாட்டுத் தோல் நீக்கும் தொழிலில் இனியும் ஈடுபடமாட்டோம்... எங்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் தரவேண்டும் என்ற கோரிக்கைகளுடன் போராடியிருக்கிறார்கள். ரோஹித் வெமுலாவின் தாய், ஜே.என்.யு. கன்னையா குமார் எனப் பலரும் பங்குபெற்ற போராட்டம் ஆகஸ்ட் 15 அன்று நடந்திருக்கிறது. முஸ்லிம் தலித் பாய் பாய் என்ற முழக்கங்களுடன் பெருந்திரளான முஸ்லிம்களும் இந்த தலித் பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்தில் சில தலித்கள் இறந்த மாட்டின் தோலை உரித்தற்காகத் தாக்கப்பட்டத்தைத் தொடர்ந்து குஜராத் ‘தலித் எழுச்சி’ ஆரம்பித்திருக்கிறது.



இந்த தலித் - முஸ்லிம் கூட்டு பல வகைகளில் அபாயகரமானது. உண்மையில் இது தலித் - முஸ்லிம் கூட்டு அல்ல. இஸ்லாமிய தீவிரவாதம் தலித் அடிப்படைவாதத்தைத் தனது முகமூடியாகப் பயன்படுத்துகிறது. தலித் அடிப்படைவாதம் எளிய தலித் முகத்தைத் தனது முகமூடியைப் பயன்படுத்திக்கொள்கிறது. இந்து மத அழிப்பை தலித் அடிப்படைவதிகள் முன்வைக்கிறார்கள். இந்திய உடைப்பை இஸ்லாமிய தீவிரவாதிகள் முன்வைக்கிறார்கள். இந்து-இந்திய அழிப்பை எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என்ற அரசியல் கணக்குகளின்படி இஸ்லாமிய, தலித் அடிப்படைவாதிகள் முன்னெடுக்கிறார்கள்.

உண்மையில் தலித் அடிப்படைவாதம் என்பது இதுவரை கிறிஸ்தவ மிஷநரிகளால்தான் இதுவரை பட்டை தீட்டப்பட்டுவந்தது. இன்று இஸ்லாமிய தீவிரவாதத்துடன் கைகோக்க அனுப்பிவைத்திருக்கிறது. ஆக, இந்து இந்திய சக்திகளும் தலித் இஸ்லாமிய சக்திகளும் தமக்குள் சண்டையிட்டு மடிந்தால் தேவனின் சாம்ராஜ்ஜியம் இந்தியாவில் மலர அது வழிவகுக்கும் என்ற தொலைநோக்குப் பார்வை இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். எது எப்படியானாலும் இந்த அபாயகரமான முன்னெடுப்புகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும்.  ஆனால், தலித்-இஸ்லாமிய அடிப்படைவாதக் கூட்டை எதிர்க்கும் நோக்கில் மேல்சாதி - இந்து/இந்தியத் தேசிய அடிப்படைவாதக் கூட்டு உருவாகிவிடக்கூடாது.. தீயை அணைக்க நீரைப் பயன்படுத்தவேண்டும். அதைவிட பலமான தீயையோ காற்றையோ பயன்படுத்தினால் அது தீயை அணைக்காது. மேலும் பரவவே செய்யும்.

இந்தப் பிரச்னையின் அடிநாதமான பசு அரசியலில் இருந்து ஆரம்பிப்போம். உலகில் விவசாயமும் மேய்ச்சலும் எல்லா இடங்களிலும் பிரதான தொழிலாக இருந்திருக்கின்றன என்றாலும் இந்தியாவைத்தவிர பசுக்கள் எங்குமே புனிதமாக மதிக்கப்பட்டிருக்கவில்லை. இந்தியாவில் பசு மட்டுமல்ல நதிகள், மரங்கள், நாக ராஜா, கஜமுகன், வானரராயன், பைரவர் போன்ற விலங்குகள் எனப் பலவும் புனிதமாக மதிக்கப்பட்டிருக்கின்றன. இந்துக்களுக்கு இன்பச்சுற்றுலாகூட கோவில்களுக்கான புனித யாத்திரைதான். இப்போதும் இந்த மதிப்பீடுகள் பெருமளவுக்கு மாறிவிடவில்லை. ஆனால், இந்த புனிதம் என்பது வெறும் சடங்காக சாரம் இழந்ததாக ஆகிவருகிறது. எல்லா நதியையும் கங்கையாக மதித்து வணங்கும் அதே இந்தியாவில் அந்த கங்கையையே அசுத்தமாக்கிவிட்டிருக்கிறோம். புண்ணிய க்ஷேத்ரங்கள் எல்லாம் குப்பைக்காடாக, மல மேடாக ஆகிக்கொண்டிருகின்றன.

இந்தச் சீரழிவுகள் சுமார் ஐம்பது ஆண்டுகளாக நடந்தவையே. அதற்கு முக்கிய காரணம் நகர்ப்புற, நவீன வாழ்க்கை. அது மரபில் இருந்து நம்மைப் பிரித்துவிட்டதாலும் நவீன வாழ்க்கையின் தொழில்நுட்பங்கள், விஞ்ஞான அணுகுமுறை, குடிமை மனோபாவம் நமக்கு இன்னும் முழுவதுமாக கிடைக்கப் பெறாததாலும் இந்த வருந்தத்தக்க நிலை உருவாகிவிட்டிருக்கிறது. அதோடு நமது மக்கள் தொகை மிக மிக அதிகம் என்பதால் நகரங்களும் சுற்றுலாமையங்களும் அந்தந்த நகராட்சி அமைப்புகளால் நிர்வகிக்க முடியாத அளவுக்கு அசுத்தமாகிவருகின்றன. இப்போது கங்கை ஓரளவுக்கு சீரமைக்கப்பட்டுவிட்டிருக்கிறது. எனினும் யமுனை, கூவம் என இன்னும் சரி செய்யப்படவேண்டிய நதிகள் ஏராளம்.



இந்து கோவில்களில் இருந்து கிடக்கும் வருவாய் அந்தந்த கோவிலையும் அதன் சுற்றுவட்டாரங்களையும் தூய்மையாக வைக்கப் பயன்படுத்தப்படவேண்டும். அன்னதானம் என்பது தூய்மைப் பணியை சிரமதானமாகச் செய்து முடிப்பவர்களுக்கு (முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு விதிவிலக்கு) தரப்படும் சம்பளம் என்று சிறிது மாற்றி அமைக்கப்படவேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்பது ஆக்கப்பூர்வமான தூய்மை/சுகாதாரத் திட்டமாக மாற்றப்படவேண்டும். சுற்றுலா மையங்கள், கோவில்கள், குளங்கள், விழாக்கள் ஆகியவற்றை தூய்மையாகப் பராமரிக்க இந்த வேலை நாட்களையும் நபர்களையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இன்று இந்தத் திட்டத்துக்கு செலவிடப்படும் கோடிகளை ஒப்பிடும்போது அதன் மூலம் உருவாகும் நன்மை என்பது மிக மிகக் குறைவு. ஒரு சுற்றுலா மையத்தை தூய்மையாகப் பராமரிக்கிறீர்களென்றால் அந்த மையத்தின் வருவாயைப் பெருக்குகிறீர்கள் என்று அர்த்தம். அதன் வருமானம் அதிகரித்தால் பணியாளர்களுக்கு அதிக சம்பளம் கிடைத்து அவர்கள் வாழ்க்கைத் தரம் உயரும். இது நேர்மையான சக்கரச் சுழற்சி.



முன்பு கிராமப் பஞ்சாயத்துகள் துடிப்புடன் இருந்ததால் ஒவ்வொரு கிராமமும் அதன் கோவில்களும் குளங்களும் இன்னபிற அம்சங்களும் அவர்களால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டன. இன்று அதிகாரம் எங்கோ தொலைவில் தில்லியிலும் மாநகத் தலைமை மையங்களிலும் குவிந்து கிடக்கிறது. அதிகாரவர்க்கத்தின் ஊழல், அலட்சியம் ஆகியவற்றால் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட மக்களின் ஒருவித கையாலாகாத தன்மையாலும் விலகலாலும் நிலைமை மோசமாகிவருகிறது. மையத்தில் வலுவான அரசு உருவாவதென்பது நிதி/வரிச் சேகரிப்பு மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பின் மூலமாக பல பிரமாண்டமான, நல்ல விஷயங்கள் நடந்தேற வழி செய்திருக்கும் அதே நேரத்தில் இப்படியான விடுபடல்களும் போதாமைகளும் அதில் இருக்கத்தான் செய்கின்றன.

