Tuesday, 16 August 2016

குஜராத் ‘தலித் எழுச்சி’யும் கார்ப்பரேட் கோசாலைகளும்


குஜராத்தில் இருக்கும் யுனா - பகுதியில் தலித்களில் ஒரு பிரிவினர் மாபெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். மாட்டுத் தோல் நீக்கும் தொழிலில் இனியும் ஈடுபடமாட்டோம்... எங்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் தரவேண்டும் என்ற கோரிக்கைகளுடன் போராடியிருக்கிறார்கள். ரோஹித் வெமுலாவின் தாய், ஜே.என்.யு. கன்னையா குமார் எனப் பலரும் பங்குபெற்ற போராட்டம் ஆகஸ்ட் 15 அன்று நடந்திருக்கிறது. முஸ்லிம் தலித் பாய் பாய் என்ற முழக்கங்களுடன் பெருந்திரளான முஸ்லிம்களும் இந்த தலித் பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்தில் சில தலித்கள் இறந்த மாட்டின் தோலை உரித்தற்காகத் தாக்கப்பட்டத்தைத் தொடர்ந்து குஜராத் ‘தலித் எழுச்சி’ ஆரம்பித்திருக்கிறது.



இந்த தலித் - முஸ்லிம் கூட்டு பல வகைகளில் அபாயகரமானது. உண்மையில் இது தலித் - முஸ்லிம் கூட்டு அல்ல. இஸ்லாமிய தீவிரவாதம் தலித் அடிப்படைவாதத்தைத் தனது முகமூடியாகப் பயன்படுத்துகிறது. தலித் அடிப்படைவாதம் எளிய தலித் முகத்தைத் தனது முகமூடியைப் பயன்படுத்திக்கொள்கிறது. இந்து மத அழிப்பை தலித் அடிப்படைவதிகள் முன்வைக்கிறார்கள். இந்திய உடைப்பை இஸ்லாமிய தீவிரவாதிகள் முன்வைக்கிறார்கள். இந்து-இந்திய அழிப்பை எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என்ற அரசியல் கணக்குகளின்படி இஸ்லாமிய, தலித் அடிப்படைவாதிகள் முன்னெடுக்கிறார்கள்.

உண்மையில் தலித் அடிப்படைவாதம் என்பது இதுவரை கிறிஸ்தவ மிஷநரிகளால்தான் இதுவரை பட்டை தீட்டப்பட்டுவந்தது. இன்று இஸ்லாமிய தீவிரவாதத்துடன் கைகோக்க அனுப்பிவைத்திருக்கிறது. ஆக, இந்து இந்திய சக்திகளும் தலித் இஸ்லாமிய சக்திகளும் தமக்குள் சண்டையிட்டு மடிந்தால் தேவனின் சாம்ராஜ்ஜியம் இந்தியாவில் மலர அது வழிவகுக்கும் என்ற தொலைநோக்குப் பார்வை இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். எது எப்படியானாலும் இந்த அபாயகரமான முன்னெடுப்புகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும்.  ஆனால், தலித்-இஸ்லாமிய அடிப்படைவாதக் கூட்டை எதிர்க்கும் நோக்கில் மேல்சாதி - இந்து/இந்தியத் தேசிய அடிப்படைவாதக் கூட்டு உருவாகிவிடக்கூடாது.. தீயை அணைக்க நீரைப் பயன்படுத்தவேண்டும். அதைவிட பலமான தீயையோ காற்றையோ பயன்படுத்தினால் அது தீயை அணைக்காது. மேலும் பரவவே செய்யும்.

இந்தப் பிரச்னையின் அடிநாதமான பசு அரசியலில் இருந்து ஆரம்பிப்போம். உலகில் விவசாயமும் மேய்ச்சலும் எல்லா இடங்களிலும் பிரதான தொழிலாக இருந்திருக்கின்றன என்றாலும் இந்தியாவைத்தவிர பசுக்கள் எங்குமே புனிதமாக மதிக்கப்பட்டிருக்கவில்லை. இந்தியாவில் பசு மட்டுமல்ல நதிகள், மரங்கள், நாக ராஜா, கஜமுகன், வானரராயன், பைரவர் போன்ற விலங்குகள் எனப் பலவும் புனிதமாக மதிக்கப்பட்டிருக்கின்றன. இந்துக்களுக்கு இன்பச்சுற்றுலாகூட கோவில்களுக்கான புனித யாத்திரைதான். இப்போதும் இந்த மதிப்பீடுகள் பெருமளவுக்கு மாறிவிடவில்லை. ஆனால், இந்த புனிதம் என்பது வெறும் சடங்காக சாரம் இழந்ததாக ஆகிவருகிறது. எல்லா நதியையும் கங்கையாக மதித்து வணங்கும் அதே இந்தியாவில் அந்த கங்கையையே அசுத்தமாக்கிவிட்டிருக்கிறோம். புண்ணிய க்ஷேத்ரங்கள் எல்லாம் குப்பைக்காடாக, மல மேடாக ஆகிக்கொண்டிருகின்றன.

இந்தச் சீரழிவுகள் சுமார் ஐம்பது ஆண்டுகளாக நடந்தவையே. அதற்கு முக்கிய காரணம் நகர்ப்புற, நவீன வாழ்க்கை. அது மரபில் இருந்து நம்மைப் பிரித்துவிட்டதாலும் நவீன வாழ்க்கையின் தொழில்நுட்பங்கள், விஞ்ஞான அணுகுமுறை, குடிமை மனோபாவம் நமக்கு இன்னும் முழுவதுமாக கிடைக்கப் பெறாததாலும் இந்த வருந்தத்தக்க நிலை உருவாகிவிட்டிருக்கிறது. அதோடு நமது மக்கள் தொகை மிக மிக அதிகம் என்பதால் நகரங்களும் சுற்றுலாமையங்களும் அந்தந்த நகராட்சி அமைப்புகளால் நிர்வகிக்க முடியாத அளவுக்கு அசுத்தமாகிவருகின்றன. இப்போது கங்கை ஓரளவுக்கு சீரமைக்கப்பட்டுவிட்டிருக்கிறது. எனினும் யமுனை, கூவம் என இன்னும் சரி செய்யப்படவேண்டிய நதிகள் ஏராளம்.



இந்து கோவில்களில் இருந்து கிடக்கும் வருவாய் அந்தந்த கோவிலையும் அதன் சுற்றுவட்டாரங்களையும் தூய்மையாக வைக்கப் பயன்படுத்தப்படவேண்டும். அன்னதானம் என்பது தூய்மைப் பணியை சிரமதானமாகச் செய்து முடிப்பவர்களுக்கு (முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு விதிவிலக்கு) தரப்படும் சம்பளம் என்று சிறிது மாற்றி அமைக்கப்படவேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்பது ஆக்கப்பூர்வமான தூய்மை/சுகாதாரத் திட்டமாக மாற்றப்படவேண்டும். சுற்றுலா மையங்கள், கோவில்கள், குளங்கள், விழாக்கள் ஆகியவற்றை தூய்மையாகப் பராமரிக்க இந்த வேலை நாட்களையும் நபர்களையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இன்று இந்தத் திட்டத்துக்கு செலவிடப்படும் கோடிகளை ஒப்பிடும்போது அதன் மூலம் உருவாகும் நன்மை என்பது மிக மிகக் குறைவு. ஒரு சுற்றுலா மையத்தை தூய்மையாகப் பராமரிக்கிறீர்களென்றால் அந்த மையத்தின் வருவாயைப் பெருக்குகிறீர்கள் என்று அர்த்தம். அதன் வருமானம் அதிகரித்தால் பணியாளர்களுக்கு அதிக சம்பளம் கிடைத்து அவர்கள் வாழ்க்கைத் தரம் உயரும். இது நேர்மையான சக்கரச் சுழற்சி.



முன்பு கிராமப் பஞ்சாயத்துகள் துடிப்புடன் இருந்ததால் ஒவ்வொரு கிராமமும் அதன் கோவில்களும் குளங்களும் இன்னபிற அம்சங்களும் அவர்களால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டன. இன்று அதிகாரம் எங்கோ தொலைவில் தில்லியிலும் மாநகத் தலைமை மையங்களிலும் குவிந்து கிடக்கிறது. அதிகாரவர்க்கத்தின் ஊழல், அலட்சியம் ஆகியவற்றால் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட மக்களின் ஒருவித கையாலாகாத தன்மையாலும் விலகலாலும் நிலைமை மோசமாகிவருகிறது. மையத்தில் வலுவான அரசு உருவாவதென்பது நிதி/வரிச் சேகரிப்பு மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பின் மூலமாக பல பிரமாண்டமான, நல்ல விஷயங்கள் நடந்தேற வழி செய்திருக்கும் அதே நேரத்தில் இப்படியான விடுபடல்களும் போதாமைகளும் அதில் இருக்கத்தான் செய்கின்றன.

நதிச் சீரமைப்பு போலவே இந்திய சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு அம்சம் பசு பாதுகாப்பு.  மாமிசம் சாப்பிடுவது தவறென்றால் எல்லா உயிர்கள் மீதுமே கரிசனம் இருக்கவேண்டும். ஏன் பசுவுக்கு மட்டும் தனி முக்கியத்துவம் என்ற கேள்வி கேட்கப்படுவதுண்டு. உண்மையில் கொல்லாமையை முன்வைக்கும் புத்தரும் வள்ளுவரும் எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்றுதான் சொல்லவும் செய்கிறார்கள். பிராமணர்களும் அதையேதான் சொல்கிறார்கள். ஆனால், பசுவுக்கு மட்டும் பிராமணர்கள் கூடுதல் முக்கியத்துவம் ஏன் தருகிறார்களென்றால் அது ஒரு தாயைப்போல் பால் தருகிறது. அதனால் அது தாய்க்கு சமமாக மதிக்கப்பட்டு அதை கொல்லக்கூடாது என்று புனிதப்படுத்தப்பட்டது.



பசு அந்தப் பாலை நிச்சயம் விரும்பித் தந்திருக்கவில்லை. மனிதர் திருடித்தான் எடுத்துக்கொள்கிறார் என்றாலும் ஒரு குறைந்தபட்ச நன்றி உணர்வாக அதைக் கொல்லக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள் பிராமணர்கள். அதை ஒட்டுமொத்த சமூகம் ஏற்றுக்கொள்ளத்தான் செய்திருக்கிறது. கோவில் விழாக்களில் கோழி, ஆடு, பன்றி பலி கொடுக்கும் தலித்கள்கூட பசுவைப் பலி கொடுத்து எந்த விழாவையும் கொண்டாடுவதில்லை. அரசியல் மூளைச் சலவை செய்யப்படாத தலித்களுக்கு பசு மாமிசத்தை உண்பது குறித்து குற்ற உணர்ச்சி இருக்கவே செய்கிறது.  இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து நாங்கள் வித்தியாசமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் இருக்கும் தமிழகத்தில் அறுவடைப் பொங்கல் திருநாளில் பசுவை வணங்கும் பாரம்பரியம்தான் உண்டு. இந்தியாவில் வடகிழக்கு மற்றும் கேரள, வங்காளம் தவிர பிற மாநிலங்கள் அனைத்திலுமே பி.ஜே.பி.க்கு முன்பிருந்தே பசு கொலைக்கு எதிரான சட்டங்கள் வலுவாக உண்டு.


பவுத்தம்தான் முதலில் கொல்லாமையை முன்வைத்தது. வேதகாலத்தில் பிராமணர்கள் பசுவை  உண்டு வந்திருக்கிறார்கள் என்று பலவீனமான உதாரணங்களைக் கொண்டுவந்து நிறுத்துபவர்கள் குறைந்தபட்சம் புத்தர் சொன்ன பிறகாவது உயிர் கொலையை அவர்கள் விட்டுவிட்டார்களே. அதுபோல் ஏன் பிறர் நிறுத்தவில்லை என்ற கேள்விக்கு என்ன பதில்தான் சொல்லிவிடமுடியும். பிராமணர்கள் பசுவைப் புனிதம் என்று சொல்வதால் அதை மறுத்தே ஆகவேண்டும் என்று சொல்பவர்கள் கொல்லாமையை முன்வைத்த புத்தரையும் வள்ளுவரையும் மிதித்தபடியேதான் தமது அரசியலை முன்னெடுக்கிறார்கள்.

உண்மையில் பிராமணர்கள் பசுவை புனிதம் என்று சொல்வதை எதிர்ப்பதென்றால் பசு மட்டுமல்ல கோழியும் ஆடும் பன்றியுமே கூடப் புனிதமானதுதான் என்றுதான் வள்ளுவரையும் புத்தரையும் மதிப்பவர்கள் சொல்லவேண்டும். ஆனால், நேர்மாறாக பசுவுமே புனிதமல்ல என்று சொல்வதையே தங்கள் அரசியலாக முன்வைக்கிறார்கள். இது முழுக்கவே தவறு.



மேலும் புத்தர் முன்வைத்த கொல்லாமையை பவுத்த தேசங்கள் எதுவுமே பின்பற்றவில்லை. இந்து மதத் தாக்கம் மிகுதியாக இருக்கும் இந்தியாவில்தான் பசுக் கொலை மிகவும் குறைவாக இருக்கிறது. அதோடு பசு பாதுகாப்பு என்பதை பிராமணர்களுடைய மதிப்பீடு என்பதோடு நிறுத்தாமல் அதை ஆர்.எஸ்.எஸின் அரசியல் கொள்கையாகப் பார்க்கும் அசட்டுத்தனமும் இருக்கிறது. உண்மையில் அது இடைநிலை சாதிகளின் மதிப்பீடு. ஆர்.எஸ்.எஸ். சொல்லும் எல்லாவற்றையும் எதிர்ப்பதே முற்போக்கு என்று செயல்படுபவர்கள் பசு விஷயத்தில்(லும்) உண்மையில் இடைநிலை சாதிகளின் மதிப்பீடுகளோடுதான் மோதுகிறார்கள். இடைநிலை சாதிகளின் முக்கியமான கோட்டையான திராவிடத் தமிழகத்திலும் மாட்டுக்கறி மகிமை பற்றி எந்தவொரு திராவிடத் தலைவரும் பெரிய அளவில் இதுவரை பேசியதில்லை. அது இடைநிலை சாதிகளிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திவிடும் என்ற அச்சமே காரணம்.

மேலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் துணையோடு பசுக் கொலையை முன்னெடுப்பது மிகவும் அபாயகரமான செயல். இஸ்லாமியத் தீவிரவாதம் அல்லாவின் ராஜ்ஜியத்தைத் தவிர வேறு எதையும் ஏற்காது. அதற்கான எளிய, அண்மை உதாரணம் காஷ்மீர். உங்களுக்கு சாலை வசதி செய்து தர இந்தியா வேண்டும்... மின்சாரம் எடுத்துத்தர இந்தியா வேண்டும்... கல்வி தர இந்தியா வேண்டும்... ஆனால், நீங்கள் மட்டும் இந்தியாவுடன் முழுவதுமாக இணையமாட்டீர்களா என்று அம்பேத்கர் 1950களிலேயே கேட்டது எவ்வளவு தீர்கக் தரிசனமிக்க வார்த்தைகள். இன்று இருந்திருந்தால் உங்களை வெள்ளங்கள், பூகம்பங்களில் இருந்து காப்பாற்ற இந்திய ராணுவம் வேண்டும்... உங்களுக்கு கோடிக்கணக்கில் நிதிகளைக் கொட்டிக்கொடுக்க இந்தியா வேண்டும்... ஆனால் நீங்கள் இந்தியக் கொடியை எரிப்பீர்களா... என்று கேட்டிருப்பார். 

இந்தியாவின் எந்தவொரு மாநிலத்தில் இருப்பவரையும்விட ஒரு தனி நபருக்காக மத்திய அரசு செலவிடும் தொகை காஷ்மீருக்குத்தான் மிக மிக அதிகம். அப்படியான நிலையிலும் இந்தியாவே வெளியேறு என்று அவர்கள் சொல்வதன் ஒரே காரணம் இஸ்லாமிய அரசைத்தவிர வேறு எதையும் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஏற்காது என்பதுதான். அப்படியான ஓர் அழிவு சக்தியுடன் தலித்கள் கைகோர்ப்பது தன் வீட்டுக்குத் தானே குண்டு வைத்துக்கொள்வதற்கு சமம். கிறிஸ்தவத்துடன் கை கோர்ப்பதும் தலித்களுக்கு அடையாள அழிப்பில் ஆரம்பித்து பல்வேறு பின்னடைவுகளையே தரும். நவீன காலகட்டத்துக்கு ஏற்ப தன்னைச் சீரமைத்துக்கொண்டுவரும் இந்து சமூகமே தலித்களின் இயல்பான விடுதலைக்கு வழிவகுத்துத் தரமுடியும். அதற்கு பசு விஷயத்தில் இடைநிலை சாதிகளின் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பதே சரி. முற்போக்கு மற்றும் மதவாத ஆசான்கள் ஆர்.எஸ்.எஸை எதிர்க்கும் வழி என்று சொல்லித் தூண்டிவிடும்போது, உண்மையில் அது இடைநிலை சாதியுடனான மோதலையே பெரிதாக்குகின்றன... எனவே, உங்கள் கரிசனத்துக்கு நன்றி என்று சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்புவதே தலித் அடிப்படைவாதிகளுக்கு நல்லது.

பசு அரசியல் பற்றி அதன் கலாசார அம்சங்களை விலக்கிவிட்டுப் பார்த்தால் இன்னொரு உண்மை புரியும். ஜே.சி.குமரப்பா பசு சார்ந்த பொருளாதாரத்தை மனித அமைதி வாழ்க்கைக்கான பொருளாதாரமாகப் பார்க்கிறார். பசு, காளை ஆகியவற்றைப் பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டுவந்தபோது மனிதன் வன்முறை குறைந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறான். கரியைக் கண்டுபிடித்த பிறகு உற்பத்தியும் போக்குவரத்து வசதிகளும் பெருகின. அது சந்தைக்கான போட்டியையும் வன்முறையையும் உருவாக்கியது. பெட்ரோல் கண்டுபிடிப்பு அந்தப் போட்டியை மேலும் வன்முறையானதாக்கியது.