நதிச் சீரமைப்பு போலவே இந்திய சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு அம்சம் பசு பாதுகாப்பு.  மாமிசம் சாப்பிடுவது தவறென்றால் எல்லா உயிர்கள் மீதுமே கரிசனம் இருக்கவேண்டும். ஏன் பசுவுக்கு மட்டும் தனி முக்கியத்துவம் என்ற கேள்வி கேட்கப்படுவதுண்டு. உண்மையில் கொல்லாமையை முன்வைக்கும் புத்தரும் வள்ளுவரும் எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்றுதான் சொல்லவும் செய்கிறார்கள். பிராமணர்களும் அதையேதான் சொல்கிறார்கள். ஆனால், பசுவுக்கு மட்டும் பிராமணர்கள் கூடுதல் முக்கியத்துவம் ஏன் தருகிறார்களென்றால் அது ஒரு தாயைப்போல் பால் தருகிறது. அதனால் அது தாய்க்கு சமமாக மதிக்கப்பட்டு அதை கொல்லக்கூடாது என்று புனிதப்படுத்தப்பட்டது.



பசு அந்தப் பாலை நிச்சயம் விரும்பித் தந்திருக்கவில்லை. மனிதர் திருடித்தான் எடுத்துக்கொள்கிறார் என்றாலும் ஒரு குறைந்தபட்ச நன்றி உணர்வாக அதைக் கொல்லக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள் பிராமணர்கள். அதை ஒட்டுமொத்த சமூகம் ஏற்றுக்கொள்ளத்தான் செய்திருக்கிறது. கோவில் விழாக்களில் கோழி, ஆடு, பன்றி பலி கொடுக்கும் தலித்கள்கூட பசுவைப் பலி கொடுத்து எந்த விழாவையும் கொண்டாடுவதில்லை. அரசியல் மூளைச் சலவை செய்யப்படாத தலித்களுக்கு பசு மாமிசத்தை உண்பது குறித்து குற்ற உணர்ச்சி இருக்கவே செய்கிறது.  இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து நாங்கள் வித்தியாசமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் இருக்கும் தமிழகத்தில் அறுவடைப் பொங்கல் திருநாளில் பசுவை வணங்கும் பாரம்பரியம்தான் உண்டு. இந்தியாவில் வடகிழக்கு மற்றும் கேரள, வங்காளம் தவிர பிற மாநிலங்கள் அனைத்திலுமே பி.ஜே.பி.க்கு முன்பிருந்தே பசு கொலைக்கு எதிரான சட்டங்கள் வலுவாக உண்டு.


பவுத்தம்தான் முதலில் கொல்லாமையை முன்வைத்தது. வேதகாலத்தில் பிராமணர்கள் பசுவை  உண்டு வந்திருக்கிறார்கள் என்று பலவீனமான உதாரணங்களைக் கொண்டுவந்து நிறுத்துபவர்கள் குறைந்தபட்சம் புத்தர் சொன்ன பிறகாவது உயிர் கொலையை அவர்கள் விட்டுவிட்டார்களே. அதுபோல் ஏன் பிறர் நிறுத்தவில்லை என்ற கேள்விக்கு என்ன பதில்தான் சொல்லிவிடமுடியும். பிராமணர்கள் பசுவைப் புனிதம் என்று சொல்வதால் அதை மறுத்தே ஆகவேண்டும் என்று சொல்பவர்கள் கொல்லாமையை முன்வைத்த புத்தரையும் வள்ளுவரையும் மிதித்தபடியேதான் தமது அரசியலை முன்னெடுக்கிறார்கள்.

உண்மையில் பிராமணர்கள் பசுவை புனிதம் என்று சொல்வதை எதிர்ப்பதென்றால் பசு மட்டுமல்ல கோழியும் ஆடும் பன்றியுமே கூடப் புனிதமானதுதான் என்றுதான் வள்ளுவரையும் புத்தரையும் மதிப்பவர்கள் சொல்லவேண்டும். ஆனால், நேர்மாறாக பசுவுமே புனிதமல்ல என்று சொல்வதையே தங்கள் அரசியலாக முன்வைக்கிறார்கள். இது முழுக்கவே தவறு.



மேலும் புத்தர் முன்வைத்த கொல்லாமையை பவுத்த தேசங்கள் எதுவுமே பின்பற்றவில்லை. இந்து மதத் தாக்கம் மிகுதியாக இருக்கும் இந்தியாவில்தான் பசுக் கொலை மிகவும் குறைவாக இருக்கிறது. அதோடு பசு பாதுகாப்பு என்பதை பிராமணர்களுடைய மதிப்பீடு என்பதோடு நிறுத்தாமல் அதை ஆர்.எஸ்.எஸின் அரசியல் கொள்கையாகப் பார்க்கும் அசட்டுத்தனமும் இருக்கிறது. உண்மையில் அது இடைநிலை சாதிகளின் மதிப்பீடு. ஆர்.எஸ்.எஸ். சொல்லும் எல்லாவற்றையும் எதிர்ப்பதே முற்போக்கு என்று செயல்படுபவர்கள் பசு விஷயத்தில்(லும்) உண்மையில் இடைநிலை சாதிகளின் மதிப்பீடுகளோடுதான் மோதுகிறார்கள். இடைநிலை சாதிகளின் முக்கியமான கோட்டையான திராவிடத் தமிழகத்திலும் மாட்டுக்கறி மகிமை பற்றி எந்தவொரு திராவிடத் தலைவரும் பெரிய அளவில் இதுவரை பேசியதில்லை. அது இடைநிலை சாதிகளிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திவிடும் என்ற அச்சமே காரணம்.

மேலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் துணையோடு பசுக் கொலையை முன்னெடுப்பது மிகவும் அபாயகரமான செயல். இஸ்லாமியத் தீவிரவாதம் அல்லாவின் ராஜ்ஜியத்தைத் தவிர வேறு எதையும் ஏற்காது. அதற்கான எளிய, அண்மை உதாரணம் காஷ்மீர். உங்களுக்கு சாலை வசதி செய்து தர இந்தியா வேண்டும்... மின்சாரம் எடுத்துத்தர இந்தியா வேண்டும்... கல்வி தர இந்தியா வேண்டும்... ஆனால், நீங்கள் மட்டும் இந்தியாவுடன் முழுவதுமாக இணையமாட்டீர்களா என்று அம்பேத்கர் 1950களிலேயே கேட்டது எவ்வளவு தீர்கக் தரிசனமிக்க வார்த்தைகள். இன்று இருந்திருந்தால் உங்களை வெள்ளங்கள், பூகம்பங்களில் இருந்து காப்பாற்ற இந்திய ராணுவம் வேண்டும்... உங்களுக்கு கோடிக்கணக்கில் நிதிகளைக் கொட்டிக்கொடுக்க இந்தியா வேண்டும்... ஆனால் நீங்கள் இந்தியக் கொடியை எரிப்பீர்களா... என்று கேட்டிருப்பார். 

இந்தியாவின் எந்தவொரு மாநிலத்தில் இருப்பவரையும்விட ஒரு தனி நபருக்காக மத்திய அரசு செலவிடும் தொகை காஷ்மீருக்குத்தான் மிக மிக அதிகம். அப்படியான நிலையிலும் இந்தியாவே வெளியேறு என்று அவர்கள் சொல்வதன் ஒரே காரணம் இஸ்லாமிய அரசைத்தவிர வேறு எதையும் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஏற்காது என்பதுதான். அப்படியான ஓர் அழிவு சக்தியுடன் தலித்கள் கைகோர்ப்பது தன் வீட்டுக்குத் தானே குண்டு வைத்துக்கொள்வதற்கு சமம். கிறிஸ்தவத்துடன் கை கோர்ப்பதும் தலித்களுக்கு அடையாள அழிப்பில் ஆரம்பித்து பல்வேறு பின்னடைவுகளையே தரும். நவீன காலகட்டத்துக்கு ஏற்ப தன்னைச் சீரமைத்துக்கொண்டுவரும் இந்து சமூகமே தலித்களின் இயல்பான விடுதலைக்கு வழிவகுத்துத் தரமுடியும். அதற்கு பசு விஷயத்தில் இடைநிலை சாதிகளின் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பதே சரி. முற்போக்கு மற்றும் மதவாத ஆசான்கள் ஆர்.எஸ்.எஸை எதிர்க்கும் வழி என்று சொல்லித் தூண்டிவிடும்போது, உண்மையில் அது இடைநிலை சாதியுடனான மோதலையே பெரிதாக்குகின்றன... எனவே, உங்கள் கரிசனத்துக்கு நன்றி என்று சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்புவதே தலித் அடிப்படைவாதிகளுக்கு நல்லது.

பசு அரசியல் பற்றி அதன் கலாசார அம்சங்களை விலக்கிவிட்டுப் பார்த்தால் இன்னொரு உண்மை புரியும். ஜே.சி.குமரப்பா பசு சார்ந்த பொருளாதாரத்தை மனித அமைதி வாழ்க்கைக்கான பொருளாதாரமாகப் பார்க்கிறார். பசு, காளை ஆகியவற்றைப் பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டுவந்தபோது மனிதன் வன்முறை குறைந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறான். கரியைக் கண்டுபிடித்த பிறகு உற்பத்தியும் போக்குவரத்து வசதிகளும் பெருகின. அது சந்தைக்கான போட்டியையும் வன்முறையையும் உருவாக்கியது. பெட்ரோல் கண்டுபிடிப்பு அந்தப் போட்டியை மேலும் வன்முறையானதாக்கியது.

மேலும் பசு பொருளாதார காலகட்டத்தில் நாம் பயன்படுத்திய சக்தி மூலங்கள் நிரந்தரமானவை. கரி, பெட்ரோல் எல்லாம் தற்காலிகமானவை. எடுக்க எடுக்கக் குறைபவை.  எனவே தன்னிறைவான எளிய பசு பொருளாதாரமே நிம்மதியான மனித வாழ்க்கைக்கு உகந்தது என்கிறார் இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் புறக்கணிக்கப்பட்ட பொருளாதார மேதையான ஜே.சி.குமரப்பா. ஆனால், அந்தப் பசு பொருளாதார காலகட்டத்தில் தலித் மக்களின் நிலை மிகவும் வேதனை நிறைந்ததாக இருந்தது என்று கருதுபவர்கள் புதிய கரி-பெட்ரோல் காலகட்ட வாழ்க்கையை தலித் விடுதலைக்கான காலகட்டமாகச் சொல்லமுடியாது. சாதிய இழிவைவிட வர்க்க இழிவு மேலானதுதான் என்றாலும் இரண்டுவகை இழிவும் இல்லாததைத்தானே உண்மையான மீட்சியாகச் சொல்லமுடியும்.

பசு விஷயத்தில் இரண்டு பிரச்னைகள் முன்னால் இருக்கின்றன... ஒன்று பசுவை உண்ணுதல், இரண்டாவது இறக்கும் பசுக்களை அப்புறப்படுத்துதல். இந்த இரண்டுக்குமே ஒரே எளிய தீர்வு கோசாலைகளை அமைத்து பசுக்களைப் பராமரித்தலே.


நவீன மனம் கோசாலைகளுக்குப் பதிலாக கோ-கொலைசாலைகளை அதிகம் திறக்கவேண்டும் என்று சொல்லக்கூடும். பல நூற்றாண்டுகளாக புனிதமாக மதிக்கப்பட்டுவரும் நம்பிக்கை அப்படி எளிதில் அழிக்கப்பட்டுவிடவேண்டாம். பொதுவாக நம் முன் ஒரு பிரச்னை வரும்போது இரு தரப்புக்கும் வெற்றி கிடைக்கும் (Win-Win Solution) வழிமுறைகளை முன்னெடுப்பதே புத்திசாலித்தனம். பாம்பும் சாகணும்... தடியும் உடையக்கூடாது.

விவசாயம், மேய்ச்சல் ஆகியவற்றில் நேரடியாக ஈடுபடாத நாவிதர், வண்ணார், வெட்டியார், தோட்டி, சக்கிலியர் போன்ற தலித் சாதிகளே மாட்டுக்கறியை அதிகமும் உண்டுவந்திருக்கிறார்கள். விவசாயத்தோடு தொடர்புடைய பள்ளர்கள் போல் பலர் தலித்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும் மாட்டுக்கறி உண்பதில்லை. இஸ்லாம், கிறிஸ்தவத்துக்கு மாறிய இந்துக்கள் மாட்டுக்கறி உண்பதுண்டு.

மாட்டு வகைகளின் இறைச்சி விலை குறைவாக இருப்பதால் வறுமையிலும் சாதி அடுக்கின் கடைசிப் படிகளிலும் இருப்பவர்களுக்கு மாட்டு இறைச்சி எளிதில் வாங்க முடிந்த உணவாக இருக்கிறது. எனவே, மாட்டுக்கறி கூடாது என்று சொல்வதென்றால், அதைவிடக் குறைந்த விலையில் பிற மாமிசங்கள் கிடைக்க வழி செய்யவேண்டும் என்று சிலர் சொல்வதுண்டு.

சைவ உணவா... அசைவ உணவா எது சிறந்தது என்று கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்க்கலாம். மனிதருக்கு இறைச்சியைக் குத்திக் கிழிக்க கூர் நகங்களும் கோரைப் பல்லும் கிடையாது. மாமிசத்தைப் பச்சையாகச் சாப்பிட முடியாது போன்றவையெல்லாம் மனிதனை தாவர பட்சிணியாகவே இயற்கை படைத்திருக்கிறது என்பதையே உறுதிப்படுத்துகின்றன. ஆதி மனிதன் வேட்டையாடுவதற்கு முன்பாக காய் கனிகளைப் பொறுக்கித் தின்பவனாகவே பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறான். தீ கண்டுபிடிக்கப்பட்ட பிறகே மாமிசத்துக்கு நகர்ந்திருக்கிறான்.

இவையெல்லாவற்றையும்விட கேவலம் ருசிக்காக ஓர் உயிரைக் கொல்லவேண்டுமா. அதுவும் எளிய விலங்கு ஒன்றைக் கொல்லவேண்டுமா என்ற கேள்வியை ஒருவர் கேட்டுப் பார்த்தாலே போதும். மாமிசத்தைச் சாப்பிட்டே தீருவோம் என்று சொல்லும் போராளிகள் அனைவருமே தம்மை எளிய மக்களின் பிரதிநிதிகளாகவே சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களைவிட எளிய விலங்குகளைக் கொல்வதை நியாயம் என்றும் சொல்கிறார்கள். இது கொடூரமான முரண். உண்மையில் அவர்கள் சிங்கம், புலி என மிருகங்களில் ஆதிக்கசக்திகளான இருக்கும் வன் மிருகங்களைத்தான் கொன்று தின்னவேண்டும். பசுவையும் கோழியையும் ஆட்டையும் தமது அரசியல் சார்ந்து காப்பாற்றவே வேண்டும். ஆனால், பிராமணர்கள் சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே அசைவ உணவை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.



இதில் இன்னொரு விஷயம்... மாமிசத்துக்கு தனியான, விசேஷமான சுவையே கிடையாது. அதில் சேர்க்கப்படும் மிளகாய், தேங்காய், எண்ணெய், பிற மசாலாக்கள் இவையே மாமிசத்துக்கு சுவையைத் தருகின்றன. எனவே, சுவைக்கு அடிமையான ஒருவர் மாமிசத்தை வெளியே எடுத்து வீசிவிட்டு காய்களையோ மீல்மேக்கர்களையோ அந்த மசாலாவுடன் சேர்த்துச் சாப்பிட்டாலும் நல்ல ருசி கிடைக்கத்தான் செய்யும். எனவே, ஓர் எளிய உயிரைக் கொன்றுதான் மனிதன் தன் நாக்கைத் திருப்திப்படுத்தவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

ஒரு மனிதனுக்கு, தான் எதை உண்ணவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுதந்தரம் உண்டு என்று சொல்பவர்கள் நம்மைப் போலவே இந்த உலகில் வாழ உரிமையுடைய இன்னொரு எளிய உயிரின் சுதந்தரத்தைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கவேண்டும். மனிதரை மட்டுமே மையமாக வைத்து சிந்திக்கும் அராஜகம் கூடாது. மேல் சாதியினரும் மேல் வர்க்கத்தினரும் தம்மை மட்டுமே மையமாக வைத்து சிந்திக்கும் அராஜகத்துக்குச் சற்றும் குறையாதது அது.

உண்ணும் உணவை வைத்து உயர்வு தாழ்வு கற்பிக்கும் பிராமண மனோபாவம் தவறென்று சொல்வதுண்டு. ஆனால், அணில், காகம் போன்றவற்றை உண்ணும் நரிக்குறவர் போன்ற நாடோடி ஜாதியினரையும் பன்றிக் கறி சாப்பிடும் தலித்களையும் மாட்டுக்கறி உண்ணும் தலித் பிரிவினர் அந்தக் காரணத்துக்காகவே  இழிவாகப் பார்க்கிறார்கள். ஆடு, கோழி சாப்பிடும் சூத்திரர்கள் பிற வகைக் கறி சாப்பிடுபவர்களை அதைச் சொல்லியே இழிவாகப் பார்க்கிறார்கள் என்ற உண்மையை யோசித்துப் பார்த்தால் உணவின் அடிப்படையிலான சமூக அந்தஸ்து வெறும் பிராமணிய உருவாக்கம் மட்டுமே அல்ல என்ற முடிவுக்கே வருவார்கள்.