மேலும் பசு பொருளாதார காலகட்டத்தில் நாம் பயன்படுத்திய சக்தி மூலங்கள் நிரந்தரமானவை. கரி, பெட்ரோல் எல்லாம் தற்காலிகமானவை. எடுக்க எடுக்கக் குறைபவை.  எனவே தன்னிறைவான எளிய பசு பொருளாதாரமே நிம்மதியான மனித வாழ்க்கைக்கு உகந்தது என்கிறார் இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் புறக்கணிக்கப்பட்ட பொருளாதார மேதையான ஜே.சி.குமரப்பா. ஆனால், அந்தப் பசு பொருளாதார காலகட்டத்தில் தலித் மக்களின் நிலை மிகவும் வேதனை நிறைந்ததாக இருந்தது என்று கருதுபவர்கள் புதிய கரி-பெட்ரோல் காலகட்ட வாழ்க்கையை தலித் விடுதலைக்கான காலகட்டமாகச் சொல்லமுடியாது. சாதிய இழிவைவிட வர்க்க இழிவு மேலானதுதான் என்றாலும் இரண்டுவகை இழிவும் இல்லாததைத்தானே உண்மையான மீட்சியாகச் சொல்லமுடியும்.

பசு விஷயத்தில் இரண்டு பிரச்னைகள் முன்னால் இருக்கின்றன... ஒன்று பசுவை உண்ணுதல், இரண்டாவது இறக்கும் பசுக்களை அப்புறப்படுத்துதல். இந்த இரண்டுக்குமே ஒரே எளிய தீர்வு கோசாலைகளை அமைத்து பசுக்களைப் பராமரித்தலே.


நவீன மனம் கோசாலைகளுக்குப் பதிலாக கோ-கொலைசாலைகளை அதிகம் திறக்கவேண்டும் என்று சொல்லக்கூடும். பல நூற்றாண்டுகளாக புனிதமாக மதிக்கப்பட்டுவரும் நம்பிக்கை அப்படி எளிதில் அழிக்கப்பட்டுவிடவேண்டாம். பொதுவாக நம் முன் ஒரு பிரச்னை வரும்போது இரு தரப்புக்கும் வெற்றி கிடைக்கும் (Win-Win Solution) வழிமுறைகளை முன்னெடுப்பதே புத்திசாலித்தனம். பாம்பும் சாகணும்... தடியும் உடையக்கூடாது.

விவசாயம், மேய்ச்சல் ஆகியவற்றில் நேரடியாக ஈடுபடாத நாவிதர், வண்ணார், வெட்டியார், தோட்டி, சக்கிலியர் போன்ற தலித் சாதிகளே மாட்டுக்கறியை அதிகமும் உண்டுவந்திருக்கிறார்கள். விவசாயத்தோடு தொடர்புடைய பள்ளர்கள் போல் பலர் தலித்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும் மாட்டுக்கறி உண்பதில்லை. இஸ்லாம், கிறிஸ்தவத்துக்கு மாறிய இந்துக்கள் மாட்டுக்கறி உண்பதுண்டு.

மாட்டு வகைகளின் இறைச்சி விலை குறைவாக இருப்பதால் வறுமையிலும் சாதி அடுக்கின் கடைசிப் படிகளிலும் இருப்பவர்களுக்கு மாட்டு இறைச்சி எளிதில் வாங்க முடிந்த உணவாக இருக்கிறது. எனவே, மாட்டுக்கறி கூடாது என்று சொல்வதென்றால், அதைவிடக் குறைந்த விலையில் பிற மாமிசங்கள் கிடைக்க வழி செய்யவேண்டும் என்று சிலர் சொல்வதுண்டு.

சைவ உணவா... அசைவ உணவா எது சிறந்தது என்று கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்க்கலாம். மனிதருக்கு இறைச்சியைக் குத்திக் கிழிக்க கூர் நகங்களும் கோரைப் பல்லும் கிடையாது. மாமிசத்தைப் பச்சையாகச் சாப்பிட முடியாது போன்றவையெல்லாம் மனிதனை தாவர பட்சிணியாகவே இயற்கை படைத்திருக்கிறது என்பதையே உறுதிப்படுத்துகின்றன. ஆதி மனிதன் வேட்டையாடுவதற்கு முன்பாக காய் கனிகளைப் பொறுக்கித் தின்பவனாகவே பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறான். தீ கண்டுபிடிக்கப்பட்ட பிறகே மாமிசத்துக்கு நகர்ந்திருக்கிறான்.

இவையெல்லாவற்றையும்விட கேவலம் ருசிக்காக ஓர் உயிரைக் கொல்லவேண்டுமா. அதுவும் எளிய விலங்கு ஒன்றைக் கொல்லவேண்டுமா என்ற கேள்வியை ஒருவர் கேட்டுப் பார்த்தாலே போதும். மாமிசத்தைச் சாப்பிட்டே தீருவோம் என்று சொல்லும் போராளிகள் அனைவருமே தம்மை எளிய மக்களின் பிரதிநிதிகளாகவே சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களைவிட எளிய விலங்குகளைக் கொல்வதை நியாயம் என்றும் சொல்கிறார்கள். இது கொடூரமான முரண். உண்மையில் அவர்கள் சிங்கம், புலி என மிருகங்களில் ஆதிக்கசக்திகளான இருக்கும் வன் மிருகங்களைத்தான் கொன்று தின்னவேண்டும். பசுவையும் கோழியையும் ஆட்டையும் தமது அரசியல் சார்ந்து காப்பாற்றவே வேண்டும். ஆனால், பிராமணர்கள் சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே அசைவ உணவை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.



இதில் இன்னொரு விஷயம்... மாமிசத்துக்கு தனியான, விசேஷமான சுவையே கிடையாது. அதில் சேர்க்கப்படும் மிளகாய், தேங்காய், எண்ணெய், பிற மசாலாக்கள் இவையே மாமிசத்துக்கு சுவையைத் தருகின்றன. எனவே, சுவைக்கு அடிமையான ஒருவர் மாமிசத்தை வெளியே எடுத்து வீசிவிட்டு காய்களையோ மீல்மேக்கர்களையோ அந்த மசாலாவுடன் சேர்த்துச் சாப்பிட்டாலும் நல்ல ருசி கிடைக்கத்தான் செய்யும். எனவே, ஓர் எளிய உயிரைக் கொன்றுதான் மனிதன் தன் நாக்கைத் திருப்திப்படுத்தவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

ஒரு மனிதனுக்கு, தான் எதை உண்ணவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுதந்தரம் உண்டு என்று சொல்பவர்கள் நம்மைப் போலவே இந்த உலகில் வாழ உரிமையுடைய இன்னொரு எளிய உயிரின் சுதந்தரத்தைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கவேண்டும். மனிதரை மட்டுமே மையமாக வைத்து சிந்திக்கும் அராஜகம் கூடாது. மேல் சாதியினரும் மேல் வர்க்கத்தினரும் தம்மை மட்டுமே மையமாக வைத்து சிந்திக்கும் அராஜகத்துக்குச் சற்றும் குறையாதது அது.

உண்ணும் உணவை வைத்து உயர்வு தாழ்வு கற்பிக்கும் பிராமண மனோபாவம் தவறென்று சொல்வதுண்டு. ஆனால், அணில், காகம் போன்றவற்றை உண்ணும் நரிக்குறவர் போன்ற நாடோடி ஜாதியினரையும் பன்றிக் கறி சாப்பிடும் தலித்களையும் மாட்டுக்கறி உண்ணும் தலித் பிரிவினர் அந்தக் காரணத்துக்காகவே  இழிவாகப் பார்க்கிறார்கள். ஆடு, கோழி சாப்பிடும் சூத்திரர்கள் பிற வகைக் கறி சாப்பிடுபவர்களை அதைச் சொல்லியே இழிவாகப் பார்க்கிறார்கள் என்ற உண்மையை யோசித்துப் பார்த்தால் உணவின் அடிப்படையிலான சமூக அந்தஸ்து வெறும் பிராமணிய உருவாக்கம் மட்டுமே அல்ல என்ற முடிவுக்கே வருவார்கள்.

அடுத்ததாக, இறந்த பசுக்களை அப்புறப்படுத்துதல்...
இன்று நகர்ப்புறங்கள் மற்றும் புறநகர்களில் பசு வளர்ப்பவர்கள் யார் என்று பார்த்தால் பெரிதும் இடை, கடைநிலை சாதியினராகவே இருப்பார்கள். மேல்சாதியினர் குறிப்பாக பிராமணர் நவீன வேலைகளுக்கும் நகர்ப்புறத்துக்கும் மாறிவிட்டதால் அவர்களில் 90 சதவிகிதத்துக்கும் மேல் இப்போது பசு வளர்ப்பில் இருந்து வெளியேறிவிட்டனர். கிராமங்களில் பசு வளர்ப்பும் பசுவைப் புதைத்தலும் பெரிய பிரச்னையாக இல்லை. நகர்ப்புறத்தில் அது ஏன் பிரச்னையாக இருக்கிறதென்றால், அதை வளர்க்கும் ஏழை மக்களுக்குப் பசுவைப் பராமரிப்பது சிரமமாக இருக்கிறது. நகர்ப்புறங்களில் மேய்ச்சல் நிலங்கள் கிடையாது என்பதால் அவர்களால் போதிய உணவைக் கொடுக்க முடிவதில்லை. எனவே, தங்கள் பசுக்களை அப்படியே அவிழ்த்துவிட்டுவிடுகிறார்கள். அவை தெருத்தெருவாக அலைந்து கிடைப்பதை உண்டு வாழ்கின்றன.

மேலும் ஏழைகளுக்குத் தொழுவங்கள் கட்டும் அளவுக்கு வசதிகள் இல்லை என்பதால் வீட்டுக்கு அருகில் தெருவிலேயே அவற்றை தூங்க வைக்கிறார்கள். பால் கறக்கும் காலத்தில் மட்டுமே பசுக்களை அவர்கள் சற்று அக்கறையுடன் நடத்துகிறார்கள். இதில் அவர்கள் மேல் குறை சொல்ல ஒன்றுமில்லை. அவர்களுக்கு பசு என்பது செலவில்லாமல் வருமானம் தரும் ஒரு விலங்கு மட்டுமே. சமூகத்தின் பிற சாதியினர் பசு மாமிசத்தைத் தவிர்க்கும்நிலையில், பசுக்களைப் பூட்டி வைக்காமல் மேயவிடுவதில் அவர்களுக்கு எந்த நஷ்டமும் பயமும் இல்லை. கோழியைப்போல் பசு மாமிசத்தையும் இந்து சமூகம் விரும்பிச் சாப்பிடுவதாக இருந்தால் பசுக்களைத் தெருக்களில் யாரும் அலையவிடமாட்டார்கள்.


இப்படி பசுவைப் பராமரிக்கும் வசதியும் அக்கறையும் இல்லாதவர்களிடம் இருக்கும் பசுக்கள்தான் எங்கேனும் இறந்துவிடும்போது பிரச்னையை உருவாக்குகின்றன. அவற்றை வளர்ப்பவர்களுக்கு, அதைப் புதைக்கும் வசதியும் கிடையாது. எனவே, அப்படியே விட்டுவிடுகிறார்கள். ஆனால், மா-நகராட்சி அப்படியே விடுவிடமுடியாது. தலித்களிலேயே இருக்கும் இன்னொரு பிரிவினரை அழைத்துவந்து பசுவைப் புதைக்கச் சொல்கிறார்கள். அரசுப் பணம் பல வழிகளில் சுரண்டப்படுவதுண்டு என்றாலும் பசுவைப் புதைக்க அதைச் செலவிட அதிகாரத்தில் இருக்கும் இடைநிலை சாதியினருக்கு அக்கறை இல்லை. எனவே, பசுவைப் புதைக்கும் வேலையைச் செய்யும் தலித் பிரிவினருக்கு உரிய கூலி கிடைப்பதில்லை. அது இயற்கையாக இறந்திருந்தால்கூட அதை வெட்டி உண்ண முடிந்திருக்கும். முந்தைய காலகட்டத்தில் அப்படி இறக்கும் பசுக்கள், ஒரு பெரிய விருந்துக்கான வாய்ப்பாகவே அதை அப்புறப்படுத்திய சாதியினரால் பார்க்கப்பட்டது. ஆனால், நோய்வாய்பட்டு இறக்கும் பசுக்களை அப்படி உண்ணவும் முடியாது. அது எந்தவகையிலும் நன்மை தராத வேலையாகவே ஆகிவிட்டது. எனவே, ஒரு குறிப்பிட்ட சாதியைப் பிறப்பின் அடிப்படையில் அந்த வேலையில் திணிப்பது இன்று பெரிய தவறாகிவிட்டிருக்கிறது.

இடதுசாரிகள் கல்விப்புலங்களில் ஆரம்பித்து ஊடகங்கள் வரை அனைத்திலும் ஊடுருவியிருக்கிறார்கள்; இடைநிலை சாதி முற்போக்காளர்கள் ஆட்சி அதிகாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்; அரசு சாரா நிறுவனங்கள் தலித் விடுதலைக்காக அயராது பாடுபட்டுவருகின்றன; அரசின் நலத்திட்டங்கள் எல்லாம் தலித்களைப் பெருங்கருணையுடன் நடத்துகின்றன; அரசியல் சாசனம் அனைவருக்கும் கல்வியிலும் வேலையிலும் சம வசதி வாய்ப்புகளையும் சலுகைகளையும் உறுதிப்படுத்தியிருக்கிறது; தலித் கட்சிகள் கணிசமான செல்வாக்கு பெற்றுவிட்டிருக்கின்றன. நவீனத்துவமும் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கோலோச்சத் தொடங்கி வெகுகாலம் ஆகிவிட்டது. இவ்வளவுக்குப் பிறகும் சில தலித் சாதிகள் இவற்றின் எந்த நன்மையும் கிடைக்காமல் இருளிலேயே நீடிக்கும் அவல அதிசயம் புரியவே இல்லை. இதுமட்டுமா இப்படியான கடினமான இழிவான வேலைகள் எதுவும் இருந்திராத காலகட்டத்தில், உலகின் பிற பகுதிகளைப் போலவே பிறப்பின் அடிப்படையில் தொழிலை முன்வைத்த மனுவும் இந்துமதமும்தான் இதற்குக் காரணம் என்று அடிவயிற்றில் இருந்து கத்துகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்துத்துவர்களும் இந்தக் காட்டுக் கத்தலில் கூட்டுச் சேர்திருக்கிறார்கள். உண்மையில் மேலே சொல்லப்பட்ட சக்திகளில் ஏதேனும் ஒன்று ஒரு நிமிடமாவது இந்த வேதனைக்கு நாமும் ஒரு காரணமே... எளிதில் தீர்க்க முடிந்த ஒரு பிரச்னையே இது என்று நினைத்திருந்தால் எப்போதோ இதிலிருந்து விடுதலை கிடைத்திருக்கும். ஆனால், மலம் அள்ளுதல், கழிவுகளை அகற்றுதல் போன்ற கடைநிலைப் பணிகளில் ஈடுபட்டுவந்த தலித் சாதியினரில் இருந்து எந்தவொரு தலைவரும் வரவில்லை என்பதாலும் அவர்களுடைய வேதனைகளைச் சொல்லிக் காட்டி ஆதாயங்களை பெற்றுச் சென்ற பிற முன்னேறிய தலித் சாதியினருக்கு அவர்களுடைய வேதனையைத் தீர்ப்பதில் எந்த அக்கறையும் இல்லை என்பதாலும் இந்த வேதனைகள் தொடர்கதையாகிவருகின்றன. வேறென்ன தாய்க்கும் பிள்ளைக்குமேகூட வாயும் வயிறும் வேறுதானே.

பசுக்களை வளர்ப்பவர்களே அதைப் புதைக்க ஆகும் செலவைக் கொடுக்கவேண்டும் என்று சொல்லலாம்; சம்பளம் தரும் வேலையாக யார் வேண்டுமானாலும் அந்த வேலைக்கு நியமிக்கப்படலாம்; அந்த வேலைக்கு இரண்டு மூன்று மடங்கு சம்பளத்தை அதிகரிக்கலாம். ஒருவேளை முன்பு பசுவைப் புதைக்கும் தொழிலில் ஈடுபட்டவர்களே அதைச் செய்ய விரும்பினால் அதில் அவர்களுக்கு முன்னுரிமை தரலாம். ஆனால், அது நிச்சயமாக நிர்பந்தமாக இருக்கவே கூடாது. இதுவே உடனடியாகச் செய்யவேண்டிய விஷயம்.
*
நீண்டகால நோக்கில் கோசாலைகள் அமைப்பதே இந்தப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும். கோசாலைகளை அமைத்துப் பசுக்களை வளர்க்கவேண்டும். ஆனால், அதன் இறைச்சியை உண்ணக்கூடாதென்றால், அது லாபகரமான தொழிலாக இருக்காது. அதில் இருந்து கிடைக்கும் பால் போதாது. அதோடு பசுவின் உணவுக்கு அதிகம் செலவாகும். இந்த நடைமுறைச் சிக்கலைப் போக்க என்னென்ன வழிகள் உண்டென்று பார்ப்போம். அதாவது, கார்ப்பரேட் நிபுணத்துவத்துடன் ஒரு கோசாலையை நடத்துவது எப்படி?