அடுத்ததாக, இறந்த பசுக்களை அப்புறப்படுத்துதல்...
இன்று நகர்ப்புறங்கள் மற்றும் புறநகர்களில் பசு வளர்ப்பவர்கள் யார் என்று பார்த்தால் பெரிதும் இடை, கடைநிலை சாதியினராகவே இருப்பார்கள். மேல்சாதியினர் குறிப்பாக பிராமணர் நவீன வேலைகளுக்கும் நகர்ப்புறத்துக்கும் மாறிவிட்டதால் அவர்களில் 90 சதவிகிதத்துக்கும் மேல் இப்போது பசு வளர்ப்பில் இருந்து வெளியேறிவிட்டனர். கிராமங்களில் பசு வளர்ப்பும் பசுவைப் புதைத்தலும் பெரிய பிரச்னையாக இல்லை. நகர்ப்புறத்தில் அது ஏன் பிரச்னையாக இருக்கிறதென்றால், அதை வளர்க்கும் ஏழை மக்களுக்குப் பசுவைப் பராமரிப்பது சிரமமாக இருக்கிறது. நகர்ப்புறங்களில் மேய்ச்சல் நிலங்கள் கிடையாது என்பதால் அவர்களால் போதிய உணவைக் கொடுக்க முடிவதில்லை. எனவே, தங்கள் பசுக்களை அப்படியே அவிழ்த்துவிட்டுவிடுகிறார்கள். அவை தெருத்தெருவாக அலைந்து கிடைப்பதை உண்டு வாழ்கின்றன.

மேலும் ஏழைகளுக்குத் தொழுவங்கள் கட்டும் அளவுக்கு வசதிகள் இல்லை என்பதால் வீட்டுக்கு அருகில் தெருவிலேயே அவற்றை தூங்க வைக்கிறார்கள். பால் கறக்கும் காலத்தில் மட்டுமே பசுக்களை அவர்கள் சற்று அக்கறையுடன் நடத்துகிறார்கள். இதில் அவர்கள் மேல் குறை சொல்ல ஒன்றுமில்லை. அவர்களுக்கு பசு என்பது செலவில்லாமல் வருமானம் தரும் ஒரு விலங்கு மட்டுமே. சமூகத்தின் பிற சாதியினர் பசு மாமிசத்தைத் தவிர்க்கும்நிலையில், பசுக்களைப் பூட்டி வைக்காமல் மேயவிடுவதில் அவர்களுக்கு எந்த நஷ்டமும் பயமும் இல்லை. கோழியைப்போல் பசு மாமிசத்தையும் இந்து சமூகம் விரும்பிச் சாப்பிடுவதாக இருந்தால் பசுக்களைத் தெருக்களில் யாரும் அலையவிடமாட்டார்கள்.


இப்படி பசுவைப் பராமரிக்கும் வசதியும் அக்கறையும் இல்லாதவர்களிடம் இருக்கும் பசுக்கள்தான் எங்கேனும் இறந்துவிடும்போது பிரச்னையை உருவாக்குகின்றன. அவற்றை வளர்ப்பவர்களுக்கு, அதைப் புதைக்கும் வசதியும் கிடையாது. எனவே, அப்படியே விட்டுவிடுகிறார்கள். ஆனால், மா-நகராட்சி அப்படியே விடுவிடமுடியாது. தலித்களிலேயே இருக்கும் இன்னொரு பிரிவினரை அழைத்துவந்து பசுவைப் புதைக்கச் சொல்கிறார்கள். அரசுப் பணம் பல வழிகளில் சுரண்டப்படுவதுண்டு என்றாலும் பசுவைப் புதைக்க அதைச் செலவிட அதிகாரத்தில் இருக்கும் இடைநிலை சாதியினருக்கு அக்கறை இல்லை. எனவே, பசுவைப் புதைக்கும் வேலையைச் செய்யும் தலித் பிரிவினருக்கு உரிய கூலி கிடைப்பதில்லை. அது இயற்கையாக இறந்திருந்தால்கூட அதை வெட்டி உண்ண முடிந்திருக்கும். முந்தைய காலகட்டத்தில் அப்படி இறக்கும் பசுக்கள், ஒரு பெரிய விருந்துக்கான வாய்ப்பாகவே அதை அப்புறப்படுத்திய சாதியினரால் பார்க்கப்பட்டது. ஆனால், நோய்வாய்பட்டு இறக்கும் பசுக்களை அப்படி உண்ணவும் முடியாது. அது எந்தவகையிலும் நன்மை தராத வேலையாகவே ஆகிவிட்டது. எனவே, ஒரு குறிப்பிட்ட சாதியைப் பிறப்பின் அடிப்படையில் அந்த வேலையில் திணிப்பது இன்று பெரிய தவறாகிவிட்டிருக்கிறது.

இடதுசாரிகள் கல்விப்புலங்களில் ஆரம்பித்து ஊடகங்கள் வரை அனைத்திலும் ஊடுருவியிருக்கிறார்கள்; இடைநிலை சாதி முற்போக்காளர்கள் ஆட்சி அதிகாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்; அரசு சாரா நிறுவனங்கள் தலித் விடுதலைக்காக அயராது பாடுபட்டுவருகின்றன; அரசின் நலத்திட்டங்கள் எல்லாம் தலித்களைப் பெருங்கருணையுடன் நடத்துகின்றன; அரசியல் சாசனம் அனைவருக்கும் கல்வியிலும் வேலையிலும் சம வசதி வாய்ப்புகளையும் சலுகைகளையும் உறுதிப்படுத்தியிருக்கிறது; தலித் கட்சிகள் கணிசமான செல்வாக்கு பெற்றுவிட்டிருக்கின்றன. நவீனத்துவமும் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கோலோச்சத் தொடங்கி வெகுகாலம் ஆகிவிட்டது. இவ்வளவுக்குப் பிறகும் சில தலித் சாதிகள் இவற்றின் எந்த நன்மையும் கிடைக்காமல் இருளிலேயே நீடிக்கும் அவல அதிசயம் புரியவே இல்லை. இதுமட்டுமா இப்படியான கடினமான இழிவான வேலைகள் எதுவும் இருந்திராத காலகட்டத்தில், உலகின் பிற பகுதிகளைப் போலவே பிறப்பின் அடிப்படையில் தொழிலை முன்வைத்த மனுவும் இந்துமதமும்தான் இதற்குக் காரணம் என்று அடிவயிற்றில் இருந்து கத்துகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்துத்துவர்களும் இந்தக் காட்டுக் கத்தலில் கூட்டுச் சேர்திருக்கிறார்கள். உண்மையில் மேலே சொல்லப்பட்ட சக்திகளில் ஏதேனும் ஒன்று ஒரு நிமிடமாவது இந்த வேதனைக்கு நாமும் ஒரு காரணமே... எளிதில் தீர்க்க முடிந்த ஒரு பிரச்னையே இது என்று நினைத்திருந்தால் எப்போதோ இதிலிருந்து விடுதலை கிடைத்திருக்கும். ஆனால், மலம் அள்ளுதல், கழிவுகளை அகற்றுதல் போன்ற கடைநிலைப் பணிகளில் ஈடுபட்டுவந்த தலித் சாதியினரில் இருந்து எந்தவொரு தலைவரும் வரவில்லை என்பதாலும் அவர்களுடைய வேதனைகளைச் சொல்லிக் காட்டி ஆதாயங்களை பெற்றுச் சென்ற பிற முன்னேறிய தலித் சாதியினருக்கு அவர்களுடைய வேதனையைத் தீர்ப்பதில் எந்த அக்கறையும் இல்லை என்பதாலும் இந்த வேதனைகள் தொடர்கதையாகிவருகின்றன. வேறென்ன தாய்க்கும் பிள்ளைக்குமேகூட வாயும் வயிறும் வேறுதானே.

பசுக்களை வளர்ப்பவர்களே அதைப் புதைக்க ஆகும் செலவைக் கொடுக்கவேண்டும் என்று சொல்லலாம்; சம்பளம் தரும் வேலையாக யார் வேண்டுமானாலும் அந்த வேலைக்கு நியமிக்கப்படலாம்; அந்த வேலைக்கு இரண்டு மூன்று மடங்கு சம்பளத்தை அதிகரிக்கலாம். ஒருவேளை முன்பு பசுவைப் புதைக்கும் தொழிலில் ஈடுபட்டவர்களே அதைச் செய்ய விரும்பினால் அதில் அவர்களுக்கு முன்னுரிமை தரலாம். ஆனால், அது நிச்சயமாக நிர்பந்தமாக இருக்கவே கூடாது. இதுவே உடனடியாகச் செய்யவேண்டிய விஷயம்.
*
நீண்டகால நோக்கில் கோசாலைகள் அமைப்பதே இந்தப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும். கோசாலைகளை அமைத்துப் பசுக்களை வளர்க்கவேண்டும். ஆனால், அதன் இறைச்சியை உண்ணக்கூடாதென்றால், அது லாபகரமான தொழிலாக இருக்காது. அதில் இருந்து கிடைக்கும் பால் போதாது. அதோடு பசுவின் உணவுக்கு அதிகம் செலவாகும். இந்த நடைமுறைச் சிக்கலைப் போக்க என்னென்ன வழிகள் உண்டென்று பார்ப்போம். அதாவது, கார்ப்பரேட் நிபுணத்துவத்துடன் ஒரு கோசாலையை நடத்துவது எப்படி?

கிறிஸ்தவ இஸ்லாமிய சக்திகள் தமது நலன்களை முன்னெடுக்க உலகம் முழுவதும் அனுப்பிவைக்கும் பணத்தில் நடக்கும் அமைப்புகள், நிறுவனங்கள் எல்லாமே தன்னிறைவாகச் செயல்படுபவை அல்ல. முழுக்க முழுக்க மேற்கத்திய நாடுகளில் தமது மதத்தின் மீது நல்லெண்ணம் கொண்ட எளிய மனம் கொண்டவர்களாலும் தனது மதத்தைப் பரப்பியே தீரவேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொண்டவர்களாலும் தரப்படும் நிதிகளை வைத்தே அந்த நிறுவனங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. எனவே, ஒரு இந்து மதிப்பீட்டைப் பாதுகாக்க முன்வரும் இயக்கமும் அமைப்பும் மட்டும் பொருளாதாரரீதியாக தன்னிறைவு பெற்றதாக இருந்தாகவேண்டுமா என்ன என்று கேட்கலாம்தான். எனினும் ஓரளவுக்கு தனக்கான நிதியை அதுவே உற்பத்தி செய்துகொண்டுவிடுமென்றால் நல்லதுதானே என்ற வகையில் இதைப் பார்ப்போம்.

இந்துக்களில் பெரும்பாலானோர் மேலும் சரியாகச் சொல்வதென்றால், பொருளாதாரரீதியாகவும் அரசியல் அதிகாரரீதியாகவும் செல்வாக்குடன் இருக்கும் பிரிவினர் கோசாலைகளுக்குப் பெருமளவில் நன்கொடை கொடுக்கத் தயாராகவே இருப்பார்கள். எனவே, முதலீட்டுக்கும் ஆரம்பகட்டப் பராமரிப்புக்கும் பெரிய நிதிச் சிக்கல் எதுவும் இருக்காது.

அடுத்ததாக, கன்று குடித்ததுபோக எஞ்சும் பசுவின் பாலை வைத்து இனிப்புப் பொருட்களைத் தயாரிக்க முடியும். அதை விற்று ஓரளவுக்கு நிதியைச் சேகரிக்க முடியும். பசுவின் கழிவுகளைக்கொண்டு நல்ல உரங்கள் தயாரிக்கலாம். அந்த உரங்களைக் கொண்டு பசுவுக்குத் தேவையான புல், இழைதழைக்கான மரங்கள் வளர்ப்பதோடு காய்கனிவகைகளையும் வளர்க்கலாம். நகரங்களில் மேய்ச்சல் நிலத்துக்கு போதிய இட வசதி இருக்காது. ஆனால், ஷெல்ஃப் ஃபார்மிங், மாடித் தோட்டம் என பல வகைகளில் புல் வகைகளை வளர்ப்பது மிகவும் எளிது. அதோடு எல்லா வீடுகளிலும் தற்போது காய்கறிக் கழிவுகளை குப்பை வண்டியில் போடுகிறார்கள். அதைத் தனியாகச் சேகரித்து கோசாலைகளுக்குக் கொண்டுவரலாம். வீடுகளில் ஊசிப்போன, பூஞ்சை பிடித்த உணவு போன்றவற்றையும் சேர்த்துப் போட்டுவிடுவார்கள். அது பசுவுக்குக் கெடுதலைத் தரும். எனவே, வீடுகளில் இருந்து கிடைக்கும் இழைதழைகளை மிகுந்த கவனத்துடனே பயன்படுத்தவேண்டும்.


ஆனால், தற்போது காய்கறிச் சந்தைகளில் இலை தழைகள் எல்லாம் மண்ணோடு மண்ணாக மட்கவும் குப்பையில் போடப்படவும்தான் செய்கின்றன. அவற்றை முறையாகச் சேகரித்தால் கோசாலைப் பசுக்களுக்கான உணவு முழுவதுமாகவே கிடைத்துவிடும். 30-40 கடைகள் உள்ள சந்தையில் கிடைக்கும் இழை தழைகளை வைத்து 15-20 பசுக்களை நல்லமுறையில் பராமரித்துவிட முடியும். காய்கறிச் சந்தைகளைத் தூய்மையாக வைத்தது போலவும் ஆகும். தூய்மை இந்தியா திட்டத்தின் ஓர் அங்கமாகக் கூட கோசாலைப் பராமரிப்பை ஆக்கிக்கொள்ளலாம்.

ஒவ்வொரு ஊரிலும் ஒரு கோசாலையை அமைத்து அங்கேயே மரங்கள், புல் வகைகளை வளர்க்கலாம். பிறவகை காய்களையும் பயிரிடலாம். ஒரு பசுவை அங்கு அனுப்பும் ஏழைக்கு அந்தப் பசுவில் இருந்து கறக்கப்படும் பாலில் ஒரு பாதியை அவருக்கே கொடுத்துவிடலாம். அது ஈனும் கன்றுகள் வளர்ந்து தரும் பாலில் இருந்தும் அவருக்கு ஒரு பங்கு தரலாம். அந்த கோசாலையில் விளையும் காய்களை அவருக்கு சலுகை விலையில் கொடுத்து அவருடைய உணவுத்தேவையைப் பூர்த்தி செய்யலாம். அவர் மாமிசம் சாப்பிட்டே தீரவேண்டும் என்று விரும்பினால் தன் வீட்டில் கோழி, ஆடு, பன்றி போன்றவற்றை வளர்த்து அவை இறந்த பிறகு அவற்றைச் சாப்பிட்டுக் கொள்ளலாம். கோசாலையில் இருந்து கிடைக்கும் காய்களை தன் வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்குத் தீவனமாகவும் கொடுக்கலாம்.

டிராக்டர் பயன்பாடு அதிகரித்துவிட்டநிலையில் காளைகளின் தேவை இப்போது அறவே குறைந்துவிட்டிருக்கிறது. எனவே, காளைகளின் வரவு ஒருவகையில் சுமையானதே. கருக்கலைப்பு தவறுதான். என்றாலும் கொஞ்சம் மனதைக் கல்லாக்கிக்கொண்டு தேவையான அளவுக்கு மட்டுமே காளைகள் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளலாம். காளைகளில் இருந்து கிடைக்கும் சாணி, இறந்தபின் கிடைக்கும்  தோல் ஆகியவை காளையின் பராமரிப்புக்கு ஆகும் செலவில் பத்தில் இருந்து 20 சதவிகிதத்தை ஈட்டித்தருமென்றாலோ வீடுகளில் இருந்து கிடைக்கும் காய்கறிகளே காளைகளையும் நன்கு பராமரிக்கப் போதுமானதாக இருக்குமென்றாலோ காளைகளை இயல்பாக வரவேற்கலாம்.