கிறிஸ்தவ இஸ்லாமிய சக்திகள் தமது நலன்களை முன்னெடுக்க உலகம் முழுவதும் அனுப்பிவைக்கும் பணத்தில் நடக்கும் அமைப்புகள், நிறுவனங்கள் எல்லாமே தன்னிறைவாகச் செயல்படுபவை அல்ல. முழுக்க முழுக்க மேற்கத்திய நாடுகளில் தமது மதத்தின் மீது நல்லெண்ணம் கொண்ட எளிய மனம் கொண்டவர்களாலும் தனது மதத்தைப் பரப்பியே தீரவேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொண்டவர்களாலும் தரப்படும் நிதிகளை வைத்தே அந்த நிறுவனங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. எனவே, ஒரு இந்து மதிப்பீட்டைப் பாதுகாக்க முன்வரும் இயக்கமும் அமைப்பும் மட்டும் பொருளாதாரரீதியாக தன்னிறைவு பெற்றதாக இருந்தாகவேண்டுமா என்ன என்று கேட்கலாம்தான். எனினும் ஓரளவுக்கு தனக்கான நிதியை அதுவே உற்பத்தி செய்துகொண்டுவிடுமென்றால் நல்லதுதானே என்ற வகையில் இதைப் பார்ப்போம்.

இந்துக்களில் பெரும்பாலானோர் மேலும் சரியாகச் சொல்வதென்றால், பொருளாதாரரீதியாகவும் அரசியல் அதிகாரரீதியாகவும் செல்வாக்குடன் இருக்கும் பிரிவினர் கோசாலைகளுக்குப் பெருமளவில் நன்கொடை கொடுக்கத் தயாராகவே இருப்பார்கள். எனவே, முதலீட்டுக்கும் ஆரம்பகட்டப் பராமரிப்புக்கும் பெரிய நிதிச் சிக்கல் எதுவும் இருக்காது.

அடுத்ததாக, கன்று குடித்ததுபோக எஞ்சும் பசுவின் பாலை வைத்து இனிப்புப் பொருட்களைத் தயாரிக்க முடியும். அதை விற்று ஓரளவுக்கு நிதியைச் சேகரிக்க முடியும். பசுவின் கழிவுகளைக்கொண்டு நல்ல உரங்கள் தயாரிக்கலாம். அந்த உரங்களைக் கொண்டு பசுவுக்குத் தேவையான புல், இழைதழைக்கான மரங்கள் வளர்ப்பதோடு காய்கனிவகைகளையும் வளர்க்கலாம். நகரங்களில் மேய்ச்சல் நிலத்துக்கு போதிய இட வசதி இருக்காது. ஆனால், ஷெல்ஃப் ஃபார்மிங், மாடித் தோட்டம் என பல வகைகளில் புல் வகைகளை வளர்ப்பது மிகவும் எளிது. அதோடு எல்லா வீடுகளிலும் தற்போது காய்கறிக் கழிவுகளை குப்பை வண்டியில் போடுகிறார்கள். அதைத் தனியாகச் சேகரித்து கோசாலைகளுக்குக் கொண்டுவரலாம். வீடுகளில் ஊசிப்போன, பூஞ்சை பிடித்த உணவு போன்றவற்றையும் சேர்த்துப் போட்டுவிடுவார்கள். அது பசுவுக்குக் கெடுதலைத் தரும். எனவே, வீடுகளில் இருந்து கிடைக்கும் இழைதழைகளை மிகுந்த கவனத்துடனே பயன்படுத்தவேண்டும்.


ஆனால், தற்போது காய்கறிச் சந்தைகளில் இலை தழைகள் எல்லாம் மண்ணோடு மண்ணாக மட்கவும் குப்பையில் போடப்படவும்தான் செய்கின்றன. அவற்றை முறையாகச் சேகரித்தால் கோசாலைப் பசுக்களுக்கான உணவு முழுவதுமாகவே கிடைத்துவிடும். 30-40 கடைகள் உள்ள சந்தையில் கிடைக்கும் இழை தழைகளை வைத்து 15-20 பசுக்களை நல்லமுறையில் பராமரித்துவிட முடியும். காய்கறிச் சந்தைகளைத் தூய்மையாக வைத்தது போலவும் ஆகும். தூய்மை இந்தியா திட்டத்தின் ஓர் அங்கமாகக் கூட கோசாலைப் பராமரிப்பை ஆக்கிக்கொள்ளலாம்.

ஒவ்வொரு ஊரிலும் ஒரு கோசாலையை அமைத்து அங்கேயே மரங்கள், புல் வகைகளை வளர்க்கலாம். பிறவகை காய்களையும் பயிரிடலாம். ஒரு பசுவை அங்கு அனுப்பும் ஏழைக்கு அந்தப் பசுவில் இருந்து கறக்கப்படும் பாலில் ஒரு பாதியை அவருக்கே கொடுத்துவிடலாம். அது ஈனும் கன்றுகள் வளர்ந்து தரும் பாலில் இருந்தும் அவருக்கு ஒரு பங்கு தரலாம். அந்த கோசாலையில் விளையும் காய்களை அவருக்கு சலுகை விலையில் கொடுத்து அவருடைய உணவுத்தேவையைப் பூர்த்தி செய்யலாம். அவர் மாமிசம் சாப்பிட்டே தீரவேண்டும் என்று விரும்பினால் தன் வீட்டில் கோழி, ஆடு, பன்றி போன்றவற்றை வளர்த்து அவை இறந்த பிறகு அவற்றைச் சாப்பிட்டுக் கொள்ளலாம். கோசாலையில் இருந்து கிடைக்கும் காய்களை தன் வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்குத் தீவனமாகவும் கொடுக்கலாம்.

டிராக்டர் பயன்பாடு அதிகரித்துவிட்டநிலையில் காளைகளின் தேவை இப்போது அறவே குறைந்துவிட்டிருக்கிறது. எனவே, காளைகளின் வரவு ஒருவகையில் சுமையானதே. கருக்கலைப்பு தவறுதான். என்றாலும் கொஞ்சம் மனதைக் கல்லாக்கிக்கொண்டு தேவையான அளவுக்கு மட்டுமே காளைகள் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளலாம். காளைகளில் இருந்து கிடைக்கும் சாணி, இறந்தபின் கிடைக்கும்  தோல் ஆகியவை காளையின் பராமரிப்புக்கு ஆகும் செலவில் பத்தில் இருந்து 20 சதவிகிதத்தை ஈட்டித்தருமென்றாலோ வீடுகளில் இருந்து கிடைக்கும் காய்கறிகளே காளைகளையும் நன்கு பராமரிக்கப் போதுமானதாக இருக்குமென்றாலோ காளைகளை இயல்பாக வரவேற்கலாம்.

அப்படியாக நகரில் எங்குமே பசுக்கள் அலைந்து திரியவிடாமல் அவற்றை கோசாலையில் வைத்துப் பராமரிக்கலாம். கோசாலைகளில் இறக்கும் பசுக்களை மின் மயான முறையில் எரியூட்டலாம். அல்லது இறக்கும் பசுவின் உடலை மட்கச் செய்து உரம் தயாரிக்கலாம். மாமிச உணவைத் தவிர்ப்பதே லட்சியம் என்றாலும் ஒரு தற்காலிக ஏற்பாடாக, தானாக இறக்கும் பசுக்களின் மாமிசத்தையும் உணவாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். அது முற்றிப்போய் சுவை குறைவாக இருக்குமென்றால் நன்கு அரைத்து அல்லது வேறு வேதி வினைகளுக்கு உட்படுத்தி அதை மிருதுவாக்கி உண்ணலாம். மாமிசம் உண்டு பழகியவர்கள், ஓர் உயிரைக் கொல்லாமல் பெறப்பட்ட மாமிசம் இது என்ற ஒற்றைக் காரணத்துக்காக, அதன் சுவையில் உள்ள குறைபாட்டைப் பொறுத்துக்கொள்ளலாம். தானாக இறந்த விலங்கின் மாமிசத்தைச் சாப்பிடும் ஒருவர் ஓர் எளிய உயிரைக் காப்பாற்றியவராகிறார். நாகரிகத்தின் படிகளில் ஓர் அடி கூடுதலாக எடுத்துவைத்தவராகிறார். நீங்கள் இறை நம்பிக்கை கொண்டவரென்றால் உங்களைப் படைத்த அதே தெய்வம்தான் அந்த எளிய விலங்குகளையும் படைத்திருக்கிறார். அந்தவகையில் அவை உங்களுடைய சகோதரர் போன்றவை. உடன் பிறப்பைக் கொன்று தின்னாதிருப்பீர்...

வேதாகமம்கூட  Thou shall not kill...  என்றுதான் சொல்லியிருக்கிறது; Thou shall not murder... என்று சொல்லவில்லை (அதையே அதே வேதாகமத்தைச் சொல்லிக்காட்டி செய்வது நடக்கிறதென்பது வேறு வேதனைக்கான விஷயம்).


பசுக்களை வளர்க்கும்போது அதன் சாணியைக் கையாள்வது, குளிப்பாட்டுவது போன்ற கடைநிலைப் பணிகள் செய்ய வேண்டியிருக்கும். இதற்கு நிச்சயம் தலித்களைப் பயன்படுத்தக்கூடாது. ஒரு மேல் சாதிக்காரர் சாணி அள்ளும் வேலைக்கு முன்வந்தால் நிச்சயம் அதை அனுமதிக்கலாம். ஆனால், தலித் சாதிகளில் இருக்கும் ஒருவர் அதைச் செய்ய முன்வந்தால் அனுமதிக்கக்கூடாது. அதற்கு பதிலாக அவர்களை அந்த கோசாலையின் பூசாரியாக நியமிக்கலாம். அல்லது சாணத்தைப் பயன்படுத்தி எரிவாயு, உரங்கள் தயாரிக்கும் பிளாண்ட் அமைத்தால் அதை நிர்வகிக்கும் பணியில் ஒரு தலித்தை நியமிக்கலாம். அதோடு, சாணியைக் கையால் தொடாமலேயே உரக்கிடங்குக்கோ எரிவாயுக் கிடங்குக்கோ கொண்டுசெல்ல நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவேண்டும். தலித் ஒருவருக்கு உயர் கல்வி மையத்தில் இடம் கொடுப்பது எவ்வளவு அவசியமோ அதேஅளவுக்கு இழிவான, கடினமான வேலைகளுக்கு நவீன தொழில்நுட்பத் தீர்வுகளைக் கண்டுசொல்லும்வகையில் உயர் கல்விப் பாடங்களை மாற்றி அமைப்பதும் அவசியமே. ஒரு தனிநபர் தான் மட்டும் பல படிகள் முன்னேறுவதைவிட சொந்த சமூகத்தை ஒரு சில அடியாவது முன்னேற்றுவது நல்லதல்லவா. அமெரிக்க ஐரோப்பிய எஜமானர்களுக்கு சேவைப் பணி செய்வதால் அந்நியச் செலவணி அதிகம் கிடைத்து நாட்டின் ஜி.டி.பி. உயர்ந்து பட்ஜெட் புத்தகங்களில் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பது உண்மைதான். ஆனால், சொந்த சகோதரனின் வாழ்க்கைத் தரம் நிஜ இந்தியாவில் உயர்வது அதைவிட முக்கியம். அறிவினான் ஆவதுண்டோ சக மனிதனின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை.


காதலர் தினத்துக்கு எதிர்ப்பு, ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு என்று செயல்படுபவர்கள் கோமாதா திவஸ், கங்கா திவஸ் என புதிய கொண்டாட்ட தினங்களை ஆரம்பிக்கலாம். கோமாதா தினத்தில் திருவள்ளுவர் போல் தாடியும் மஞ்சள் சால்வையும் அணிந்துகொண்டு குழந்தைகள் அனைவரும் ஒரு கட்டு புல் அல்லது ஒரு சீப்பு பழங்களை வாங்கிச் சென்று தமது கையால் பசுக்களுக்குக் கொடுக்கும் விழாவாக அதை ஆக்கலாம். அதோடு பிறந்தநாள், திருமண நாள் என எதுவாக இருந்தாலும் பசுவுக்கு உணவு கொடுப்பதையும் அங்கு ஒரு மரக்கன்று நடுவதையும் வழக்கமாகக் கொள்ளலாம்.

மிருகங்கள் அடைக்கப்பட்டிருக்கும் மிருக காட்சி சாலைக்குச் செல்லும் வழக்கத்தை மாற்றி பசுக்களைச் சென்று பார்த்து கன்றுகளுடன் விளையாட வழி செய்து சந்தோஷமான அனுபவமாக அதை மாற்றலாம். தந்தத்தில் செய்வதுபோல் பசுவின் எலும்பில் இருந்து கலைப் பொருட்கள் தயாரிக்கலாம். தானாக இறக்கும் பசுவின் தோலைப் பயன்படுத்தி பைகள், பர்ஸ்கள் செய்யலாம். இவையெல்லாம் ஒரு கோசாலையைத் தன்னிறைவுடன் நடத்தப் பெருமளவுக்கு உதவும். அந்த கோசாலையை அரசு வேலைகள் கிடைக்காத தலித்களைக்கொண்டு பராமரிக்கச் செய்வதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கான வசதியையும் ஏற்படுத்தித் தரலாம்.

அப்படியான இரு தரப்புக்கும் வெற்றி கிடைக்கும் வழியையே நாம் முன்னெடுக்கவேண்டும். ஏனென்றால், ‘தலித்’களும் ‘சாதி இந்து’க்களும் நட்புசாதிகளே... நீங்கள் ஓர் இந்துவாக இருந்தால் சண்டைபோடும் இருவரும் சகோதர சாதிகளே என்பதை நினைத்துப்பார்க்கவேண்டும். நீங்கள் மொழிப்பற்று கொண்டவராக இருந்தால் சண்டைபோடும் இருவரும் ஒரே மொழியைப் பேசுபவரே என்பதை நினைத்துப்பார்க்கவேண்டும். நீங்கள் உங்களை இந்தியராக உணர்பவர் என்றால் சண்டையிடும் இரு பிரிவினரும் இந்தியாவின் குடிமகன்களே என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். புத்தர் மீதோ வள்ளுவர் மீதோ மரியாதை கொண்டவர் என்றால் அவருடைய கொல்லாமையை முன்னெடுக்கும் வழிமுறையாக இதை ஆதரியுங்கள். அம்பேத்காரியவாதியாக உங்களை உணர்கிறீர்கள் என்றால் தலித் நலன் சார்ந்த திட்டமாக இதை முன்னெடுங்கள். உண்மைக்கு நெருக்கமாக வரமுடியாவிட்டாலும் உங்கள் அரசியலையாவது உருப்படியாகச் செய்யுங்கள்.

Thursday, 4 August 2016

கதம் கதம்!




ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலாவதாக பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு வில்லன், குணச்சித்திர நடிகன், நகைச்சுவை கதாநாயகன் என்ற நடித்த காலகட்டம்.

இரண்டாவதாக, எஸ்.பி.முத்துராமனால் ஆக்ஷன் ஹீராவாக வளர்த்தெடுக்கப்பட்ட காலகட்டம். உண்மையான ரஜினியை அடையாளம் கண்டுகொண்டது முத்துராமனே என்று சொல்லும் அளவுக்கு அந்த இரண்டாம் கட்டம் களைகட்டியது.

அடுத்ததாக, ஜெயலலிதாவுடன் மோதலில் ஈடுபட்டு எம்.ஜி.ஆர்.போல் அரசியல் பிரவேசம் செய்யப்போவதாக உலகை நம்பவைத்த காலகட்டம். அண்ணாமலையில் ஆரம்பித்து படையப்பா வரை இது தொடர்ந்தது.

நான்காவதாக, அரசியல் ஏய்ப்பு வசனங்களை மூட்டை கட்டிவைத்துவிட்டு பாபாவில் ஆரம்பித்து கபாலிவரை வெறும் சாகச நடிகராக வலம் வரும் காலகட்டம். அதீத ஹைப்களை உருவாக்கும் காலகட்டத்தில் வெளியான படங்கள் என்றும் இவற்றைச் சொல்லலாம். இந்தப் புத்தகத்தில் ரஜினியின் அந்த நான்காவது காலகட்டத்தில் வெளியான படங்களின் விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன.

ரஜினிகாந்தின் முதல் மூன்று கட்டப் படங்களில் அவரது பாணியிலான அவரது தரத்திலான உள்ளடக்கம் வலுவாக இருந்தது. அவை வணிக வெற்றிப் படங்களாகவும் இருந்தன. ஆனால், நான்காம் காலகட்டத்தில் வணிக வெற்றியும் மிகை எதிர்பார்ப்பும் தூண்டப் பட்டதற்கு இணையாக அவருடைய படங்களின் தரம் உயரவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவை குறைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் காலகட்டத்தில் எந்திரன், சிவாஜி என இரண்டு படங்கள் ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகியிருக்கின்றன. ‘பாபா’ சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்திலும் ‘லிங்கா’ கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்திலும் வெளிவந்திருக்கின்றன. ‘கபாலி’ பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது.

இவை நீங்கலாக இந்தக் காலகட்டத்தில் வந்த இன்னொரு படம் பி.வாசு இயக்கிய ‘சந்திரமுகி’. அந்தப் படத்தின் வெற்றிக்கு இரண்டு காரணங்கள். முதலாவதாக அது வெற்றிபெற்ற மலையாளப் படத்தின் ரீ மேக். இரண்டாவதாக, அதீத ஹைப்கள் இல்லாமல் ரஜினி மிகவும் அடக்கி வாசித்த படமும்கூட.
நான்காம் காலகட்டத்தில் வெளியான பாபா, லிங்கா, கபாலி ஆகியவற்றில் வாரி வாரி வழங்கும் வள்ளலாகவும் மக்கள் மீது அக்கறைகொண்டவராகவும் நடித்திருக்கிறார். ரஜினியின் நிஜ வாழ்க்கை அதில் இருந்து முற்றிலும் மாறானது.

எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் மக்கள் மீது அக்கறை கொண்டவராக நடித்ததோடு நிறுத்தவில்லை. மக்களுக்கு உண்மையா கவே பல நன்மைகள் செய்தும் வந்தார். அவருடை வீட்டுக்கு அவரைப் பார்க்க தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் ரசிகர்கள் வந்துபோன வண்ணம் இருப்பார்கள். அவர் வீட்டில் எப்போதும் ரசிகர்களுக்கு விருந்து நடந்துகொண்டே இருக்கும் என்பார்கள். நற்பெயர் உருவாக்க முயற்சிகள் (பிராண்ட் பில்டிங் எக்சர்சைஸஸ்) ஒருபக்கம் உண்டென்றாலும் ஆத்மார்த்தமான அக்கறையும் அவருக்கு மக்கள் மீது உண்டு.

சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இள வயதில் மிகவும் சிரமப் பட்டவர்களே. ‘நான் கஷ்டப்பட்டபோது இந்த சமூகம் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை; நான் எதற்கு இந்த சமூகத்துக்கு உதவ வேண்டும்’ என்பது சிவாஜியின் வாழ்க்கைப் பார்வை. ‘நான் வாழ்கையில் கஷ்டம் என்றால் என்ன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். நான் பட்ட கஷ்டத்தை இந்த சமூகம் படக்கூடாது என்று விரும்புகிறேன். அதற்கு என்னாலான உதவிகளைச் செய்கிறேன்’ என்பது எம்.ஜி.ஆரின் வாழ்க்கைப் பார்வை. இந்த வாழ்க்கைப் பார்வைகளே எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கும் சிவாஜியின் அரசியல் தோல்விக்குமான காரணம்.

எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வரவேண்டும் என்ற தெளிவான திட்டமிடலுடன் திரைப்படத்தை அதற்கான பயிற்சிக்களமாகப் பயன்படுத்திக்கொண்டார். அல்லது திரைப்படத்தின் மூலம்கிடைத்த செல்வாக்கைவைத்து அரசியல் கனவுகளை அழகாக நிறைவேற்றிக் கொண்டார். ரஜினிக்கு அந்த எண்ணம் இல்லை. ஆனால், மக்களுக்கு இன்னொரு எம்.ஜி.ஆர். தேவையாக இருந்தார். ரஜினிக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இருந்திராதநிலையில் அவர் தெளிவாக அதைத் தனது படங்களிலும் பொதுவெளியிலும் சொல்லிவிட்டு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், அவரோ ஆற்றில் ஒரு கால்... சேற்றில் ஒரு கால் என இருந்துவிட்டார். எனவே, மக்களுக்கு உதவுபவராக அவர் நடித்த நான்காம் காலகட்டத்துப் படங்கள் பெரும் ஏமாற்றத்தைத் தந்துவிட்டன.

மாறிவந்த காலகட்டத்துக்கு ஏற்பத் தன் படங்களில் சாகச அம்சங்களை எந்திரன், சிவாஜி, சந்திரமுகி ஆகிய மூன்று படங்களில் மாற்றிக்கொண்டிருந்தார். இவைதான் இந்தக் காலகட்டத்தில் ஓரளவுக்குப் பொருட்படுத்தத் தகுந்தவையாக வந்திருக்கின்றன. பாபா, லிங்கா, கபாலி ஆகிய மூன்றும் அவருடைய அரசியல் ஏய்ப்புகளின் சாயலையே கொண்டிருந்ததால் மக்கள் அவற்றுடன் ஒன்றமுடிய வில்லை.

இதில் ‘கபாலி’ ஒருவகையில் தலித் ஆதரவு என்ற போர்வை யில் சமூகத்தில் இதுவரை பேசப்படாத குரலைப் பேசியதாகவும் தலித் மக்களின் எழுச்சியை முரசறைந்து அறிவிப்பதாகவும் ஒருசாராரின் வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஊடகங்களில் அவர்களுடைய இருப்பு கணிசமாக இருப்பதால் அதுவே சமூகத்தின் குரலாக மாயத் தோற்றத்தைத் தந்தும் வருகிறது. ஒற்றை ஆளாக இருந்தாலும் மைக்குக்கு அருகில் பேசினால் ஊர் முழுக்கக் கேட்கும் அல்லவா?

இளையராஜா, தேவாவில் ஆரம்பித்து திரைப்படங்களில் குத்தாட்டப் பாடல்களின் ஆதிக்கம்வரை தலித் மதிப்பீடுகள் பொது சமூகத்தால் இயல்பாக உள்வாங்கப்பட்டுள்ளன. இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் தலித் படைப்புகள் கணிசமான வரவேற்பைப் பெற்றுள்ளன. பூமணி சாகித்ய அகாதமி விருதே பெற்றிருக்கிறார். அரசியல் களத்தில் தலித் தலைவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப அவர்களுடைய இடம் வலுவாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. அரசின் நலத்திட்டங்களை எடுத்துக்கொண்டால் தலித்களுக்குத்தான் பெரும்பாலானவற்றில் முன்னுரிமை தரப்பட்டுள்ளது.  ஏதோ தலித் களின் குரல் முதல் முறையாகப் பொதுவெளியில் பேச அனுமதி கிடைத்திருப்பதாக மாய பிம்பம் உருவாக்கப்படுகிறது. தலித் குரல் என்பது திருப்பி அடிப்போம் என்பது மட்டும்தானா? அதை எப்போது சொல்லமுடிகிறதோ அப்போதுதான் உண்மையான குரலில் பேச ஆரம்பித்ததாகச் சொல்வார்களா?

தலித் என்ற அடையாளத்துடன் எந்த திரைப்பட நாயகக் கதாபாத்திரமும் சித்திரிக்கப்பட்டதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக வேறு இரண்டு உண்மைகளும் பேசப்பட வேண்டும். தலித் விரோதமும் திரைப்படங்களில் சித்திரிக்கப்பட்ட தில்லை. லட்சியவாத சாதி நல்லிணக்க விஷயங்களே  சித்திரிக்கப் பட்டிருக்கின்றன. எம்.ஜி.ஆர். பண்ணையார்களை எதிர்த்துப் போராடியதெல்லாம் தலித் நலன் சார்ந்தும்தானே. அடுத்ததாக, முதல் ‘தலித்’ கதாநாயகன் பேசும் முதல் வசனம் என்ன: எங்களுடைய வளர்ச்சி பிடிக்கலைன்னா சாவுங்கடா..! இது தலித் அடிப்படை வாதியின் குரல்; தலித் மக்களின் குரல் அல்ல. அல்லாவுக்கு இணை வைக்கக்கூடாது என்று சொல்லும் வஹாபியிஸ்டின் குரல் எப்படி இஸ்லாமியர்களின் குரல் இல்லையோ அதுபோலவே இதுவும் தலித்களின் குரல் அல்ல.

ரஜினியைப் பொறுத்தவரையில் சாதி சார்ந்த அரசியல் முழக்கங்களை அவர் ஊக்குவித்ததே கிடையாது. தனது கதாபாத்திரம் எந்த சாதி அடையாளத்துடனும் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆரைப் போலவே மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்தவர். வணிக நோக்கில் அதுதான் சாமர்த்தியமாகவும் கருதப்படும். ஆனால், ரஞ்சித்தின் நிலை வேறு. அவர் சாதி அடையாளத்தை முன்வைத்ததால்தான் வெற்றியே பெற முடிந்திருக்கிறது. அப்படியாக இரு எதிரெதிர் துருவங்கள் இணைந்து கபாலி உருவாகியிருக்கிறது.

‘மெட்ராஸ்’ திரைப்படத்திலேயே ஈ.வெ.ரா.வின் புகைப்படம் ஏன் காட்டப்படவில்லை என்ற மிரட்டல் திராவிட ஆண்டைகளால் எழுப்பப்பட்டது. உண்மையான தலித் அரசியல்வாதி பிராமணர்களை விட தங்களை அதிக அளவில் ஒடுக்கிவருவது இடைநிலைச் சாதிகளே என்பதையும் ஈ.வே.ரா. அந்த இடைநிலை சாதிகளின் தலைவர் மட்டுமே என்பதையும் உணர்ந்தவராகவும் அதையே தனது அரசியலாகக் கொண்டவராகவும் இருப்பார். ஆனால், தமிழகத்தில் தலித் அரசியல் என்பது ஆரம்பத்தில் இருந்தே அப்படியாக இடைநிலை சாதியினரால் ஓரங்கட்டப்பட்டுவந்ததுதான். அயோத்திதாச பண்டிதர், எம்.சி.ராஜா என ஆரம்பித்த தலித் அரசியல் போராட்டமானது தெலுங்கு, மலையாள, கன்னட அரசியல் தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கட்சியால் ஓரங்கட்டப்பட்டது. தமிழ் அடையாளம் பின்னுக்குத் தள்ளப்பட்டு போலியான திராவிட அடையாளம் முன்னெடுக்கப்பட்டதுபோலவே, தலித் எழுச்சி ஓரங்கட்டப்பட்டு உங்களுக்கும் நாங்களே பேசுகிறோமே என்று சொல்லி இடைநிலை சாதியினரே அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

பின்னி ஆலைப் போராட்டம், முதுகுளத்தூர் கலவரம் என ஆரம்பித்து நேற்றைய உடுமலைப் பேட்டை சங்கர் படுகொலைவரை தலித்கள் மீதான அனைத்து வன்முறைகளும் இதே இடைநிலை சாதிகளாலேயே முன்னெடுக்கப்பட்டன. இரட்டைக்குவளையில் ஆரம்பித்து தலித் பிணத்தை இடைநிலைச் சாதியினரின் தெருவழியாக எடுத்துச் செல்லக்கூடாது என்பதுவரை அனைத்து ஒடுக்குமுறைகளும் இடைநிலை சாதிகளாலேயே செய்யப்பட்டன. எனவே, தலித்களின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒரு நபர் இடைநிலை சாதிகளை எதிர்ப்பதையே தன் முதல் இலக்காகக் கொண்டிருப்பார். ஈ.வெ.ராவை மறுதலிப்பவராகவே இருப்பார். பா.இரஞ்சித்தும் அப்படியான புரிதல்கொண்டவராகவே தன் திரையுலகப் பயணத்தை ஆரம்பித்தார்.

ஆனால், ‘மெட்ராஸ்’ திரைப்படத்தையொட்டி திராவிட ஆண்டைகள் தெரிவித்த எதிர்ப்பைக்கண்டு பயந்து அந்தப் படத்தில் ஈ.வெ.ரா. இடம்பெற்ற காட்சிகள் இருந்தன என்றும் எப்படியோ அது வெட்டப்பட்டுவிட்டது என்று சொன்னார். தன் அடுத்த திரைப் படத்தில் ஈ.வெ.ராவின் திரு உருவத்தைக் கட்டாயம் சுவரில் தொங்க விடுவதாக உத்தரவாதமும் கொடுத்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவருடைய அடுத்த படம் ரஜினியுடன் செய்யவேண்டிவந்துவிட்டது. ரஜினி தன் படத்தில் ஈ.வெ.ராவின் நிழல்கூடத் தென்படக்கூடாது என்ற தெளிவு கொண்டவர். தாணுவின் அரசியல் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. ஆனால், ரஜினியினாலே இந்தப் படத்தில் ஈ.வெ.ராவின் புகைப்படம் இடம்பெறவில்லை.

ரஜினி அதோடு நிறுத்தவில்லை. கபாலி கதாபாத்திரம் தலித் என்று நம்ப விரும்புபவர்களுக்கு தலித்தாகவும் இல்லையென்று நம்ப விரும்புபவர்களுக்கு வேறு சாதியாகவும் தோற்ற மயக்கம் தரும் வகையில் உருவாக்கும்படியே கட்டளையிட்டிருக்கிறார். அதனால் தான் கோழிக்கறி, ஆட்டுக்கறி என்ற வசனங்கள் இடம்பெற்றிருக் கின்றன. கோட் சூட் போட்டா என்ன தப்பு என்பதை மலேசியத் தமிழன் ஒருவன் சீனன் ஒருவனைப் பார்த்துக் கேட்பதாகவே முன்வைத்திருக்கிறார். மலேசியத் தமிழர்களை கஞ்சா, கடத்தல், கந்துவட்டி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலாகவே சித்திரித்திருக்கிறார். செக்கச்செவேலென மனதால் தொட்டாலே சிவந்துபோகும் ‘ஆரிய’ நிறத்து நாயகிகளையே தேர்ந்தெடுத்திருக்கிறார்.

தமிழ்நேசன்கூட மலேசிய இந்தியர்களுக்காகப் போராடுபவரா கவும் அதுவும் கூலி உயர்வு கேட்டுப் போராடும் கம்யூனிஸ்டாகவே இடம் பெற்றிருக்கிறார். இவையெல்லாம் தலித் போராளிகள் முன்வைக்க விரும்பும் முழக்கங்களே அல்ல. அவை முழுக்க முழுக்க ரஜினிக்காகச் செய்யப்பட்டவையே. ரஜினிக்கும் அந்த அடையாளங் களில் அப்படியொன்றும் ஆர்வமோ புரிதலோ கிடையாது என்றாலும்   கபாலி பாத்திரம் மீது தலித் முத்திரை விழுந்துவிடக்கூடாது என்ற நோக்கில் அவர் சொன்னவையே.
ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் ரஜினியின் ஒரு படத்தின் மூலம் இத்தனை சாதி அரசியல் உரையாடல்கள் உருவானது இதுவே முதல் தடவை. தமிழகத்தை அவர் காப்பாற்றவேண்டுமென்ற அரசியல் முழக்கங்கள் இதற்கு முன் உருவாகி அவை சாயம் வெளுத்துப்போன நிலையில் இப்போது அவர் மூலம் இரஞ்சித் தலித் மீட்சியை முன்னெடுத்திருப்பதாகப் பெருங்கதையாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான ‘பாராட்டு’ முழுவதும் இரஞ்சித்துக்கே போகவேண்டும்.

அப்படியாக ரஜினியின் இந்த நான்காம் காலகட்டம் அவருடைய திரையுலகப் பயணத்தில் முக்கியமான கட்டமாக ஆகிவிட்டிருக்கிறது. ரஜினி ரசிகர்களுக்கு அவருடைய முந்தைய படங்கள் தந்த மகிழ்ச்சி இதில் கிடைக்கவில்லையென்றாலும் ரஜினி என்ற பிம்பம் மேலும் மேலும் செல்வாக்கு பெற்ற காலகட்டமாகவே  உருவாகியிருக்கிறது. இந்த வணிக சாமர்த்தியமும் வெற்றிகளும் அவருடைய அரசியல் பார்வையிலும் திரைப்பட தரத்திலும் வெளிப்பட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்ற ஏக்கத்தை மட்டும் தவிர்க்க முடியவில்லை. முடிஞ்சது முடிஞ்சே போச்சு...
கதம் கதம்!


- B.R..மகாதேவன்

இதேப்டி இருக்கு - முன்னுரையில் இருந்து...

Tuesday, 26 July 2016

கபாலிடா..!

கபாலி திரைப்படம் உண்மையில் நாயகனின் ரஜினி வெர்ஷனாக வந்திருக்கவேண்டும். ரஞ்சித்தும் அப்படித்தான் ஆரம்பித்தார் போலிருக்கிறது. வேறு ஊரில் பெரியாளாகும் தமிழன்! நாயகனும் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார். கபாலியும் அப்படியே. நாயகன் தமிழர்களுக்கு நல்லது செய்கிறார். கபாலியும் அப்படியே. நாயகனில் மனைவி கொல்லப்பட்டுவிடுகிறார். இங்கு கொல்லப்பட்டுவிட்டதாக நம்புகிறார். நாயகனில் மகள் சட்டத்தின் பக்கம் நிற்கிறார். இங்கு அவர் அப்பாவைப் போல் கேங்ஸ்டராகவே இருக்கிறார். க்ளைமாக்ஸில் நாயகன் கொல்லப்படுகிறார். இங்கும் கொல்லப்படுவதுபோல் காட்டப்படுகிறது.

நாயகனில் ஒரு கேங்ஸ்டர் தலைவன் நம்மைப்போலவே குடும்பம், குட்டிகள், பாசம், பலவீனம் எல்லாம் உள்ள மனிதராக அருமையாகச் சித்திரிக்கப்பட்டிருந்தார். ரஞ்சித்தின் நோக்கமும் அதுவே. அதனால்தான் கபாலியிலும் குடும்பம் சார்ந்த காட்சிகளை அவர் இடம்பெறச் செய்திருக்கிறார். ஆனால், நாயகனில் தமிழ், தலித், கம்யூனிஸம் எனக் கருத்தியல் சார்ந்த சமூக அக்கறை என்ற ஜல்லிகள் கிடையாது. நாயகனுடைய சமூக அறம் என்பது அரசு எந்திரம் தரத் தவறும் நீதித் தீர்ப்புகளை தனி நபராக அரசைச் சாராத நபராக நின்று வழங்குவதுமட்டுமே. கபாலியும் அப்படியானவராகத்தான் இருக்கிறார். ஆனால், நாயகனின் அந்த அரசியலை மணிரத்னம் அருமையாகச் சித்திரித்திருந்தார். ரஞ்சித் அந்த விஷயத்தில் மிகப் பெரிய தவறுகளைச் செய்திருக்கிறார். கபாலியின் சமூக அக்கறைகள் வெற்று வசனங்களாக, மிகை புகழ்ச்சிகளாகவே அசட்டுக் காட்சிகளாகவே தேங்கிவிட்டன. இந்தத் தவறை சரிசெய்திருந்தால் படம் சிறப்பானதாக நாயகனுக்கு இணையாக வந்திருக்கும். ரஜினியின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் படத்துக்கு நாயகனைவிடப் பலமடங்கு வெற்றியைத் தந்திருக்கும். இதை இப்படிச் சொல்லலாம்...நாயகனின் ரீமேக்கை ரஜினிகாந்தை வைத்து மணிரத்னம் செய்தால் நாயகனைவிட பெரு வெற்றியை எட்டும். இதுவரை வெளிவந்திருக்கும் கமலின் நடிப்புத் திறமையைவிட உள்ளே உறங்கிக் கிடக்கும் ரஜினியின் நடிப்புத் திறமை மேலானதுதான்.

இந்தக் கோணத்தில் என் கபாலியை எழுதிப் பார்க்கிறேன்.