அப்படியாக நகரில் எங்குமே பசுக்கள் அலைந்து திரியவிடாமல் அவற்றை கோசாலையில் வைத்துப் பராமரிக்கலாம். கோசாலைகளில் இறக்கும் பசுக்களை மின் மயான முறையில் எரியூட்டலாம். அல்லது இறக்கும் பசுவின் உடலை மட்கச் செய்து உரம் தயாரிக்கலாம். மாமிச உணவைத் தவிர்ப்பதே லட்சியம் என்றாலும் ஒரு தற்காலிக ஏற்பாடாக, தானாக இறக்கும் பசுக்களின் மாமிசத்தையும் உணவாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். அது முற்றிப்போய் சுவை குறைவாக இருக்குமென்றால் நன்கு அரைத்து அல்லது வேறு வேதி வினைகளுக்கு உட்படுத்தி அதை மிருதுவாக்கி உண்ணலாம். மாமிசம் உண்டு பழகியவர்கள், ஓர் உயிரைக் கொல்லாமல் பெறப்பட்ட மாமிசம் இது என்ற ஒற்றைக் காரணத்துக்காக, அதன் சுவையில் உள்ள குறைபாட்டைப் பொறுத்துக்கொள்ளலாம். தானாக இறந்த விலங்கின் மாமிசத்தைச் சாப்பிடும் ஒருவர் ஓர் எளிய உயிரைக் காப்பாற்றியவராகிறார். நாகரிகத்தின் படிகளில் ஓர் அடி கூடுதலாக எடுத்துவைத்தவராகிறார். நீங்கள் இறை நம்பிக்கை கொண்டவரென்றால் உங்களைப் படைத்த அதே தெய்வம்தான் அந்த எளிய விலங்குகளையும் படைத்திருக்கிறார். அந்தவகையில் அவை உங்களுடைய சகோதரர் போன்றவை. உடன் பிறப்பைக் கொன்று தின்னாதிருப்பீர்...

வேதாகமம்கூட  Thou shall not kill...  என்றுதான் சொல்லியிருக்கிறது; Thou shall not murder... என்று சொல்லவில்லை (அதையே அதே வேதாகமத்தைச் சொல்லிக்காட்டி செய்வது நடக்கிறதென்பது வேறு வேதனைக்கான விஷயம்).


பசுக்களை வளர்க்கும்போது அதன் சாணியைக் கையாள்வது, குளிப்பாட்டுவது போன்ற கடைநிலைப் பணிகள் செய்ய வேண்டியிருக்கும். இதற்கு நிச்சயம் தலித்களைப் பயன்படுத்தக்கூடாது. ஒரு மேல் சாதிக்காரர் சாணி அள்ளும் வேலைக்கு முன்வந்தால் நிச்சயம் அதை அனுமதிக்கலாம். ஆனால், தலித் சாதிகளில் இருக்கும் ஒருவர் அதைச் செய்ய முன்வந்தால் அனுமதிக்கக்கூடாது. அதற்கு பதிலாக அவர்களை அந்த கோசாலையின் பூசாரியாக நியமிக்கலாம். அல்லது சாணத்தைப் பயன்படுத்தி எரிவாயு, உரங்கள் தயாரிக்கும் பிளாண்ட் அமைத்தால் அதை நிர்வகிக்கும் பணியில் ஒரு தலித்தை நியமிக்கலாம். அதோடு, சாணியைக் கையால் தொடாமலேயே உரக்கிடங்குக்கோ எரிவாயுக் கிடங்குக்கோ கொண்டுசெல்ல நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவேண்டும். தலித் ஒருவருக்கு உயர் கல்வி மையத்தில் இடம் கொடுப்பது எவ்வளவு அவசியமோ அதேஅளவுக்கு இழிவான, கடினமான வேலைகளுக்கு நவீன தொழில்நுட்பத் தீர்வுகளைக் கண்டுசொல்லும்வகையில் உயர் கல்விப் பாடங்களை மாற்றி அமைப்பதும் அவசியமே. ஒரு தனிநபர் தான் மட்டும் பல படிகள் முன்னேறுவதைவிட சொந்த சமூகத்தை ஒரு சில அடியாவது முன்னேற்றுவது நல்லதல்லவா. அமெரிக்க ஐரோப்பிய எஜமானர்களுக்கு சேவைப் பணி செய்வதால் அந்நியச் செலவணி அதிகம் கிடைத்து நாட்டின் ஜி.டி.பி. உயர்ந்து பட்ஜெட் புத்தகங்களில் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பது உண்மைதான். ஆனால், சொந்த சகோதரனின் வாழ்க்கைத் தரம் நிஜ இந்தியாவில் உயர்வது அதைவிட முக்கியம். அறிவினான் ஆவதுண்டோ சக மனிதனின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை.


காதலர் தினத்துக்கு எதிர்ப்பு, ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு என்று செயல்படுபவர்கள் கோமாதா திவஸ், கங்கா திவஸ் என புதிய கொண்டாட்ட தினங்களை ஆரம்பிக்கலாம். கோமாதா தினத்தில் திருவள்ளுவர் போல் தாடியும் மஞ்சள் சால்வையும் அணிந்துகொண்டு குழந்தைகள் அனைவரும் ஒரு கட்டு புல் அல்லது ஒரு சீப்பு பழங்களை வாங்கிச் சென்று தமது கையால் பசுக்களுக்குக் கொடுக்கும் விழாவாக அதை ஆக்கலாம். அதோடு பிறந்தநாள், திருமண நாள் என எதுவாக இருந்தாலும் பசுவுக்கு உணவு கொடுப்பதையும் அங்கு ஒரு மரக்கன்று நடுவதையும் வழக்கமாகக் கொள்ளலாம்.

மிருகங்கள் அடைக்கப்பட்டிருக்கும் மிருக காட்சி சாலைக்குச் செல்லும் வழக்கத்தை மாற்றி பசுக்களைச் சென்று பார்த்து கன்றுகளுடன் விளையாட வழி செய்து சந்தோஷமான அனுபவமாக அதை மாற்றலாம். தந்தத்தில் செய்வதுபோல் பசுவின் எலும்பில் இருந்து கலைப் பொருட்கள் தயாரிக்கலாம். தானாக இறக்கும் பசுவின் தோலைப் பயன்படுத்தி பைகள், பர்ஸ்கள் செய்யலாம். இவையெல்லாம் ஒரு கோசாலையைத் தன்னிறைவுடன் நடத்தப் பெருமளவுக்கு உதவும். அந்த கோசாலையை அரசு வேலைகள் கிடைக்காத தலித்களைக்கொண்டு பராமரிக்கச் செய்வதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கான வசதியையும் ஏற்படுத்தித் தரலாம்.

அப்படியான இரு தரப்புக்கும் வெற்றி கிடைக்கும் வழியையே நாம் முன்னெடுக்கவேண்டும். ஏனென்றால், ‘தலித்’களும் ‘சாதி இந்து’க்களும் நட்புசாதிகளே... நீங்கள் ஓர் இந்துவாக இருந்தால் சண்டைபோடும் இருவரும் சகோதர சாதிகளே என்பதை நினைத்துப்பார்க்கவேண்டும். நீங்கள் மொழிப்பற்று கொண்டவராக இருந்தால் சண்டைபோடும் இருவரும் ஒரே மொழியைப் பேசுபவரே என்பதை நினைத்துப்பார்க்கவேண்டும். நீங்கள் உங்களை இந்தியராக உணர்பவர் என்றால் சண்டையிடும் இரு பிரிவினரும் இந்தியாவின் குடிமகன்களே என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். புத்தர் மீதோ வள்ளுவர் மீதோ மரியாதை கொண்டவர் என்றால் அவருடைய கொல்லாமையை முன்னெடுக்கும் வழிமுறையாக இதை ஆதரியுங்கள். அம்பேத்காரியவாதியாக உங்களை உணர்கிறீர்கள் என்றால் தலித் நலன் சார்ந்த திட்டமாக இதை முன்னெடுங்கள். உண்மைக்கு நெருக்கமாக வரமுடியாவிட்டாலும் உங்கள் அரசியலையாவது உருப்படியாகச் செய்யுங்கள்.

Thursday, 4 August 2016

கதம் கதம்!




ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலாவதாக பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு வில்லன், குணச்சித்திர நடிகன், நகைச்சுவை கதாநாயகன் என்ற நடித்த காலகட்டம்.

இரண்டாவதாக, எஸ்.பி.முத்துராமனால் ஆக்ஷன் ஹீராவாக வளர்த்தெடுக்கப்பட்ட காலகட்டம். உண்மையான ரஜினியை அடையாளம் கண்டுகொண்டது முத்துராமனே என்று சொல்லும் அளவுக்கு அந்த இரண்டாம் கட்டம் களைகட்டியது.

அடுத்ததாக, ஜெயலலிதாவுடன் மோதலில் ஈடுபட்டு எம்.ஜி.ஆர்.போல் அரசியல் பிரவேசம் செய்யப்போவதாக உலகை நம்பவைத்த காலகட்டம். அண்ணாமலையில் ஆரம்பித்து படையப்பா வரை இது தொடர்ந்தது.