கபாலியின் அரசியல் வாழ்க்கை மலேசிய இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடுவதில் இருந்து ஆரம்பிக்கிறது. எல்லா நாட்டு இளைஞர்களையும் போலவே இளரத்தம் பாயும் கபாலி கம்யூனிஸத்தின்பால் ஈர்க்கப்படுகிறார். ஊதிய உயர்வு கேட்டு அமைதிவழியில் போராடுகிறார். கோரிக்கைகள் நிராகரிக்கப்படவே வன்முறையைக் கையில் எடுக்கிறார். முதலாளிகளுக்கு சாதகமான காவல்துறை கபாலியைப் பிடித்துச் சிறையில் அடைக்கிறது. பல்வேறு பொய் வழக்குகளை அவர் மேல் போட்டு 25 வருடங்கள் சிறையில் அடைக்கிறது. சிறை வாழ்க்கை கபாலியை மாற்றுகிறது. அங்கு அவர் படிக்கும் புத்தகங்கள், உலகில் அதன் பிறகு நடந்த மாற்றங்கள் எல்லாம் கம்யூனிஸத்தின் போதாமையை அவருக்குப் புரியவைக்கின்றன. வன்முறைப் பாதையில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா காந்தியவாதியாக வெளியே வந்ததுபோல் கபாலியும் காந்தியவாதியாக வெளியே வருகிறார்.

25 வருடங்களில் மலேசிய தமிழ் / இந்திய சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அவரை அதிர்ச்சி அடைய வைக்கிறது. அவர் இளைஞராக இருந்த காலகட்டத்தில் மலேசியா தமிழர்களின் கனவு பூமியாக இருந்தது. இன்றோ அது அவர்களுக்கு நரகமாக ஆகிவிட்டிருக்கிறது. எண்ணிக்கையில் குறைவு என்பதால் அரசியல் சக்தியாகத் திரள முடியவில்லை. அதனால் அரசு வேலைகள், தனியார் வேலைகள் என அனைத்திலும் ஓரங்கட்டப்பட்டிருக்கிறர்கள். கல்வி கிடைப்பதில்லை. கிடைத்தாலும் வேலை கிடைப்பதில்லை. எனவே  மலேசியத் தமிழர்களின் இளைய தலைமுறை போதை, கடத்தல் என சீரழிந்துகிடக்கிறது. கடந்த காலத்தைவிட மிகப் பெரிய பொறுப்பு இப்போது தன் மீது சுமத்தப்ட்டிருப்பதை கபாலி உணர்கிறார். 

முதல் வேலையாக அரசு அதிகாரிகளைச் சந்தித்து தமிழ் இளைஞர்களுக்கு உதவும்படிக் கேட்டுக்கொள்கிறார். போதை, கடத்தல் என நிழல் உலகத்துடன் அதிக பரிச்சயம் கொண்ட தமிழ் இளைஞர்களை அந்த நிழல் உலகை ஒழிக்க அரசுக்கு உதவும் படையாக மாற்றுகிறார். அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி இதற்குக் கைமாறாக படித்து முடித்திருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு அரசு வேலைகள், தனியார் வேலைகள் தரச் சொல்லிக் கேட்கிறார் நிழல் உலகைக் கட்டுக்குள் வைக்க மலேசிய காவல்துறையும் இந்த டீலுக்கு ஒப்புக்கொள்கிறது. அப்படியாக இளைய தமிழ் தலைமுறையை மெள்ள நேர்வழிக்குக் கொண்டுவருகிறார்.

தமிழகத்தில் இருந்து விபச்சாரத்துக்குக் கொண்டுவரப்படும் சின்னஞ்சிறுமிகளை அதிரடியாக மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கிறார். இளம் சிறுமிகளை அவர் மீட்கப் போன இடத்தில் 43 கேங்கின் பழைய வில்லன் ஒருவனைச் சந்திக்க நேர்கிறது. அவன், கபாலியிடம் உன் மகளும், மனைவியும் கூட இப்படித்தான் எங்காவது விபச்சார விடுதியில்தான் சிக்கியிருப்பர்கள் என்று கொக்கரிக்கிறான். கபாலிக்கு அப்போதுதான் தன் மனைவியும் மகளும் உயிருடன் இருப்பதே தெரியவருகிறது.

எங்கே இருக்கிறார்கள் சொல் என்று கெஞ்சுகிறார். கால் கொஞ்சம் வலிக்குது அமுக்கிவிடு என்று சொல்கிறான் வில்லன். கபாலி தன் குடும்பத்தைப் பற்றித்தெரிந்துகொள்ள எதுவேண்டுமானாலும் செய்கிறேன் என்று சொல்லி வில்லனின் காலைப் பிடிக்கிறார். கால் அமுக்கிவிடுவதை ஆனந்தமாக ரசித்தபடியே அந்த வில்லனோ இந்தச் சிறுமிகளை மீட்கும் வேலையைவிட்டுவிடு. உன் குடும்பம் இருக்கும் இடத்தைச் சொல்கிறேன் என்கிறான். பாச உணர்வால் கட்டுண்ட கபாலி சிறிது நேரத் தயக்கத்துக்குப் பிறகு, சரி என்று சொல்லி அந்தச் சிறுமிகளை விட்டுவிட்டுப் புறப்படுகிறார். அந்தச் சிறுமிகள் அவருடைய காலைப் பிடித்துக்கொண்டு அழுகின்றன. கபாலி அவர்களை உதறித் தள்ளிவிட்டு போகிறார். மாடிப்படிகள் வழியாக தள்ளாடியபடியே இறங்குகிறார். பின்னால் இருந்து கூக்குரல் அதிகரிக்கிறது. ஐயா... எங்களை விட்டுட்டுப் போகாதீங்க ஐயா... என்று கதறுகிறார்கள். அதிலொரு சிறுமி அப்பா... என்னைக் காப்பாத்துங்க அப்பா என்று கதறுகிறது. அந்தக் கூக்குரலைக் கேட்டதும் கபாலிக்கு தூக்கி வாரிப்போடுகிறது. சீறிப் பாய்ந்து சென்று வில்லன்களை துவம்சம் செய்கிறார். 

உன் மகளைக் காப்பாத்த வேண்டாமா? என்று கோபப்படும் வில்லனை அடித்து வீழ்த்திவிட்டு... இந்தக் குழந்தைங்க எல்லாமே என் குழந்தைங்கதாண்டா... அநாதைக் குழந்தைங்க எல்லாருக்குமே இந்த கபாலிதாண்டா அப்பா என்று சொல்லி சிறுமிகளை மீட்கிறார். போதையில் சிக்கிச் சீரழியும் சீன இளைஞர்களை மீட்டு அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்.

மலேசியாவிலும் தமிழர்களிடையே சாதிப் பிரச்னை தலை தூக்குகிறது. அங்கும் நிலவுடமையாளர்களாகவே இருக்கும் கவுண்டர்கள் தமது கோவிலில் தலித்கள் தேர் இழுக்ககூடாது என்று தடுக்கிறார்கள். கபாலி காவல்துறை நீதித்துறை அதிகாரிகளை அழைத்துச்சென்று அந்தத் தலைவர்களைப் பார்த்துப் பேசுகிறார். முடியாது என்று மறுத்துவிடுகிறார்கள். கபாலியின் ஆட்கள் தேர் திருவிழா அன்று கலவரம் செய்யத் திட்டமிடுகிறார்கள். கபாலி அவர்களைத் தடுக்கிறார். அப்போ நாம காலம்பூராவும் அடங்கியேதான் கிடக்கணுமா என்று குமுறுகிறார்கள். அடங்கிக் கிடக்கவும் வேண்டாம்... திருப்பி அடிக்கவும் வேண்டாம்... நாம ஜெயிக்கணும்.. அவங்க தோக்கவும் கூடாது என்று சொல்கிறார். அதெப்படி முடியும் என்று கபாலியின் ஆட்கள் குழம்பிப்போகிறார்கள். காந்தி வழி என்று சொல்லிவிட்டு கபாலி புறப்படுகிறார்.

அடுத்த நாள் செய்தித் தாள்களில், கபாலி கண்ணகி கோவில் கட்டப்போவதாகச் செய்தி வருகிறது. கோவில் பணிகள் மளமளவென நடக்கின்றன. தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் செங்கல் சேகரிக்கப்படுகிறது. சீனாவில் இருந்து பொறியாளர்கள் அழைக்கப்பட்டு கோவில் ஒரே மாதத்தில் கட்டப்பட்டுவிடுகிறது. அதுபோலவே ஒரு பிரமாண்டமான தேரும் செய்யப்படுகிறது. கண்ணகி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பறையர் குல பூசாரி தமிழ் மந்திரங்கள் ஓத பிராமண பூசாரிகள் கங்கை நீர் கலசம் எடுத்துக் கொடுக்க கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. தேர் திருவிழாவில் கபாலிக்கு பரிவட்டம் கட்ட முன்வருகிறார்கள். அவரோ அதை மறுத்துவிட்டு ஓரமாக நின்றுகொண்டிருக்கும் அருந்ததிய இனத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரை அழைத்துவந்து பரிவட்டம் கட்டிவிட்டு விழாவை அவரை வைத்தே தொடங்க வைக்கிறார். பறை இசை அதிர கண்ணகி தேர் சாதித்தடைகளைக் கடந்தபடி தடதடவென ஓடுகிறது.

தமிழகத்துக்கு வந்து திரையுலகப் பிரபலங்கள், அரசியல்வாதிகள் ஆகியோரைச் சந்தித்து மலாயா தமிழர்களின் நலனுக்கான திட்டங்களைச் சொல்லி கபாலி நிதி உதவி கேட்கிறார். அந்தப் பணத்தை வைத்து மலேசியாவில் இலவசப் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுகிறார். சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் சேவைகளை முன்னெடுக்கிறார்.  இதுபோன்ற செயல்களால் கபாலியின் பின்னால் இந்தியர்களும் சீனர்களும், மலாய்களும் அணி திரளுகிறார்கள். கடைமட்டத் தேர்தலில் அவருடைய கட்சி ஆட்கள் நின்று வெற்றி பெறுகிறார்கள். இப்படியான விஷயங்கள் நிழல் உலக தாதாக்களை மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளையும் ஆத்திரம் கொள்ள வைக்கிறது. கபாலியைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள். அதில் இருந்தெல்லாம் அதிரடியான சாகசங்களின் மூலம் தப்பிக்கிறார்.

ஒரு நாள் காலை சுட்டெரிக்கும் வெய்யிலில் கபாலியைச் சந்திக்க பத்து புத்த பிக்குகள் வருகிறார்கள். கபாலியின் பிரமாண்ட பங்களா வாசலில் செருப்பு இல்லாத பாதங்களுடன் தரையில் சூடு குறைவாக இருக்கும் பகுதியைத் தேடிச் சென்று நிற்கிறார்கள். செக்யூரிட்டி என்ன விஷயமாக வந்திருப்பதாகக் கேட்கிறார்.

கபாலி எளிய மக்களுக்குச் செய்யும் நன்மைகளைப் பாராட்டவும் புத்தரின் ஆசிகளை அவருக்குத் தரவும் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். கபாலி தம் அறையில் இருக்கும் வீடியோ கேமராவில் அவர்களைப் பார்க்கிறார். உடனே உள்ளே அனுப்பும்படி செக்யூரிட்டிக்குக் கட்டளையிடுகிறார். பிரமாண்ட இரும்புக் கதவுகள் பெரும் சப்தத்துடன் திறக்கின்றன. பத்து பிக்குகளும் ஒருசேர உள்ளே கம்பீரமாக நுழைகிறார்கள். போர்டிகோ வாசலில் காத்து நிற்கும் வேறு சில செக்யூரிட்டிகள் பிக்குகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை போட வருகிறார்கள். தன் அறையில் இருந்து அதைப் பார்த்துப் பதறும் கபாலி, ”கார்ட்ஸ்... அவர்களை சோதனை போடவேண்டாம்’ என்று சொல்கிறார்.

பாதுகாப்பு பணியாளர்களோ, ”முடியாது சார்... உங்களைக் கொல்ல பலர் சுத்திக்கொண்டிருக்கிறார்கள்... ரிஸ்க் எடுக்க முடியாது’ என்று ரகசியமாக பதில் சொல்கிறார்கள்...
கபாலி தன் டிரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தபடியே, ”என்னைக் கொல்ல அந்த எமனாலயே முடியாது... இது அந்த கபாலீஷ்வரன் தந்த உயிர்... அவரால மட்டும்தான் இதை எடுக்கவும் முடியும். பயப்படாதீங்க’ என்று சொல்கிறார்.
புத்த பிக்குகளை அனுப்பிவிட்டு காவலர்கள் பதறியபடியே பின்தொடருகிறார்கள். பிரமாண்ட ஐந்து நட்சத்திர விடுதி போன்ற வீடு. லிப்டில் ஏறி 10-ம் மாடிக்கு வருகிறார்கள். அலங்காரமான வரவேற்பறையொன்றில் புத்த பிக்குகள் உட்காரவைக்கப்படுகிறர்கள். அந்த வரவேற்பறையின் மேஜையில் புத்தர் தியான நிலையில் அமர்ந்திருக்கிறார். பிக்குகள் அவர் முன்னால் மண்டியிட்டு வணங்குகிறார்கள். சிறிது நேரத்தில் உள்ளே வரச் சொல்லி செய்தி வருகிறது.
பிக்குகள், நாங்கள் மட்டும் தனியாகச் சென்று சந்திக்கவேண்டும் என்கிறார்கள். காவலர்கள் முடியாது என்று மறுக்கிறார்கள். உள்ளே இருந்து கபாலியின் கம்பீரக் குரல் ஒலிக்கிறது. ”பரவாயில்லை... அவர்களை மட்டும் உள்ளே அனுப்பு. ஒருத்தர் மேல நம்பிக்கை இருந்தா அவங்களை சந்தேகிக்கக்கூடாது. சந்தேகம் இருந்தா அவங்களை நம்பக்கூடாது. நான் புத்த பிக்குகளை நம்பறேன்’ என்கிறார்.
பிக்குகள் உள்ளே நுழைகிறார்கள். பிரமாண்ட அறையில் கபாலி சோபா ஒன்றில், காலுக்கு மேல் கால் போட்ட கடவுள் போல் அமர்ந்திருக்கிறார். அந்தக் கண்ணாடி அறையின் பின்னணியில் மலேசியாவின் பிரமாண்டக் காட்சி தென்படுகிறது.
பிக்குகள் நின்றபடியே கை கூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்கள். பின்னால் கதவு மூடப்படுகிறது. ஒரு பிக்கு சிரித்தபடியே சென்று அதன் மேல் தாழ்ப்பாளைப் போடுகிறான். அனைத்து பிக்குகள் முகத்திலும் அமைதிப் புன்னகை மறைந்து அலட்சியப் புன்னகை மலர்கிறது. தங்கள் காவி மேலங்கியை கழட்டி வீசுகிறார்கள். அவர்கள் அனைவருடைய கைகளிலும் துப்பாக்கிகள் மின்னுகின்றன. கபாலியின் முகம் கார்ட்டூன் பார்த்து ரசிக்கும் குழந்தையின் முகம்போல் அதைப் பார்த்து மலர்கிறது.
பிக்குகள் எகத்தாளமாகச் சிரிக்கிறார்கள்.
இப்படி சிங்கம் சிங்கிளா மாட்டிக்கிச்சே...வேட்டைக்காரங்க கூட்டமா வந்துட்டோமே கண்ணா... 
கிழட்டு சிங்கத்துக்கு இத்தனை துப்பாக்கிங்க தேவையில்லைதான்... நீயா அதிர்ச்சியில ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போயிடு கபாலி.
இப்போ என்ன பண்ணப்போற கபாலி... தரைல கால்படாம பறந்துபறந்து அடிக்கப் போறியா..?
நாங்க சரமாரியா சுட்டுத் தள்ளினாலும் ஒரு குண்டுகூட உன்மேல படாம கண்ணாடியை உடைச்சிக்கிட்டு பாய்ஞ்சு தப்பிக்கப் போகிறியா... 10-ஆவது மாடி கண்ணா... கீழ விழுந்தா ஒரு எலும்பு கூட மிஞ்சாது.
என்று நக்கலடிக்கிறார்கள்.
அதெலாம் தேவையே இல்லை கண்ணுங்களா... நீங்க சொன்ன மாதிரியே நீங்க சுடற ஒரு குண்டு கூட என் மேல படாது. பாக்கறியா... இப்புடு சூடு என்று சொல்லியபடியே சுருட்டை எடுத்து ஸ்டைலாகப் பற்றவைத்துக்கொண்டபடியே சட்டென்று தரையில் தன் ஷூ காலால் ஓங்கி அடிக்கிறார். மேலிருந்து ட்ரான்ஃஸ்பரண்ட் சுவர் ஒன்று சட்டென்று கபாலிக்கும் பிக்குகளுக்கும் இடையே கண நேரத்தில் வந்து விழுகிறது. பிக்குகள் அதிர்சியில் உறைகிறார்கள். இருந்தும் சுதாரித்துக்கொண்டு  சரமாரியாகச் சுடுகிறார்கள். ஆனால், அது புல்லட் ப்ரூஃப் சுவர். ஒரு குண்டு கூட அதைக் கடந்து செல்ல முடியவில்லை. கபாலி அசால்ட்டாக சுருட்டைப் புகைத்தபடியே சிரிக்கிறார்.
கண்ணா, வாசல்ல சூடு குறைஞ்ச இடமா பார்த்து நின்னபோதே செருப்புக்குப் பழகின கால்கள்னு தெரிஞ்சிருச்சு. அப்பறம் ரிசப்ஷன்ல இருந்த மஹாவீரரை நீங்க புத்தர்னு நினைச்சு கும்பிட்டதுமே என் சந்தேகம் உறுதியாயிடுச்சு.
என்னை நம்புன்னு சொல்றவங்களை எல்லாம் நாம் நம்பிடறதில்லை கண்ணா. வேஷம் போடறவங்களை நம்பற மாதிரி நானும் நடிப்பேன். நடிப்புல நீங்க ஸ்டார்ன்னா... நான்... (கண்ணாடியைச் சிறிது கீழிறக்கிக் கொண்டு சிறிது இடைவெளி விடுகிறார். உலகமே சூப்பர் ஸ்டார் என்று கத்துகிறது). கபாலி புன்னகைத்து ஆமோதிக்கிறார்.
இந்த கபாலியோட உசுரை அந்த கபாலியாலமட்டும்தான் எடுக்க முடியும்னு சொன்னேன்... இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன். இந்தக் கபாலியால யார் உசுரையும் எடுக்க முடியும். நான் நல்லவனுக்கு மட்டும்தான் நல்லவன்... கெட்டவங்களுக்கு எமண்டா என்று சோபாவில் இருக்கும் ஒரு சுவிட்சைத் தட்டுகிறார். பிக்குகளின் பின் பக்கம் இருக்கும் சுவரில் இருந்து பத்து துப்பாக்கிகள் முளைக்கின்றன. ஆட்டோமேட்டிக் கன்னான அவை அவர்களைச் சரமாரியாகச் சுட்டு வீழ்த்துகின்றன.
புல்லட் ப்ரூஃப் சுவர் மேலே ஏறுகிறது. குற்றுயிரும் குலையியிருமாக விழுந்து கிடப்பவர்களைப் பார்த்துச் சிரித்தபடியே ”புத்தம் மரணம் கச்சாமி’ என்று மண்டியிட்டு வணங்குகிறார் கபாலி!