நான்காவதாக, அரசியல் ஏய்ப்பு வசனங்களை மூட்டை கட்டிவைத்துவிட்டு பாபாவில் ஆரம்பித்து கபாலிவரை வெறும் சாகச நடிகராக வலம் வரும் காலகட்டம். அதீத ஹைப்களை உருவாக்கும் காலகட்டத்தில் வெளியான படங்கள் என்றும் இவற்றைச் சொல்லலாம். இந்தப் புத்தகத்தில் ரஜினியின் அந்த நான்காவது காலகட்டத்தில் வெளியான படங்களின் விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன.

ரஜினிகாந்தின் முதல் மூன்று கட்டப் படங்களில் அவரது பாணியிலான அவரது தரத்திலான உள்ளடக்கம் வலுவாக இருந்தது. அவை வணிக வெற்றிப் படங்களாகவும் இருந்தன. ஆனால், நான்காம் காலகட்டத்தில் வணிக வெற்றியும் மிகை எதிர்பார்ப்பும் தூண்டப் பட்டதற்கு இணையாக அவருடைய படங்களின் தரம் உயரவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவை குறைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் காலகட்டத்தில் எந்திரன், சிவாஜி என இரண்டு படங்கள் ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகியிருக்கின்றன. ‘பாபா’ சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்திலும் ‘லிங்கா’ கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்திலும் வெளிவந்திருக்கின்றன. ‘கபாலி’ பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது.

இவை நீங்கலாக இந்தக் காலகட்டத்தில் வந்த இன்னொரு படம் பி.வாசு இயக்கிய ‘சந்திரமுகி’. அந்தப் படத்தின் வெற்றிக்கு இரண்டு காரணங்கள். முதலாவதாக அது வெற்றிபெற்ற மலையாளப் படத்தின் ரீ மேக். இரண்டாவதாக, அதீத ஹைப்கள் இல்லாமல் ரஜினி மிகவும் அடக்கி வாசித்த படமும்கூட.
நான்காம் காலகட்டத்தில் வெளியான பாபா, லிங்கா, கபாலி ஆகியவற்றில் வாரி வாரி வழங்கும் வள்ளலாகவும் மக்கள் மீது அக்கறைகொண்டவராகவும் நடித்திருக்கிறார். ரஜினியின் நிஜ வாழ்க்கை அதில் இருந்து முற்றிலும் மாறானது.

எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் மக்கள் மீது அக்கறை கொண்டவராக நடித்ததோடு நிறுத்தவில்லை. மக்களுக்கு உண்மையா கவே பல நன்மைகள் செய்தும் வந்தார். அவருடை வீட்டுக்கு அவரைப் பார்க்க தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் ரசிகர்கள் வந்துபோன வண்ணம் இருப்பார்கள். அவர் வீட்டில் எப்போதும் ரசிகர்களுக்கு விருந்து நடந்துகொண்டே இருக்கும் என்பார்கள். நற்பெயர் உருவாக்க முயற்சிகள் (பிராண்ட் பில்டிங் எக்சர்சைஸஸ்) ஒருபக்கம் உண்டென்றாலும் ஆத்மார்த்தமான அக்கறையும் அவருக்கு மக்கள் மீது உண்டு.

சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இள வயதில் மிகவும் சிரமப் பட்டவர்களே. ‘நான் கஷ்டப்பட்டபோது இந்த சமூகம் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை; நான் எதற்கு இந்த சமூகத்துக்கு உதவ வேண்டும்’ என்பது சிவாஜியின் வாழ்க்கைப் பார்வை. ‘நான் வாழ்கையில் கஷ்டம் என்றால் என்ன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். நான் பட்ட கஷ்டத்தை இந்த சமூகம் படக்கூடாது என்று விரும்புகிறேன். அதற்கு என்னாலான உதவிகளைச் செய்கிறேன்’ என்பது எம்.ஜி.ஆரின் வாழ்க்கைப் பார்வை. இந்த வாழ்க்கைப் பார்வைகளே எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கும் சிவாஜியின் அரசியல் தோல்விக்குமான காரணம்.

எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வரவேண்டும் என்ற தெளிவான திட்டமிடலுடன் திரைப்படத்தை அதற்கான பயிற்சிக்களமாகப் பயன்படுத்திக்கொண்டார். அல்லது திரைப்படத்தின் மூலம்கிடைத்த செல்வாக்கைவைத்து அரசியல் கனவுகளை அழகாக நிறைவேற்றிக் கொண்டார். ரஜினிக்கு அந்த எண்ணம் இல்லை. ஆனால், மக்களுக்கு இன்னொரு எம்.ஜி.ஆர். தேவையாக இருந்தார். ரஜினிக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இருந்திராதநிலையில் அவர் தெளிவாக அதைத் தனது படங்களிலும் பொதுவெளியிலும் சொல்லிவிட்டு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், அவரோ ஆற்றில் ஒரு கால்... சேற்றில் ஒரு கால் என இருந்துவிட்டார். எனவே, மக்களுக்கு உதவுபவராக அவர் நடித்த நான்காம் காலகட்டத்துப் படங்கள் பெரும் ஏமாற்றத்தைத் தந்துவிட்டன.

மாறிவந்த காலகட்டத்துக்கு ஏற்பத் தன் படங்களில் சாகச அம்சங்களை எந்திரன், சிவாஜி, சந்திரமுகி ஆகிய மூன்று படங்களில் மாற்றிக்கொண்டிருந்தார். இவைதான் இந்தக் காலகட்டத்தில் ஓரளவுக்குப் பொருட்படுத்தத் தகுந்தவையாக வந்திருக்கின்றன. பாபா, லிங்கா, கபாலி ஆகிய மூன்றும் அவருடைய அரசியல் ஏய்ப்புகளின் சாயலையே கொண்டிருந்ததால் மக்கள் அவற்றுடன் ஒன்றமுடிய வில்லை.

இதில் ‘கபாலி’ ஒருவகையில் தலித் ஆதரவு என்ற போர்வை யில் சமூகத்தில் இதுவரை பேசப்படாத குரலைப் பேசியதாகவும் தலித் மக்களின் எழுச்சியை முரசறைந்து அறிவிப்பதாகவும் ஒருசாராரின் வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஊடகங்களில் அவர்களுடைய இருப்பு கணிசமாக இருப்பதால் அதுவே சமூகத்தின் குரலாக மாயத் தோற்றத்தைத் தந்தும் வருகிறது. ஒற்றை ஆளாக இருந்தாலும் மைக்குக்கு அருகில் பேசினால் ஊர் முழுக்கக் கேட்கும் அல்லவா?

இளையராஜா, தேவாவில் ஆரம்பித்து திரைப்படங்களில் குத்தாட்டப் பாடல்களின் ஆதிக்கம்வரை தலித் மதிப்பீடுகள் பொது சமூகத்தால் இயல்பாக உள்வாங்கப்பட்டுள்ளன. இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் தலித் படைப்புகள் கணிசமான வரவேற்பைப் பெற்றுள்ளன. பூமணி சாகித்ய அகாதமி விருதே பெற்றிருக்கிறார். அரசியல் களத்தில் தலித் தலைவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப அவர்களுடைய இடம் வலுவாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. அரசின் நலத்திட்டங்களை எடுத்துக்கொண்டால் தலித்களுக்குத்தான் பெரும்பாலானவற்றில் முன்னுரிமை தரப்பட்டுள்ளது.  ஏதோ தலித் களின் குரல் முதல் முறையாகப் பொதுவெளியில் பேச அனுமதி கிடைத்திருப்பதாக மாய பிம்பம் உருவாக்கப்படுகிறது. தலித் குரல் என்பது திருப்பி அடிப்போம் என்பது மட்டும்தானா? அதை எப்போது சொல்லமுடிகிறதோ அப்போதுதான் உண்மையான குரலில் பேச ஆரம்பித்ததாகச் சொல்வார்களா?

தலித் என்ற அடையாளத்துடன் எந்த திரைப்பட நாயகக் கதாபாத்திரமும் சித்திரிக்கப்பட்டதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக வேறு இரண்டு உண்மைகளும் பேசப்பட வேண்டும். தலித் விரோதமும் திரைப்படங்களில் சித்திரிக்கப்பட்ட தில்லை. லட்சியவாத சாதி நல்லிணக்க விஷயங்களே  சித்திரிக்கப் பட்டிருக்கின்றன. எம்.ஜி.ஆர். பண்ணையார்களை எதிர்த்துப் போராடியதெல்லாம் தலித் நலன் சார்ந்தும்தானே. அடுத்ததாக, முதல் ‘தலித்’ கதாநாயகன் பேசும் முதல் வசனம் என்ன: எங்களுடைய வளர்ச்சி பிடிக்கலைன்னா சாவுங்கடா..! இது தலித் அடிப்படை வாதியின் குரல்; தலித் மக்களின் குரல் அல்ல. அல்லாவுக்கு இணை வைக்கக்கூடாது என்று சொல்லும் வஹாபியிஸ்டின் குரல் எப்படி இஸ்லாமியர்களின் குரல் இல்லையோ அதுபோலவே இதுவும் தலித்களின் குரல் அல்ல.