தனது குடும்பத்தைத் தேடிப் புறப்படுகிறார். இலங்கையில் சாரதா ஆஸ்ரமத்தில் அவருடைய மகள் ஆசிரியராகப் பணிபுரிவது தெரியவருகிறது. குமுதவல்லி 25 வருடங்களாக கோமா நிலையில் இருப்பதால் கபாலியின் மகளுக்குத் தன் அப்பா யார் என்பது தெரியாது. கபாலி இலங்கை சென்று சாரதா மிஷனில் இருக்கும் தன் மகளையும் மனைவியையும் பார்த்து உண்மைகளைச் சொல்கிறார். மனைவிக்கு தமது இல்லற கால சம்பவங்களை அழுதபடியே விவரிக்கிறார். குமுதவல்லியோ எந்தச் சலனமும் இல்லாமல் அவரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையிலயா நான் உன்னைப் பார்க்கணும்.... இதுக்கு நான் நீ இறந்ததாவே நினைச்சு இருந்திருக்கலாமே என்று கதறுகிறார். 

மகளையும் மனைவியையும் தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார். ஆனால், அவருடைய மகளோ அதை மறுத்துவிட்டு அந்தப் பள்ளியிலேயே இருக்கப்போவதாகச் சொல்கிறார். அவ்வப்போது வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு கனத்த இதயத்துடன் விடைபெறுகிறார் கபாலி. இறுதி முயற்சியாக இளவயதில் தோட்ட வேலைக்குச் செல்லும்போது தூக்குச் சட்டியுடன் செல்லும் கபாலி யாருக்கும் தெரியாமல் மனைவிக்கு ஸ்டைலாகப் பறக்கும் முத்தம் கொடுப்பது வழக்கம். இப்போதும் அதை அழுதபடியே செய்துவிட்டுப் புறப்படுவார். 25 வருடங்களக அசைவற்றுக் கிடந்த குமுதவல்லியின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழியத் தொடங்கும். கபாலியின் மகள் ஆனந்தக் கூச்சலிடுவாள். காரில் ஏறிய கபாலி விழுந்தடித்து ஓடிவந்து மனைவியைக் கட்டித் தழுவிக் கொள்வார். நீங்கள் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். மெள்ள மெள்ள நினைவு வந்துவிடும் என்று சொல்லி சாரதா மிஷன் நிர்வாகிகள் குமுதவல்லியை கபாலியுடன் அனுப்பிவைப்பார்கள். உடன் மகளும் புறப்பட்டுச் செல்வார்.

இதனிடையில் கபாலியின் குடும்பத்தை இந்த கதிக்கு ஆளாக்கிய வில்லனின் இருப்பிடம் பற்றிய தகவல் கபாலிக்குக் கிடைக்கும். அவனை அடித்து இழுத்துக்கொண்டு கபாலியின் கோட்டைக்கு இழுத்து வருவார்கள்.

”நிராயுதபாணியான உன்னைக் கொன்னா அது தப்பு. இந்தத் துப்பாக்கியை மேஜைல வைக்கறேன். நீயாவே எடுத்து சுட்டுக்கோ’ என்று சொல்லியபடியே திரும்பி நின்று சுருட்டு பற்றவைக்கிறார். அவனும் பயந்தபடியே அதை எடுத்துக்கொள்கிறான். தன்னைச் சுட்டுக் கொள்ள காதுப்பக்கம் கொண்டு செல்பவன் சட்டென்று துப்பாக்கியை கபாலி பக்கம் திருப்புகிறான்.
கபாலியோ சிறிதும் பயப்படாமல், சுருட்டைப் பற்றவைத்து புகையை ஊதியபடியே, நீ இப்படிச் செய்வன்னுதான் கண்ணா அதுல நான் குண்டு போடலை... என்கிறார்.
வில்லன் துப்பாக்கியை எடைபோட்டுப் பார்ப்பதுபோல் பார்த்து, நான் முப்பது வருஷமா இந்தத் துப்பாக்கியை தூக்கி சுட்டிருக்கேன். வெத்து துப்பாக்கிக்கும் குண்டு உள்ள துப்பாக்கிக்கும் எனக்கு வெயிட் வித்தியாசம் தெரியும். இதுல குண்டு இருக்கு என்று சொல்லியபடியே சுடுகிறான். ஆனால், அதில் இருந்து குண்டு எதுவும் வராமல் போகவே லேசாக அதிர்பவன் அடுத்த ரவுண்டும் சுடுகிறான். அதுவும் வெற்றாகப் போகிறது. அதற்கு அடுத்ததாகவும் சுடுகிறான். அதுவும் பொக்காகப் போகிறது. அதிர்ச்சியில் உறைபவன் துப்பாக்கியைத் தாழ்த்துகிறான். கபாலி துப்பாக்கியை வாங்கிக் கொள்ள கையை நீட்டுகிறார். அதிர்ச்சியில் உறைந்த வில்லனும் வெற்றுத் துப்பாக்கிதானே என்று அதைக் கொடுத்துவிடுகிறான்.
மகிழ்ச்சி... நிராயுதபாணியா நின்ன என்னைச் சுட முயற்சி செஞ்சிருக்க. அதனால இப்ப உன்னைச் சுடலாம் தப்பே இல்லை என்று சொல்லிச் சுடுகிறார். தோட்டா சீறிப் பாய்ந்து அவன் நெற்றியைத் துளைக்கிறது.
கண்ணா, நான் குண்டு போடலைன்னுதான் சொன்னேன். குண்டே போடலைன்னு சொல்லலை. முதல் மூணு ரவுண்ட்ல குண்டு போடலை. பாவம் நீ அதை மட்டும் சுட்டுட்டு என் கிட்டக் கொடுத்திட்ட. இதுக்குத்தான் பெரியவங்க என்ன சொல்லியிருக்காங்கன்னா தொடர்ந்து முயற்சி பண்ணனும். பாதில நிறுத்திட்டா இப்படித்தான், பாதிலயே சாக வேண்டி வந்துரும் என்றுசொல்லிவிட்டு இறந்தவனை காலால் தள்ளிவிட்டு கம்பீர நடை போடுகிறார். உடன் வரும் அடியாள், நான்காவது ரவுண்டும் அவன் சுட்டிருந்தா என்ன ஆயிருக்கும் பாஸ்...
நான் என் ஆயுதத்தை நம்பலை... அந்த ஆண்டவனை நம்பறேன். நாலாவது ரவுண்ட் சுடாம தடுக்கற பொறுப்பை அந்த ஆண்டவன் கிட்ட விட்டுட்டேன். ஒருவேளை அவன் நாலாவது ரவுண்டும் சுட்டு நான் செத்தா அந்த ஆண்டவனே நான் வாழ்ந்தது போதும்னு முடிவு பண்ணிட்டான்னு அர்த்தம் என்று சொல்லியபடியே ஸ்டைலாக கூலிங் கிளாஸை மாட்டிக்கொள்கிறார்.

மலாய் அரசியல் தலைவர்கள் கபாலியின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுகிறர்கள். அவரை அவமானப்படுத்த நினைக்கிறார்கள். ஒரு மலாயா மாநாட்டில் தமிழர் பிரதிநிதியாக கபாலியைப் பேச அழைத்திருக்கிறார்கள். ஆனால், அவர் மேடையில் ஏறும்போது சிலர் குறுக்கிட்டு உங்களுக்குக் கீழே முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் பேச அழைக்கப்படும்போது மேடை ஏறினால் போதும் என்று அவமானப்படுத்துகிறார்கள். சிரித்தபடியே கீழிறங்கும் கபாலி, நீங்க இதை முன்னாலயே சொல்லியிருந்தா நான்  கீழயே இருந்திருப்பேனே என்று சொல்லியபடியே இறங்குகிறார். பஞ்சம் பொழைக்க வந்தவனோட இடம் என்னங்கறதை ஊருக்கே காட்டணுங்கறதுக்காகத்தான் அப்படிச் செஞ்சேன் என்கிறார் விழா அமைப்பாளர். கபாலியின் ஆட்கள் இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் கூட்டத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்கிறார்கள். கபாலி அவர்களை அமைதிப்படுத்துகிறார். சிரித்தபடியே முன் வரிசையில் ஒரு ஓரமாக உட்கார்ந்துகொள்கிறார். அவர் பெயர் அழைக்கப்படுகிறது. பேச மேடை ஏறுகிறார். கூட்டத்தில் இருந்து சிலர் ஊளையிடுகிறார்கள். தமிழன் டவுன் டவுன்... வந்தேறி நாயே சொந்த ஊருக்குப் போ என்று கூக்குரலிடுகிறார்கள்.

கபாலி நிதானமாக மைக் முன்னால் வந்து நின்று, ”பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் ஆஃப் மலேசியா’ என்று தொடங்குகிறார்... கூட்டத்தில் சட்டென்று மின்சாரம் பாய்ந்ததுபோல் அனைவரும் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள். அவமானப்படுத்த நினைத்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்கள். மேடையில் இருப்பவர்களும் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள். கபாலியை அவமானப்படுத்தவேண்டுமென்று நினைத்த விழா தலைவரும் வேறு வழியின்றி எழுந்து நிற்கிறார்.

கபாலி தமிழர்கள் மலாயா மண்ணில் சிந்திய கண்ணீரையும் ரத்தத்தையும் உருக்கமாகச் சொல்கிறார். மரண ரயில்பாதை அமைக்கப்பட்டதில் உயிர் துறந்த மலாய்களையும் தமிழர்களையும் பற்றிச் சொல்கிறார். தமிழன் தான் சென்ற நாடுகளையெல்லாம் தன் உழைப்பால் செழிக்கச் செய்ததைச் சொல்கிறார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என தன் நாட்டுக்கு வந்தவர்களையெல்லாம் வாழவைத்ததைச் சொல்கிறார். தமிழனை போட்டியிட்டு வெல்லுங்கள்...பொறாமையில் வெல்ல நினைக்காதீர்கள் என்று சொல்லித் தன் பேச்சை முடிக்கிறார். பேசி முடித்துவிட்டு கீழிறங்கிச் செல்பவரைப் பார்வையாளர்கள் தடுத்து மேடையில் நடுநாயகமாக உட்கார்ந்திருப்பவரை எழுப்பிவிட்டு அதில் உட்கார வைக்கிறார்கள். இரண்டாம் முறையாக அவரைப் பேசச் சொல்கிறார்கள். கம்பீரமாக தமிழ்த் தாய் வாழ்த்தைப் பாடத் தொடங்குகிறார். ஒட்டு மொத்த அரங்கமும் அவர் பின்னால் பாடுகிறது.  

கபாலியின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க மலேசியாவில் நிலைமை மோசமாகிறது. தமிழர்களை குறிவைத்துத் தாக்குதல்கள் நடக்கின்றன. தமிழர்களுக்கும் நாய்களுக்கும் இடம் இல்லை என்று உணவு விடுதியில் எழுதிப்போடுகிறார்கள். கபாலியின் ஆட்கள் மலாய்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று கொதிக்கிறார்கள். கபாலி அவர்களை அமைதிப்படுத்துகிறார். பொங்கல் திருநாளை விமர்சையாகக் கொண்டாடுகிறார். மலாய் ஏழைக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், இலவச சீருடைகள் தருகிறார். அனைவருக்கும் அன்னதானம் நடக்கிறது. ஆனால், எதிரிகள் அந்த உணவில் விஷம் கலந்துவைத்துவிடுகிறார்கள். இதனால் பலர் வாந்த்தி எடுத்து மயக்கம் போட்டு விழுந்துவிடுகிறார்கள். மலாய்காரர்களுக்குப் போடப்பட்ட உணவில் மட்டுமே விஷம் கலக்கப்பட்டிருந்ததால் அவர்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள். மலாய் அடிப்படைவாதிகள் இதைச் சாக்காக வைத்துக்கொண்டு மலாய்காரர்களைக் கொல்ல தமிழன் கபாலியின் சதி என்று தமிழர்களையெல்லாம் அடிக்கிறார்கள். காவல்துறை கபாலியை அண்டர்வேருடன் நடு ரோட்டில் இழுத்துச் சென்று சிறையில் அடைக்கிறது. பரோலில் வெளியே வரும் கபாலி உணவில் விஷம் கலந்தவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்.

மெயின் வில்லனான டோனி லீ இப்போது பெரிய அரசியல் தலைவராகிவிட்டிருப்பார். அவரைக் கொல்ல கபாலி ஸ்கெட்ச் போடுவார். ஜப்பானுக்கு பயணம் செய்யவிருப்பதாக பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்துவிட்டு சொந்த விமானத்தில் ஜப்பானுக்குப் புறப்படுவார். வழியில் ஒரு காடு ஒன்றைக் கடக்கையில் ஹெலிகாப்டர் கதவு திறக்கப்பட்டு நூலேணி ஒன்று கீழே இறக்கப்படும். கபாலி அதன் வழியாக இறங்குவார். அங்கு ஏற்கெனவே ஒரு சுமோ நின்றுகொண்டிருக்கும். அதில் ஏறி நேராக டோனி லீயின் கெஸ்ட் ஹவுஸுக்கு விரைவார். ஏற்கெனவே அவருடைய ஆட்கள் பிரமாண்ட கேட்டின் கீழ்ப்பக்கத்தில் இரும்பு கம்பி ஒன்றை செருகியிருப்பார்கள். கதவு மூடப்படாவிட்டால் எச்சரிக்கும் அலாரத்துக்கான மின் இணைப்பையும் துண்டித்திருப்பார்கள்.
 செக்யூரிட்டிகள் காலை உணவு உண்ணும் நேரத்தில் கபாலி நைஸாக வீட்டுக்குள் நுழைந்துவிடுவார். இரண்டாம் கதவில் செக்யூரிட்டிகள் நின்றுகொண்டிருப்பார்கள். முதல் கதவின் வழியாக ஒருவர் வருகிறார் என்றால் டோனி லீயின் அனுமதி பெற்றுத்தான் வந்திருப்பார் என்று நம்பி மெட்டல் டிடெக்டர் கொண்டு பரிசோதனை செய்வார்கள். கபாலி முன்னதாகவே தன்னுடைய துப்பாக்கியை எடுத்து அவர்களிடம் கொடுத்துவிடுவார். அவர்கள் சோதிப்பதைப் பார்த்து மெள்ளச் சிரித்தபடியே வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார். மொழி புரியாத அவர்கள் என்ன என்ன அதிந்துபோய்க் கேட்கவே, கோல்டன் வேர்ட்ஸ் கேனாட் பி ரிபீட்டட் என்று சொல்லியபடியே உள்ளே செல்வார்.

மாடி அறையில் அமர்ந்திருக்கும் டோனி லீ கபாலியைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைவார். நீயா.. நீ எப்படி இங்க வந்த..? என்று அதிர்ச்சி அடைவார். இந்த உலகத்துல இரண்டு பேரோட வருகையை யாராலும் தடுக்க முடியாது. ஒண்ணு எமன்... இன்னொன்னு இந்தக் கபாலி.. இப்போ அந்த கபாலியே எமனா வந்திருக்கான். அப்போ எப்படிடா தடுக்க முடியும் என்கிறார். உன் கிட்டதான் ஆயுதமே இல்லையே என்னை எப்படி கொல்லுவ என்று டோனி லீ எகத்தாளம் செய்யவே... வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.. இந்தக் கபாலிக்கு கையும் ஆயுதம் என்று சொல்லி டோனி லீயைக் கழுத்தை நெரித்துக் கொல்வார். மூச்சுத் திணறும் டோனி லீ, நீ காந்தி வழிக்குத் திரும்பினதா சொன்னாங்களே.. இல்லைன்னா ஜெயில இருந்து நீ வந்ததுமே உன்னைக் கொன்னிருப்பேனே... என்கிறார். மக்கள் பிரச்னைக்குத்தான் காந்தி வழி... சொந்தப் பிரச்னைக்கு என்னிக்குமே கபாலி வழிதாண்டா என்று சொல்லி டோனி லீயின் கதையை முடிக்கிறார்.