ரஜினியைப் பொறுத்தவரையில் சாதி சார்ந்த அரசியல் முழக்கங்களை அவர் ஊக்குவித்ததே கிடையாது. தனது கதாபாத்திரம் எந்த சாதி அடையாளத்துடனும் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆரைப் போலவே மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்தவர். வணிக நோக்கில் அதுதான் சாமர்த்தியமாகவும் கருதப்படும். ஆனால், ரஞ்சித்தின் நிலை வேறு. அவர் சாதி அடையாளத்தை முன்வைத்ததால்தான் வெற்றியே பெற முடிந்திருக்கிறது. அப்படியாக இரு எதிரெதிர் துருவங்கள் இணைந்து கபாலி உருவாகியிருக்கிறது.

‘மெட்ராஸ்’ திரைப்படத்திலேயே ஈ.வெ.ரா.வின் புகைப்படம் ஏன் காட்டப்படவில்லை என்ற மிரட்டல் திராவிட ஆண்டைகளால் எழுப்பப்பட்டது. உண்மையான தலித் அரசியல்வாதி பிராமணர்களை விட தங்களை அதிக அளவில் ஒடுக்கிவருவது இடைநிலைச் சாதிகளே என்பதையும் ஈ.வே.ரா. அந்த இடைநிலை சாதிகளின் தலைவர் மட்டுமே என்பதையும் உணர்ந்தவராகவும் அதையே தனது அரசியலாகக் கொண்டவராகவும் இருப்பார். ஆனால், தமிழகத்தில் தலித் அரசியல் என்பது ஆரம்பத்தில் இருந்தே அப்படியாக இடைநிலை சாதியினரால் ஓரங்கட்டப்பட்டுவந்ததுதான். அயோத்திதாச பண்டிதர், எம்.சி.ராஜா என ஆரம்பித்த தலித் அரசியல் போராட்டமானது தெலுங்கு, மலையாள, கன்னட அரசியல் தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கட்சியால் ஓரங்கட்டப்பட்டது. தமிழ் அடையாளம் பின்னுக்குத் தள்ளப்பட்டு போலியான திராவிட அடையாளம் முன்னெடுக்கப்பட்டதுபோலவே, தலித் எழுச்சி ஓரங்கட்டப்பட்டு உங்களுக்கும் நாங்களே பேசுகிறோமே என்று சொல்லி இடைநிலை சாதியினரே அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

பின்னி ஆலைப் போராட்டம், முதுகுளத்தூர் கலவரம் என ஆரம்பித்து நேற்றைய உடுமலைப் பேட்டை சங்கர் படுகொலைவரை தலித்கள் மீதான அனைத்து வன்முறைகளும் இதே இடைநிலை சாதிகளாலேயே முன்னெடுக்கப்பட்டன. இரட்டைக்குவளையில் ஆரம்பித்து தலித் பிணத்தை இடைநிலைச் சாதியினரின் தெருவழியாக எடுத்துச் செல்லக்கூடாது என்பதுவரை அனைத்து ஒடுக்குமுறைகளும் இடைநிலை சாதிகளாலேயே செய்யப்பட்டன. எனவே, தலித்களின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒரு நபர் இடைநிலை சாதிகளை எதிர்ப்பதையே தன் முதல் இலக்காகக் கொண்டிருப்பார். ஈ.வெ.ராவை மறுதலிப்பவராகவே இருப்பார். பா.இரஞ்சித்தும் அப்படியான புரிதல்கொண்டவராகவே தன் திரையுலகப் பயணத்தை ஆரம்பித்தார்.

ஆனால், ‘மெட்ராஸ்’ திரைப்படத்தையொட்டி திராவிட ஆண்டைகள் தெரிவித்த எதிர்ப்பைக்கண்டு பயந்து அந்தப் படத்தில் ஈ.வெ.ரா. இடம்பெற்ற காட்சிகள் இருந்தன என்றும் எப்படியோ அது வெட்டப்பட்டுவிட்டது என்று சொன்னார். தன் அடுத்த திரைப் படத்தில் ஈ.வெ.ராவின் திரு உருவத்தைக் கட்டாயம் சுவரில் தொங்க விடுவதாக உத்தரவாதமும் கொடுத்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவருடைய அடுத்த படம் ரஜினியுடன் செய்யவேண்டிவந்துவிட்டது. ரஜினி தன் படத்தில் ஈ.வெ.ராவின் நிழல்கூடத் தென்படக்கூடாது என்ற தெளிவு கொண்டவர். தாணுவின் அரசியல் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. ஆனால், ரஜினியினாலே இந்தப் படத்தில் ஈ.வெ.ராவின் புகைப்படம் இடம்பெறவில்லை.

ரஜினி அதோடு நிறுத்தவில்லை. கபாலி கதாபாத்திரம் தலித் என்று நம்ப விரும்புபவர்களுக்கு தலித்தாகவும் இல்லையென்று நம்ப விரும்புபவர்களுக்கு வேறு சாதியாகவும் தோற்ற மயக்கம் தரும் வகையில் உருவாக்கும்படியே கட்டளையிட்டிருக்கிறார். அதனால் தான் கோழிக்கறி, ஆட்டுக்கறி என்ற வசனங்கள் இடம்பெற்றிருக் கின்றன. கோட் சூட் போட்டா என்ன தப்பு என்பதை மலேசியத் தமிழன் ஒருவன் சீனன் ஒருவனைப் பார்த்துக் கேட்பதாகவே முன்வைத்திருக்கிறார். மலேசியத் தமிழர்களை கஞ்சா, கடத்தல், கந்துவட்டி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலாகவே சித்திரித்திருக்கிறார். செக்கச்செவேலென மனதால் தொட்டாலே சிவந்துபோகும் ‘ஆரிய’ நிறத்து நாயகிகளையே தேர்ந்தெடுத்திருக்கிறார்.

தமிழ்நேசன்கூட மலேசிய இந்தியர்களுக்காகப் போராடுபவரா கவும் அதுவும் கூலி உயர்வு கேட்டுப் போராடும் கம்யூனிஸ்டாகவே இடம் பெற்றிருக்கிறார். இவையெல்லாம் தலித் போராளிகள் முன்வைக்க விரும்பும் முழக்கங்களே அல்ல. அவை முழுக்க முழுக்க ரஜினிக்காகச் செய்யப்பட்டவையே. ரஜினிக்கும் அந்த அடையாளங் களில் அப்படியொன்றும் ஆர்வமோ புரிதலோ கிடையாது என்றாலும்   கபாலி பாத்திரம் மீது தலித் முத்திரை விழுந்துவிடக்கூடாது என்ற நோக்கில் அவர் சொன்னவையே.
ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் ரஜினியின் ஒரு படத்தின் மூலம் இத்தனை சாதி அரசியல் உரையாடல்கள் உருவானது இதுவே முதல் தடவை. தமிழகத்தை அவர் காப்பாற்றவேண்டுமென்ற அரசியல் முழக்கங்கள் இதற்கு முன் உருவாகி அவை சாயம் வெளுத்துப்போன நிலையில் இப்போது அவர் மூலம் இரஞ்சித் தலித் மீட்சியை முன்னெடுத்திருப்பதாகப் பெருங்கதையாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான ‘பாராட்டு’ முழுவதும் இரஞ்சித்துக்கே போகவேண்டும்.

அப்படியாக ரஜினியின் இந்த நான்காம் காலகட்டம் அவருடைய திரையுலகப் பயணத்தில் முக்கியமான கட்டமாக ஆகிவிட்டிருக்கிறது. ரஜினி ரசிகர்களுக்கு அவருடைய முந்தைய படங்கள் தந்த மகிழ்ச்சி இதில் கிடைக்கவில்லையென்றாலும் ரஜினி என்ற பிம்பம் மேலும் மேலும் செல்வாக்கு பெற்ற காலகட்டமாகவே  உருவாகியிருக்கிறது. இந்த வணிக சாமர்த்தியமும் வெற்றிகளும் அவருடைய அரசியல் பார்வையிலும் திரைப்பட தரத்திலும் வெளிப்பட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்ற ஏக்கத்தை மட்டும் தவிர்க்க முடியவில்லை. முடிஞ்சது முடிஞ்சே போச்சு...
கதம் கதம்!


- B.R..மகாதேவன்

இதேப்டி இருக்கு - முன்னுரையில் இருந்து...