அங்கிருந்து நேராக காடியை எடுத்துக்கொண்டு காட்டுக்குச் செல்கிறார். ஹெலிகாப்டர் வருகிறது. நூலேணி இறக்கப்படுகிறது. ஏறி ஜப்பானுக்குச் சென்று சேருகிறார். அங்கு அவரை வரவேற்கும் நண்பர் மகிழ்ச்சியுடன் கபாலி உனக்கு ஒரு நியூஸ் தெரியுமா... டோனி லீ செத்துட்டானாம்.
ஓ.. ஐ.ஸீ...
நக்கலாகச் சிரித்தபடியே, நல்ல மனுஷன்...  May his soul rest in Peace. என்கிறார் அந்த நண்பர்.
கபாலி மறுப்பதுபோல் தலையை அசைத்தபடியே நோ.. நோ.... இட் வில் வாண்டர் இன் வைல்ட் என்று சொல்லிச் சிரிக்கிறார்.
அதைக் கேட்டதும் திடுக்கிடும் நண்பர் சட்டென்று உண்மையைப் புரிந்துகொண்டு அப்படியா என்று கண்கள் மலரக் கேட்கிறார்.
கபாலி வானத்தை நோக்கிக் கை காட்டி அந்த எமன் சொன்னான்... இந்த எமன் முடிச்சிட்டான் என்று சிரிக்கிறார்.

நிழல் உலகத்தினர், மலாய் அரசியல்வாதிகள், சீன அரசியல்வாதிகள், காவல் துறையினர் எல்லாரும் கபாலியை ஒழிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். கபாலியின் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் தமிழ் நேசனின் பேரனிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. கபாலி தினமும் காலையில் பூங்காவில் நடைப்பயிற்சி போவது வழக்கம். அப்போது அவருக்கு அருகில் பாதுகாவலர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த நேரத்தைப் பயன்படுத்தி தமிழ் நேசனின் பேரன் யதேச்சையாக வருவதுபோல் பூங்காவில் கபாலியைச் சந்திப்பார். கபாலியும் அவனைப் பார்த்து மகிழ்ந்தபடியே இளைய தலைமுறையும் இப்படித்தான் உடம்பை நல்லா ஃபிட்டா வெச்சுக்கணும் என்று சொல்லி அவனைக் கட்டித் தழுவிக் கொள்வார். 

தான் இப்போது குனிந்து நிமிர்ந்து உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி தன் துப்பாக்கியை தமிழ் நேசனின் பேரன் கையில் கொடுப்பார். சிறிது நேரம் தயங்கும் அவன் மெள்ள அதை வாங்கிக் கொள்வான். அதையே சிறுதி நேரம் ஆசையுடனும் அதிர்ச்சியுடனும் உற்றுப் பார்ப்பான். கேமரா மெள்ள அங்கிருந்து நகர்ந்து பக்கத்தில் இலையெல்லாம் சிவப்பு மலர்களாக தீபோல் பற்றி எரியும் குல்மோஹர் மரத்தின் மீது குவியும். சட்டென்று ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து அந்த மரத்தில் இருந்து பறவைகள் பதறியபடியே சிறகடித்துப் புறப்படுவதும் காட்டப்படும்.
மெள்ள திரையில் கருமை பரவும். அதில் ரத்தத் துளி ஒன்று மேலிருந்து கீழாக வழியும்.
A Film By B.R.Mahadevan

கபாலி - விளம்பர ஹைப்பும் தலித் மீட்சியும்

கபாலி திரைப்படம் சந்தைப்படுத்துதல் சார்ந்து மிகை எதிர்பார்ப்பையும் உள்ளடக்கம் சார்ந்து நியாயமான எதிர்பார்ப்பையும் தூண்டியிருந்தது. வேறு வார்த்தைகளில் இதைச் சொல்வதானால் ரஜினி என்பதால் ஒருவகை எதிர்பார்ப்பும் ரஞ்சித் என்பதால் இன்னொருவகை எதிர்பார்ப்பும் உருவாக்கப்பட்டிருந்தது. அதனால், இரண்டு என்ஜின்கள் பொருத்தப்படும் வண்டியைப்போல் அதிவேகப் பயணத்தை எதிர்பார்த்து உலகமே தயாராக இருந்தது. ஆனால், இரண்டு என்ஜின்களும் ஒரே திசையில் பயணிக்காமல் எதிரெதிர் திசையில் இழுத்துவிட்டதால் வண்டி இருந்த இடத்திலேயே முடங்கிவிட்டது. இத்தகைய மிகை எதிர்பார்ப்புகளும் அதையொட்டிய ஏமாற்றங்களும் நமக்குப் புதிது அல்ல. இன்னும் சொல்லப்போனால் அதுவே நமக்குப் பழகிப்போய்விட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். 

ஒவ்வொரு ஐந்தாண்டுக்குப் பிறகும் நல்லாட்சி மலர்ந்துவிடும்; இது முந்தைய தேர்தல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட திருப்புமுனைக் காலகட்டமே என்றெல்லாம் நம்பி ஏமாற, ஒட்டுமொத்த தேசமும் தயாராகத்தானே இருக்கிறது. ஊடகங்களின் ஒவ்வொருமுறையான கருத்துக் கணிப்புகளும் தோல்வியுற்று வரும் நிலையிலும் ஒரு ஜோதிடரைவிட அதிக நம்பிக்கையுடன் தமது விஞ்ஞானக் கணிப்புகளை ஒவ்வொரு பெரு ஊடகங்களும் முன்வைக்கத்தானே செய்துவருகின்றன. நாமும் அதை நம்பி வாய்பிளந்து படிக்கத்தானே செய்துவருகிறோம். உலகக் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் இறுதிப்போட்டி எப்போதுமே பெரிதும் ஏமாற்றத்தையேதானே தருகின்றன. இருந்தும் மக்கள் கூட்டம் ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியையும் உலகின் கடைசி நாள் கொண்டாட்டம்போல் கொண்டாடத்தானே செய்கின்றன.


ரஜினி விஷயத்தையே எடுத்துக்கொண்டால் எனக்கு கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டால் என்று வேலைக்காரனிலேயே ஆரம்பித்தவர் ஏதோவொரு திட்டம் இருக்கு, விதை துங்குது.. விருட்சமாகும்... நேத்திக்கு நான் கண்டக்டர்... இன்னிக்கு நடிகன்..  நாளைக்கு..? தூங்கிட்டிருக்கர சிங்கத்தைச் சீண்டாதீங்க... வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துருவேன்... என்றல்லாம் சளைக்காமல் நம்மை உசுப்பேற்றித்தானே வந்திருக்கிறார். நான் சொன்ன சமூக அக்கறை சார்ந்த பஞ்ச் டயலாக்குகள், அரசியல் பில்டப்புகள் எல்லாம் நானா சொன்னது கிடையாது என்ற தன்னிலை விளக்கத்தைக் கட்டக் கடைசியாகத்தானே தந்தார். தேவகுமாரனின் இரண்டாம் வருகை நடந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று நாமெல்லாம் வருந்தி நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்து கிடந்தபோது அவர் மேலும் மேலும் நம்மை நம்பவே வைத்தார். 

அரசியல் எதிர்பார்ப்புகள் அல்லாமல் திரைப்படங்கள் சார்ந்தும் பாபா, குசேலன், லிங்கா என அவர் பங்குக்கு நம்மை நன்கு ஏமாற்றவே செய்திருக்கிறார். மிகை எதிர்பார்ப்பும் அதீதத் தோல்வியும் மேலே எறியப்படும் பந்து கீழே விழுந்தே தீருவதைப்போல் தவிர்க்கமுடியாத இயற்கை விதியாகவே ஆகிவிட்ட நிலையிலும் கபாலிக்கும் நாம் ஆர்வத்துடன் காத்திருக்கவே செய்தோம். அதிலும் கார்ப்பரேட் கம்பெனிகளும் இந்தக் கூட்டு முட்டாள்தனத்தில் பங்குகொண்டு பந்தை வானம் அளவுக்குத் தூக்கி எறிந்துவிட்டதால் கீழே விழுந்த வேகமும் அதிகரித்துவிட்டிருக்கிறது.

இந்த வீழ்ச்சியைத் தவிர்த்திருக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியும் என்பதுதான் பதில். விளையாட்டுப் போட்டிகள், அரசியல் போன்றவற்றில் நம்மால் எதையும் சொல்ல முடியாது. ஆனால் திரைப்படம், இசை நிகழ்ச்சி போன்ற கலை வடிவங்களில் இதை நிச்சயம் தவிர்க்கமுடியும். வேறொன்றுமில்லை, சம்பந்தப்பட்ட படைப்பாளிகள் தரமான படைப்பை உருவாக்கிவிட்டு அதன் பிறகு விளம்பர யுக்திகளில் ஈடுபட்டால் போதும். அதிக எண்ணிக்கையிலான திரையரங்கங்கள், அதிக விலையிலான டிக்கெட்கள், அதிக விலையிலான விற்பனை ஒப்பந்தங்கள் என காசு பார்த்துவிடலாம் என்று நினைத்துக் களம் இறங்கக்கூடாது. 

அதுபோல் இந்த விளம்பர பில்டப்புகளில் ஈடுபடும் நிறுவனங்கள் அந்தத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதன் பிறகு தமது இறகுகளை விரிக்கவேண்டும். பிரச்னைக்குரிய காட்சிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட கட்சி/சாதித் தலைவர்களுக்குப் படத்தைப் போட்டுக்காட்டும் திரைப் படைப்பாளிகள் விளம்பர நிறுவனங்களுக்கும் போட்டுக்காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் படத்தைப் போட்டுக்காட்டவேண்டும். இவர்கள் எல்லாரும் படம் பார்த்து அது பிடித்திருந்து விளம்பர ஹைப்களை உருவாக்கினால் அது தோற்க வாய்ப்பு இல்லை. அதைவிட்டுவிட்டு ரஜினி என்ற பெயரைக் கேட்டதுமே கார்ப்பரேட்களில் ஆரம்பித்து கடைநிலைத் தியேட்டர்களில் முறுக்கு, சமோசா போடுபவர்கள்வரை அதிகமாக ஆசையை வளர்த்துக்கொள்வதை இனியாவது நிறுத்தவேண்டும்.

இப்படி மிகை எதிர்பார்ப்புகள் உருவாக்கப்படும் படங்களுக்கு சர்வதேச திரைக்கதை ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்துவது நிச்சயம் நல்ல பலனைத் தரும். சண்டைக்காட்சி, ஒப்பனை, பின்னணி இசை என க்ரியேட்டிவ் அம்சம் சாராதவற்றுக்கு சர்வதேச நிபுணர்களைப் பயன்படுத்துவதால் பெரிய பலன் எதுவும் கிடைத்துவிடாது. கதை, திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு போன்றவற்றில் அவர்களுடைய பங்களிப்பு இருந்தாகவேண்டும்.

இசையைப் பொறுத்தவரையில் நமது தமிழ் மனதுக்கும் சூழலுக்கும் ஏற்ற சாதனையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதி நுட்பமான இசை ரசிகர் வேண்டுமானால் மேலான இசைக்கு ஏங்கலாம். மற்றபடி தமிழ் திரையுலகில் இசைத்துறை மிகவும் சிறப்பாகவே இருக்கிறது. எனவே, கதை/திரைக்கதை என்ற முக்கிய விஷயத்துக்கு மட்டுமே சர்வதேச நிபுணத்துவம் தேவையாக இருக்கிறது. அதிலும் மிகை எதிர்பார்ப்பு தூண்டப்படும் படங்களுக்கு அவர்களுடைய பங்களிப்பு நிச்சயம் தேவை. ஆர்வத்தை அதிகமாகத் தூண்டுகிறீர்கள் என்றால் அதற்குத் தகுந்த தீனி போட்டாகவேண்டும் அல்லவா?
*

ரஞ்சித் தந்த ஏமாற்றம் பற்றிச் சொல்வதென்றால் அவர் தனது முந்திய படத்தைவிட இதில் அதிகம் அம்பலப்பட்டிருக்கிறார். மெட்ராஸ் திரைப்படமானது தலித்களின் குரலை பெருவணிக ஊடகத்தில் சாத்தியமான அளவுக்கு சாமர்த்தியமாகப் பேசிய படம் என்று சிலாகிக்கப்பட்டது. உண்மையில் அதிலேகூட அவர் பல மலினமான தேவையற்ற சமரசங்களைச் செய்திருந்தார். கால்பந்து, நீல நிறம், புத்தர் சிலை என அவர் முன்வைத்த தலித் (?!) அடையாளங்கள் எல்லாம் மிகவும் மேலோட்டமானவை. கலை நயம் சார்ந்தவை அல்ல. திரைப்படத்தின் தலித் கதாநாயக பாத்திரத்தை நிஜ வாழ்க்கையில் அவர்களுக்குப் பெரும் எதிரியாக இருக்கும் கவுண்டர் சமூகத்து நடிகரை ஏற்க வைத்திருந்தார். இதில் வணிக தந்திரமும் சமூக பயமும் மட்டுமே இருக்கிறது.

தமிழகத்தில் சாதிச் சண்டைகளெல்லாம் சிலை, கொடி கம்பம் போன்றவை தொடர்பாகவே பெரிதும் நடக்கின்றன. சுவர் சண்டை என்பது அதிமுக-திமுக போன்ற அரசியல் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் சண்டைகளே. சாதி சார்ந்த திரைப்படத்துக்கு சாதி சார்ந்த காரணத்தைத் தேர்ந்தெடுக்காமல் அரசியல் காரணத்தைத் தேர்தெடுத்தது தவறுதான். அந்தத் திரைப்படத்தில் வில்லன்களின் சாதி அடையாளங்கள் வெகு பூடகமாகவே சித்திரிக்கப்பட்டிருந்தன. அதைக் கட்டுடைத்துப் பார்த்தாலும் நிஜத்தில் எதிர் நிலையில் இருக்கும் சாதியைச் சித்திரிக்காமல் பாதுகாப்பான எதிரியுடனே சண்டை போட்டிருக்கிறார். சமரசங்கள் இதோடு நின்றிருந்தால் கூடப் பரவாயில்லை. தலித்களுக்கு தலித் தலைவரே எதிரியாக இருக்கிறார் என்று மேட்டுக்குடியின் தாளத்துக்கு ஏற்பவே ஆடியிருக்கிறார். அதுதான் மிகப் பெரிய சமரசம். மெட்ராஸ் திரைப்படத்தில் வன்னிய வில்லன்களை வெளிப்படையாகக் காட்டியிருந்தால் படம் வெளியாகியிருக்கவே முடியாது என்ற கூற்றில் நிச்சயம் உண்மை இருக்கிறது. அப்படியானால், எப்படித்தான் படமெடுப்பது..?

சாதி சார்ந்து நமது திரைப்படங்கள் இதுவரையில் எப்படியெல்லாம் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று முதலில் பார்ப்போம்.

ஈவேரா பிறந்த மண்தான் என்றாலும் பொதுவாக தமிழ் திரைப்படங்களில் கதாபாத்திரங்களின் சாதி அடையாளம் என்ன என்பது தெரியாதவிதமாகவே சித்திரிக்கப்பட்டிருக்கும். அப்படியே ஏதேனும் சாதி அடையாளம் வெளிப்படையாகத் தெரியும்படியாகச் சித்திரிக்கப்பட்டிருந்தால் அந்த சாதியின் நல்ல மனிதரையே அது சித்திரிப்பதாக இருக்கும் (நாட்டாமை வகையறாக்கள்). ஒரு குறிப்பிட்ட சாதிக்காரரைக் கெட்டவராகக் காட்டுவதென்றால் அதே சாதியைச் சார்ந்த பல நல்லவர்களைக் காட்டி சமநிலைப்படுத்தியிருப்பார்கள். சின்னக்கவுண்டர், தேவர் மகன், மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் எல்லாம் ஒரே சாதிக்காரர்களுக்குள்ளே நடக்கும் சண்டையையே சித்திரித்திருப்பார்கள். தேவனை அடிப்பது இன்னொரு தேவனாகவே இருப்பான். கவுண்டனை அடிப்பது இன்னொரு கவுண்டனாகவே இருப்பான்.

தெளிவான சாதி அடையாளத்துடன் விமர்சிக்கப்படும் ஒரே சாதி என்று பார்த்தால் பிராமணர்கள் மட்டுமே. திராவிட சிந்தனையாளர்களின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருந்த காலகட்டங்களில் பிராமணரும் இந்து மத அடையாளங்களும் தெளிவான அடையாளப்படுத்தலோடு விமர்சிக்கப்பட்டன. மத விஷயத்தில் கிறிஸ்தவ இஸ்லாமியர் பற்றிய விமர்சனம் தவிர்க்கப்படுவதுபோல் சாதி சார்ந்த விஷயங்களில் இடைநிலை சாதி மீதான விமர்சனம் தவிர்க்கப்படுவதுதான் தமிழ் சினிமாவின் சாதிய வரலாறு.

அடுத்ததாக நாடகம், தெருக்கூத்து போன்ற நமது பாரம்பரிய கலைகளில் நகைச்சுவை கதாபாத்திரமே சமூக விமர்சனக் கருத்துகளைத் தைரியமாக முன்வைக்கும். சினிமாவில்கூட எம்.ஆர்.ராதா தன்னை ஒரு நகைச்சுவை நடிகராக முன்வைத்ததால்தான் அந்த விமர்சனங்களையெல்லாம் வைக்க முடிந்தது. சோ தனது அரசியல் விமர்சனங்களை துணிச்சலாக முன்வைக்க முடிந்ததற்கும் அவர் தன்னை ஒரு காமடியனாக வெளிப்படுத்திக்கொண்டதே உதவியிருக்கிறது. அப்போதும்கூட இடைநிலை சாதி மீதான விமர்சனங்கள் வைக்கப்பட்டனவா என்று தெரியவில்லை. தெருக்கூத்து கோமாளிகளும் பிராமணரைத்தான் பெரும்பாலும் விமர்சித்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

இப்படியான நிலையில் ஒரு பறையர், தான் எடுக்கும் படத்தில் நிச்சயம் வன்னியரை வெளிப்படையாக விமர்சிக்க முடியாது என்ற கூற்றில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அவருக்கோ சாதி சார்ந்து ஏதாவது ஒன்றைப் பேசியே ஆகவேண்டும். அதாவது இடைநிலை சாதிகளைத் திட்டவும் வேண்டும். திட்டின மாதிரியும் இருக்கக்கூடாது. எதிர்க்கவும் வேண்டும். எதிர்த்த மாதிரியும் இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை அவர் எடுக்கிறார். இதற்கு அவர் மணிரத்னம் போட்டுத் தந்த பாதையைப் பயன்படுத்துகிறார்.

மணிரத்னம் தனது சாதா காதல்/குடும்பக் கதைகளுக்கு மத/தேசிய பின்னணியைக் காட்டியதன் மூலம் படத்தின் வணிக எல்லையை விஸ்தரித்ததோடு உள்ளடக்கத்தின் கனத்தையும் ஒப்பீட்டளவில் அதிகரித்துக்கொண்டார் (பீம்சிங், விக்கிரமன் படங்களைவிட மணிரத்னத்தின் குடும்பக் காவியங்கள் மேலானவைதானே) ஆனால், இந்த முயற்சியில் தான் பின்னணியாகப் பயன்படுத்திய மத/தேசிய பிரச்னைகளின் கனத்தை வெகுவாக கீழிறக்கிவிட்டார். ரஞ்சித் மணிரத்னத்தின் சாதிய வெர்ஷனாக இருக்கிறார். மணிரத்னத்துக்கு காதல்/குடும்பக் கதைகள். ரஞ்சித்துக்கு கேங்ஸ்டர் கதைகள். மணிரத்னம் தனது சமரசங்களாகச் சொன்ன அதே காரணங்களையே ரஞ்சித்தின் ஆதரவாளர்களும் வேறு வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள்.

தொலைதூர அதிகாரமையங்களைக் கேள்விக்குட்படுத்தியதால் மணிரத்னத்தால் தனது படங்களில் அவை சார்ந்து கூடுதலாகப் பேச முடிந்திருந்தது. சாதி என்ற தலைக்கு மேல் உட்கார்ந்திருக்கும் நபரைப்பற்றிய விமர்சனங்கள் என்பதால் ரஞ்சித்தால் குறைவாகவே பேச முடிந்திருக்கிறது. மேக்கிங்கில் மணி ரத்னம் பல படிகள் மேலானவர் என்பது நீங்கலாக இவர்கள் இருவருடைய வணிக லட்சியங்களும் கொள்கைப்பிடிப்புகளும் ஒரே தரத்திலானவையே. ஆனால், பல விமர்சகர்களும் இப்படியான சமரசங்கள் மூலம் நமது சூழல் எப்படி இடைநிலை சாதிகளின் ஆணவப்பிடியில் சிக்கிக் கிடக்கிறது என்ற உண்மையை ரஞ்சித் உறுதிப்படுத்தியிருக்கிறார் என்றுகூடப் பாராட்டுகிறார்கள். உலகம் உருண்டை என்ற உண்மையை மலை உச்சி மீது ஏறித்தான் கூவ வேண்டுமா என்ன? ஜெயலலிதா ஆணவக்காரி என்பதை எஸ்.டி.எஸ். மாதிரி சுமோவின் ஃபுட்ஃபோர்டில் தொங்கித்தான் நிரூபிக்கவேண்டுமா என்ன? இந்த ஊரறிந்த உண்மைக்கு உங்கள் தீர்வு என்ன என்பதுதானே கலைஞன் முன்னால் உள்ள சவால்.


அடக்கினா அடங்குற ஆளா...
ஆண்டையரின் கதை முடிப்போம்...
நெருப்புடா... நெருங்குடா பார்ப்போம்...
(பின்னணியில் டிரம்ஸ் ஒலிக்க) பறை இசையைப் புகழ்ந்து ஒலிக்கும் வரிகள்...
மேட்டுக்குடிச் சத்தம் நாட்டுக்குள்ள கேக்காது...
இதுதான் மேல் சாதி ஆணவத்தை எதிர்க்கும் வழிமுறையா..? தலித்கள் இன்று சொல்ல விரும்பும் வார்த்தை இதுதான் என்று பறையர் ரஞ்சித் எப்படி முடிவெடுக்கிறார்? அது சரி என்று ஊடகங்களின் அறிவிஜீவிகள், விமர்சகர்கள் ஏன், எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள்?

உண்மையில் தலித்களின் இன்றைய பிரச்னை என்ன..? அவர்கள் அடிப்படைப் பிரச்னைக்காகப் போராட வேண்டியிருக்கிறதா..? அதைத் தாண்டிய விஷயங்களுக்காகப் போராடவேண்டியிருக்கிறதா?

தலித் பெண்கள் மேல் சாதியினரால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்களா... தலித் ஆண்கள் மேல் சாதிப் பெண்களைத் திருமணம் செய்துகொள்ளமுடியவில்லையா..? தலித்கள் மேல் சாதியினரின் கோவில்களில் தொழ அனுமதிக்கப்படுவதில்லையா..? தலித்கள் தமது கோவில்களிலும் தொழ அனுமதிக்கப்படுவதில்லையா..? முந்தைய காலம்போல் இரட்டைக்குவளை, மேல் சாதியினரின் தெருவுக்குள் செருப்பு போடக்கூடாது, தனி கிணறு, தனிச் சுடுகாடு, தனிக் கோவில் என நடத்தப்பட்டார்கள். இன்று அப்படியானவை வெகுவாகக் குறைந்துவிட்டனவா. பஞ்சாயத்து தேர்தலில் வென்ற மேல வளவு முருகேசன் கொல்லப்பட்டார். கே.ஆர்.நாராயணன் தேசத்தின் ஜனாதிபதியாக இருந்தார். நாடு முழுவதும் ஓடும் 100க்கணக்கான தேர்களை தலித்கள் இழுக்க முடியும். ஆனால், தேவர்களின் கோட்டையான கண்ட தேவியில் தலித்கள் தேர் இழுக்க முடியாது.

இப்போது உங்கள் முன்னால் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. இந்து/இந்திய சமூகத்தில் நடந்திருக்கும் ஆக்கபூர்வமான மாற்றங்களை வரவேற்று ஒரு கலைப்படைப்பை உருவாக்கலாம். அல்லது இன்னும் கிடைத்திராத உரிமைகளுக்காகப் போராடும் படைப்புகளை உருவாக்கலாம். ஆனால், இரண்டாவதை நீங்கள் செய்வதாக இருந்தால் முதலாவது குறித்த குறைந்தபட்ச அங்கீகாரத்தையாவது செய்யவேண்டும். மேலும் இரண்டாவதை இன்னும் கொஞ்சம் இதமாகவே கேட்கலாம்.

ஒரு நிறுவனம் முன்பைவிட சம்பளத்தை கணிசமாக உயர்த்தியிருக்கிறது. போனஸும் தருகிறது. ஆனால், அந்த நிறுவனத்துக்குக் கிடைக்கும் லாபத்தோடு ஒப்பிட்டால் இன்னும் கூடுதல் சம்பளமும் போனஸும் கேட்க தொழிலாளர்களுக்கு உரிமை உண்டு என்றால் அவர்கள் இதுகாறும் தந்த சம்பளத்துக்கும் போனஸுக்கும் நன்றி சொல்லிவிட்டுத்தான் அதிகமாகக் கேட்கவேண்டும். சம்பளமே தராத நிறுவனம் போல் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கக்கூடாது. முருகேசனைப் பற்றிப் பேசும் முன் கே.ஆர். நாராயணம் பற்றிப் பேசு.. அல்லது முருகேசனைப் பற்றிப் பேசும்போது நாட்டின் ஜனாதிபதியாகவே ஒருவர் வந்துவிட்டிருக்கிறார்.. கேவலம் பஞ்சாயத்து தலைவராக வரக்கூடாதா என்று கேள்வியைக் கேளு... ஆனால், பஞ்சாயத்து தலைவராகக் கூட தலித் ஆக முடியாதா என்று கேட்கக் கூடதல்லவா? கண்டதேவி போன்ற ஒரு ரில் தேர் இழுப்பது தொடர்பாக பிரச்னை வருகிறது... பெரும் சண்டை மூள்கிறது... இந்த நிலையில் ஓர் காந்தியவாதி அல்லது அப்துல்கலாம் போன்ற தலைவர் அந்த ஊர் தலித்துகளை தேர் இழுக்க அனுமதிக்கும் ஊர்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று இழுக்கவைத்துவிட்டு கடைசியாக பிரச்னைக்குரிய ஊருக்கு அழைத்துவருகிறார். அங்கு அந்த ஊர் மக்களின் மனதை மாற்றி க்ளைமாக்ஸில் தேரை தலித்களும் தேவர்களும் இணைந்து இழுக்க வைக்கிறார் என்று காட்டு.

ஏனென்றால், சண்டையிட்டுக்கொள்ளும் இடைநிலை சாதியினரும் தலித்களும் ஒரே மொழி பேசக்கூடியவர்களே. ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களே... ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்களே... இப்போது ஒரு படைப்பாளி ஒற்றுமைக்கான இந்த விஷயங்களை அடிப்படையாக வைத்து ஒரு படைப்பை உருவாக்கினால் அது யாராலும் எதிர்க்கப்படாதுதானே. அதிலும் சமூக ஒற்றுமையும் சமத்துவமும் மலரத்தானே செய்யும். உங்கள் இலக்கு என்ன ரஞ்சித்?

ஒரு சம்பவத்தை எடுத்துக்கொண்டு இதை விளக்குகிறேன். ஒரு தேவர் தான் வளர்க்கும் காளையை அடக்குபவருக்குத் தன் மகளைத் திருமணம் முடித்து வைப்பதாக அறிவிக்கிறார். அந்தப் பெண்ணின் முறைப் பையனும் காளையை அடக்க முற்படுகிறான். ஆனால், ஒரு பள்ளர் சாதிப் பையனே காளையை அடக்கிவிடுகிறான். இப்போது தேவர் பெண்ணைத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று பள்ளர்கள் கேட்கிறார்கள். தேவர்கள். மறுக்கிறார்கள். இரு சாதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்படப் போகும் நேரத்தில் காளையை அடக்கிய பள்ளர் முன்னால் வந்து, நான் காளையை அடக்குவதற்காகத்தான் களத்தில் இறங்கினேன். அந்தப் பெண்ணைத் திருமணம் முடிப்பதற்காக அல்ல. அதுவும்போக ஒரு பெண்ணுடைய சம்மதத்தைக் கேட்காமல் இப்படிப் பகடைக்காயாக ஆக்குவது மிகவும் தவறு. எனவே, அந்தப் பெண் தான் விரும்பும் முறைப்பையனையே திருமணம் செய்துகொள்ளட்டும் என்று சொல்லி தாலியை எடுத்து முறைபையன் கையில் கொடுத்துவிட்டு நெஞ்சை நிமிர்த்தியபடி போகிறார் என்று காட்டலாம். இப்படியான பல படங்கள் வந்த பிறகு அந்தத் தேவர் பெண் தலித் பையனின் கையைப் பிடித்துக்கொண்டு தொடுவானத்தைநோக்கி ஓடிப் போவதாகக் வாழப்போவதாகக் காட்டலாம்.

ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதிக்காரர் ஒருவருடைய பிணத்தை மேல் சாதிக்காரர்களின் தெருவழியாக எடுத்துச் செல்லக்கூடாது என்று ஊர்க்காரர்கள் தடுக்கிறார்கள். மேல் சாதிக்காரத் தலைவர் ஒருவருக்கு இந்தச் செய்தி சென்று சேருகிறது. அவர் உடனே தன் ஆட்களுடன் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று தாழ்த்தப்பட்டவரின் பிணத்தைத் தன் தோளில் தூக்கிச் செல்கிறார் என்று காட்டலாம். கிராமங்கள் தோறும் அம்பேத்கரின் சிலையை அந்த மேல்சாதிக்காரத் தலைவர் திறப்பதாகக் காட்டலாம். பெருந்திரளான மக்கள் சாதிப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காணப்படவேண்டும் என்றுதான் சொல்லவிரும்புகிறார்கள். எனவே எல்லா சாதிகளிலும் இருக்கும் சாதி நல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைத்து வெற்றி பெறுவதுபோல் ஒரு திரைப்படத்தை எடுத்தால் அதில் இடம்பெறும் உரிமைகோரல் வசனங்களை யாரும் எதிர்க்கமாட்டார்கள். படத்தின் இறுதிச் செய்தியே அவர்களைச் சென்று சேரும்.

ஆனால், ரஞ்சித்துக்கும் (அவருக்கு ஆதரவாகப் பேசும் அறீவுஜீவி, விமர்சனக்கூட்டங்களுக்கும்) நல்லிணக்கத் தீர்வுகள் இலக்கு அல்ல. போர்க்குணம் மிக்க வசனங்கள், நடைமுறைகளே இலக்காக இருக்கின்றன. சூழல் அதற்கு சாதகமாக இல்லை என்பதால் வெவ்வேறு சமரசங்களுடன் தமது கோபத்தை வெளிப்படுத்தப் பார்க்கிறார். கபாலி படத்தை மலேசியப் பின்னணிக்குக் கொண்டு சென்றது அப்படியான ஒரு முயற்சியே. ஆனால், அப்படிச் செய்த பிறகாவது அந்தச் சூழலிலாவது துணிந்து தன் கருத்துகளை முன்வைத்திருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. மலேசியத் தமிழர்களுக்கு சீனர்களால் எந்தப் பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்று சொல்லி அங்கும் சமரசம் செய்துகொண்டிருக்கிறார்.


உண்மையில் கதையின் களத்தை மாற்றிக்கொண்டது அருமையான யோசனைதான். இதுபோன்ற கதையுடன் இதற்கு முன்பாக தமிழில் நாயகன் வந்து பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. மராட்டியரை எதிர்த்து வென்ற தமிழர் என்ற கோணத்தில் திரைக்கதை அமைக்காமல் நல்லவரா கெட்டவரா என்று சொல்ல முடியாத, நாலு பேருக்கு நல்லது செய்யும் தாதா ஒருவரைப் பற்றிய கதையாக அதைக் கொண்டுசென்றிருப்பார். என்றாலும் அந்தக் கதைக்கு அற்புதமான திரைக்கதை அமைத்திருப்பார். ரஞ்சித் இதில் வெகுவாகக் கோட்டைவிட்டிருக்கிறார். 

கபாலியின் குடும்ப எமோஷனல் காட்சிகள் எடுபடாமல் போனதற்கு முக்கிய காரணம் கபாலியின் போராளி பிம்பம் தொடர்பான காட்சிகளில் தென்படும் செயற்கைத்தனம்தான். உண்மையில் மலேசியாவில் மக்களுக்காகப் போராடிய கட்சி சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடவில்லை. அது இந்தியத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கேட்டு நேர்வழியிலேயே போராடியது. அந்தத் தலைவரையும் கட்சியையும் கேங்ஸ்டராகச் சித்திரித்தது படு கேவலம். நிஜத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மீட்பராக வந்த டாக்டரை மதமாற்றக் கோமாளியாக (அவருக்கு அம்பேத்கரின் உடையை அணிவித்திருப்பார் பாலுத்தேவர்!) பாலா தன்னுடைய பரதேசி படத்தில் செய்தது போன்ற மிகவும் மோசமான சித்திரிப்பு. இந்தப் படத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர் கட்சியை ரவுடி கும்பலாகச் சித்திரித்திருக்கிறார். ஏன் ரஞ்சித்..? உங்களுக்கு கேங்ஸ்டர் கதை வேண்டுமென்றால் அதை அப்படியே கொண்டு செல்லலாமே... கம்யூனிஸ்ட் போராளியை எதற்காக கேங்ஸ்டராக ஆக்கவேண்டும்? அதிலும் அந்த விஷயங்களை இவ்வளவு கத்துக்குட்டித்தனத்துடனா சித்திரிக்கவேண்டும். பாட்டாளி வர்க்க நலனையும் தமிழர் நலனையும் தலித் நலனையும் இப்படிக் கொச்சைப்படுத்தானா நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்?

இந்த இடத்தில் இன்னொரு கேள்வி வருகிறது. தமிழ் தேசியவாதிகள் தமக்கான கொள்கைப் பரப்புச் செயலராக வீரப்பனாரையே முதலில் முன்னெடுத்தனர். வரதராஜ முதலியாரையும் மணிரத்னம் முஸ்லீம் பாயினால் வழி நடத்தப்படும் அண்டர் வேல்ட் தாதாவாகவே சித்திரித்தார். ஈழத் தமிழர் விடுதலைக்காகப் போராடிய பிரபாகரன் மற்றும் புலிகள் மீதும் கள்ளக்கடத்தல் குற்றச்சாட்டுகள் வலுவாக உண்டு. விடுதலைச் சிறுத்தைகள் மீதும் கட்டப்பஞ்சாயத்து புகார்கள் உண்டு. அடித்தள மக்களின் விடுதலைப் போர் என்பது இப்படி அண்டர்வேல்ட் தாதாக்களின் கையில்தான் சிக்கவேண்டுமா? வாஞ்சிநாதன், நேதாஜி போன்றோரின் வன்முறைப் பாதை என்பது பிரிட்டிஷ் சட்டத்துக்கு எதிரானதுதானே தவிர தர்மத்துக்கு எதிரானதல்ல. அஹிம்சை மட்டுமே சிறந்த வழி என்று சொல்லமுடியாதுதான். ஆனால், அதற்காக இப்படியா அண்டர் வேல்ட் மாஃபியாவிடம் தஞ்சம் புகவேண்டும்?


ரஜினியைப் போல், ரஞ்சித்தும் சில காலம் கழித்து என் திரைப்படங்களில் இடம்பெற்ற தலித்  சார்பு வசனங்கள், காட்சிகள் எல்லாம் வெறும் வர்த்தக நோக்கம் கொண்டவையே என்ற உண்மையைச் சொல்லக்கூடும். ஆனால், விமர்சக மற்றும் தலித் அரசியல்/கலைப் போராளிகள் ரஞ்சித்துக்கே தெரிந்திராத குறியீடுகளை அவருடைய படத்தில் கண்டுசொல்லும் கலையில் தேர்ச்சிபெற்றுவருவதால் அது நடக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், என்ன பலரால் சொல்லப்படாவிட்டாலும் உண்மை உண்மையாகத்தானே இருக்கும்.